search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊஞ்சல் உற்சவம்"

    • ஆடிமாதம் 3-வது செவ்வாய்கிழமை கூழ்வார்ப்பார்கள்.
    • கூழ்வார்க்கும் கொப்பறை வழிந்து ஓடினால் மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் தென்மேற்கு மூலையில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் ஏழு வம்சாவழி பூசாரிகள் ஆடிமாதம் 3-வது செவ்வாய்கிழமையில் இந்த கோவிலில் கூழ்வார்ப்பார்கள்.

    அப்போது கூழ்வார்க்கும் கொப்பறை வழிந்து ஓடினால் அந்த ஆண்டு மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது இன்றளவும் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கூழ்வார்த்தத் திருவிழா 5 நாட்கள் நடைபெறும். அதாவது மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன், புரடை அம்மன், கங்கை அம்மன் ஆகிய கோவில்களில் இருந்து பூங்கரகம் எடுத்து வந்து (திருமணம் ஆகாத ஆண்கள் கரகம் எடுப்பர்) இரவில் காப்பு கட்டுவார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை பருவதராஜ மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் பொங்கல் வைத்து படைப்பார்கள். சனி மற்றும் திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வார்கள்.

    செவ்வாய்க்கிழமை அன்று பம்பை, மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தியும், கூழ்குடங்களை சுமந்தும் ஊர்வலமாக சென்று கங்கையம்மன் கோவிலில் சாகை வார்ப்பார்கள். இது ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    • பருவதராஜ குல மீனவ இனத்தாரே முக்காலியர் எனப்படுவர்.
    • நடப்பது, நடந்தது, நடக்க இருப்பதைக் கூறி அருளும் விதத்தையே அருள்வாக்கு என்பர்.

    தலைமைத் தாய் அங்காளம்மன் திருக்கோவிலில் பூஜை முறையை ஏற்று செய்யும் சிவன்படையார் என்ற பருவதராஜ குல மீனவ இனத்தாரே முக்காலியர் எனப்படுவர். இவர்களால் செய்யப்படும் பூஜைகளே அம்மனுக்கு ஏற்புடையவை.

    முக்காலியர் என்ற மீனவர்களே உடுக்கை, பம்பை, மணி, சிலம்பு ஆகிய ஓசைகளுடன் தங்கள் வாய்க்கு வந்த எந்த பாடலை உருவகப்படுத்திப் பாடினாலும், பாடல்பாடி அழைத்தாலும் அம்மன் விரும்பிய மாந்தரின் பூத உடலில் அங்காளியான அம்மனே உந்தப்பட்டு மருள் என்ற நிலையாகி தன்னைத்தானே மறந்து ஆடி! மருள் ஆடி வந்த நிலையிலேயே கேட்பவர்களின் கேள்வி களுக்கு தகுந்த விதங்களில் நடப்பது, நடந்தது, நடக்க இருப்பதைக் கூறி அருளும் விதத்தையே அருள்வாக்கு என்றே அழைப்பர்.

    இவ்வழக்கம் தொன்று தொட்ட வழிமுறையாக உள்ளது. இவை போக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற இடங்களில் உள்ள அருளாளர்களுக்கு எல்லாம் அருள்தரும் தேவதை அங்காளம்மன் ஆகும். இத்தேவதையின் தலைமையிடம் மலையனூர் ஆகும்.

    அருளாளர்கள் அனைவரும் ஒவ்வொரு அமாவாசை தோறும் தலைமையிட அங்காளம்மன் கோவிலுக்கு வந்து முக்காலியர் என்ற செம்படவர் ஆகிய பூஜை முறை பூசாரிகளிடம் புற்றுமண், சாம்பல், விபூதி, குங்குமம், பூ, பழம் போன்றவற்றை அங்காளம்மன் ஆன்மீக அன்பர்கள் பெற்றும் அருள்வாக்கு சரியாக வராத அன்பர்களின் நாவினில் அலகு போடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

    பலதரப்பட்ட மாநிலத்தில் தீர்க்க முடியாத எந்த பிணி, பீடை, நோய் பிடித்த வர்களை அருளாளர்களே அழைத்து வந்து தலைமையிட கோவிலில் உள்ள பூசாரிகளால் விலக்கிச் செல்வது தொன்று தொட்டு இன்று வரை இருந்து வரும் வழக்கம் உண்மையாக விளங்குகிறது.

