search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண மோசடி"

    • சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் நமண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33).

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவருக்கு திருமணத்திற்காக பெண் தேடும் படலம் நடந்தது. ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் இவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

    வயது 33 ஆகிவிட்டதால் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என சந்தோஷ் குமார் முடிவு செய்தார். தனக்கு போலீசில் டி.எஸ்.பி. வேலை கிடைத்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்களிடம் கூறினார்.

    தற்போது சென்னையில் பயிற்சி டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து வருவதாக கூறி பெண் பார்க்க தொடங்கினார். இந்த நிலையில் செய்யார் பகுதியை சேர்ந்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    மாப்பிள்ளை சென்னையில் டி.எஸ்.பி. அரசு அதிகாரியாக வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார் என கூறி வரதட்சணையும் பேசியதாக கூறப்படுகிறது.

    சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.

    திருமண பத்திரிகையில் சந்தோஷ் குமார் காவல்துறை டி.எஸ்.பி (சென்னை) என கம்பீரமாக அச்சடித்தார். அந்த பத்திரிகைகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெண் வீட்டிற்கும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை என்பவருக்கு சந்தோஷ் குமார் டி.எஸ்.பி. இல்லை. அவர் மோசடி செய்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் என தகவல் கிடைத்தது.

    அப்பாதுரை இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திருமண பத்திரிகையில் சென்னை காவல்துறை டி.எஸ்.பி என அச்சிடப்பட்டிருந்ததை வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர் சென்னை காவல்துறையில் பணிபுரியவில்லை என்பது உறுதியானது. போலீசார் சந்தோஷ் குமாரின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பொழுதுதான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் போலீஸ் டி.எஸ்.பி. என மோசடி செய்து திருமணம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பது குறித்து தகவல் அறிந்த சந்தோஷ்குமார் தலைமறைவானார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மாப்பிள்ளை மோசடி செய்தது தெரிய வந்ததால் பெண் வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    • திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு.
    • புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 43). பிட்டர். இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். எனக்கு 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் எனக்கு தங்கை முறையான திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர் தனலட்சுமி என்பவர் அறிமுகமானார்.

    அவரிடம் எனக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கும்படி கூறினேன். அதற்கு அவர் பெண் ஒருவர் இருப்பதாகவும், புரோக்கர் கமிஷனாக ரூ.3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்றார். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3.50 லட்சம் பணத்தை புரோக்கர் தனலட்சுமியிடம் கொடுத்தேன்.

    கடந்த 21-ந்தேதி எனக்கும், 30 வயது பெண் ஒருவருக்கும் திருப்பூர் அவினாசி நகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் நான் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு சென்றேன். நேற்று மதியம் கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது நான் திருமணம் செய்த பெண், என்னிடம் வந்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தெரிவித்தார்.

    மேலும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த புரோக்கர் தனலட்சுமி ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக கூறி திருமணம் செய்து வைத்ததாக கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

    எனவே எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
    • மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி - பெங்களூரு பழைய சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 30). இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமோனி மூலமாக கூடுவாஞ்சேரியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணை பார்த்து பேசி பழகி வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன் மற்றும் இளம்பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி- பெங்களூரு பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் அலுவலகத்தின் முதல் தளத்தின் பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னிடம் பேசுவதில்லை, என்னுடைய செல்போன் எண்ணை எடுக்கவில்லை. அதனால் குணசேகரன் இங்கு வரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை பின்புறமாக பிடித்து இழுத்து அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
    • ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே முகமது ஷாபான் செய்து வந்துள்ளார்.

    சென்னை:

    கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்தான பெண்கள் ஆகியோரை குறிவைத்து ஆன்லைனில் அவர்களோடு பழகி ஏமாற்றி காதல் மன்னனாக வலம் வந்த முகமது ஷாபான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 2-வது திருமணத்துக்காக வரன் தேடிக் கொண்டிருக்கும் அவருடன் முகமது ஷாபான் என்ற வாலிபர் ஆன்லைன் மூலமாக அறிமுகமானார். புதுச்சேரியை சேர்ந்த இவர் தன்னை மிகப்பெரிய பணக்காரர் போல காட்டிக்கொண்டு பழகியுள்ளார்.

