என் மலர்
நீங்கள் தேடியது "Marriage cheating"
- பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ராய்ப்பூர்:
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் 25 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் அனுராதா ஹேக்.
இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆண்களை ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
இதற்காக சில திருமண தரகர்களையும் கையில் வைத்திருந்தார். மிகவும் அதிநவீன முறையில் திருமண மோசடியில் ஈடுபட்ட இவர் சிலரை குறிவைத்து, திருமணத்துக்குப் பெண் நகை பணத்தை திருடிக் கொண்டு மாயமாகி உள்ளார்.
ராஜஸ்தானின் சவாய் மாதோப்ப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர் கடந்த மே 3-ந் தேதி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், "வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக எனக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால், மே 2ம் தேதியன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்று விட்டார்" என விஷ்ணு சர்மா புகாரளித்துள்ளார்.
இது குறித்த தொடர் விசாரணையில்தான் அனுராதா ஹேக்கின் திருமண மோசடி அம்பலமானது. சர்மாவின் வீட்டிலிருந்து அனுராதா காணாமல் போன பிறகு, போபாலில் கப்பர் என்ற மற்றொரு நபரை அனுராதா திருமணம் செய்து கொண்டு அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வருங்கால மணமகனாக காட்டிக் கொண்டு அனுராதாவை போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர்.
அனுராதா ஹேக் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 மாதத்தில் 25 பேரை அவர் திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறியுள்ளார். அங்கு தான், உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்அப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்படி, திருமணம் நடந்தும் ஒரே வாரத்தில் மணமகள் மணமகனை விட்டு ஓடிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், "அனுராதா தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் திறம்பட செயல்படுத்தியுள்ளார். மணமகளாக தன்னை முன்னிறுத்தி, தேவையான ஆவணங்களை பயன்படுத்தி சட்டப்படி திருமணம் செய்துகொள்வார். சில நாட்கள் மட்டும் கணவருடன் தங்கியிருந்து, சரியான நேரம் பார்த்து கையில் கிடைக்கும் பணம், நகை மற்றும் மின்சாதன பொருட்களுடன் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பிச் சென்று விடுவார். இதையே வாடிக்கையாக கொண்டு கச்சிதமாக பல திருமணங்களை செய்துள்ளார்" என தெரிவித்தனர்.
- சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா்.
இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதையடுத்து தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாக தெரிகிறது. கடந்த 15-ந்தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தேவிக்கு ஏற்கனவே 2பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும், அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்ததும், ஆனால் அந்த திட்டம் நிறைவேறாததால் நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்கிற ராமன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர்.
இதையறிந்த தேவி, ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணி இதற்கு தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.
சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இது போன்று பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
- வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.
இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.
நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.
ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.
ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது.
- எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.
நாகர்கோவில்:
மயக்கும் பேச்சு, ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றால் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறும் பெண்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் என ஆசைவார்த்தை கூறியவரை நம்பி, 2 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் நர்சு ஒருவர். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவர தற்போது தனது வாழ்க்கைக்கு வழி கேட்டு போலீசில் புகார் கொடுத்து கண்ணீருடன் நிற்கிறார் அவர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், திட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு மதம் மாறி விட்டதால், சுன்னத் செய்ய வேண்டும் என ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் தான், நர்சை தன் வலையில் வீழ்த்தி தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாக்கி விட்டு, கைவிட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட நர்சு போலீசில் கூறியதாவது:-
சுன்னத் செய்வதற்காக வந்த வாலிபர், தான் ஒரு டாக்டர் என என்னிடம் அறிமுகமானார். சேலம் மாவட்டத்தில் கிளினீக் மற்றும் லேப் வைத்துள்ளதாக கூறிய அவர், இணையதளத்தில் அதன் விவரங்களை என்னிடம் காண்பித்தார். அதில் கிளினீக் படம் மற்றும் டாக்டர் என அவரது பெயர் போன்றவை இருந்தன.
தொடர்ந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், எனது கிளினீக் மற்றும் லேப்பில் பணியாற்ற ஒரு நர்சு தேவை என்றும் நல்ல சம்பளம் தருகிறேன் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு அனாதை எனவும் மருத்துவராகி பணமும் மரியாதையும் கிடைத்தாலும் அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லை எனவும் நைசாக பேசினார்.
அவரது மோசடி வார்த்தைகளை நம்பிய என்னை காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் ஒரு மாதத்தில் சேலம் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்தோம்.
ஆனால் சில நாட்களில் கணவர், மருத்துவர் இல்லை என்பதும் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் என்பதும் தெரிய வர நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.
