search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருப்பணி"

    • இங்கு கடந்த 1971-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. புராண முக்கியத்துவம் மிக்க இந்த கோவில் காவிரிக்கரையில் உள்ள பரிகார தலங்களுள் ஒன்றாக இருக்கிறது. இங்கு கடந்த 1971-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதை முன்னிட்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து, கோவில் கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள பணிகளையும் தீவிரப்படுத்தி துரிதமாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் புதுப்பிக்கப்பட்டு, புது வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. காவிரிக்கரை சோழீஸ்வரரை தரிசிப்பது காசியில் தரிசனம் பெறுவது போன்றதாகும் என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.

    • சிலர், தெய்வத்திற்குச் செய்யும் தொண்டாக கோவிலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்கின்றனர்.
    • உழவாரப் பணியின் கீழ் என்னென்ன வேலைகள் எல்லாம் வருகின்றன என்று பார்க்கலாம்.

    அடியார்கள் பலரும் அறிந்த விஷயம்தான், உழவாரப்பணி. ஒரு சிலர் உழவாரப் பணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அது எப்படி நடைபெறும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். பழங்காலத்தில் ஆலயங்களில் கிடைத்த நைவேத்தியம் மற்றும் சிறு வருமானத்தைப் பெற்றுக்கொண்ட சிலர், தெய்வத்திற்குச் செய்யும் தொண்டாக கோவிலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்துவந்தனர். ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப்பணியை விட சிறந்த புண்ணியம் தரும் செயல் வேறு இல்லை.

    தான் வாழ்ந்த காலம் முழுவதும், தள்ளாத வயதிலும் கூட உழவாரப் பணியை செய்தே சிவபெருமானின் பேரருளைப் பெற்றவர், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர். கோவிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவதே உழவாரப் பணியின் முதல் நோக்கம். இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவியை பயன்படுத்துவார்கள். அதற்கு 'உழவாரப் படை' என்று பெயர். அந்த உழவாரப் படையை தன்னுடைய கையில் தாங்கியபடி காட்சி தருபவர், திருநாவுக்கரசர். எப்போதும் உழவாரப் பணி மூலம் ஆலயத்தை தூய்மை செய்தபடி, பாடல்களைப் பாடுவது இவரது பணி.

    சரி.. இந்த உழவாரப் பணியின் கீழ் என்னென்ன வேலைகள் எல்லாம் வருகின்றன என்பதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

    சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே 'உழவாரப்பணி'. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், தங்கள் கையில் இருக்கும் குப்பைகளை ஆலயத்தில் போடுவதை தவிர்க்க வேண்டும். ஆலயத்தை குப்பையாக்கும் பக்தர்களின் இல்லத்தில் துன்பம் என்னும் குப்பை எப்படி நீங்கும். இதுபோன்று ஆலயங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவது உழவாரப் பணியின் ஒரு பகுதி.

    ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு இறைவனின் பிரசாதமாக வழங்கப்படுவது திருநீறு. அதை சிலர் 'இறைவனின் அருள் வேண்டாம்' என்பது போல, ஆலயத்தில் ஆங்காங்கே இருக்கும் தூண்களில் கொட்டி விட்டுச் சென்று விடுவார்கள். அப்படி கொட்டப்பட்ட திருநீறு, குங்குமங்களை அகற்றி, தூண்கள், பிரகாரங்களை சுத்தம் செய்வதும் இந்தப் பணியின் ஒரு பகுதி.

    இறைவனுக்கு சூட்டப்பட்ட மலர்களை நந்தவனத்தில் போடுவது, திருக்கோவில்களில் சேர்ந்திருக்கும் ஒட்டடைகள், அழுக்குகளை அகற்றுவது, இறைவனின் ஆடைகளை துவைப்பது, அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது, நந்தவனத்தை சுத்தம் செய்வது, ஆலயத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவது, கோபுரங்களில் முளைத்திருக்கும் சிறிய செடி, கொடிகளை அகற்றுவது, சிவாச்சாரிகளின் அனுமதி பெற்று ஆலய கொடிமரம் மற்றும் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு சுத்தப்படுத்துவது போன்ற பணிகளும் இதில் அடக்கம்.

