search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதயம்"

    • உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.
    • இதயம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

    உயிர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்றாக இதயம் விளங்குகிறது. உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும். இதயம் செயல் இழந்து போனாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ மரணம் ஆட்கொண்டுவிடும். ஆக்சிஜன் நிறைந்திருக்கும் ரத்தத்தை உடல் முழுவதும் கடத்திச் செல்வதுதான் இதயத்தின் முக்கியமான வேலையாகும். இதயம் பற்றிய மேலும் சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

    * கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடக்கி வைக்கும் அளவுக்குத்தான் ஒருவரின் இதயம் அமைந்திருக்கும்.

    * இதயம் தினமும் 1 லட்சத்து 15 ஆயிரம் முறை துடிக்கும்.

    * இதயம் ஒவ்வொரு நாளும் சுமார் 7 ஆயிரத்து 570 லிட்டர் ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

    * உடலில் இருந்து துண்டிக்கப்பட்டாலும் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் தன்மை கொண்டது.

    * 'ஓப்பன் ஹார்ட் சர்ஜரி' எனப்படும் இதய அறுவை சிகிச்சை முதன் முதலில் 1893-ம் ஆண்டு நடந்தது.

    * சீரான அளவில் சுருங்கி விரிந்து ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை உடலில் உள்ள செல் களுக்கு கடத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டால் இதயத்தின் செயல்பாடு முடங்கி போய்விடும். இதயம் செயலிழந்து மரணத்திற்கு வித்திடும். இம்மாதிரியான சமயங்களில் 'பேஸ் மேக்கர்' எனப்படும் செயற்கை உயிர் காக்கும் கருவி பயன்படுத்தப்படும். செயற்கையான மின் சமிக்ஞைகள் மூலம் ரத்த ஓட்ட செயல்பாட்டை சரி செய்யும் இந்த 'பேஸ் மேக்கர்' கருவி 1958-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    * 'பேஸ் மேக்கர்' கருவியை முதன் முதலில் பொருத்தியவர், ஆர்னே லார்சன். சுவீடனை சேர்ந்த இவர் இந்த கருவியை பயன்படுத்தி 43 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். தனது 86-வது வயதில் 2001-ம் ஆண்டு இறந்தார். இதயத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத நோய் பாதிப்புக்கு ஆளாகிதான் அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    * 3,500 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மியில் இதய நோய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    * பாலூட்டி இனங்களில் திமிங்கலம் மிகப் பெரிய இதயத்தை கொண்டுள்ளது.

    * பெரும்பாலான மாரடைப்புகள் திங்கட் கிழமை நிகழ்கின்றன.

    * மனித இதயத்தின் எடை ஒரு பவுண்டுக்கும் (450 கிராம்) குறைவானது. இருப்பினும் ஆணின் இதயம், பெண்ணின் இதயத்தை விட சுமார் 50 கிராம் எடை கூடுதலாக இருக்கும்.

    * கண்ணின் விழித்திரை (கார்னியா) தவிர உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் இதயத்தில் இருந்து ரத்தத்தை பெறுகின்றன.

    * இதயத்தின் வால்வுகள் திறக்கும்போதும் மூடும்போதும் 'லப் டப்' என்னும் சத்தம் ஏற் படுகிறது.

    * ரத்த நாள அமைப்பு மெல்லிய இழைகளால் ஆனது. அதனை நீட்டித்தால் சுமார் 60 ஆயிரம் மைல்களுக்கு மேல் நீளும்.

    * இதய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானது.

    * புன்னகைப்பது இதயத்திற்கு நல்லது. வாய் விட்டு சிரிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

    • பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள்.
    • மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

    இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் அருகில் இருப்பவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று புரிவதில்லை.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    இது இரண்டு வகைப்படும். ஒன்று மாரடைப்பு மற்றொன்று மார்பு வலி இந்த இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது. ஒரு சிலருக்கு இதன் வித்தியாசம் புரிவதில்லை. மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

    மார்பு வலி ஒருவருக்கு ஏற்பட்டால் அது 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுவே மாரடைப்பு ஏற்பட்டால் 20-30 நிமிடங்கள் வரை வலி நீடிக்கும். இதய தசைகளுக்கும் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மார்பு பகுதியில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே ஏற்படுவது அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுவது அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவது, உடனே குமட்டிக்கொண்டு வாந்தி வருதல், அதனால் ஏற்படும் படபடப்பு, காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுவது, தலைசுற்றல் மற்றும் உடல் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். அவரை சுற்றி மற்றவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். அவருக்கு தேவையான காற்று தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

    பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் காது வைத்தோ அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும்.

