search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதி ஜெகநாதபெருமாள்"

    • காலவர் என்ற மஹரிஷிக்கு ஜோதி வடிவாக விஷ்ணு காட்சி தந்தார்.
    • ஜோதி வடிவமே அரசமர ரூபமாக இன்றும் காட்சி அளிக்கிறது.

    பல யுகங்களுக்கு முன் இந்த ஸ்தலம் தர்பக்காடாக இருந்தது. காலவர் என்ற மஹரிஷிக்கு ஜோதி வடிவாக விஷ்ணு காட்சி தந்தார். பின்னர் அந்த ஜோதி வடிவமே அனைவரும் அறியும் வகையில் அரசமர ரூபமாக இன்றும் காட்சி அளிக்கிறது.

    அதேபோல இந்த ஸ்தலத்தில் தவம் செய்த கண்ணுவர், புல்லர் என்ற மஹரிஷிகளுக்கும் விஷ்ணு ஜெகந்நாதராக நாராயணன் காட்சி அளித்த முதல் தலம் என்பதால் அவர் ஆதிஜெகநாதராக காட்சி தருகிறார். ஸ்தல புராணத்தில் குறிப்பிட்ட அந்த மரம் இன்றும் இருப்பது நாம் காண வேண்டிய அதிசயங்களில் ஒன்று.

    பொதுவாக அரசமரம் மேல் நோக்கி வளரும். ஆலமரம் போல் விழுதுகள் விடுவதோ விழுதுகள் தொடும் இடங்களில் மரம் உண்டாவதோ கிடையாது. ஆனால் திருப்புல்லாணியில் தல விருட்சமாக இருக்கும் இந்த அரச மரமோ மேல் நோக்கி அதிகம் வளராமல் அதன் கிளைகள் தரை நோக்கி வளைந்து தாழ்ந்தே வளர்கின்றன.

    அப்படித் தரையைக் கிளைகள் தொடும் போது, ஏதேனும் ஒரு கிளை தரையில் வேர்விட்டு, புதிய மரம் உண்டாகி, அது பெரிதா னவுடன் தாய் மரம் பட்டுப்போய், பின் புதிய மரத்தின் கிளைகள் தரையைத் தொட்டு புது மரம் உண்டாகி என்று இப்படி இந்த மரம் இடம் விட்டு இடம் மாறுகின்ற அற்புதம் இங்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

    மரத்துக்கு கீழே தான் பஞ்சாயத்து நடக்கும், ஆனால் இந்த மரமே ஒரு பஞ்சாயத்தை தீர்த்துவைத்துள்ளது. ஒரு பஞ்ச காலத்தில் தமிழ்நாட்டு அந்தணர்கள் வடக்கே சென்ற போது அங்கே சரஸ்வதி புத்திரன் சாரஸ்வதன் ஓதிய வேதத்துக்கும் இவர்கள் ஓதியதற்கும் முரண்பாடு ஏற்பட அவர்கள் பிரம்மாவிடம் சென்று கேட்க அவரும் குழம்பி அவர் திருமாலையே கேட்போம் என்று சென்றார்கள்.

    விஷ்ணு இந்த மரத்தடியில் யார் வேதம் சொல்லும் போது இலைகள் ஆடாமல் அசங்காமல் இருக்கிறதோ அதுவே சரி என்று சொல்ல. சாரஸ்வதன் சொன்ன போது இலைகள் அசங்காமல் இருக்க அவர் சொல்லும் வேதமே சரி என்பது புராணக் கதை. விஷ்ணுவின் மார்பில் எப்போது லட்சுமி குடிகொண்டு இருப்பது போல அரசமரத்துடன் வேம்பும் இங்கே இணைந்தே இருக்கிறது.

    • 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம்.
    • விபீஷணன் இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

    திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் ஆழ்வார்களில் திருமங்கை யாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம். இந்த கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ் பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.

    விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப் பட்ட வில்லைப் பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதா பிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

    கடற் கடவுள் தன் பத்தினியோடு ராகவனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர்களுக்கு அபயம் அளித்து, புல்லவர், கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரமபதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.