    மேலும் தலைமை பூசாரிகளால் செய்யப்படும் அபிஷேகம், அர்ச்சனைகள், ஆராதனைகளுக்கு கட்டுப்பட்டே சேர்வார்த்திகளின் கஷ்டங்களையும், பிணிகளையும், பீடைகளையுமே விலக்குவதாக கருதப்படுகிறது.

    இதைத்தவிர அருளாளர்களுக்கு அருள்வாக்கு எந்த தவறும், பிசகும் இன்றி நன்முறையில் அமையவே இத்திருக்கோவில் பூசாரிகளால் அருளாளர்களுக்கு அருள் வரவழைத்து நாவில் அலகு போடுதல் போன்றவையும் இந்த அருளாளர்களே பலதரப்பட்ட இடங்களில் அங்காளம்மன் குறிமேடை என்று வைத்துக் கொண்டு அங்காளம்மன் குறி சொல்வதாகவும் இவர்களின் மூலமாகவே மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களிலும் மற்ற தினங்களிலும் எண்ணற்ற ஆன்மீக அன்பர்கள் கூட்டம் மலையனூர் வந்து செல்வதாகவும் கருதப்படுகிறது.

    குறிமேடை வைத்துக் கொண்டு குறி சொல்லும் அருளாளர்கள் அங்காளம்மனை மனதில் நிறுத்தி உருவகப்படுத்தி ஒரே நினைவாகி குண்டலி சக்தியை பயன்டுத்தி நிற்கும் வேலையில் குறிகேட்கும் அன்பர்களுக்கு அவர்களின் கஷ்டங்களை போக்கும் உபாயங்களை அருளாளர்களே கூறி அருள்வதாகவும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இதையே அங்காளம்மன் அருள்வாக்கு என்று கூறப்படுகிறது.

    அங்காளம்மன் அருளாளர்கள் அம்மனை வேண்டி குண்டலி சக்தியாக்கி நிலைநிறுத்திக் கொள்ளும்போது தன் நிலையை மறந்து அம்மனிடமே அவரவர்கள் ஐக்கியமாகி விடுவதாகவும், அந்த நேரங்களில் அம்மன் அருளால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அருளாளர்கள் கூறும் அருள் வார்த்தைகளே அருள்வாக்கு என்றே கருதி அதன்படியே நடப்பது இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவே அருள்வாக்கின் சிறப்பம்சமாகும்.

    • ஸ்ரீ அங்காளம்மனாக புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.
    • சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    மேல்மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூறையை இறைக்கும்போது சிவனாரை பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்டது.

    அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவ ஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக்கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.

    இந்த நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மனின் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.

    இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டில் இருக்கும் மிருக கணங்கள், வனத்தில் இருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.

    அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.

    அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை.

    இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது.

    அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும். நம் எல்லோருக்கும் அருளும் அம்பிகை ஸ்ரீ அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    • பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது.
    • பித்து பிடித்தவராக அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    சிவபெருமானுக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையிலே பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது. அதை ஏந்திய நிலையில் பித்து பிடித்தவராக கிளம்பி அகிலமெல்லாம் அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    கபாலம் நீங்காத நிலையிலுள்ள சிவபெருமான் தண்டகாருண்யம் வழியாக செஞ்சி மாநகர் வந்து சேர்ந்தார்.

    செஞ்சியில் உள்ள மக்கள் கபாலம் நீங்க சங்கரனுக்கு 32 வித அபிஷேகங்களெல்லாம் செய்தார்கள். அப்போதும் அது நீங்கவில்லை. அந்த அபிஷேக நீர் சென்றதை தான் சங்கராபரணி ஆறு என்று சொல்லுகின்றார்கள்.

    செஞ்சியில் உள்ள மக்கள் பலரும் தாங்கள் மலையனூர் சென்றால் கையில் உள்ள கபாலம் நீங்கி விடும் என்று சொல்ல, அதை கேட்ட சிவபெருமான் அப்போதே மலையனூர் செல்ல வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் உடனே மலையனூருக்கு வந்து சேர்ந்தார்.

    சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார். சிலநாட்கள் இங்கே தங்கியிருந்தால் தமது உடல்நிலை நன்றாகும் என்று நினைத்தார். மேலும் இங்கே நடப்பதை பார்க்கும் போது பல வகையில் நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு பிச்சை எடுத்தார். அதை கபாலம் சாப்பிட்டது. சுடலைக்கு சென்று சாம்பலை உண்டார். அவருடைய பசியும் தீர்ந்தது.

    சிவனாரின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி மாயவன் மாயமாளிகை ஒன்றை ஏற்படுத்தினார். மாளிகையை கண்ட சிவபெருமான் அங்கே போய் உறங்கலாமே என்று எண்ணி, மாளிகையின் வாசலிலே போய் நின்று, ''அம்மணி! பிச்சை! பர்வதா! பிச்சை! அன்னதாய்! அம்மணி!'' என்று பலமுறை குரல் கொடுத்தார்.

    அந்த குரல் கேட்டவுடன் பார்வதி தேவியார் துடித்து போனார். வந்திருப்பது தன் கணவர் என்று தெரிந்து கொண்டார். பிறகு வெளியே வந்து பார்த்தார். ''சுவாமி! சற்று பொறுங்கள் நான் கொடுக்கன் குப்பம் சென்று இப்போது தான் வந்தேன். உடனே சமையல் செய்து போடுகிறேன். சற்று அமருங்கள்!'' என்று சொல்லி வடக்கு வாயிற்படியில் திண்ணையிலே அமரச் செய்தார். அவரும் திண்ணையிலே போய் அமர்ந்தார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் பிறகு விநாயகரை அழைத்து, ''மகனே! நீ இவரை கவனமாக நின்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறார். நீ உட்கார்ந்திருந்தால் உறங்கிவிடுவாய்.

    அதனால் உனக்கு நிற்க சக்தி கொடுக்கிறேன். நீ நின்று காவல் செய்!'' என்றாள். விநாயகரும் காவல்காத்து நின்றார். அவர் தான் வடக்கு வாயிற்படி மேற்புறம் நிற்கும் சக்தி விநாயகர்.

    திண்ணையிலே அமர்ந்திருக்கும் சிவனாருக்கு உறக்கம் வந்தது. அமர்ந்திருந்த திண்ணையிலே படுத்துறங்கிவிட்டார்.

    சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

    சிவபெருமான் சிறிது நேரம் உறங்கிவிட்டு தாகம் எடுக்க நீர் வேண்டி மயானத்திற்கு சென்றார். உள்ளே சென்ற பார்வதி தேவியார் ஆபத்சகாயரான விஷ்ணுவையும் லட்சுமியையும் இப்பொழுது வரவேண்டும் என்று வேண்டினாள்.

    எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதால் கோபாலனையே, இங்கே விநாயகர் பெருமானாக அமர்த்தியுள்ளார். அவர்தான் மேற்கு வாயிற்படியில் வடபுறம் அமர்ந்திருக்கும் கோபால விநாயகராவார்.

    பார்வதி தேவியார் அழைப்பை ஏற்று விஷ்ணுவும், லட்சுமியும் உடனே வந்தார்கள். அவர்களிடம் அன்னையார், ''என் கணவன் கையில் இருக்கும் கபாலம் நீங்க சீக்கிரம் ஒருவழி சொல்லுங்கள்'' என்றார்.

    இதற்கு பகவான் விஷ்ணு, ''பார்வதி, மகாலட்சுமி இடத்திலே உள்ள அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த பிரம்ம கபாலத்திற்கு போடவேண்டும்.

    அப்படி போடும் போது, உணவுகளை மூன்று உருண்டைகளாக செய்து, முதல் இரண்டு உருண்டைகளை கபாலத்திலே போட வேண்டும். மூன்றாவது உருண்டையை இறைக்க வேண்டும். மற்றவைகளை நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும் என்றார்.