இதுபற்றி கேட்டபோது, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தாக்கினார். இந்த நிலையில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் வேறு வழியின்றி அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தினேன்.
இதற்கிடையில் அவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு அதிகமானது. 2 குழந்தைகளையும் என்னையும் அருமநல்லூர் அழைத்து வந்த கணவர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக தெரிவித்தார். அவர் திருந்தினால் சரி என்றேன்.
வெளிநாட்டு வேலைக்குச் செல்ல பணம் வேண்டும் என்று கேட்டார். இதனால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தேன். தொடர்ந்து வெளிநாடு சென்ற அவர் அங்கும் சரியாக வேலை பார்க்காமல் ஊர் திரும்பி விட்டார்.
இந்த நிலையில் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.
எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு என பலருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பூதப்பாண்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
- ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே முகமது ஷாபான் செய்து வந்துள்ளார்.
சென்னை:
கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்தான பெண்கள் ஆகியோரை குறிவைத்து ஆன்லைனில் அவர்களோடு பழகி ஏமாற்றி காதல் மன்னனாக வலம் வந்த முகமது ஷாபான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 2-வது திருமணத்துக்காக வரன் தேடிக் கொண்டிருக்கும் அவருடன் முகமது ஷாபான் என்ற வாலிபர் ஆன்லைன் மூலமாக அறிமுகமானார். புதுச்சேரியை சேர்ந்த இவர் தன்னை மிகப்பெரிய பணக்காரர் போல காட்டிக்கொண்டு பழகியுள்ளார்.
முகமது ஷாபானுக்கு 36 வயது என்பதை அறிந்ததும் அந்த பெண் தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்வதா? என்று நினைத்து விலக முயற்சித்துள்ளார். இருப்பினும் கணவரை பிரிந்த பெண்களையோ அல்லது விவாகரத்தான பெண்களையோ தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது லட்சியமாகும் என்று கூறி ஏமாற்றிய முகமது ஷாபான் கொஞ்சம் கொஞ்சமாக 415 பவுன் நகைகளை சுருட்டியுள்ளார்.
அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத் ள்ளனர்.
முகமது ஷாபான் 20-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று மோசடியாக ஏமாற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாபான் பெண்களை ஏமாற்றுவதை தனி கலைபோல கற்று வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவர் ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே செய்து வந்துள்ளார்.
இதற்காக ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப், 3 செல்போன்கள் ஆகியவற்றை முகமது ஷாபான் பயன்படுத்தியுள்ளார். 5 சிம்கார்டுகளை போட்டு செல்போனில் பேசுவது, சாட்டிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் மூலமாக பழகிய சென்னை பெண் வைத்துள்ள நகைகள் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அப்படியே அதனை வீட்டில் வைத்திருந்தால் ஆபத்து என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நகைகளை மசூதியில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி சென்னை பெண் தனது நகைகளை எடுத்து வந்து கொடுத்துள்ளார். இப்படியே 415 பவுன் நகைகளை சுருட்டிய முகமது ஷாபான் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் போலீசில் சிக்கியுள்ளார். இதுபோன்ற மேலும் பல பெண்களை முகமது ஷாபான் ஏமாற்றி இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது தவிர நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
- மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி - பெங்களூரு பழைய சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 30). இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமோனி மூலமாக கூடுவாஞ்சேரியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணை பார்த்து பேசி பழகி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன் மற்றும் இளம்பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி- பெங்களூரு பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் அலுவலகத்தின் முதல் தளத்தின் பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னிடம் பேசுவதில்லை, என்னுடைய செல்போன் எண்ணை எடுக்கவில்லை. அதனால் குணசேகரன் இங்கு வரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை பின்புறமாக பிடித்து இழுத்து அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.
- விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', என்ற பாடல் வரிகள் பலரது வாழ்வில் கேட்க மட்டுமே முடிகிறது, அமைவது கிடையாது. அதற்கு காரணம் திருமண பந்தம், பாசம் உள்ளிட்ட அனைத்தும் பணத்தை பிரதானமாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுவதாகி விட்டது. நில மோசடி, கடன் மோசடி, நகை மோசடி பட்டியலில் தற்போது பிரபலமாகி வருவது திருமண மோசடி.
குடும்ப சூழல், வாழ்க்கை பின்னணி, பொறுப்புகளை தாங்கி நிற்கும் ஆண்களின் நிலை அறிந்து அவர்களை மூளைச்சலவை செய்து நடைபெறும் மோசடிகள் எங்காவது நடந்ததாக வந்த தகவல்கள் தற்போது அடிக்கடி நிகழ்வாகி போனது. அதிலும் பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.
