search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut farmers"

    • தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
    • விவசாயிகள் பயனடைய உழவன் செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் .

     உடுமலை : 

    உடுமலை வட்டாரத்தில் நீண்ட காலப்பயிரான தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு சுமார் 40ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    அதன்படி வேளாண்மை உழவர் நலத்துறை-தென்னை வளர்ச்சி வாரியம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி 2.5 ஏக்கருக்கு ஒரு எண் என்ற அளவில் முழுவிலையான ரூ.1400 லிருந்து 50 சதவீத மானியத்தில் ரூ.700 க்கு வழங்கப்பட உள்ளது.

    மேலும் மெட்டாரைசியம் பூஞ்சாணம் 2.5 ஏக்கருக்கு 4 கிலோ வீதம் ரூ .540 முழு விலையில் 50சதவீத மானியத்தில் ரூ.270 க்கு வழங்கப்பட உள்ளது.

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் பொதுப்பிரிவின் கீழ் 585 ஏக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 146 ஏக்கர், பிற பஞ்சாயத்துகளில் பொதுப் பிரிவில் 146 ஏக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 ஏக்கர் என மொத்தம் 1914 ஏக்கர் பரப்பளவு இலக்கு பெறப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தென்னையில் உர நிர்வாகம் திட்டத்தில் 145 ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டத்தில் 370 பயனாளிகள் பயனடையும் வகையில் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் இலக்கு பெறப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் பயனடைய உழவன் செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.  

    • தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
    • பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை விற்பனையில் கிடைக்கும் பணத்தை வைத்து விவசாயிகள், வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.தென்னை விவசாயத்துக்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை சரிந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசு நிர்ணயித்த ஆதார விலையில், கிலோ 105.90 ரூபாய்க்கு கடந்த மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் இதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றன. ஒரு விவசாயிடம் இருந்து ஒரு முறை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்ற பிரச்னைகளால் கொள்முதல் செய்தும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

    தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கு நேர்மாறாக விலை குறைந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாபாரிகள், பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் கைகோர்த்து சிண்டிக்கேட் அமைத்து விலையை குறைப்பதாகவிவசாயிகள் கூறுகின்றனர்.

    காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த வாரம், ஒரு டன் பச்சை காய் 24,500 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ஆயிரமாகவும், 26 ஆயிரம் ரூபாயாக இருந்த கருப்பு காய் 25 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.கடந்த சில வாரமாக ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,850 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம் 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தேங்காய் பவுடர் கிலோ, 125 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:- பருவமழை தொடர்ந்து பெய்ததால் கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் மார்க்கெட்டில் 50 சதவீதம் தேங்காய் வரத்து மட்டும் உள்ளது.ஆனால் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைந்து விலை உயர்வது வாடிக்கை. ஆனால், 'சிண்டிக்கேட்' அமைத்து விலையை குறைக்கின்றனர்.அதே நேரத்தில் நுகர்வோருக்கு தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. விவசாயிகளை நசுக்கும் செயலாக இது கருதப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்க திட்டமிடுகின்றன.கடந்தாண்டு மார்க்கெட்டில் 95 - 100 ரூபாய் வரை விலை இருந்தது. அப்போதும், சிண்டிகேட்' அமைத்து 80 ரூபாயாக குறைத்தனர். ஆனால், வரத்து குறைவால் விலை மீண்டும் உயர்ந்தது. அதே நிலை மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறோம்.தற்போது, ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும்.

    திருப்பூர் :

    தேங்காய் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில்வருகிற 13ந் தேதி நடக்கிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

    தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும். தமிழக அரசு அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் சமையலுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தற்போது ஜூலை 31ந் தேதி வரை தேங்காய் கொள்முதலுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.விவசாய சங்கங்களின் கோரிக்கையை அடுத்து, ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என வேளாண்மை துறை செயலாளர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை இது குறித்து எவ்வித அரசாணையும் வெளியாகவில்லை.எனவே உடனடியாக காலநீடிப்பு வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

    தென்னையை தோட்டக்கலைத்துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.வருகிற 13-ந்தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறோம் என்றனர்.

    • தேவதானப்பட்டியில் போதிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டம்
    • தேங்காயை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டியில் மத்திய மாநில அரசு தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை ரூ.7-க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மற்றும் தேங்காய் கொள்முதல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தமிழக அரசும், மத்திய அரசும் தேங்காய்க்கு உரிய கொள்முதல் விலையை வழங்க கோரியும் வெளிநாடுகளிலிருந்து தேங்காய் உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

    இந்நிலையில் தென்னை விவசாயிகள் கூறுகையில், தேங்காய் உற்பத்தி செய்வதில் உரம் விலை மற்றும் கூலியாட்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    எனவே தேங்காய் கிலோ ரூ.50க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.140 க்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


    பரவாக்கோட்டையில் கஜா புயல் நிவாரணம் வழங்ககோரி தென்னை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு 40 நாட்களாகியும்  பரவாக்கோட்டை பகுதி தென்னை விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. கணக்கெடுப்பையும் பெயரளவில் மேற்கொண்டு தங்கள் கிராமம் புறக்கணிக்கபடுவதாக கூறி விவசாயி ரவிச்சந்திரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. 

    இதில் அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் டாக்டர் வி.திவாகரன் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் உரிய நிவாரணம் இதுவரை வழங்காமல் இந்த பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்புவதோடு நேரிலும் சந்தித்து அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வலியுறுத்த போவதாகவும் கூறினார். 

    பின்னர் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி தலைமையிலான போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி அவர்களை கைது செய்ய முயன்ற போது அவருக்கும் போராட்ட காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி. அசோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய 30 பேரையும் கைது செய்தனர்.
    ×