search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண மோசடி"

    • சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.
    • மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தாசப்பகவுண்டர் புதூர்.

    இந்த பகுதியை சேர்ந்த செல்வராஜ், கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர்.

    இதற்காக புளியம்பட்டி பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகிய 8 புரோக்கர்கள் சரவணனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.

    இறுதியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகள் சரிதா (27) என்பவரை சரவணனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பார்க்கும் போது சரவணனுக்கு சரிதாவை பிடித்து போனது.

    அவரது குடும்பப் பின்னணி குறித்து கேட்டபோது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அண்ணன் ஒருவர் திருமணமாகி கேரளாவில் வசிப்பதாகவும் கூறினர்.

    மேலும் சரிதா ஈரோட்டில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி பேப்பர் கோன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) என்பவர் ஆதரவாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.

    இதனால் மனம் இறங்கிய சரவணன் ஆதரவற்ற ஏழை பெண்ணை திருமணம் செய்தால் குடும்பம் நன்றாக இருக்கும் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 20.8.2022 அன்று சரவணன் தனது சொந்த ஊரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சரிதாவை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் புரோக்கர்கள் 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக சரவணன் கொடுத்தார். மன வாழ்க்கையை தொடங்கிய சரவணன் மனைவி சரிதா மீது அளவு கடந்த பாசம் வைத்தார். தாய் தந்தையை இழந்த பெண் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார். இப்படியாக சில வாரங்கள் இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக ஓடியது.

    இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை செல்போன் வடிவில் சரவணனுக்கு பேரடியாக வந்து விழுந்தது. ஒரு நாள் மனைவியின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார்.

    அப்போது வாட்ஸ்அப்பில் சரிதா அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு 2 வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்த சரவணன் போனில் பேசியிருக்கலாமே ஏன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று சந்தேகம் அடைந்து அந்த வாய்ஸ் மெசேஜை கேட்டார்.

    அதில் இங்கு எல்லோரும் இருப்பதால் பிரியாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போகனும். பார்க்க ஆள் இல்லை. ஏதாவது பொய் சொல்லு. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு. பெரியப்பா பாப்பாவை காலேஜில் சேர்க்க போயிட்டார். நான் தனியாக இருக்கேன். இந்த வாரம் பெட்ல சேர சொல்லி இருக்காங்கனு சொல்லு.

    இங்க இருந்துட்டு 10 பைசா என்னால மிச்சம் பண்ண முடியாது. இங்கே ஒரு குறையும் இல்லை என்று பேசி உள்ளார்.

    அடுத்த ஆடியோவில், இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி நீயா வா. ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன். வேறு ஏதாவது கனெக்சன் இருக்கானு பாரு. அவன் கிறுக்கனா இருக்கனும். ஒரு வாரத்துல போயிட்டு ரிட்டர்ன் இங்க வரனும். வேறு ஏதாவது ஆள் இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இந்த மாதிரி விவரமான ஆளு வேண்டாம்.

    வயசு அதிகமாக இருக்கிற மாதிரி, போனால் இரண்டு நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போயி வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை இருக்கு. ஏகப்பட்ட சிக்கலில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பிரியா பேச முடியலை. அவர்கிட்ட இந்த வாரம் ஊருக்கு போகனும் என்று சொல்லி இருக்கேன். நீ வந்து அழைச்சுட்டு போக வந்தா விட்டுடுவாங்க. வந்து அழைச்சுட்டு போ, ஓடி போயிட மாட்டேன். நான் ஓடி போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும். அதுவும் ஒரு பயமா இருக்கு. ரொம்ப பாசமாக இருக்காங்க. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன். இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு. நீ வந்தால் போதும் என்று பேசி இருந்தார்.

    இதைக்கேட்ட சரவணன் அதிர்ச்சியில் உறைந்து போனார். பாசம் வைத்த மனைவி மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்தவர் ஒரு வாரமாக விரக்தியில் இருந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சரவணனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி வாய்ஸ் மெசேஜ் குறித்து சரவணன் எதுவும் காட்டி கொள்ளாமல் சரிதாவிடம் தனது நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும் உனது பெரியம்மாளை பார்க்க சொல் என்று கூறினார்.

    அதன்படி சரிதா தனது பெரியம்மாளிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் கணவரை பிரிந்ததாக ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்தார். நண்பருக்கு பெண் பிடித்து விட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரவணன் கூறினார். அதன்படி ரூ.80 ஆயிரம் கமிஷன் பேசப்பட்டது.