    ஆகவே, இந்த தலம் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திலுள்ள மூர்த்தியை வணங்கி பகவான் பாதம் அடியில் அர்ச்சாரூபியாய் அமர பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அரசமர நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்து, நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஏராளமான தம்பதியர்கள் பெருமாளை தரிசிக்க வரு கின்றனர்.

    இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். தாயாருக்கு புடவை சாத்து தலையும், பெருமாள் சாமிக்கு துளசி மாலை அணிவித்தலையும் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ராமர் சயன நிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம்.

     எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக்கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக்கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும், ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.

    • தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.
    • பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும்.

    கோசலை நாட்டை ஆண்ட தசரச சக்கரவர்த்தி தான் மணம் முடித்த கோசலை மூலம் சாந்தா என்ற மகளை பெற்றெடுத்தார். பின்னர் அந்த மகளை அதே நாட்டு மன்னருக்கு தத்துக்கொடுத்து விட்டார். அதன் பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலமாக தசரதனுக்கு கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி ஆகிய மூன்று மனைவிகளுக்கு முறையே ராமன், பரதன், லட்சுமணன் மற்றும் சத்துருக்கணன் ஆகிய 4 பிள்ளைகள் பிறந்தனர்.

    முன்னதாக தசரதன் மகப்பேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60 ஆயிரம் மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று மனமுருகி வேண்டினார். அப்போது அவருக்கு காட்சி அளித்த ஆதி ஜெகநாதபெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல பாராயணம் செய்யுமாறு அருளினார்.

    பின்பு தசரதன் இத்தலத்தில் நாக பிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகமோஷ்டி யாகம் செய்ய பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்தபின், தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.

    இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கண வனும், மனைவியும் உபவாசம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி நாக பிரதிஷ்டை செய்து வருகிறார்கள். ஏராளமானோர் குழந்தை வரம் பெற்று தம்பதி சமேதராக மீண்டும் கோவிலுக்கு பிள்ளைகளுடன் வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.

    • ஆதி ஜெகநாதர் கோவிலில் ராமர் சயன நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும்.
    • இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது.

    திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவர்கள் வழிபடும் கடவுளாக போற்றப்படுகிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலை குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சங்க காலத்திற்கு பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியார்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தழைத்தோங்கியது.

    அந்த வகையில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 105-வது தலம் இந்த ஆதி ஜெகநாதர் கோவிலாகும். அனைத்து கோவில்களிலும் ராமபிரான் நின்ற கோலத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    சயனநிலையில் ராமர்

    சயனநிலையில் ராமர்

     ஆனால் ஆதி ஜெகநாதர் கோவிலில் ராமர் சயன நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும். திருமங்கை–யாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இதுதவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர்.

    பஞ்ச தரிசனம் பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகநாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

    ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

    இதுபோன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை தாங்கி நிற்கும் கோவில் சிறப்புகளை அறியவும், பல்வேறு வடிவங்களில் காட்சி தந்து அருள்புரியும் பெருமாளை தரிசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஆதி ஜெகநாதர் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

    • திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில்.
    • மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் கோவில். புராண காலத்தில் இந்த ஊரின் பெயர் திருப்புல்லாணை என்று இருந்துள்ளது. இங்கு மூலவராக ஆதி ஜெகநாதபெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவராக கல்யாண ஜெகநாதரும், அம்பாளாக கல்யாணவல்லி, பத்மாசனியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவில் தல விருட்சமாக அரசமரம் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் இந்த ஆதி ஜெகநாதர் கோவில் 105-வது திருத்தலமாக போற்றப்படுகிறது.

    ஜெகநாதப் பெருமாள், புவனேஸ்வர் (புரி) தலத்தில் உத்தர ஜெகநாதராகவும், திருமழிசை தலத்தில் மத்திய ஜெகநாதராகவும், திருப்புல்லாணியில் தட்சிண ஜெகநாதராகவும் காட்சி தருகிறார் என்பர். அந்த அளவில் மிகச்சிறப்பு வாய்ந்தது மட்டுமன்றி, ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாவதால் புராதன புண்ணியத் தலமாகவும் திகழ்கிறது இந்த கோவில்.

    முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப்பட்டனர்.

    தங்களை காக்க வேண்டும் என்ற மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாதர் கோவில்.

     பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ×