search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மாரடைப்பால் அதிகரிக்கும் இறப்புகள்
    X

    மாரடைப்பால் அதிகரிக்கும் இறப்புகள்

    • மாரடைப்பு என்பது வந்தே தீரும் என்ற வகையை சேர்ந்த நோய் அல்ல.
    • மாரடைப்பு வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருவது கவலை அளிப்பதாகும். மேலும் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதய குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் என்ற வகையை சேர்ந்த நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினை சீராக பராமரிப்பது போல இதயத்தை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மனஅழுத்தம்தான், மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்ய பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மனஅழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்தஅழுத்தம் மாரடைப்புக்கு கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக்காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்துவிட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் 'நவநாகரிக உணவு' என்ற பெயரில் வரும் உணவுகளை சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப்பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    Next Story
    ×