search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer"

    • கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.
    • வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் காப்புக்காடு, வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சரகத்தில் கடந்த 4 -ம் தேதி காலை சுமார் 5.30 மணிக்கு மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த இராமசாமி மகன் துரை(45), என்பவர் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருக்கும் போது அப்பகுதியில் தருமபுரி வனச்சரக பணியாளர்கள், வனப்பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஒடி விட்டனர்.

    பின்னர் தருமபுரி வனச்சரக அலுவலர் துரையை விசாரணை செய்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

    அதன் பேரில் மாவட்ட வன அலுவலர், அப்பல்ல நாயிடு உத்தரவுபடி வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு இணக்க கட்டணமாக மேல் பூரிக்கல் பகுதியைச் சேர்ந்த துரை (45) என்பவருக்கு, 4 லட்சம் ரூபாயும், முனிய கவுண்டர் மகன் பாக்யராஜ் (38) என்பவருக்கு 35 ஆயிரம் ரூபாயும், மேல் பூரிகள் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் தமிழ்ச்செல்வன் (45) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசல மகன் பெரியசாமி (42) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கம்பம் பட்டி பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மகன் சதீஷ்குமார் (32) என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், சருகு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சித்தநாதன், என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரசிம்மன் (50), தலை கொண்டான் மகன் ஜெய்சங்கர் (29) ஆகிய இருவருக்கும் தால 10 ஆயிரம் ரூபாய் என 8 நபர்களிடமிருந்து விலங்கினை வேட்டையாடிய குற்றத்திற்காக இணக்க கட்டணமாக மொத்தம் ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

    • வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.
    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இதில் அரூர், மொரப்பூர் வனச்சரகத்தில் உள்ள கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இதில் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கோடை காலங்களில் மழை இல்லாத காரணத்தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், வனத்தை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் வன விலங்குகளை வேட்டையாடுவதும், வாகனங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மற்றும் கிராமப்புறங்களில் நுழையும் போது நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

    மொரப்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி காப்புக் காட்டில் உள்ள நர்சரி பகுதியில் சாலையோரம் வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.

    மேலும் மழைக் காலங்களில் வனப்பகுதியில் வரும் தண்ணீர் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வன விலங்குகள் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால், வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

    கோடைகாலம் என்பதால் வனப்பகுதிக்கு உள்ளே உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாததால், மான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் வன விலங்குகள் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

    இந்த நர்சரி பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் இருப்பதால், தினமும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

    இதனால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தொட்டியில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவதால், அருகிலுள்ள மற்றொரு குளத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானை கைப்பற்றி சீர்காழி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • நாய் துரத்தியதில் மான் முள்வேலியில் சிக்கி இறந்ததா?

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவின் பல்வேறு இடங்களில் மான்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

    இதுபோல செம்பியன் வேலங்குடி பகுதியில் உள்ள கருவேலங்காட்டிலும் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

    இந்நிலையில் செம்பியன் வேலங்குடி பொறை வாய்க்கால் அருகே சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் ஒன்று முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் புள்ளி மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் முள்வேலியில் மோதிய அதிர்ச்சியில் இறந்ததா, அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.

    பிரேத பரிசோதனையின் முடிவிலேயே மான் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • நேற்று அதிகாலை 2 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது.
    • 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையம் அருகே நேற்று அதிகாலை 2 மான்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மானின் உடலை கைப்பற்றினார்கள்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினரிடம் மான்களின் உடலை போலீசார் ஒப்படைத்தனர். ரெயிலில் அடிபட்டு இறந்தது 2 வயதுடைய ஒரு ஆண் மான், ஒரு பெண் மான் ஆகும். இரை தேடி வந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

    • திருச்சி மணிகண்டம் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு
    • வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர்.

    ராம்ஜி நகர் 

    திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் கிராமத்திம் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன தகவலை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினரிடம் இறந்து போன மானை ஒப்படைத்தனர். அளுந்தூர் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் விராலிமலை இருப்பதால் அதனை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வழி தவறி இந்த புள்ளிமான் வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பது பார்த்தா அப்பகுதி மக்கள் பரிதாபத்துடன் ஆச்சரியத்துடனும் பார்த்து சென்றனர். 

    • சங்கமகுளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று உணவுத் தேடி வந்துள்ளது.
    • தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறி உள்ளது.

