search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் உயராத கொப்பரை விலை - தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
    X

    கோப்புபடம்.

    இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் உயராத கொப்பரை விலை - தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
    • பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை விற்பனையில் கிடைக்கும் பணத்தை வைத்து விவசாயிகள், வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.தென்னை விவசாயத்துக்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை சரிந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசு நிர்ணயித்த ஆதார விலையில், கிலோ 105.90 ரூபாய்க்கு கடந்த மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் இதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றன. ஒரு விவசாயிடம் இருந்து ஒரு முறை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்ற பிரச்னைகளால் கொள்முதல் செய்தும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

    தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கு நேர்மாறாக விலை குறைந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாபாரிகள், பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் கைகோர்த்து சிண்டிக்கேட் அமைத்து விலையை குறைப்பதாகவிவசாயிகள் கூறுகின்றனர்.

    காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த வாரம், ஒரு டன் பச்சை காய் 24,500 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ஆயிரமாகவும், 26 ஆயிரம் ரூபாயாக இருந்த கருப்பு காய் 25 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.கடந்த சில வாரமாக ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,850 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம் 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தேங்காய் பவுடர் கிலோ, 125 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:- பருவமழை தொடர்ந்து பெய்ததால் கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் மார்க்கெட்டில் 50 சதவீதம் தேங்காய் வரத்து மட்டும் உள்ளது.ஆனால் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைந்து விலை உயர்வது வாடிக்கை. ஆனால், 'சிண்டிக்கேட்' அமைத்து விலையை குறைக்கின்றனர்.அதே நேரத்தில் நுகர்வோருக்கு தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. விவசாயிகளை நசுக்கும் செயலாக இது கருதப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்க திட்டமிடுகின்றன.கடந்தாண்டு மார்க்கெட்டில் 95 - 100 ரூபாய் வரை விலை இருந்தது. அப்போதும், சிண்டிகேட்' அமைத்து 80 ரூபாயாக குறைத்தனர். ஆனால், வரத்து குறைவால் விலை மீண்டும் உயர்ந்தது. அதே நிலை மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறோம்.தற்போது, ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×