search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவேன்- தினகரன் பேச்சு
    X

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவேன்- தினகரன் பேச்சு

    ஊழல்களை வெளிக்கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவேன் என்று வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன் பேசினார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ADMK
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, வேலாயுதம்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் 90 சதவீத உண்மை தொண்டர்கள் சசிகலாவின் பக்கம் இருக்கிறார்கள். டெல்லிக்கு ஏஜெண்டாக பன்னீர்செல்வம் செயல்பட்டதால் தான் முதல்- அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் அன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த அவர் உள்பட சிலர் நல்லவர்களாகி விட்டனர்.

    பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு பரிசாக எங்களது 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்டார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப தீர்ப்பு நமது பக்கம் சாதகமாக வரும். அப்போது இந்த ஆட்சியாளர்களின் ஊழல் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்து ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை நிலை நாட்டுவோம்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தல், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளை உருவாக்குதல், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை மெய்ப்பித்தல் உள்ளிட்ட மக்கள் நலன் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவோம்.

    ஜெயலலிதா எந்தெந்த மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் தடை செய்தாரோ? அதனை தடுக்க கூட வழி தெரியாமல் முதுகெலும்பற்ற ஆட்சி நடப்பது வேதனையளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களே எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2016 மே மாதம் அரவக்குறிச்சியில் நடைபெற இருந்த சட்டமன்ற தேர்தலை நிறுத்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வழிசெய்தார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பின்னர் தேர்தல் நிறுத்தப்பட்டு மறுதேர்தல் வந்தபோது எனக்கு சீட்டு கொடுக்காதீர்கள் என சசிகலாவிடம் தம்பித்துரை வாதிட்டார். அதனை அவர் பொருட்படுத்தாமல் எனக்கு வாய்ப்பளித்ததால் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆனேன். பின்னர் அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகள் சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.

    ஆனால் திட்டமிட்டு அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கையினை இந்த அரசு புறக்கணித்து விட்டது. கரூர்-கோவைக்கு முதலில் 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என கூறிவிட்டு தற்போது 12 வழிசாலை அமைக்கப்படும் என தம்பித்துரை கூறுகிறார். இந்தியாவில் கூட அத்தகைய சாலை இருக்கிறதா? என கூகுள் வரைபடத்தில் தான் தேடி பார்க்க வேண்டும்.

    புகளூர் தடுப்பணை அமைவது குறித்து ஜெயலலிதாவின் அமைச்சரவையில் திட்ட மதிப்பீடு பெறப்பட்ட நிலையில், அது தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறுவது மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்குவது போல் இருக்கிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்று டி.டி. வி.தினகரன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று தமிழக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது துணை சபாநாயகராக இருந்து கவனித்து வந்த தம்பி துரைக்கு விசாரணை கமிஷன் ஏன் சம்மன் அனுப்பவில்லை என்பது தெரியவில்லை.

    வருகிற பாராளுமன்ற தேர்லில் 40-க்கு 40 வெற்றி பெறுவோம் என தம்பிதுரை கூறுகிறார். அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் வாங்கிவிட்டால் இந்த செந்தில் பாலாஜி அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalaniswami #ADMK
    Next Story
    ×