    தவிர கல் திருமேனிகளுக்கு மாவு, தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது, ஆலயங்களில் எரியாத மின் விளக்குகளை சரி செய்வது, ஆலயத்தை வாரம் ஒரு முறை பசுஞ்சாணம் இட்டு மெழுகுவது, கோவிலைச் சுற்றி தினமும் கோலமிடுவது, ஆலயத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு, கற்பூர தீபத்தால் படிந்த கரும்புகை நீக்குவது, கோவில் சுற்றுச்சுவர், மதில் சுவர்களை சுத்தம் செய்து, அதற்கு வெள்ளை அடிப்பது போன்றவை அனைத்தும் உழவாரப் பணிகளே ஆகும்.

    இவற்றைச் செய்வதால் இறைவனின் அருளோடு, நமது மனமும், உடலும் உறுதியாகும்.

    • 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலய பூஜை தொடங்கியது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருப்பணி வேலைகளை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலய பூஜை தொடங்கியது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தம், கும்பஅலங்காரம், ராஜகோபுரம் விமானங்கள், தீபாராதனை நடைபெற்றது.

    நேற்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை மீண்டும் தொடங்கியது. யாக சாலையில் மரத்திலான ராஜகோபுரம் மாதிரி வடிவத்திற்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்ப நீர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாலய பூஜைகள் அனைத்தும் அதிகாலை 5.40 மணிக்குள் முடிவுற்றது. இதில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
    • நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. தனி சன்னதியில் அமைந்துள்ள இந்த நடராஜரை தரிசிக்க திருவாதிரை ஆருத்ரா அன்று ஒரு நாள் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை கோவிலில் உள்ள பழமையான நந்தி மண்டப பிரகாரத்தில் திருப்பணிகள் செய்யும்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நந்தி மண்டபத்தை சுற்றி உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் இருந்த பாசிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு பழமை மாறாமல் இருக்க சுண்ணாம்புக்கல், கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்டவைகளை கொண்டு அரைக்கப்பட்ட கலவையை வைத்து மண்டபத்தின் பிரகாரத்தில் உள்ள தூண்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நந்தி மண்டபத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இறுதி கட்டத்தை எட்டி திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளதால் நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது. இதை கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

    அடுத்த கட்டமாக சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் திருப்பணிகள் செய்யும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திருப்பணிகள் அனைத்தும் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வை மற்றும் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது.

    • காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தெற்கு வாயிலில் உள்ள பெரிய ராஜ கோபுரமானது கி.பி.1509-ம் ஆண்டு விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது ராஜகோபுரங்கள் புனரமைக்கப்பட்டது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகமானது 16 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திட ரூ.22 கோடி வரை ஒதுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பழம்பெருமை வாய்ந்த இந்த கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக புனரமைப்பு பணி மேற்கொள்ள கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி முன்னிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    குறிப்பாக கோவிலில் உள்ள பழமையான பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, கற்சிலைகள், கற்தூண்களை ஆய்வு செய்த அதிகாரிகள் பழமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்க்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர். குறிப்பாக தமிழக அரசு மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மேற்கு ராஜகோபுரம் மட்டுமல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள இரட்டை திரு மாளிகை புனரமைப்பு பணிகளையும் மீண்டும் மேற்கொண்டு எதிர் வரும் கும்பாபிஷேகத்தில் இருந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
    • சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க உள்ளது

    பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் மூலவர் சிலை சேதமடைந்துள்ளது.

    இதனால் உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளும், கோவில் சுவர்களில் பழங்கால கல்வெட்டுகளும் உள்ளன. பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவிலை அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக ஆயத்த பணிகளை கோவில் செயல் அலுவலர் கனகலட்சுமி, இந்துசமய அறநிலைத்துறை உதவிபொறியாளர் சந்தானமாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

    • ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
    • 2006-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பூந்தமல்லி, திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது.

    புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டு ஆகம முறைப்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

    கொரோனா காலம் என்பதால் நடைபெறவில்லை. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தற்போது பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருக்கோவில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோவில் மண்டபம், ராஜகோபுரம், கருங்கல்லால் புனரமைப்பது என ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.