    சுவாசம் இருப்பது உறுதி செய்தவுடன் நாக்கின் அடியில் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும். இது உறைந்த இரத்தத்தை சரி செய்து இதயத்திற்கு சீராக இரத்த ஓட்டத்தை பாய்ச்சும். மேலும் உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    ஒருவேளை பாதிக்கப்பட்டவர் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தலையைப் பின்பக்கம் கை கொண்டு உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் மெதுவாக காற்றை உட்செலுத்து வேண்டும். இப்படியாக செயற்கை சுவாசம் தர வேண்டும்.

    அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பு ஏற்பட்ட தாக்கத்தின் அளவு, இதயம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது, மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாட், பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் தேவைப்படலாம்.

    மேற்கண்ட முதலுதவி விஷயங்களை நீங்கள் சரியான முறையில் பின்பற்றினால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும்.

    • ராஜ்மா இருதயத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை தருகிறது.
    • பாதாம் கொலஸ்டிராலை குறைக்க வல்லது

    நம்முடைய ரத்தக் குழாய்கள்தான் ஆக்சிஜன் நிறைந்த, சத்துக்கள் நிறைந்த ரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுவிற்கும் கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் மிகவும் குறைந்த ரத்தத்தினை சீர் செய்ய இருதயத்திற்கு கொண்டு வருகின்றன. ஆர்டரீஸ், வெயின்ஸ் என்று இவை பிரிந்து கூறப்பட்டாலும் ரத்த குழாய்கள் மூலம் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம், ஊட்டம் பெறுகின்றது.

    கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. இது நமது உடலின் போக்குவரத்துப் பிரிவு இதில் இந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா? அடைப்பு ஏற்படும் இடத்திற்கு ஏற்ப பாதிப்புகள் ஏற்படுகின்றன. பக்க வாதம், மாரடைப்பு இவை இரண்டும் நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தைகள்தான். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ஏற்படும் இத்தகு பிரச்சினைகள் நிறைய உள்ளன.

    ராஜ்மா என்று சொல்லப்படும் அடர்ந்த பீன்ஸ் இருதயத்திற்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை தருகிறது. மக்னீசியம் ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இது உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது. அதிக கொலஸ்டிரால், உயர் ரத்த அழுத்தம் இரண்டினையும் குறைக்க வல்லது. கைப்பிடி அளவு உட்கொண்டாலே போதும். ஒமேகா 3 நிறைந்த சால்மன் டியூனா இருதய துடிப்பினை சீர் செய்யவும், உயர் ரத்த அழுத்தம் குறையவும் உதவுகின்றது.

    ஆலிவ் எண்ணெய், நம்ம ஊர் சமையலுக்கு ஏற்ற வகையிலும் வந்துள்ளது. ஓரிரு டீஸ்பூன் சேர்ப்பது இருதய பாதுகாப்பிற்கு நல்லது.

    வால்நட்-இருதய ரத்த குழாய்களின் வீக்கத்தினை நீக்குகின்றது. ஒமேகா 3 சத்து நிறைந்தது.

    * பாதாம் கொலஸ்டிராலை குறைக்க வல்லது

    * சோயாவில் தயாரிக்கப்பட்ட 'டோஃபு' தாது உப்புகள், நார்த்சத்து கொண்டது.

    * சர்க்கரை வள்ளி கிழங்கு- நார்ச்சத்து, வைட்டமின் ஏ லைகோபேன் (சர்க்கரை நோய், இருதய நோய் பாதிப்பினை குறைக்க வல்லது)

    * ஆரஞ்சு-ரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    * பார்லி அரிசி கொலஸ்டிரால் அளவினை குறைக்க வல்லது.

