search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச் வசந்த குமார்"

    பாராளுமன்றத்தில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என்று வசந்தகுமார் எம்பி கூறியுள்ளார்.

    நெல்லை:

    வசந்தகுமார் எம்.பி. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை 3 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளேன். மேலும் தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்புகள், தொகுதிக்கு தேவையானவற்றை தொடர்ந்து செய்து கொடுப்பேன்.

    கன்னியாகுமரி தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் பேசும்போது, நாங்குநேரி தொகுதி மக்களின் பிரச்சினை குறித்தும் குரல் கொடுப்போம். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். குமரி மற்றும் நெல்லையை சிறந்த சுற்றுலா தலமாக்க முயற்சி மேற்கொள்வேன். குமரி மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது.

    இதுகுறித்து மீனவர்களிடமும், தமிழக அரசிடமும் பேசி முடிவு செய்யப்படும். கடல் அரிப்பை தடுக்க கூடுதல் தூண்டில் வளைவு அமைக்கப்படும். எனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மீனவர் நலனுக்காக ஒதுக்கப்படும். செயல்படாமல் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருளாதார திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன். ரூ.150 கோடியில் பாளையில் விளையாட்டு கிராமம் அமைக்கும் திட்டம் காலதாமதம் ஆகிறது. இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்துவேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை செய்து விட்டு தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம். எனினும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேசி நல்ல முடிவை எடுப்பார்கள். குமரி தொகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஓட்டுகள் விடுபட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மத்திய அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனாலும் நாங்கள் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம். மக்களின் குரலாக பாராளு மன்றத்தில் ஒலிப்போம். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தவர் குமரி அனந்தன். குமரி மாவட்ட ரெயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். அல்லது நெல்லையை தனி கோட்டமாக்கி அதனுடன் இணைக்க வேண்டும்.

    இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சருடன் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம்.சிவகுமார், நிர்வாகிகள் ராஜகோபால், டியூக் துரைராஜ், சுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுகிறார். #LSPolls #congress #congressCandidates
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 20 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த வாரம் தொகுதி பங்கீடு நடந்து முடிந்ததும் மறுநாளே தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது. விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இடது சாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கின.

    காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய டெல்லி மேலிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஒவ்வொரு தொகுதியையும் 3 முதல் 5 பேர் பிடிவாதமாக கேட்டதால் காங்கிரஸ் வேட்பாளர்களை முடிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் தலைமையில் நடந்தது. அதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் யார்-யாரை வேட்பாளர்களாக அறிவிப்பது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இரவு வரை இந்த ஆலோசனை நீடித்தது.

    தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எப்படியாவது தொகுதியை பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் கடும் சவால்களுக்கு மத்தியில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிந்தது.

    இதையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி- எச்.வசந்த குமார்

    விருதுநகர்- மாணிக் தாகூர்

    திருச்சி - திருநாவுக்கரசர்

    ஆரணி-விஷ்ணு பிரசாத்

    திருவள்ளூர் (தனி)- ஜெயக்குமார்

    தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    கரூர்- ஜோதிமணி

    கிருஷ்ணகிரி- டாக்டர் செல்லக்குமார்

    புதுச்சேரி- வைத்திலிங்கம்


    சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதி கேட்கப்பட்டது.

    ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு அந்த தொகுதியை ஒதுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கு களம் இறங்க காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இன்று இரவுக்குள் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் தெரிய வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் செயல் தலைவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை வேட்பாளர் தேர்வின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களால் உறுதியாக கடைபிடிக்க இயலவில்லை.

    செயல் தலைவர்களில் வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை போராடி பெற்றுள்ளனர். அதுபோல திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோரும் தங்கள் தொகுதியை கடைசி வரை போராடியே இறுதி செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பால் சில தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன.

    கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனை எதிர்த்து எச்.வசந்தகுமார் போட்டியிடுவதால் அந்த தொகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல தேனி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறங்கி இருப்பதும் விறுவிறுப்பை உருவாக்கி இருக்கிறது.

    தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தேனி தொகுதியில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

    இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அந்த தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இறக்கி விட்டுள்ளது. இது அந்த தொகுதியை பரபரப்பான தொகுதியாக மாற்றி இருக்கிறது. அ.தி.மு.க. வாக்குகளையும், ஜாதி வாக்குகளையும் ரவீந்திரநாத்தும், தங்க தமிழ்ச்செல்வனும் பிரிக்கும் நிலையில் இளங்கோவன் களம் இறங்கி இருப்பதால் வாக்குகள் எப்படி மாறும் என்பதில் அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் பிரியாது என்பதாலும் இளங்கோவன் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதாலும் அவருக்கு எதிராக நிற்கும் ஓ.பி.எஸ். மகன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் கடும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேநிலைதான் திருநாவுக்கரசர் போட்டியிடும் திருச்சி தொகுதியிலும், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடும் கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஜோதிமணி போட்டியிடும் கரூர் தொகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. #LSPolls #congress #congressCandidates
    ×