    உடனே அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு கிழக்குவாசல் வழியாக காவல் தெய்வமான பாவாடைராயன் வீரபத்திரனுடன் பார்வதி அமாவாசை இரவு நடுநிசியிலே சென்றாள். அவர்களை பாதுகாக்க விஷ்ணுவும் உடன் சென்றார்.

    சிவனார் மயானத்திலே எலும்புகளை கடித்து நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு பார்வதி தேவியார் வந்து சேர்ந்தார். சிவனாரின் கையிலே உள்ள கபாலத்திற்கு முதல் உணவு உருண்டையை போட்டார். கபாலம் பசிமிகுதியால் சாப்பிட்டது. இரண்டாவது உணவு உருண்டையை போட்டார்.

    அதையும் ருசிமிகுதியால் சாப்பிட்டது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 3-வது உருண்டையை போடுவது போல பாவனை செய்தாள். பிரம்ம கபாலம் அதை சாப்பிட ஏங்கி நின்றது. அது ஏங்கி நிற்பதை பார்வதி பார்த்து விட்டாள். போடுவது போல பாவனை செய்து தூக்கி இறைத்தாள்.

    ருசி மிகுதியாக இருக்கவே கபாலம் பிரம்மன் கொடுத்த சாபத்தையும் மறந்து சிவபெருமானை விட்டுவிட்டு உணவுகளை பொறுக்கித் தின்றது. இந்த நிகழ்ச்சியை தான் அகிலமெங்கும் மயான சூறை என்று கொண்டாடுகிறார்கள்.

    • அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும்.
    • பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் தீய சக்திகள் வீட்டுக்குள் அண்டாது.

    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் தங்களது கையில் எலுமிச்சையை பழங்களாகவும் மாலையாகவும் கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவிலின் முன்பு எலுமிச்சை பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    எலுமிச்சை பழத்தில்தான் அதிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. எலுமிச்சை பழத்தை அம்மனின் காலில் வைத்து வழிபட்டு செல்லும் பக்தர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது.

    மேலும் பலர் எலுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அங்காளம்மன் கோவிலை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் மாலைகளை வாங்கிக் கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோவிலில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சை பழங்களாக காட்சி அளிக்கும்.

    பேய், பிசாசு, பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை பழம் பயன்படுகிறது. இவர்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை கோவிலின் முன்பு கொண்டு செல்கிறார்கள்.

    அங்கு நிற்கும் பூசாரியிடம் வழங்குகிறார்கள். அவர் அந்த எலுமிச்சை பழத்தை கையில் வாங்கிக் கொண்டு பூஜித்து அதனை கொடுத்த பக்தர்களின் தலையை 3 முறை சுற்றி காலால் மிதிக்கும் படி கூறுகிறார். அதன்படி பக்தர்கள் அந்த எலுமிச்சை பழத்தை காலால் மிதித்து செல்கிறார்கள்.

    இதனால் அவர்கள் உடலில் புகுந்திருந்த கெட்ட ஆவிகள் பறந்து விடுகிறது. பில்லி, சூனியமும் விரட்டப்படுகிறது. இதனால் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.

    • தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடம் பலிபீடம்.
    • சித்திரை , மார்ச் மாதத்தில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது.

    ஆதி சக்தி அம்மன் தன் அம்சமான தாட்சாயணி தேவியாக தட்சனுக்கு மகளாக பிறந்தாள் என்றும் ஆணவத்தின் அகங்காரத்தின் தலைக்கணத்தின், இறுமாப்பின், திமிரின் உச்சக்கட்டமாக தக்கனை ஒப்பிடுகையில் அத்தக்கனின் முழு உருவத்தை ஆடாக உருவப்படுத்தியும், அதே முறையில் ஆணவம், அகங்காரம், தலைக்கனம், திமிர் இறுமாப்பின் அனைத்து நிலை உருவமாக சூரபது மனை உருவகப் படுத்தும்போது சூரபதுமன் ஒரு பாதி மயிலாகவும், ஒரு பாதி சேவலாகவும் நின்றது அறிந்ததே!

    இவ்வகையில் அகந்தை, அகங்காரம், திமிர், தலைக்கணம், ஆணவத்தின் தோற்ற உருவாக கோழியையுமே பலியிட்டு வணங்கி இருக்கின்றனர்.