    முகமது ஷாபானுக்கு 36 வயது என்பதை அறிந்ததும் அந்த பெண் தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்வதா? என்று நினைத்து விலக முயற்சித்துள்ளார். இருப்பினும் கணவரை பிரிந்த பெண்களையோ அல்லது விவாகரத்தான பெண்களையோ தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது லட்சியமாகும் என்று கூறி ஏமாற்றிய முகமது ஷாபான் கொஞ்சம் கொஞ்சமாக 415 பவுன் நகைகளை சுருட்டியுள்ளார்.

    அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத் ள்ளனர்.

    முகமது ஷாபான் 20-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று மோசடியாக ஏமாற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாபான் பெண்களை ஏமாற்றுவதை தனி கலைபோல கற்று வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவர் ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே செய்து வந்துள்ளார்.

    இதற்காக ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப், 3 செல்போன்கள் ஆகியவற்றை முகமது ஷாபான் பயன்படுத்தியுள்ளார். 5 சிம்கார்டுகளை போட்டு செல்போனில் பேசுவது, சாட்டிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக பழகிய சென்னை பெண் வைத்துள்ள நகைகள் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அப்படியே அதனை வீட்டில் வைத்திருந்தால் ஆபத்து என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நகைகளை மசூதியில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    இதை நம்பி சென்னை பெண் தனது நகைகளை எடுத்து வந்து கொடுத்துள்ளார். இப்படியே 415 பவுன் நகைகளை சுருட்டிய முகமது ஷாபான் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் போலீசில் சிக்கியுள்ளார். இதுபோன்ற மேலும் பல பெண்களை முகமது ஷாபான் ஏமாற்றி இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இது தவிர நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • துமகூருவில் கிளினிக் இருப்பதாகவும் ஒரு போலியான தகவலை பதிவிட்டு, ஒரு செவிலியரையும் நியமித்துள்ளார்.
    • மைசூரைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், 15 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த மகேஷ் கே.பி.நாயக் (வயது 35) என்ற நபர், திருமண தகவல் இணையதளங்களில் போலியான சுய விவரத்தை உருவாக்கி வரன் தேடி உள்ளார். பெண்களை கவருவதற்காக பெரும்பாலான சமயங்களில் டாக்டர், என்ஜினீயர் என பதிவிட்டுள்ளார். துமகூருவில் கிளினிக் இருப்பதாக ஒரு போலியான தகவலை பதிவிட்டு, ஒரு செவிலியரையும் நியமித்துள்ளார்.

    இதை நம்பி பல பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர். 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 பெண்களை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு அவர்களின் பணம், நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் மகேஷ். அத்துடன், இந்த பெண்களுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் இவரை திருமணம் செய்து கொண்ட மைசூரைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் அளித்த புகாரைத் தொடர்ந்து மகேஷ் வசமாக சிக்கி உள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து, நேற்று துமகூருவில் வைத்து அவரை கைது செய்தனர். இதேபோல் அவரிடம் ஏமாந்த மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.

    • எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது.
    • எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

    நாகர்கோவில்:

    மயக்கும் பேச்சு, ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றால் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறும் பெண்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் என ஆசைவார்த்தை கூறியவரை நம்பி, 2 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் நர்சு ஒருவர். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவர தற்போது தனது வாழ்க்கைக்கு வழி கேட்டு போலீசில் புகார் கொடுத்து கண்ணீருடன் நிற்கிறார் அவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், திட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு மதம் மாறி விட்டதால், சுன்னத் செய்ய வேண்டும் என ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் தான், நர்சை தன் வலையில் வீழ்த்தி தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாக்கி விட்டு, கைவிட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட நர்சு போலீசில் கூறியதாவது:-

    சுன்னத் செய்வதற்காக வந்த வாலிபர், தான் ஒரு டாக்டர் என என்னிடம் அறிமுகமானார். சேலம் மாவட்டத்தில் கிளினீக் மற்றும் லேப் வைத்துள்ளதாக கூறிய அவர், இணையதளத்தில் அதன் விவரங்களை என்னிடம் காண்பித்தார். அதில் கிளினீக் படம் மற்றும் டாக்டர் என அவரது பெயர் போன்றவை இருந்தன.

    தொடர்ந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், எனது கிளினீக் மற்றும் லேப்பில் பணியாற்ற ஒரு நர்சு தேவை என்றும் நல்ல சம்பளம் தருகிறேன் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு அனாதை எனவும் மருத்துவராகி பணமும் மரியாதையும் கிடைத்தாலும் அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லை எனவும் நைசாக பேசினார்.

    அவரது மோசடி வார்த்தைகளை நம்பிய என்னை காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் ஒரு மாதத்தில் சேலம் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்தோம்.

    ஆனால் சில நாட்களில் கணவர், மருத்துவர் இல்லை என்பதும் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் என்பதும் தெரிய வர நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

    இதுபற்றி கேட்டபோது, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தாக்கினார். இந்த நிலையில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் வேறு வழியின்றி அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தினேன்.

    இதற்கிடையில் அவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு அதிகமானது. 2 குழந்தைகளையும் என்னையும் அருமநல்லூர் அழைத்து வந்த கணவர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக தெரிவித்தார். அவர் திருந்தினால் சரி என்றேன்.

    வெளிநாட்டு வேலைக்குச் செல்ல பணம் வேண்டும் என்று கேட்டார். இதனால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தேன். தொடர்ந்து வெளிநாடு சென்ற அவர் அங்கும் சரியாக வேலை பார்க்காமல் ஊர் திரும்பி விட்டார்.

    இந்த நிலையில் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

    எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு என பலருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பூதப்பாண்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
    • வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.

    இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.

    நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.

    ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.

    ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.
    • பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில் தனது நண்பர்கள் ஏராளமானவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

    அப்போது அருள்ராஜிக்கு வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று பகிர்ந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திருமணம் செய்தார்.

    ஆரம்பத்தில் இவர்கள் வாழ்க்கை இனிதாக சென்றது. அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும்போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அந்த பெண் அருள்ராஜிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்வார். இதுபோன்று அடிக்கடி நடந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் தனது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 90 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை வாங்கி வைத்திருந்தார். இந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் திருமணம் செய்த பெண் நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.

    நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அந்த பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது அது போலியானது என தெரியவந்தது. அவர் வழங்கிய செல்போன் எண்ணும் வேறு நபருக்கு உரியது.

    அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா்.

    இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

    இதையடுத்து தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாக தெரிகிறது. கடந்த 15-ந்தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தேவிக்கு ஏற்கனவே 2பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும், அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்ததும், ஆனால் அந்த திட்டம் நிறைவேறாததால் நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்கிற ராமன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

    நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர்.

    இதையறிந்த தேவி, ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணி இதற்கு தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.

    சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இது போன்று பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
    • புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக ஒரு புகார் கொடுத்து உள்ளனர்.

    குழித்துறை பெண் கொடுத்த புகாரில், எனக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ல் கணவரை பிரிந்து விட்டேன். இந்த நிலையில் எனது செல்போனுக்கு வந்த 'மிஸ்டு கால்' அழைப்பு மூலம், மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பழக்கமானார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிய அவர், பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறினார். இதில் நான் மயங்கி அவருடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்ட அவர், 13 பவுன் நகைகளையும் வாங்கிச் சென்றார். என்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது தான் மேல்புறம் வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 2-ம் திருமணம் செய்வதாக வாலிபர் கூறியதை நம்பி நெருங்கி பழகியதோடு, நகை-பணத்தையும் இழந்துள்ளார்.

    தற்போது திருமணம் செய்ய கேட்ட போது, வாலிபர் மறுத்து மிரட்டல் விடுப்பதாக போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்து உள்ளார். இதே புகாரை மற்றொரு பெண்ணும் தெரிவித்து உள்ளார்.

    கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது அபிநயா தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப் புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    அபிநயாவின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றியபோது அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.

    இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விடுதியில் இருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.

    விசாரணையில் அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது.

    அவர் தாம்பரத்தில் இருந்து மாயமான பின்னர் மதுரைக்கு சென்று வந்து உள்ளார். அங்கு சுருட்டிய நகையை வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மதுரைக்கு தனிப்படை போலீசார் சென்று உள்ளனர்.

    அபிநயா திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 1½ மாதத்தில் நகை, பணத்தை சுருட்டிச்சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    விசாரணையில் அபிநயா இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்.

    அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.

    அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை அபிநயா 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார். இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்.

    மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    விசாரணையின்போது அபிநயாவுடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார்.

    இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அபிநயா, அவரது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
    • காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி.

    இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு போன் மூலமாக கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபருடன் பழகி வந்தார்.

    2 பேரும் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தார். பின்னர் கோவில்பாளையத்துக்கு சென்று தனது கள்ளக்காதலனை சந்தித்தார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட கையோடு 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோவில்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் இளம்பெண்ணின் முதல் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவில்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×