    * ஓட்ஸ்-எல்.டி.எல். கொலஸ்டிராலினை குறைக்கும்.

    * பிளாக்ஸ் விதைகள்- ஒமேகா 3 சத்து நிறைந்தது.

    * கீரை வகைகள், பூண்டு, கிரீன் டீ, தக்காளி இவைகள் அனைத்துமே மருத்துவ அமிர்தம்தான்.

    * மாதுளை பழம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் வேண்டும்.

    * சர்க்கரை, சிகப்பு அசைவம் இவற்றினை தவிர்த்து விடுவது நல்லது.

    * கேக், பீட்சா போன்ற பிரிவுகளை அடியோடு நீக்கி விட வேண்டும்.

    • தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம்.
    • பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.

    இதயப் பாதுகாப்பிற்குப் புகைபிடித்தலைத் தவிர்க்கச் சொல்வது மருத்துவர்களின் வழக்கம். ஆனால் பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் முறைகளில் குழந்தை நலம் மிக முக்கியமானது. பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம்.

    பொதுவாகத் திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகிவிடும். பொதுவாகப் பெண்கள் முகக் கிரீம்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

    பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் ஆக்னே எனப்படும் பிளாக் ஹெட்ஸ் போன்றவற்றை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ரெடினாய்க் அமிலம் கலந்த, முகக் கிரீம்கள் பயன்படுத்துவது வழக்கம். இக்கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தைப் பாதிக்கின்றன.

    திருமணத்திற்கு முன்னர் இவற்றைப் பயன்படுத்துவதால் ஆபத்து ஒன்றுமில்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

    இந்த அபாயத்தை விலை கொடுத்து வாங்காமல் இருக்க, இக்கிரீம்களில் ரெடினாய்க் அமிலம் கலக்காமல் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். கருத்தரிக்கும் காலத்திலாவது இந்த வகை கிரீம்களைத் தவிர்த்தல் சிசுவின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

    இக்காலத்தில் ஆண்கள்கூட முகப்பருக்களை நீக்க இவ்வகை கிரீம்களைப் பயன்படுத்துவது உண்டு. ஆண்கள் பயன்படுத்துவதால் கரு சிசுவுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்த அமிலம் விந்துகளைத் தாக்குவது இல்லை. இந்த அமிலம் தோலின் மேற்புறத்தின் வழியாகப் பயணிப்பதால் கருவை மட்டுமே பாதிக்கும், விந்துவைப் பாதிப்பதில்லை.

    குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தாய்க்குப் பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்குக் கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவைப் பாதிக்கும். முன்னர்ச் சொன்னது போல் கரு உருவாகும் காலத்தில் முதல் இரு மாதங்களில் ரெடினாய்க் அமிலம் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தி இருந்தால், இதயப் பாதிப்பு அதிகமாகும். தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம்.

    கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர்க் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்.

    பொதுவாக இந்த நேரத்தில் தாய்க்குக் காய்ச்சல் வந்தால், மருந்து, மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படும். இது சாதாரணமான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. இக்காய்ச்சல் டார்ச்- TORCH என்ற வைரஸ், கூட்டமாகத் தாயைத் தாக்குவதால் ஏற்படலாம். இதனால் தாய்க்கு ஏற்படும் அபாயம் மட்டுமில்லாமல், கருவிலுள்ள சிசுவையும் அது தாக்கிவிடும். இதனால் குழந்தைக்குக் காது கேளாமல் போய்விடலாம். மேலும் கண்ணில் காடராக்ட் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாதிப்பை 'ருபெல்லா சிண்ட்ரோம்' என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இவ்வகை சளி, காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள் மிக வீரியமுள்ளவையாக இருப்பதால், இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்தப் பக்கவிளைவுகள் கருவிலுள்ள சிசுவின் இதயத்தைத் தாக்கக்கூடும்.

    கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம். அதனால் இளம் பெண்களே முகப்பரு கிரீம்களிடம் உஷாராக இருங்கள்.

    • நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சு திணறல் தெரியும்.
    • இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம்.

    இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யும் அற்புதமான சிகிச்சை குறித்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பி.ஜி.எஸ்.மருத்துவமனை வசந்தா ஹார்ட் மையத்தின் டாக்டர் பிரபு என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்:-

    இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். குறிப்பாக புகை பிடித்தல், மது அருந்துதல், மனக்கவலை, மன அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை முக்கியமானவை. இதில் மாரடைப்பு என்பது இருதய ரத்த நாளத்தில் உட்சுவரில் படியும் கால்சியத்தினாலோ? அல்லது கொழுப்பினாலோ அல்லது வேறு கனிம, கரிம வேதிப்பொருட்களினாலோ இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி இருதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை விளைவிக்கின்றது. இதனால் மூச்சு திணறல், நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆகையால் எந்த ஒரு சிகிச்சையாக இருந்தாலும் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.

    இதை பல்வேறு கிளை ரத்தகுழாய்களை இதயத்தில் உருவாக்குவதன் மூலம் இ.இ.சி.பி. தெரபி என்கிற சிகிச்சையானது அந்த ஆக்ஸிஜன் குறைபாட்டினை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்து விடும். இதனைஇயற்கை முறையிலான பைபாஸ் சிகிச்சை என்றும் கூறலாம். இந்த சிகிச்சையால் புதிய கிளை ரத்தநாளங்கள் இதயத்தில் உருவாக்கப்படு கின்றது.

    இத்தகைய புதிய வழிகளில் இரத்தம் செல்வதால் நெஞ்சுவலி மாரடைப்பு, மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படாது. அது மட்டுமின்றி இந்தசிகிச்சையோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் சிகிச் சை, அதாவது கீலேசன் சிகிச்சையும் செய்து, கொண்டால் உடலில் உள்ள அனைத்து தேவையற்ற கழிவுகளும் வெளியேற்றப்படும். மற்றும் ரத்தகுழாயில் உள்ள கால்சியம் அடைப்புகளை இச்சிகிச்சையால் பயன்படுத்தப்படும் மெக் னீசியம் இ.டி.டி.ஏ. என்கிற மருந்தானது இலகுவாக்கி அதன் தடிமனை குறைத்து விடுகின்றது.

    அதுமட்டுமின்றி இதய தசைகளில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் மற்றும் அசுத்தங்களை அகற்றுவதன் மூலம் இதயத்துக்கு மிகச்சிறந்த புதிய ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த கழிவுகளை நீக்கும்போது சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுப்பதாக அமையும் என்பது தவறு. இந்த சிகிச்சைகள் மூலம் சிறுநீரகங்கள் பாதுகாக் கப்படுகின்றன என்பது உறுதி.இத்துடன் மெடிக்கல் ஓசோன் (ஓ-3) தெரபி சிகிச்சையும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துயிர் பெறும். இதனால் செல் சிதைவு முற்றிலும் தடுக்கப்படும்.

    இதனால் இதய தசைநார்களின் பலம் பன் மடங்கு உயரும். தசைநார்களின் சுருங்கி விரியும் தன்மை எளிதாக்கப்படும். இதயத்தின் செயல் திறன் கூடும். இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படும். இதனால நம் இதயத்தின் ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகரித்து நெஞ்சுவலி, மூச்சு திணறலில் இருந்து முற்றிலும் விடுபடலாம். இடது பிரதான ரத்த குழாயில் 50 சதவீத அடைப்பு இருந்தால் மட்டுமே பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும். பொதுவாக நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சு திணறல் தெரியும். ஆகவே அதற்குமுன்பாகவே பரிசோதனை செய்து கொண்டால் சிகிச்சை எளிதாக அமையும் என்கிறார் அவர்.

    • மாரடைப்பு என்பது வந்தே தீரும் என்ற வகையை சேர்ந்த நோய் அல்ல.
    • மாரடைப்பு வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவது கவலை அளிப்பதாகும். மேலும் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதய குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் என்ற வகையை சேர்ந்த நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினை சீராக பராமரிப்பது போல இதயத்தை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மனஅழுத்தம்தான், மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்தஅழுத்தம் மாரடைப்புக்கு கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக்காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் 'நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளை சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப்பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    ×