அரூர் வனப் பகுதியில் குளத்தில் தண்ணீர் குடிக்க கூட்டமாக வரும் புள்ளி மான்கள்

வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.
அரூர் வனப் பகுதியில் குளத்தில் தண்ணீர் குடிக்க கூட்டமாக வரும் புள்ளி மான்கள்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இதில் அரூர், மொரப்பூர் வனச்சரகத்தில் உள்ள கொளகம்பட்டி, எட்டிப்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இதில் வனப்பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு வனப்பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகள், தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கோடை காலங்களில் மழை இல்லாத காரணத்தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், வனத்தை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் வன விலங்குகளை வேட்டையாடுவதும், வாகனங்களில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது மற்றும் கிராமப்புறங்களில் நுழையும் போது நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

மொரப்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட கொளகம்பட்டி காப்புக் காட்டில் உள்ள நர்சரி பகுதியில் சாலையோரம் வனப்பகுதியில் தொட்டி மற்றும் குளங்கள் அமைத்து அதில் வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்புகின்றனர்.

மேலும் மழைக் காலங்களில் வனப்பகுதியில் வரும் தண்ணீர் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வன விலங்குகள் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால், வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

கோடைகாலம் என்பதால் வனப்பகுதிக்கு உள்ளே உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லாததால், மான் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் வன விலங்குகள் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

இந்த நர்சரி பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் இருப்பதால், தினமும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

இதனால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த தொட்டியில் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வருவதால், அருகிலுள்ள மற்றொரு குளத்திலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com