    ஆடு, கோழியின் உருவமான தட்சன், சூரபதுமன் போன்ற அரக்க செயல் கொண்ட ஆணவம், அகந்தை, திமிர், தலைக்கணம், இறுமாப்பு போன்ற தீய குணங்களை திருக்கோவிலின் பலிபீடத்தில் பலியிட்டு வழிபாட்டை தொடங்க கோவிலுக்கு உள்ளே தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடமே பலிபீடம் ஆகும்.

    ஆனால் வழிபாட்டில் தவறான கருத்தாக ஆடு, கோழியைப் பலியிடும் இடமாகவே கருதப்படுவதாகவே ஆதி முதல் பலிபீடம் இருந்ததாகவே! தவறான கருத்தாக கொள்ளப்பட்டு இருந்தது.

    பலிபீடம் என்பது, தக்கன், சூரபதுமன் என்ற மகா அரக்கர்களின் குணநலன்கள் எந்த ஒரு குடும்பத்தாரையும் அடையாமல் இருக்கவும் குடும்ப நபரை அடைந்த அந்த குணநலன்களையும், வழிபாட்டுக்கு முன்பாகவே பலி பீடத்தில் பலியிட்ட பின்னரே வழிபட செல்வதாகவே படைக்கப்பட்ட இடமே திருக்கோவில் பலிபீடம் என்பது தெளிவாக உள்ளது.

    ஊரை சுற்றி வரும் சக்தி கரகத்தின் சிறப்பு

    அங்காளபரமேஸ்வரி கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    அங்காளபரமேஸ்வரி சக்தி கரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்க்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கட்டை தானியம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள்.

    ஏன் என்றால் அங்காளம்மன் பித்து பிடித்த தனது கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவானது.

    சக்தி கரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

    • ஆண், பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.
    • ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும்.

    ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக்கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண், பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.

    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக்கொள்ளும் நாள் அமாவாசை.

    இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூறையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.

    இந்த நேரங்களில் அங்காளம்மன் கோவிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.

    அங்காளம்மன் என்ற இந்த தொன்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    அமாவாசை தோறும் இந்த கோவிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.

    • திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள்.
    • பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகும்.

    1. அங்காளபர மேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

    2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் 4 திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

    3.நான்கு கரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிளம்பு உள்ளது.

    4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

    5. கோவிலுக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

    7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

    8. இக்கோவிலில் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும்போது அவ்வப்போது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

    9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

    11. கோவிலின் தெற்கு பகுதியில் மல்லாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

    12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாடானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

    14. இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

    15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பவுர்ணமி தினங்களில் ஆலயம் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுகிறது.

    16. சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

    17.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

    18.ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    19.எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

    21. மயானத்தில் அன்னையை ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள். இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

    • மேல்மலையனூரில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    • 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட 6 விதமான அசுத்த மலங்கள் சுரந்த வண்ணமாக உள்ளதாகவும் இந்த 6 அசுத்த மலங்களில் ஒவ்வொருநாளும் 3 வித அசுத்த மலங்களே களையப்படுவதாகவும், சுத்தம் செய்யப்படுகிறது.

    மீதமுள்ள உட்புற 3 மலங்களான ஆணவ மலம், கண்ம மலம், மாயை மலம் ஆகிய ஆணவம், இறுமாப்பு, தலைக்கணம், அகங்காரம் போன்ற தீய எண்ணங்களான குணங்கள் அங்காளம்மனை தியானம் செய்வதாலும், வழிபாடு செய்வதாலுமே சிறிது சிறிதாக உடலைவிட்டு விலகி தூய சிந்தனை ஏற்படுவதாகவும் அதற்காகவே தினந்தோறும் வீடுகளில் விளக்கேற்றி வைத்தே தியானம் செய்யப்படுவதாகவும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும் இக்குணங்கள் ஏற்படா வண்ணம் அறவே அழித்து ஒழிக்கவுமே இவற்றை தலைமையிட அங்காளம்மன் கோவிலிலே அழித்து ஒழிப்பதாகவே கருதப்படுகிறது.