    சுமார் இரண்டு ஆண்டு காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிசேக விழா நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் லயன். டி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மூலவர் சிலை புதுப்பிக்கும் பணி, மீயூரல் ஓவியங்கள் சீரமைக்கும் பணி, மடப்பள்ளி சீரமைப்பு ஆகியன நடந்து வருகிறது. கோவில் வெளிப்பிரகார பாதையில் போடப்பட்டிருந்த கற்கள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததால், அவற்றை சாதாரண கல்லாக மாற்றும் பணி நடந்து வருகிறது. தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பல்வேறு பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் எனகூறப்பட்டது. அதன்படி பெரும்பாலான பூஜைகள் நிறைவடைந்து விட்டது.

    பிரகாரங்களில் வர்ணம் பூசும்பணி நடந்து வருகிறது. கோவில் கருவறையின் மேல்பகுதி விமானம் சுத்தப்படுத்தி அதன் மீது வர்ணம் பூசும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வருகிற 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்குகிறது. 30-ந் தேதி பாலாலயத்தில் பூஜையில் இருக்கும் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறைக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூலை மாதம் 6-ந் தேதி காலை 6 மணி முதல் 6.50-க் குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். 9-ந் தேதி தங்கக்கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    திருவட்டார் பஸ்நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலை குண்டு குழிகளுடன், இருபுறமும் புதர்கள் மண்டி மோசமான நிலையில் உள்ளது. அதுபோல் திருவட்டார் சந்தை அருகே ஈனாச்சி அம்மன் கோவிலில் இருந்து ஆதிகேசவப்பெருமாள் கோவில் வரையுள்ள அணுகு சாலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது.
    • மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது.

    திருத்தணியில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில் பூக்கடை, தேங்காய் விற்பனை கடை, சிற்றுண்டி கடை, தேனீர் கடை, குளிர்பான கடைகள் உள்பட பல கடைகள் நடத்தி வருகின்றனர்.

    மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை ஆகியவை ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள ஐந்து கடைகள் கடந்த 1-ந் தேதி நடைப்பெற்ற இந்த ஆண்டிற்கான கோவில் பொது ஏலத்திற்கு அறிவிக்கவில்லை. இதுக்குறித்து கோவில் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் மலைக்கோவில் பக்தர்களின் நலனுக்காவும், நிர்வாக வசதிக்காவும் மலைமேல் பெருந்திட்ட வளாகம் அமைக்கபட உள்ளது.

    மடாவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலைத்துறை முடிவு செய்து உள்ளது. இது குறித்து திட்ட அறிக்கைகளை தயார் செய்து இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபருக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் ஆணையரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைப்பெறும் எனவும் தெரிவித்தார்.

    • மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் 154 திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதால் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தையும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த திருப்பணிகளை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான வல்லுனர்கள் குழுவினர் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த குழுவில் கண்காணிப்பு தொல்லியலாளர் மூர்த்திஸ்வரி, ஒய்வு பெற்ற தொல்லியல் நிபுணர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, என்ஜினீயர் முத்துசாமி, ராஜாபட்டர், கோவிந்தராஜபட்டர், இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஸ்தபதி ஜெயராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் 2-வது நாளாக நேற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், மீனாட்சி கோவில் என்ஜினீயர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர். அதை தொடர்ந்து வல்லுனர் குழுவினர் கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோவில் உதவி கமிஷனர் செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆய்வுக்கு பின்னர் வல்லுனர்கள் குழுவினர் கூறியதாவது, மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்து அதனை அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வந்துள்ளோம். மீனாட்சி அம்மன் கோவிலில் 154 திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஒப்புதலை நாங்கள் வழங்கிய உடன் விரைவில் திருப்பணிகள் தொடங்கும்.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி தற்போது நடந்து வருகிறது. ஆகம விதிப்படி பழமை மாறாமல் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் உள்ள அன்னதான கூடத்தை மாற்றி அங்கு சுவாமியின் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×