    அவினாசி:

    அவினாசி, புதுப்பாளையம், தெக்கலூர், கோதப்பாளையம், ராயபாளையம் , சங்கமகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை மான்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிக்கடி அவினாசி நகர்ப்புறங்களுக்கு அவ்வப்போது வருகின்றன. இந்த நிலையில் நேற்று அவினாசியை அடுத்து ராயம்பாளையம் சங்கமகுளம் அருகே 2 வயதுடைய ஆண் மான் ஒன்று உணவுத் தேடி வந்துள்ளது.

    அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் மானை பார்த்ததும் அதை துரத்தி சுற்றி வளைத்து கடித்து குதறி உள்ளது.இதில் மானின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மானை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்தது. எனவே அச்சுறுத்தும் வகையில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன.
    • மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்துள்ள பொங்கலூா் பகுதியில் உப்பாறு அணை உள்ளது. இதன் நீா்வரத்து பகுதியான உப்பாறு ஓடையில் அதிக அளவில் மான்கள் காணப்படுகின்றன. தற்போது மான்களின் இனப்பெருக்கக் காலமாக உள்ளது.

    இந்நிலையில், உப்பாறு ஓடையில் காணப்படும் மான்களை அதன் இறைச்சிக்காக ஒரு சிலா் வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.மேலும் இப்பகுதியில் காணப்படும் மான்களை பாதுகாக்க மான் வேட்டையில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • தொடர் மழை காரணமாக அங்கு உள்ள புல்வெளிகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.
    • சுற்றுலா பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முழுவதுமே கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் புல்வெளிகள் அனைத்தும் பச்சைபசேல் என காட்சியளிக்கிறது.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக அங்கு உள்ள புல்வெளிகள் பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன.

    இதனால் வனத்தையொட்டிய சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்லக்கூ டிய சாலையோர புல்வெளிகளில் ஏராளமான புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    அவை அங்கு புற்களை மேய்ந்து கொண்டு, புல் தரையில் ஓய்வெடுத்தும் செல்வதை காண முடிகிறது. மேலும் காட்டெருமைகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. முதுமலையின் பசுமையான புல்வெளிகளில் புள்ளிமான்கள் கூட்டமாக நிற்கும் அழகு, சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், புள்ளி மான்களை செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தபடியே செல்கிறார்கள்.

    • மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது
    • ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

    சைவ உண்ணியான மான் புல் போன்ற தாவர வகைகளை சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வன பகுதியில் உலாவும் மான் ஒன்று தனது அன்றாட உணவை போல் பாம்பை கடித்து விழுங்குவதை காணமுடிகிறது.

    வனத்துறை அதிகாரியான பர்வின் கஸ்வான் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வனப்பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் ஒரு மானின் வாயில் பாம்பு தொங்குகிறது. அந்த மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. பிகேன் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை வன அதிகாரியான பர்வின் கஸ்வான் ரீடுவிட் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இதே போல ஏராளமான பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மான்களுக்கு பொதுமக்கள் வழங்க உணவுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அந்த இரும்பு வேலிகள் வரை துள்ளி குதித்து மான்கள் கூட்டமாக வருகின்றன. அந்த மான்களை கண்டதும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி போடுகின்றனர்.

    வனவிலங்குகளான மான்கள் போன்றவை காட்டில் இயற்கையாக விளைய கூடிய செடி, கொடி, காய்கனிகளை சுயமாக தேடி உண்ணும் பழக்கத்தை கொண்டவை.

    மக்கள் உணவு பொருட்களை போடுவதால் மான்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றன.

    பெரும்பாலும் கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரே வனப்பகுதியில் காலை மற்றும் மதியம் வேலையில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.

    மக்களை கண்டதும் பயந்து ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன. மக்கள் அளிக்கும் உணவு பொருட்களால் சில சமயங்களில் மான்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும்.

    கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில சமூக விரோதிகள் காட்டுக்குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
    • சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டை யாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் இள வரசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆவாரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    உடனே வனத்துறையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது அங்கிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 6 பேர் தப்பிவிட, காளிராஜ் (வயது21) என்பவர் மட்டும் சிக்கினார். தொடர்ந்து வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அரிவாள், கத்தி, எடை எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக காளிராஜை கைது செய்து விசாரித்தபோது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான வாழைக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கும்பலாக சென்று மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தப்பியோடிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
    • மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி சக்கரை ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இரண்டு வயதுள்ள மான் ஒன்று தவறி விழுந்தது. 12 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு நிலைய குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் கட்டி உயிருடன் மீட்டனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா மானை வாசுதேவநல்லூர் ரேஞ்சர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலை தலையணை பகுதியில் விடப்பட்டது.

    ×