    மனித இயக்க 5 செயல்களுக்கும் முக்கிய இடமாகிய ஐம்பொறி என்ற கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கும் தலைமை இடமான தலையையே! அங்காளம்மன் தலைமையிட கோவிலிலே தலையில் தாங்கியுள்ள முடிகளையே அகற்றும் வண்ணம் தலையை மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அங்காளம்மன் திருக்கோவிலில் இருந்து தெளிவான ஞானத்தையும் அம்மன் பேரில் தூய அன்பையும் அவளின் அருளையும் தான் மொட்டைத் தலை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காகவே அங்காளம்மனுக்கு வேண்டுதல் பெயரில் மொட்டை அடிக்கப்படுவதாகவே வழக்கத்தில் உள்ளதற்கு உண்மை விளக்கமாகவே அமைகிறது.

    குலதெய்வ கோவில் ஜடாமுனீஸ்வரன்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக பெரிய ஏரிக்கரையின் கீழ் அமைந் துள்ள ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார். இந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு இக்கோவிலில்தான் முடி காணிக்கை செலுத்தி காது குத்துவார்கள். ஆடி மாதம் வெகு விமரிசையாக இங்கு விழா நடத்துவார்கள்.

    • தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது.
    • மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும்.

    தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களுக்கு எல்லாம் தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது. பிற ஊர்களில் அங்காள பரமேஸ்வரி கோவில் கட்ட விரும்புகிறார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு வந்து மண் எடுத்து எந்த ஊரில் கோவில் கட்டுகிறார்களோ அந்த ஊரில் கோவில் கட்டுவதற்கு முன்பு இந்த மண்ணை போட்டு அதன் பிறகு கட்டிட வேலைகளை தொடங்குவார்கள்.

    அதேபோல் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் இருந்து தீர்த்தங்களையும் எடுத்து செல்வார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா தொடங்கும் போது, பிற ஊர்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் மேல் மலையனூர் வந்து அக்னி தீர்த்தத்தில் தீர்த்தம் எடுத்துச்சென்று அன்னையிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரில் திருவிழாவுக்கு கொடி ஏற்றுவார்கள்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து உருவான முக்கியமான கோவில்களில் பாண்டிச்சேரி சின்ன சுப்பராய வீதியில் உள்ள அங்காள பரமஸ்வரி கோவில் முக்கியமானதாகும். மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும். இத்திருவிழா தொடர்ந்து 24 நாட்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணவன்-மனைவி இடையே நல்லுறவு ஏற்படும்.
    • பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்

    சில கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.

    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.

    மேல்மலையனூர் தலத்தில் உள்ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு, மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்திக் கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    • சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும்.
    • ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    சித்திரை மாதம் வருடப்பிறப்பு அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

    சித்திரை மாத அமாவாசை அன்று இரவு பெரிய கரக ஊர்வலம் (பூங்கரகம்) நடைபெறும். அன்றைய தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    வைகாசி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் இரவு ஊஞ்சல் உற்சவம் நடை பெறும்.

    ஆனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஆடிமாதம் முழுவதும் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலிப்பர்.

    ஆவணி மாதம் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    புரட்டாசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். மறுநாளில் இருந்து நவராத்திரி கொலுவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலிப்பார். விஜயதசமி அன்று மாலையில் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் கையில் வில், அம்புடன் குதிரை வாகனத்தில் மந்தைவெளியில் எழுந்தருள்வார். பின்பு வன்னிமரத்தின் மீது அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஐப்பசி மாதம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். தீபாவளி அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

    கார்த்திகை மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    திருவண்ணாமலை தீபத் திருநாள் அன்று உற்சவ அம்மன் மாலை நேரத்தில் பல்லக்கில் வந்து தென்மேற்கு மூலையில் இருந்து திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் அம்மனுக்கு தீபாரதனை நடைபெறும்.

    மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

    தை மாதம் பொங்கல் அன்று வடக்கு வாசல் அருகில் பெரிய பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கும் அம்மனுக்கும் படைப்பார்கள். அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் நடைபெறும்.

    மாசி மாதம் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறும். இம்மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    பங்குனி மாதம் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ×