search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பாளையம் கிராமத்தில் பயிர்களை மான்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை
    X

    மான்

    புதுப்பாளையம் கிராமத்தில் பயிர்களை மான்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை

    • கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை 300க்கும் மேற்ப்பட்ட மான்கள் வசித்து வந்தன.
    • மான்களை மொத்தமாக இடமாற்றம் செய்வது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே தெக்கலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாளையம் கிராமம். இக்கிராமத்தை சுற்றி மூனுகட்டி பாளையம், கோதபாளையம், வஞ்சி பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    புதுப்பாளையம் கிராமத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் புதுப்பாளையம் குளம் அமைந்துள்ளது. முன்பு குளம் முழுக்க சீமை முள் மரங்களும், குறைந்த அளவில் கருவேல மரங்களும் நிறைந்து காணப்பட்டது. இந்த குளமானது கௌசிகா ஆறு மூலம் மழை நீரால் நிரம்பும் வகையில், வண்ணாற்றங்கரையில் உள்ள தடுப்பணை மூலமாக நீர் பெற்று வருகிறது.

    குளத்தில் இருந்த சீமை கருவேல மரங்களின் பாதுகாப்பில் இக்குளத்தில் கடந்த 5 ஆண்டு முன்பு வரை 300க்கும் மேற்ப்பட்ட மான்கள் இக்குளத்தில் வசித்து வந்தன. சமீபமாக குளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால், தற்போது மான்கள் அனைத்தும் அருகில் உள்ள கௌசிகா ஆற்றை ஒட்டி உள்ள புதர் பகுதிகளிலும், விவசாய நிலப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளன‌.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுமார் 25 வருடங்களுக்கு முன் 5-க்கும் குறைவான மான்கள் வழி தவறி இங்கு வந்ததாகவும், அவை இனபெருக்கம் செய்து தற்போது 300ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இக்குளம் மட்டுமின்றி அருகில் உள்ள நல்லியம்பாளையம் , சாமந்தன்கோட்டை, கோதபாளையம், காமநாயக்கன்பாளையம், மூனுகட்டிபாளையம் உள்ளிட்ட 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள சிறு குட்டைகள், ஓடைகளிலும் மான்கள் வசித்து வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவிநாசி சங்கமாங்குளம், சேவூர் குளம் வரை மான்கள் வசித்து வருகின்றன. மான்களின் அதிகபடியான எண்ணிக்கையால் புதுப்பாளையம், தெக்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த பல வருடங்களாக உணவு தானிய பயிர்கள் உட்பட எந்த விவசாயமும் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

    மான்களின் பெருக்கம் காரணமாக அவை போதிய உணவு கிடைக்காமல் விவசாய நிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வருவதால் கால்நடைகளுக்கான சோளம், சீமை தட்டு உள்ளிட்ட தீவனங்களை கூட கம்பி வேலியிட்டு பாதுகாத்து வருவதாகவும் இருக்கும் நீரைக்கொண்டு ஏதேனும் பயிர்சாகுபடி செய்திருந்தாலும் ஒரே இரவில் மொத்த பயிரையும் கூட்டமாக வந்து மேய்ந்து விடுவதாகவும் ஆதலால் தாங்கள் எந்த ஒரு விவசாயமும் செய்வதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேலும் தென்னை மரங்களை காக்க தாங்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்று குட்டைகளில் நீரை அருந்தி விட்டு தங்கள் நிலங்களிலேயே வசித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பெருகிவிட்ட மான்களை இங்கிருந்து பாதுகாப்பாக இடம் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    இப்பகுதியில் பொதுபணித்துறை கட்டுபாட்டில் உள்ள இக்குளங்களுக்கு அருகிலேயே சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை , திருப்பூர் - கோவை சாலை, திருப்பூர் - அவிநாசி சாலைகள் அமைந்துள்ளன. இவற்றை மான்கள் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து போவது அடிக்கடி நிகழ்கிறது. நீர் மற்றும் உணவு தேடி மான்கள் குளத்தை விட்டு வெளியே வரும் போது நாய்களிடம் சிக்கியும், மான் வேட்டையாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

    மிகவும் பயந்த குணமுள்ள மான்களை மொத்தமாக இடமாற்றம் செய்வது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும், தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் , வனத்துறைக்கும் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது. தகுந்த வல்லுநர்களை கொண்டு உயிர்ச் சேதமில்லாமல் மான்களை இடமாற்றம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×