search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் ஆணையம்"

    • பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார்.
    • கலாஷேத்ரா கல்லூரிக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக கல்லூரிக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆனார்கள்.
    • மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையை அறிக்கையாக இன்று அல்லது நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளேன்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகளிடம் அவர் எழுத்துப் பூர்வமாக பல்வேறு தகவல்களை திரட்டினார். மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக கலாஷேத்ரா இயக்குனரான ரேவதி ராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

    இதனை ஏற்று ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆனார்கள். அப்போது கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் தெரிவித்துள்ள புகார்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை மகளிர் ஆணைய தலைவி குமரி கேட்டு உள்ளார். இருவரும் ஆஜராகிவிட்டு சென்ற பிகு மகளிர் ஆணைய தலைவி குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலாஷேத்ராவில் தங்களிடம் பாலியல் புகார் எதுவும் வரவில்லை என்று இயக்குனர் தெரிவித்தார். கல்லூரியில் மாணவிகள் நலனுக்காக அமைக்கப்பட்டு உள்ள கமிட்டியின் பணி என்ன? அது செயல்படுத்தப்படுவது எப்படி? என்பது தொடர்பாக ஆவணங்களை கேட்டு உள்ளேன். நாளை மறுநாள் யாரிடமாவது கொடுத்து அனுப்பினால் போதும் என்றும், நீங்கள் நேரில் வர தேவையில்லை என்றும் கூறியுள்ளேன். மாணவிகளுக்கு ஆன்லைன் தேர்வு பிடிக்கவில்லை. நேரடி தேர்வையே விரும்புகிறார்கள் என்று கலாஷேத்ரா இயக்குனரிடம் தெரிவித்தேன். அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.

    பாலியல் புகாருக்கு உள்ளான 3 நபர்களையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளேன்.

    இதுவரை மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையை அறிக்கையாக இன்று அல்லது நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு குமரி தெரிவித்தார்.

    • கேரளாவில் 5 முன்னாள் மாணவிகள், சென்னையில் 2 மாணவிகள் என இதுவரை 7 மாணவிகள் ஹரிபத்மனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    • மேலும் 4 மாணவிகள் ஹரிபத்மன் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர்.

    சென்னை:

    கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக கேரள முன்னாள் மாணவிகள் 5 பேர் அளித்துள்ள சாட்சியமே அவருக்கு எதிராக திரும்பி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹரிபத்மன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உண்மைதான் என்று முன்னாள் மாணவிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

    கேரளாவில் 5 முன்னாள் மாணவிகள், சென்னையில் 2 மாணவிகள் என இதுவரை 7 மாணவிகள் ஹரிபத்மனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இன்று மேலும் 4 மாணவிகள் ஹரிபத்மன் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர் என்றும் அதிகாரி கூறினார்.

    • கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.
    • கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

    சென்னை:

    கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை நடத்தியபின் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.

    மாணவிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நான் நேரிலும் சந்திப்பேன்.

    பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புகார்கள் ஆன்லைன் மூலமும் வந்துள்ளன. புகார்கள் மற்றும் ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்படும். ஆதாரத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    ஐசிசி கமிட்டியின் ஆவணங்களை கேட்டுள்ளேன்.

    கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலாசேத்ரா முன்னாள் மாணவிகள் 5 பேரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • மாதவரத்தில் உள்ள அந்த நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் பணி புரிந்து வரும் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் 3 நடன உதவியாளர்கள் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அடையாறு மகளிர் போலீசில் அவர் அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர்கள் நெல்சன், சுதர்சன் மற்றும் தனிப்படை போலீசார் கேரள முன்னாள் மாணவி அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். கேரள மாணவி அளித்திருந்த புகாரில் ஹரிபத்மனின் பாலியல் லீலைகள் பற்றி தன்னுடன் படித்த தோழிகள் 5 பேருக்கு தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து கேரள மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டவும், அது தொடர்பான உண்மை தன்மையை கண்டறியவும் முடிவு செய்த தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கலாசேத்ரா முன்னாள் மாணவிகள் 5 பேரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேராசிரியர் ஹரி பத்மனின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.

    இதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் சென்னையில் முன்னாள் மாணவிகள் சிலரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

    இப்படி போலீஸ் விசாரணையில் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் போலீசுக்கு கிடைத்தன. இதையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த ஹரிபத்மன் 2 நாட்களுக்கு முன்பே சென்னை திரும்பினார்.

    மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்திய பிறகே ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதன்படி வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்கள் போலீசுக்கு முழுமையாக கிடைத்தன.

    இதையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் மீதான பிடி இறுகியது. அவரை கைது செய்ய போலீசார் தேடினர். அப்போது ஹரிபத்மன் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய பிறகு வடசென்னை பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மாதவரத்தில் உள்ள அந்த நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். நண்பரின் வீட்டில் இருந்து அடையாறு தனிப்படை போலீசார் ஹரி பத்மனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    ரகசிய இடத்தில் வைத்து ஹரிபத்மனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது ஹரிபத்மன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதனை போலீசார் வழக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பேராசிரியர் ஹரிபத்மன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதன் பிறகு கூடுதல் விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் பேராசிரியர் ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் கலாசேத்ராவில் நடைபெற்ற பாலியல் விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரண்டு சட்டப்பிரிவுகளுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    திருவான்மியூர் கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பரபரப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு போட்டுள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 509 என்கிற சட்ட பிரிவு பெண்ணின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சட்டப்பிரிவாகும். இந்த சட்டப்பிரிவின்கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    354-ஏ.ஐ.பி.சி. என்கிற சட்டப்பிரிவும் கடுமையான சட்டப்பிரிவாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் வகையில் பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்ளுதல் என்பது இந்த சட்ட பிரிவின் சாராம்சமாகும். இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த இரண்டு சட்டப்பிரிவுகளுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 3 சட்டப்பிரிவுகளின் கீழும் பேராசிரியர் அரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைதானால் உடனடியாக பெயில் கிடைக்காது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறைவாசம் அனுபவித்து போலீசார் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ள அவர் இது தொடர்பான அறிக்கையை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரசிடம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த அறிக்கையின்படியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் மற்றும் 3 நடன உதவியாளர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • மாணவி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
    • கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் அரிபத்மன் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின் கல்லூரியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவிகளும் கலைகளை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இப்படி புகழ்பெற்ற கலாஷேத்ராவில் படித்து வரும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கலாஷேத்ரா நிர்வாகத்திடம் முதலில் புகார் அளித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேராசிரியர் அரிபத்மன், நடன ஆசிரியர்களான சாய் கிருஷ்ணா, சஞ்சித்லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த நிலையில் இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுவதாகவும், புகாருக்குள்ளான நபர்கள் அனைவரும் சுதந்திரமாக சுற்றி திரிவதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

    இதை தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமானதை அடுத்து ஏப்ரல் 6-ந் தேதி வரை கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் யாரும் போலீசில் புகார் அளிக்காமல் தயக்கம் காட்டி வந்தனர்.

    இதனால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் முட்டுக்கட்டை நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான கேரள முன்னாள் மாணவி ஒருவர் போலீசில் துணிச்சலாக சென்று புகார் அளித்தார். அதில் பேராசிரியர் அரிபத்மன் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியது தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தனது தோழியுடன் நேரில் சென்ற அந்த மாணவி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக போலீஸ் நடவடிக்கை தீவிரமானது.

