search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்கள்"

    • வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.
    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இதில் அரூர், மொரப்பூர் வனச்சரகத்தில் உள்ள கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இதில் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கோடை காலங்களில் மழை இல்லாத காரணத்தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், வனத்தை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் வன விலங்குகளை வேட்டையாடுவதும், வாகனங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மற்றும் கிராமப்புறங்களில் நுழையும் போது நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

    மொரப்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி காப்புக் காட்டில் உள்ள நர்சரி பகுதியில் சாலையோரம் வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.

    மேலும் மழைக் காலங்களில் வனப்பகுதியில் வரும் தண்ணீர் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வன விலங்குகள் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால், வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

    கோடைகாலம் என்பதால் வனப்பகுதிக்கு உள்ளே உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாததால், மான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் வன விலங்குகள் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

    இந்த நர்சரி பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் இருப்பதால், தினமும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

    இதனால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தொட்டியில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவதால், அருகிலுள்ள மற்றொரு குளத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் மழை காரணமாக அங்கு உள்ள புல்வெளிகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.
    • சுற்றுலா பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முழுவதுமே கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் புல்வெளிகள் அனைத்தும் பச்சைபசேல் என காட்சியளிக்கிறது.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக அங்கு உள்ள புல்வெளிகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.

    இதனால் வனத்தையொட்டிய சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்லக்கூ டிய சாலையோர புல்வெளிகளில் ஏராளமான புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    அவை அங்கு புற்களை மேய்ந்து கொண்டு, புல் தரையில் ஓய்வெடுத்தும் செல்வதை காண முடிகிறது. மேலும் காட்டெருமைகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. முதுமலையின் பசுமையான புல்வெளிகளில் புள்ளிமான்கள் கூட்டமாக நிற்கும் அழகு, சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், புள்ளி மான்களை செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தபடியே செல்கிறார்கள்.

    • திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மான்களுக்கு பொதுமக்கள் வழங்க உணவுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அந்த இரும்பு வேலிகள் வரை துள்ளி குதித்து மான்கள் கூட்டமாக வருகின்றன. அந்த மான்களை கண்டதும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி போடுகின்றனர்.

    வனவிலங்குகளான மான்கள் போன்றவை காட்டில் இயற்கையாக விளைய கூடிய செடி, கொடி, காய்கனிகளை சுயமாக தேடி உண்ணும் பழக்கத்தை கொண்டவை.

    மக்கள் உணவு பொருட்களை போடுவதால் மான்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றன.

    பெரும்பாலும் கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரே வனப்பகுதியில் காலை மற்றும் மதியம் வேலையில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.

    மக்களை கண்டதும் பயந்து ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன. மக்கள் அளிக்கும் உணவு பொருட்களால் சில சமயங்களில் மான்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும்.

    கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை 300க்கும் மேற்ப்பட்ட மான்கள் வசித்து வந்தன.
    • மான்களை மொத்தமாக இடமாற்றம் செய்வது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே தெக்கலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாளையம் கிராமம். இக்கிராமத்தை சுற்றி மூனுகட்டி பாளையம், கோதபாளையம், வஞ்சி பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    புதுப்பாளையம் கிராமத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் புதுப்பாளையம் குளம் அமைந்துள்ளது. முன்பு குளம் முழுக்க சீமை முள் மரங்களும், குறைந்த அளவில் கருவேல மரங்களும் நிறைந்து காணப்பட்டது. இந்த குளமானது கௌசிகா ஆறு மூலம் மழை நீரால் நிரம்பும் வகையில், வண்ணாற்றங்கரையில் உள்ள தடுப்பணை மூலமாக நீர் பெற்று வருகிறது.

    குளத்தில் இருந்த சீமை கருவேல மரங்களின் பாதுகாப்பில் இக்குளத்தில் கடந்த 5 ஆண்டு முன்பு வரை 300க்கும் மேற்ப்பட்ட மான்கள் இக்குளத்தில் வசித்து வந்தன. சமீபமாக குளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால், தற்போது மான்கள் அனைத்தும் அருகில் உள்ள கௌசிகா ஆற்றை ஒட்டி உள்ள புதர் பகுதிகளிலும், விவசாய நிலப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளன‌.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுமார் 25 வருடங்களுக்கு முன் 5-க்கும் குறைவான மான்கள் வழி தவறி இங்கு வந்ததாகவும், அவை இனபெருக்கம் செய்து தற்போது 300ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இக்குளம் மட்டுமின்றி அருகில் உள்ள நல்லியம்பாளையம் , சாமந்தன்கோட்டை, கோதபாளையம், காமநாயக்கன்பாளையம், மூனுகட்டிபாளையம் உள்ளிட்ட 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள சிறு குட்டைகள், ஓடைகளிலும் மான்கள் வசித்து வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவிநாசி சங்கமாங்குளம், சேவூர் குளம் வரை மான்கள் வசித்து வருகின்றன. மான்களின் அதிகபடியான எண்ணிக்கையால் புதுப்பாளையம், தெக்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த பல வருடங்களாக உணவு தானிய பயிர்கள் உட்பட எந்த விவசாயமும் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

    மான்களின் பெருக்கம் காரணமாக அவை போதிய உணவு கிடைக்காமல் விவசாய நிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வருவதால் கால்நடைகளுக்கான சோளம், சீமை தட்டு உள்ளிட்ட தீவனங்களை கூட கம்பி வேலியிட்டு பாதுகாத்து வருவதாகவும் இருக்கும் நீரைக்கொண்டு ஏதேனும் பயிர்சாகுபடி செய்திருந்தாலும் ஒரே இரவில் மொத்த பயிரையும் கூட்டமாக வந்து மேய்ந்து விடுவதாகவும் ஆதலால் தாங்கள் எந்த ஒரு விவசாயமும் செய்வதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேலும் தென்னை மரங்களை காக்க தாங்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்று குட்டைகளில் நீரை அருந்தி விட்டு தங்கள் நிலங்களிலேயே வசித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பெருகிவிட்ட மான்களை இங்கிருந்து பாதுகாப்பாக இடம் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    இப்பகுதியில் பொதுபணித்துறை கட்டுபாட்டில் உள்ள இக்குளங்களுக்கு அருகிலேயே சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை , திருப்பூர் - கோவை சாலை, திருப்பூர் - அவிநாசி சாலைகள் அமைந்துள்ளன. இவற்றை மான்கள் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து போவது அடிக்கடி நிகழ்கிறது. நீர் மற்றும் உணவு தேடி மான்கள் குளத்தை விட்டு வெளியே வரும் போது நாய்களிடம் சிக்கியும், மான் வேட்டையாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

    மிகவும் பயந்த குணமுள்ள மான்களை மொத்தமாக இடமாற்றம் செய்வது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும், தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் , வனத்துறைக்கும் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது. தகுந்த வல்லுநர்களை கொண்டு உயிர்ச் சேதமில்லாமல் மான்களை இடமாற்றம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    ×