இதில் பணம், பொருட்களை இழந்து வாடும் பலர் தங்களது இயலாமையை வெளி உலகுக்கு சொல்ல முடியாமல் போவதுதான் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்துகிறது. அப்படியொரு மோசடிக்கு அடித்தளமிட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட தாயால் மகனின் மண வாழ்க்கை அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட நூதன மோசடி பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி (வயது 58). மற்ற பிள்ளைகளுக்கு திருமணம் வைத்து முடித்த பெருமாயி கடைக்குட்டியான தனது மகன் முருகனுக்கும் மணம் முடிக்க ஏற்பாடுகளை செய்து வந்தார். வயதான காலத்தில் தேடிப்போய் பெண் பார்க்க இயலாத நிலையில், அதற்கான பொறுப்பை புரோக்கரிடம் கொடுத்து பெருமாயி வரன் தேடி வந்தார்.
இதனை அறிந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற பெண், அவருக்கு சமீபத்தில் அறிமுகமாகியுள்ளார். தன்னிடம் ஏராளமான வரன்கள் இருக்கிறது. எனவே உங்கள் மகனுக்கு அவரது விருப்பப்படி நல்ல மனைவி கிடைப்பார். அதனை அமைத்து கொடுக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகளை உறவினர்களை விஞ்சும் அளவுக்கு பெருமாயி மனதில் விதைத்துள்ளார்.
திருமணத்திற்காக தனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் விஜயா தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெருமாயி பணம் வழங்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றது. விஜயாவுக்கு ஒப்புக்கொண்டதைப்போல, ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை சந்தோஷத்துடன் பெருமாயி வழங்கினார்.
புதிய மண வாழ்க்கை அமைந்த சந்தோஷத்தில் இருந்த முருகனுக்கு மறுநாள் காலை பெரும் அதிர்ச்சியாகவே விடிந்தது. மனைவி என்று வந்த பெண்ணும், அவரது உறவினர்களும் இரவோடு இரவாக நகை, பணத்துடன் கம்பி நீட்டியதைக் கண்டு அவரும், அவரது தாய் பெருமாயியும் அதிர்ச்சியடைந்தனர். புலம்பி அழுத பெருமாயி மகனின் வாழ்க்கையை நாமே பாழடித்து விட்டோமே என்று கதறினார்.
எனினும், தங்களது குடும்ப மானத்தை காக்கும் பொருட்டு, அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து பெருமாயி, விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதை வருத்தம் கலந்த முகத்தோடு கேட்டுக் கொண்ட விஜயா, தன்னால் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு தானே பொறுப்பேற்பதாகவும், விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.
அதன்படி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி (39) என்ற பெண்ணை அழைத்து வந்த விஜயா அவரை முருகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்காக தனக்கு மீண்டும் தனக்கு ரூ.1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். விஜயாவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பெருமாயி, விஜயாவையும், அவருடன் வந்த அருணாதேவி மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. நகரைச்சேர்ந்த காளீஸ்வரி (52) ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து, உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஒருமுறை ஏமாந்தது போதும், இனிமேலும் ஏமாறக்கூடாது என்ற வகையில் பெருமாயி எடுத்த முடிவு மகனின் மண வாழ்க்கை மீண்டும் பறிபோவதை தடுத்தது.
பெருமாயி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நூதன மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா, தூத்துக்குடியை சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி மற்றும் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா, முரளிதரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகிய 3 பேரை கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் முடிந்த கையோடு பணம், நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
உத்தரகாண்ட் மாநிலம் ஜோத்வாராவில் வசிக்கும் பிரபல நகைக்கடை அதிபர் தனக்கு மணப்பெண் தேடினார். இதற்காக ஆன்லைன் மூலம் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ஒரு பெண் அவருக்கு அறிமுகமானார். அவர் தன்னை சீமா என்று அறிமுகம் செய்துகொண்டார்.
சீமாவின் உறவினர்கள் என்று சிலரும் அறிமுகம் ஆனார்கள். இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ரூ.6.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை அதிபர் அந்த பெண்ணின் ஊரான டோராடூனுக்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கு இருந்த சீமா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுபற்றி நகைக்கடை அதிபர் அங்குள்ள முரளிபுரா போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலைய அதிகாரி சுனில் குமார் ஜாங்கிட், சப்-இன்ஸ்பெக்டர் வசுந்தரா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் டேராடூன் சென்று சீமா அகர்வாலை கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட இளம்பெண் நிக்கி என்ற சீமா அகர்வால் என்பதும் அவர் ஆன்லைன் திருமண தளங்கள் மூலமாக சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களின் முழுமையான தகவல்களை பெற்று, பின்னர் திருமணம் செய்து கொண்டு 3, 4 மாதங்களில் அவர்களின் நம்பிக்கையை பெற்று பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களுடன் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஏற்கனவே இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனை சீமா திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து அந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதேபோன்று 2017-ம் ஆண்டு குருகிராமில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து அவர் மீதும் அவரது உறவினர் மீது கற்பழிப்பு புகார் கூறி ரூ.10 லட்சம் பறித்துள்ளார். 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.1.21 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான இளம்பெண் சீமா வேறு யாரையும் இதுபோன்று மோசடி செய்துள்ளாரா? அவரது மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிதிஷ் பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- நம்பிக்கை மீறல், கற்பழிப்பு, குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
'நான் அவன் இல்லை' என்ற திரைப்படத்தில் நகைகள் மற்றும் பணத்துக்காக நடிகர் ஜீவன் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வார். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
வாலிபர் ஒருவர் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, 5-வது திருமணத்துக்கு முயன்ற போது சிக்கினார். அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தண்ணிமூடு பகுதியை சேர்ந்த வாலிபர் நிதீஷ் பாபு(வயது31). இவர் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி கேரள மாநிலத்தின் வெவ்வேறு பகுதியை சேர்ந்த 4 இளம்பெண்களை திருமணம் செய்திருக்கிறார்.
திருவனந்தபுரம் நகரூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் 4-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் நிதிஷ் பாபு மற்றொரு இளம்பெண்ணை 5-வது திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். அது அவரது 4-வது மனைவிக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தனது கணவரின் மீது வர்க்கலா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், வாலிபர் நிதிஷ் பாபு திருமணம் என்ற போர்வையில் பல பெண்களை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை பறித்தது தெரியவந்தது.
மேலும் அவர் இதுவரை 4 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் எந்த திருமணத்தையும் முறைப்படி பதிவு எதுவும் செய்யவில்லை. ஒருவரிடம் நகைகள் மற்றும் பணத்தை பறித்தபிறகு தலைமறைவாகி விடுவாராம். பின்பு வேறொரு பெண்ணுடன் நட்பை ஏற்படுத்தி அவரை திருமணம் செய்திருக்கிறார்.
இப்படியாக 4 பெண்களை திருமணம் செய்துள்ளது விசாரணையில் வெளியானது. இதையடுத்து நிதிஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நிதிஷ்பாபு மீது மேலும் 2 பெண்கள் புகார் கொடுத்தனர். தங்களை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் விசாரித்த போது, பல பெண்களிடம் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் பணத்தை நிதிஷ் பாபு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் நிதிஷ் பாபு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவர் மீது நம்பிக்கை மீறல், கற்பழிப்பு, குடும்ப வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அவர் எத்தனை பெண்களை இதுபோன்று ஏமாற்றினார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.
இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
நான் கோவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். நான் கல்லூரியில் படித்த போது அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவர் வந்து இருந்தார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம்.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தோம். எனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவைக்கு வரும் அரவிந்த் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னுடன் ஜாலியாக இருந்தார்.
ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நான் அரவிந்தை நேரில் சந்தித்து என்னை திருமணம் செய்யும்படி கூறினேன்.
ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் போலீசார் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், கோடீஸ்வர இளைஞர்களை ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த துணை நடிகை சுருதி.
அவரது தாயார் சித்ரா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நடிகை சுருதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை. அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள். சைபர்கிரைம் போலீசார் என்னையும், எனது தாயாரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது எங்களை ஏதும் பேசவிடாமல் நாங்கள் சொல்வதை எதையும் கேட்காமல், நாங்கள் சொல்வது போல் அவர்களே எல்லாவற்றையும் எழுதி கொண்டனர்.
விசாரணையின் போது என்னை நிர்வாணமாக்கி, பெண் போலீசை வைத்து போட்டோ எடுத்து கொண்டனர். அதனை இணைய தளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினர். மேலும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்த வழக்கில் இருந்து உன்னை விடுவித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் பாலியல் ரீதியாக எனக்கு துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர். போலீஸ் விசாரணை முடிந்ததும் நீதிபதியிடம் இது குறித்து நான் புகார் அளித்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
பேட்டியின்போது அவரது தாய் சித்ரா உடன் இருந்தார்.






