search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை விவசாயிகள்"

    • தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. நம் நாடு முழுவதற்குமான மக்களின் தேவைக்கு 70 சதவீதம் பாமாயில் மற்றும் இதர ஆயில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலை விட தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப தென்னை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதாலும் தேங்காய் விலை குறைந்துவிடுகிறது.

    தற்போது தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் தேங்காய் விலை குறைந்து விட்டதாகவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேலும் தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் கூறியபடி சென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, விலையை நிர்ணயம் செய்து, தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    • தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தேங்காய் விலை வீழ்ச்சியடையாமல் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தேங்காய் விலை வீழ்ச்சி குறித்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டத்தால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.சிறு, குறு விவசாயிகள் அதிகமுள்ள நிலையில், ஆட்களை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது.தென்னை விவசாயத்தை காப்பதாக கூறி மத்திய அரசு கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையாக, ரூ 105.90 நிர்ணயித்தது. ஆனால், அரசு கொள்முதல் நிலையங்களில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. வேறு வழியின்றி, தனியாரிடம் விற்க செல்லும் போது, ரூ. 82 நிலவரத்தில் மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்கின்றனர். கொப்பரைக்கான ஆதார விலையை,150 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியடையாமல் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.

    • கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது.
    • தென்னை விவசாயிகள் தி.மு.க. ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த இரண்டு ஆண்டுகால தி.மு.க. அரசின் தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் என்று மக்களை திசை திருப்பும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, விவசாயம் தொடர்பான தொழில்களைக் காக்க எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்காது வேளாண் பெருமக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, தென்னை விவசாயிகள் தி.மு.க. ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின் சாபக்கேடாகும்.

    தி.மு.க. அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தென்னையை பருவ கால பயிராகக் கருதாமல், ஆண்டுக்கு ஏழு முறை குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்யை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் உப பொருட்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில், தென்னை விவசாயிகளை ஒன்று திரட்டி, அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
    • விவசாயிகள் பயனடைய உழவன் செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் .

     உடுமலை : 

    உடுமலை வட்டாரத்தில் நீண்ட காலப்பயிரான தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு சுமார் 40ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    அதன்படி வேளாண்மை உழவர் நலத்துறை-தென்னை வளர்ச்சி வாரியம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி 2.5 ஏக்கருக்கு ஒரு எண் என்ற அளவில் முழுவிலையான ரூ.1400 லிருந்து 50 சதவீத மானியத்தில் ரூ.700 க்கு வழங்கப்பட உள்ளது.

    மேலும் மெட்டாரைசியம் பூஞ்சாணம் 2.5 ஏக்கருக்கு 4 கிலோ வீதம் ரூ .540 முழு விலையில் 50சதவீத மானியத்தில் ரூ.270 க்கு வழங்கப்பட உள்ளது.

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் பொதுப்பிரிவின் கீழ் 585 ஏக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 146 ஏக்கர், பிற பஞ்சாயத்துகளில் பொதுப் பிரிவில் 146 ஏக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 ஏக்கர் என மொத்தம் 1914 ஏக்கர் பரப்பளவு இலக்கு பெறப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தென்னையில் உர நிர்வாகம் திட்டத்தில் 145 ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டத்தில் 370 பயனாளிகள் பயனடையும் வகையில் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் இலக்கு பெறப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் பயனடைய உழவன் செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.  

    ×