    மாணவி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா, அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, பேராசிரியர் அரிபத்மன் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

    இந்திய தண்டனை சட்டம் 509 ஐ.பி.சி., 354-ஏ மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அரிபத்மன், கலாஷேத்ரா கல்லூரியில் கேரள மாணவியை போன்று எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை பற்றி அறிந்ததும் வெளியூர் சென்றிருந்த அரிபத்மன் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உடனடியாக சென்னை திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதை தொடர்ந்து மகளிர் போலீசார் இன்று அரிபத்மனிடம் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளனர். கல்லூரிக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    போலீஸ் பிடி இறுகி இருப்பதை தொடர்ந்து பேராசிரியர் அரிபத்மனை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பேராசிரியரிடம் விசாரணை நடத்தி அவரிடம் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்கும் போலீசார் கேரள மாணவியின் புகாருக்கு உரிய பதிலை அளிக்கவும் கோரியுள்ளனர். கலாஷேத்ரா விவகாரம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.

    இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

    இதன்படி போலீசாரும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் அரிபத்மன் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
    • 12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளேன்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி இன்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

    கலாஷேத்ரா மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளோம். ஏராளமான மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

    12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளேன். சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். 4 பேரின் மேல் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2008 முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    போராட்டங்களை நிறுத்திவிட்டு விடுதிக்கு சென்று படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.

    வரும் திங்கட்கிழமை விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலாஷேத்ரா விவகாரம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன்.
    • குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.

    சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பிரச்சினை இன்று தமிழக சட்டசபையிலும் கிளப்பப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பா.ம.க.), ராமச்சந்திரன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.

    பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ள மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும். மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, தி.வேல்முருகன், கு.செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றி இருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை உங்கள் அனுமதியோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

    ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்ரா பவுண்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து "பாலியல் தொல்லை" என டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல்துறைத் தலைவரை சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

    பிறகு தேசிய மகளிர் ஆணையமே செய்தியின் அடிப்படையில் விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்" என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்து இருக்கிறார்கள்.

    பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்று உள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

    இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா பவுண்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க்கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள்.

    இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    அரசை பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தபோதும் யாரும் புகாரளிக்கவில்லை.
    • தவறான தகவல்களை யாரும் சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டாம்.

    சென்னை:

    தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தபோதும் யாரும் புகாரளிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை.

    புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை யாரும் சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டாம்.

    கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை.
    • கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    இதையடுத்து கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒன்றிய அரசின் கலாசார துறையின் கீழ் கலாஷேத்ரா அறக்கட்டளை இயங்கி வருகிறது.

    கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. 210 மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.

    காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள்.
    • மாணவிகளின் குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ஏராளமான மாணவிகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயின்று வருகிறார்கள். இவர்கள் பேராசிரியர்கள் மற்றும் நடன உதவியாளர்கள் 3 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி அதிர வைத்துள்ளனர்.

    கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் எந்தெந்த வகையில் பாலியல் தொல்லை கொடுத்தனர்? என்பது பற்றி சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கலாஷேத்ராவில் பேராசிரியரும், நடன உதவியாளர்களும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது எப்படி? என்பது பற்றி மாணவிகள் சிலர் கண்ணீர் மல்க அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியதாவது:-

    என்னிடம் பேராசிரியரும், நடனம் சொல்லி கொடுக்கும் உதவியாளர்கள் 3 பேரும் ஆபாசமாக நடந்து கொண்டனர். செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்புவது... வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பேசுவது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். சில நேரங்களில் அவர்கள் பார்க்கும் பார்வையே ஆபாசமாக இருக்கும். இதனால் பலமுறை நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

    இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் கூறும்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் 4 பேரும் பார்வையாலேயே கொன்று விடும் வகையில் செயல்படுவார்கள். அவர்களின் பார்வையால் உடம்பே கூசும். இதுபோன்ற நேரங்களில் நான் ஆடையில்லாமல் இருப்பது போன்றும் உணர்ந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    மாணவிகளின் இந்த குற்றச்சாட்டு காரணமாக கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா இன்று விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கலாஷேத்ரா மாணவிகளிடம் சீனியர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் போலீசில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மாணவிகள் தற்போதைய சூழலில் போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை என்றே தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை தரப்பில் கிரிமினல் விசாரணை எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×