    இதனை அடுத்து சரிதாவின் பெரியம்மாள் ஒரு காரில் ஒரு பெண்ணை தாசப்பன்கவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார். அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து சரவணன் மடக்கி பிடித்தார். இதனால் விஜயலட்சுமி, சரிதா மற்றும் விஜயலட்சுமியுடன் வந்த பெண் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    திருமணம் செய்ய வந்த பெண்ணை விசாரித்த போது அவர் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் என்பவரது மனைவி விஜயா (36) என்பது தெரிய வந்தது. சரிதா உள்பட 3 பேரிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரித்த போது இவர்கள் திருமணம் ஆகாத வயதான வாலிபர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறி வைத்து திருமண கமிஷனுக்காக இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் சரவணனை திருமணம் செய்து வைத்த வகையில் சரிதாவுக்கு ரூ.20 ஆயிரம் கிடைத்ததும் மற்ற 8 புரோக்கர்களும் 1 லட்சம் ரூபாயை பங்கு போட்டுக் கொண்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சரிதா ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை இதேபோன்று மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவரிடம் 2½ லட்சம் ரூபாய் பறித்து கொண்டு தப்பியதும் அந்த டிரைவர் சரிதாவை தேடி கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு வெளியே தெரிந்தால் அவமானம் என்று விரட்டி விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    சரிதாவின் பெரியம்மாளாக நடித்த விஜயலட்சுமியின் கணவர் ராமேஸ்வரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து ஓய்வுபெற்றவர். சரவணனின் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அழைத்து வந்த கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த அர்சுணன் மனைவி விஜயாவிற்கு 21 வயதில் ஒரு மகளும் 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    சரிதா மேலும் இதே போன்று 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுபோக இந்த மோசடி கும்பல் இன்னும் நிறைய பேரை ஏமாற்றி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இது குறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.
    • தமிழகம் முழுவதும் பெண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை போலீசார் தாயரித்து வருகிறார்கள்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ரம்யா, இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    ரம்யா ஓராண்டுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்திட முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடி வந்தார். அதே ஆப் மூலமாக அறிமுகமாகிய பெண் ஒருவர் தான் கணவரை இழந்தவர் என்றும், நான் உங்களைப் போன்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்தார்.

    பின்னர் திருமணம் முடிந்து ஒரு நாள் மட்டும் வீட்டிலிருந்த அந்த பெண் செந்தில் வீட்டில் இருந்த 4½ பவுன் நகை, பணம் மற்றும் செல்போனுடன் திடீரென மாயமானார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    டிரைவர் செந்திலை ஏமாற்றி விட்டு தலைமறைவான அந்த பெண் ஏற்கனவே கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சலவை தொழிலாளி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி உள்பட பலரை இதே வகையில் ஏமாற்றி பணம், நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

    மேலும் இது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை போலீசார் தாயரித்து வருகிறார்கள். ஆனால் அவரது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பெண் தனது வழக்கறிஞர்கள் மூலம் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் செந்தில் உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதை ஏற்க மறுத்த செந்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்ததால் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட செந்தில் கூறியதாவது-

    ஏற்கனவே மனைவியை இழந்த நான் கடும் துயரத்தில் இருந்த போது சம்பந்தப்பட்ட அந்த பெண் என்னிடம் ஆறுதலாக பேசி எனது மனதை மாற்றினார், தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலத்திற்கு வந்து அங்குள்ள ஒரு கோவில் முன் என்னை தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினார் .

    பிறகு என் வீட்டிற்கு வந்த அவர் எனது மனைவி , மகன் நகைகள் , பணம் மற்றும் செல்போன் உள்பட விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு திடீரென மாயமானார்.

    இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரை சென்று மீண்டுள்ளேன். இதுபோல் அந்த பெண் வேறு யாரையும் ஏமாற்றாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர் அவர் மீது விசாரணை மேற்கொண்டு அவரை சட்டத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும், இதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார்.
    • கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 33). இவருக்கும், மதுரையை சேர்ந்த போலி திருமண கும்பலை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 7-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 2-வது நாளில் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சந்தியா மாயமானார்.

    திருமண ஆசையில் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து தனபால் பரமத்திவேலூர் போலீசில் கொடுத்தார். அதன் பேரில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி மணப்பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி ஆகிய இருவரும் சேலம் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் கார் டிரைவர் ஜெயவேல், பெண் புரோக்கர் தனலட்சுமியின் உறவினர் ஏ.சி. மெக்கானிக் கவுதம் ஆகிய இருவரும் பரமத்தியில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மோசடி திருமணங்கள் நடத்திய அய்யப்பன் போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாக வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதேபோல் வேறு பெண்களை வைத்து சுமார் 12 மோசடி திருமணங்கள் நடந்திருக்கிறது. மதுரையை சேர்ந்த பாலமுருகன் நெட்ஒர்க் தலைவனாக இருந்து கொண்டு அவன் சொல்கின்ற வேலைகளை நாங்கள் செய்வோம்.

    திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார். பிறகு கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணை கொண்டு வந்து விடுவோம். புரோக்கர் பாலமுருகனுக்கும் இந்த திருமண மோசடிகளுக்கு கார் டிரைவர் ஆக ஜெயவேல் இருந்துள்ளார்.

    ஓடிவரும் பெண்ணிடம் இருக்கும் பொருளை விற்று கார் டிரைவருக்கு கொடுப்போம். இந்த திருமண மோசடி தொழிலை கடந்த நான்கு வருடங்களாக தமிழக முழுவதும் செய்து வந்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 மோசடி திருமணங்களை நடத்தி வைக்கப்பட்டுள்ளது. தப்பு பண்ணிட்டேன் இதுக்கு மேல இவங்க கூட நான் சேர மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வீடியோ பரமத்திவேலூர் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    அய்யப்பன் தப்பிய விவகாரம், வைரலாகும் வீடியோ ஆகியவை குறித்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் கூறும்போது, அய்யப்பன் பேசுவதாக கூறும் வீடியோ போலீசார் வாக்குமூலமாக எடுத்தது அல்ல. அவர் மீது புகார் கொடுத்தவர்கள் எடுத்ததாக தெரிகிறது. தப்பிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தான் அய்யப்பன் தப்பி ஓடினார்.

    இதனிடையே அய்யப்பன் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்கு இங்கு வரவில்லை என அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் :

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் தனபால் (வயது 37). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (27). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 7-ந் தேதி பரமத்திவேலூர் அண்ணா நகர் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் மணமகளின் அக்காள் மற்றும் மாமா என 2 பேர் மட்டுமே வந்திருந்ததாக‌ கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் (45) என்பவர் திருமணம் முடிந்த பின்னர் அதற்கான கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று கொண்டு மணமகளின் அக்கா மற்றும் மாமா என்று கூறி வந்த 2 பேரையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் புதுமாப்பிள்ளை தனபால் பல கனவுகளுடன் தனது வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் 2 நாட்களில் தனபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து தனபால் உடனே மனைவி சந்தியா, புரோக்கர் பாலமுருகன் மற்றும் உறவினர்களாக வந்த 2 பேருக்கு போன் செய்தபோது, அனைவரது செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது திருமண பட்டு சேலை மற்றும் சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட தனபால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது ஒருபுறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் சந்தியா, புரோக்கர் மற்றும் உடன் வந்தவர்களை பிடிக்க எண்ணினார்.

    அதன்படி அந்த நபர் திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமியிடம் (45) கூறினார். பின்னர் மணமகனின் போட்டோவையும் புரோக்கரிடம் கொடுத்தனர். அதில் மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என தனலட்சுமி செல்போனில் கூறியதையடுத்து திருமணத்தை முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்து மணப்பெண் சந்தியா மற்றும் தனலட்சுமியின் உறவினர் என கூறப்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தனர். அப்போது அங்கு நின்ற தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து சந்தியா, அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்களை நடத்தி வைத்து நகை, பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    தற்போது சந்தியாவுக்கு திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணம் ஆகும். இதையடுத்து சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, மதுரை மாவட்டம் வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மெக்கானிக் கவுதம் (26), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார் டிரைவர் ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான புரோக்கர் பாலமுருகன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான 'கல்யாண ராணி' சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சினிமா போல நடந்த இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சந்தியா மற்றும் புரோக்கர்கள் எத்தனை இடங்களில் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமுவும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து இதேபோல பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • ராமுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவைப்புதூர் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் 37 வயது பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து அவர் 2-வது திருமணம் செய்வதற்காக திருமண தகவல் மையம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

    இதனை பார்த்த சின்ன தடாகத்தை சேர்ந்த ராமு என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு தான் சுங்கத்துறையில் இணை கமிஷனராக பணியாற்றுவதாகவும், தனக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டதால் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.

    கடந்த மாதம் 17-ந்தேதி பெண் ராமுவை சந்திக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து ராமு சீருடை அணிந்து சென்று பெண்ணை சந்தித்து பேசினார்.

