search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உணவுமுறை"

    • உலர் திராட்சையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்.

    உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

    உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.

    காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

    உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

    குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.

    நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    • நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள். குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும். ஆகவே குழந்தைகள் பசி எடுத்து சாப்பிட பஞ்ச தீபாக்கினி லேகியம் கால் முதல் அரை டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை கொடுக்கவும். இது பசியை தூண்டும், நல்ல சீரணமுண்டாகும். அதுபோல, நெல்லிக்காய் லேகியம் அரை முதல் ஒரு டீஸ்பூன் காலை, இரவு கொடுக்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி, கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

    இவை தவிர பொதுவாக, திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு 200-500 மி.கி. அளவில் கொடுக்கலாம், இரவு வேளையில் கொடுப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். அன்றைக்கு வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது.
    • அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும்.

    சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

    1. பழங்கள் : பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் நார்ச்சத்துகளும் இருக் கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவை மிகவும் சிறந்த பழங்களாகும்.

    2. பால் : பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

    3. தயிர் : கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.

    4. முட்டை : முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முட்ைடயில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

    5. பசலைக் கீரை : பசலைக் கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

    6. முட்டைக்கோஸ் : குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே தின்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்.

    7. முழு தானியங்கள் : முழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

    8. ஓட்ஸ் : எந்த குழந்தைகள் ஓட்ஸ் சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஓட்ஸ் மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும்.

    9. நட்ஸ் : நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம். அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நட்ஸில் பேரீச்சம்பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

    10. அக்ரூட் : அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.

    • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
    • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

    தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

    ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

    பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

    • குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும்.
    • குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு பெரிய சவாலானது.

    குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    0-4 மாதம் வரை

    தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.

    இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

    4-6 மாதம் வரை

    நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

    அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

    6-8 மாதம் வரை

    இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதே, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிவற்றை கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

    8-10 மாதம் வரை

    இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

    10-12 மாதம்

    இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

    • ஒருசில உணவுப்பொருட்கள் குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.
    • சோர்வாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்கலாம்.

    பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொண்டே குறைத்து, குழந்தைகளை குஷிப்படுத்தலாம். அதுபற்றி பார்க்கலாம்.

    1. சாக்லேட் மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

    2. பாதாம் பருப்பு இதில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு வரும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.

    3. கடல் உணவு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதோடு, புத்துணர்ச்சியும் பெறும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.

    4. பால் குழப்பமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளின் உணவில் பால் அல்லது பால் சம்பந்தமான பொருளான தயிரை அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.

    • குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமானது.
    • முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது.

    குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

    குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

    முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

    பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

    திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

    • உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.
    • குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும்.

    சீரான மற்றும் சத்தான உணவுகள் ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

    எனவே குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களை கணிசமாக உட்கொள்வதை உறுதி செய்வது மிகவும் முக்கியம், குறிப்பாக குழந்தைகளுக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும்.

    குழந்தை பருவத்தில் அதிக புரதங்கள் தேவைப்படுகின்றன. தேசிய அறிவியல் அகாடமிகள் பரிந்துரைப்படி, 1-3 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 13 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும், 4-8 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 19 கிராம் புரதச்சத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும், 9-13 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 34 கிராம் புரதச்சத்துக்களை பெற வேண்டும் என கூறப்படுகிறது.

    புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டை, அசைவ உணவுகள், சோயா பீன்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பாதாம், வேர்க்கடலை, சுண்டல், துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.

    புரதச்சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.

    என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.

    • குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.
    • வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். குழந்தைகளா...! நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

    பருப்பு உணவுகள் : இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்க்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப்பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

    ஆரோக்கியமான எண்ணெய்கள்: ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

    பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    கேரட் : கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

    கோழி : கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

    மீன் : அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் (EFA) மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

    சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

    வாழைப்பழங்கள் : மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

    வைட்டமின்-டி : இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. எனவே உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    ×