search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
    X

    அதிமுக-பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவோம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

    அதிமுக - பா.ஜனதா ஆட்சிகளை வீழ்த்துவதே திமுகவின் இலக்கு என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #DMKCadres

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    ஆகஸ்ட் 7 அன்று நம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு, தலைவர் கலைஞர் நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். அவர் நம்மிடையே இல்லாமல் நூறு நாட்கள் கடந்த நிலையிலும் நம் நினைவெல்லாம் அவரே நிறைந்திருக்கிறார்.

    இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியையும் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இருபத்து ஆண்டுகளையும் தன் பொதுவாழ்வினாலும் போராட்டங்களாலும் பொழுதளந்த மாபெரும் தலைவரின் திட்டங்களும் சாதனைகளும் பல நூற்றாண்டுகள் கடந்தும் பேசப்படுபவை என்பதால் தான், அவர் மறைந்து 100 நாட்களாகியும் புகழ் வணக்க நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

    தலைவர் கலைஞரின் நினைவுகளில் மெய்மறந்து நீந்துவதுடன் நம் பயணம் நின்று போய்விடுவதில்லை. கலைஞரின் பேராற்றல் என்பது நெருக்கடி மிகுந்த சூழல்களில் நெருப்பாற்றைக் கடக்கும் வகையில் அவர் சளைக்காமல் மேற்கொண்ட எதிர்நீச்சல்தான்.

    எந்தச் சூழலையும் எதிர் கொள்ளும் கலைஞரின் துணிவும் வலிவும் வியூகமும் தான் தி.மு.க.கழகம் எனும் கோட்டையைக் கட்டிக்காத்தன. தேர்தல் களத்தில் வெற்றிகளைக் குவித்து கோட்டையில் ஆட்சி செலுத்தக் காரணமாயின. அதன் காரணமாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையிலான இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தந்தன.

     


    பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்தவர். குறைந்த பட்ச பொது செயல்திட்டம் என்ற வடிவமைப்பை உருவாக்கிடச் செய்து, அதன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களையும் பாதுகாத்தவர். அவர் வகுத்துத் தந்த வழிமுறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. 1988ஆம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு சென்னையில் தலைவர் கலைஞரின் பெருமுயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகம் வியந்த பிரம்மாண்டமான பேரணியுடன் தொடங்கப் பட்ட தேசிய முன்னணிதான், 1989 தேர்தலில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வழி வகுத்தது.

    30 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே ஆந்திர மாநிலத்தின் இன்றைய முதல்வரும் என்.டி.ஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு, இந்தியாவை ஆளும் மதவெறிபாசிச சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கும் நல்லெண்ணத்துடன், மதச்சார்பற்ற வலுவான அணி அமைக்கும் முயற்சியாகத் தலைவர் கலைஞரின் மகனும் உங்களில் ஒருவனுமான என்னைச் சந்தித்தார். அந்த நல்முயற்சிக்கு கழகம் விரும்பித் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துள்ளேன்.

    அதே எண்ணத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செலயாளர் சீதாராம் யெச்சூரி அவர்களும் கழகத் தலைவரான என்னை சந்தித்து மதவெறி சக்திக்கு எதிரான மதநல்லிணக்கசமயச்சார்பற்ற அணியை தேசிய அளவில் ஒருங்கிணைப்பது குறித்து உரையாடினார்.

    நாட்டின் எதிர்காலத்தைக் காக்கும் நல்ல சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கி விட்டன.

    அதற்குக் கட்டியம் கூறும் வகையில்தான், நவம்பர் 8-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் தி.மு.கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அது வெறும் பொதுக்கூட்டம் அல்ல. போர்க்களத்திற்கான பாடிவீடு. அதனால்தான், ஜனநாயக அறப்போர் என்ற தலைப்புடன் கொள்ளைக்கார அ.தி.மு.க. ஆட்சியையும், பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் அதிகாரத்திலிருந்து அகற்றிடும் இலக்குடன் கழகத்தின் படை வரிசை அங்கே திரண்டது.

    தமிழ்நாடு முழுவதும் படையணி திரட்டப்படும். இந்திய அளவில் அது வலிமைப்படுத்தப்படும். மக்கள் விரோத ஆட்சி செய்யும் இந்த இரு பிரிவினரையும், அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்போரையும் இந்த ஜனநாயகப் படை எதிர்கொள்ளும்.

    தமிழ்நாடு அரசு இன்று பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. இந்தியா மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும் தான் நமது ஒரே இலக்கு. தலைவர் கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளில் நாம் அவரது நினைவுகளில் நீந்துவதுபோலவே, அவர் கற்றுத்தந்த எதிர்நீச்சலையும் மேற்கொள்வோம்.

    அவரிடம் பயின்ற கனிவும் துணிவும் பணிவும் வலிவும் பொலிவும் குறிதவறாத வியூகமும் மிக்க உழைப்பை எந்நாளும் வழங்குவோம்! தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஒரேநோக்குடன் துணை நிற்கும் தோழமை சக்திகளை அரவணைத்துக் களம் காண்போம்.

    மாநில உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு, அரசுக் கருவூலத்தைக் கொள்ளையடித்து, வருமானம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியையும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை வஞ்சித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து, அமைதியைக் கெடுக்கும் மதவெறியுடன் கோலோச்சும் பாசிச பா.ஜ.க ஆட்சியையும் வீழ்த்திட, தலைவர் கலைஞரின் நினைவை போற்றும் நூறாவது நாளில் நெஞ்சுயர்த்திச் சூளுரைப்போம். அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழுலகம் மகிழ, வென்று காட்டுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres

    Next Story
    ×