    பின்னர் ராமுவின் பேச்சை நம்பிய பெண் அவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். 2 பேரும் அடுத்த மாதம் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    இந்தநிலையில் ராமு பெண்ணை கடைக்கு அழைத்து சென்று ரூ.50 ஆயிரத்துக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார். மேலும் பெண்ணை தொடர்பு கொண்ட ராமு தனது விவாகரத்து ஆன மனைவி ரூ.25 ஆயிரம் பணம் கேட்பதாக தெரிவித்தார். நாம் திருமணம் செய்ய உள்ளதால் அவர் கேட்பதால் பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து பெண் ஆன்லைன் மூலமாக ராமுவுக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார்.

    அதன் பின்னர் அவர் பெண்ணிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்ந்து வந்தார். இதனால் ராமு மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சுங்கத்துறை அலுவலகத்துக்கு சென்று ராமு என்பவர் இணை கமிஷனராக வேலை பார்க்கிறாரா என விசாரணை நடத்தினார். அப்போது அப்படி யாரும் வேலை பார்க்கவில்லை என்பது அவருக்கு தெரிவந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சுங்கத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்த ராமுவை கைது செய்தனர். இதற்கு உந்தையாக இருந்த அவரது மனைவி லட்சுமி (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ராமு இதேபோல சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த பெண்ணிடம் தான் சுங்கத்துறை அதிகாரி என கூறி அறிமுகமாகி உள்ளார்.

    பின்னர் அவர் அந்த பெண்ணிடம் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக பயணிகள் கடத்தி வந்த தங்க நகைகள் தன்னிடம் ஏராளமாக உள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமுவும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து இதேபோல பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் ராமுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    • கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
    • முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் அம்பவாரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 16-ந் தேதி விஜயவாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் ஐதராபாத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில் புதியதாக வீடு கட்ட ரூ.80 லட்சம் தேவைப்படுவதாகவும், உன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வர வேண்டும் என இளம்பெண்ணிடம் சதீஷ்குமார் கூறினார். அதற்கு இளம்பெண் தன்னுடைய தாய் வீட்டில் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார்.

    பணத்தை வாங்கி வரவில்லை என்றால் படுக்கை அறையில் எடுத்த நிர்வாண போட்டோக்களை ஆபாச வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இளம்பெண் பணம் வாங்கி வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    பெங்களூருக்கு சென்ற சதீஷ்குமார் தனது மனைவி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று மனைவியை மீண்டும் மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் கணவரின் செல்போனை பிடுங்கி அதில் உள்ள போட்டோக்களை ஆய்வு செய்தபோது மேலும் 4 பெண்களை அவர் திருமணம் செய்த போட்டோக்கள் செல்போனில் இருந்தது.

    இதனைக் கண்டு திடுக்கிட்ட இளம்பெண் இதுகுறித்து குண்டூர் டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூர் மீரான், தரங்கினி ஆகியோர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

    இதையடுத்து தனது மனைவியுடன் அமெரிக்காவில் வேலைக்குச் சென்ற சதீஷ் பாபு முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

    மீண்டும் ஆந்திராவிற்கு வந்த சதீஷ்குமார் குண்டூர் நரசராவ் பேட்டை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டு நெல்லூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து மேலும் இதுபோல் வேறு பெண்கள் யாரையாவது திருமணம் செய்து ஏமாற்றினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார் சிவசங்கர் பாபு.
    • சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அடப்பா சிவசங்கர் பாபு. இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதாகவும் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    திருமணமாகி விவாகரத்து பெற்று வரன் தேடும் வசதியான பெண்களை கண்டுபிடித்து காதல் வலை வீசினார். அவர்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு நைசாக பேசி மனதை மயக்குவார். இதை உண்மை என நம்பிய விவாகரத்து பெற்ற இளம்பெண்கள் 7 பேரை அடுத்தடுத்து திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணத்தை மோசடி செய்துள்ளார்.

    இளம்பெண்ணை திருமணம் முடித்த சில மாதங்களில் அவரிடமிருந்து நகை, பணத்தை வாங்கிக்கொண்டு அடுத்த பெண்ணை தேடி செல்வார்.

    ஒரே பெண்ணிடம் மட்டும் ரூ.30 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை ஏமாற்றி வாங்கிச்சென்று அடகு வைத்தது தெரிய வந்தது. சிவசங்கர் பாபுவை திருமணம் செய்த சில பெண்கள் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளனர்.

    அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபுவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் கச்சிபவுலி போலீசார் சிவசங்கர் பாபுவை கைது செய்தனர். மேலும் இதுபோல் பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.
    • நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் சிவசங்கர் பாபு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

    திருப்பதி:

    குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி 8 பெண்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார்.

    குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

    திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

    இதே போல் பல பொய்களை சொல்லி 8 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.

    8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை ஏமாற்றிய சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடந்த மே 16-ந் தேதி கோண்டாப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வதைக் கண்டு அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆர்.சி.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.

    இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். நான் கல்லூரியில் படித்த போது அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவர் வந்து இருந்தார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம்.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தோம். எனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவைக்கு வரும் அரவிந்த் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னுடன் ஜாலியாக இருந்தார்.

    ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நான் அரவிந்தை நேரில் சந்தித்து என்னை திருமணம் செய்யும்படி கூறினேன்.

    ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் போலீசார் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார்.
    • அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    விருதுநகர்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    அங்கு சித்ராவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே குடித்தனம் நடத்தி வந்தனர்.

    அஜித்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்தபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து கோவில்பட்டிக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சித்ரா மறுமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதில் தனது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவர் சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி, தான் பெண் பார்த்து வருவதாகவும், ஆகவே உங்களது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார். அதன்பேரில் அந்த வாலிபர் சித்ராவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    இருந்தபோதிலும் அந்த வாலிபர் சித்ராவின் செல்போனுக்கு பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பெங்களூருவில் உள்ள வங்கியில் வேலை பார்ப்பதாகவும், தனது தாய்-தந்தையுடன் இருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும் சித்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆவகே அவரை சந்திக்க கோவில்பட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு சித்ராவும் சம்மதித்துள்ளார். அதன்படி நேற்று காலை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்துடன் சித்ரா காத்திருந்தார்.

    அப்போது அவருடன் பேசிய வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தார். ஓட்டலுக்கு சாப்பிட செல்லலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சித்ராவின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அங்கு சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது அந்த வாலிபர் சித்ராவின் கழுத்தில் தங்கச்சங்கிலி என்று கூறி ஒரு செயினை அணிவித்தார். மேலும் சித்ரா அணிந்திருந்த செயினை கழற்றி தனது கழுத்தில் அணிந்து கொண்டார். பின்பு இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு திரும்பிச் சென்றனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தை அந்த வாலிபரே ஓட்டி வந்தார். சித்ரா வைத்திருந்த அவரது கைப்பை மற்றும் செல்போனை அந்த வாலிபர் வாங்கி வைத்துக் கொண்டார். திடீரென அவர் வாகனத்தில் பழுது இருப்பது போல் தெரிகிறது என கூறியிருக்கிறார். அதனை சரி செய்து வருவதாக கூறி சித்ராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. தனது செல்போனும் அந்த வாலிபரிடம் சிக்கிக் கொண்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் சித்ரா தவித்தார். சாத்தூரில் பலமணி நேரமாக காத்திருந்த சித்ரா, அந்த வாலிபர் தன்னை ஏமாற்றி நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனுடன் சென்றதை அறிந்தார்.

    பின்னர் வேறு வழியில்லாமல் அங்கு நின்ற முதியவர் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு பஸ்சில் தனது ஊருக்கு சென்றார். அங்கு சென்று அந்த வாலிபர் அணிவித்த நகையை சோதனை செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

    திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தனது நகை, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவைகளை பறி கொடுத்தது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார்.

    தன்னிடம் நூதன மோசடி செய்த வாலிபர் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் சித்ராவுக்கு தெரியவில்லை. இதனால் சித்ராவை ஏமாற்றிய வாலிபர் யார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிந்த ராஜசேகரன் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.
    • பணம் வாங்கிய பின்னர் மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

    சிங்கப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார்.

    இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.

    இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு (வயது 51) என்ற பெண் கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார்.

    தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தான் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தனது போட்டோவை அனுப்பினால் 51 வயது என்பது வெளியில் தெரிந்து விடும் என நினைத்து தனது உறவுக்காரரான 25 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டார்.

    இதை பார்த்த கோவிந்த ராஜசேகர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் தனது தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் உடனடியாக பணம் தேவைப்பபடுவதாகவும் மல்லிகா கோவிந்த ராஜசேகரிடம் கூறினார்.

    இதை நம்பி அவரும் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன் பிறகு மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்த ராஜசேகர் போலீசில் புகார் செய்தார். சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகா ராமுவை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமண மோசடியில் ஈடுப்பட்டதும் தெரிந்தது.

    இதையடுத்து மல்லிகா சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கு முன்பும் மல்லிகா இதுபோன்று திருமண மோசடி செய்து பலரிடம் பணம் பறித்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×