search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி கொம்பன் யானை"

    • பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும்.
    • கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    மன அழுத்தம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. யானைகளுக்கும் உண்டு. அரிசி கொம்பன் யானை தொடர்பான சர்ச்சைகள் இதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

    அரிசி கொம்பன் என்ற பெயரை கேட்டதும் அதன் உருவத்தை பார்த்ததும் அந்த யானை படுபயங்கரமான யானையாக இருக்குமோ என்ற எண்ணம்தான் 99 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசி கொம்பன் யானை ரொம்ப ரொம்ப சாதுவானது. அன்பாக பழகக்கூடியது என்றெல்லாம் கண்ணீர் மல்க சொல்கிறார்கள்.

    பொதுவாக யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆண் யானையான அரிசி கொம்பனுக்கு தற்போது 36 வயதுதான் ஆகிறது. இன்னும் 50 சதவீத வாழ்க்கையை அந்த யானை வாழ வேண்டி உள்ளது. ஆனால் அந்த யானையை சுற்றி ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும், பரபரப்புகளும் அந்த யானையை நிம்மதியாக வாழ வைக்குமா? என்ற ஏக்கம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.

    அரிசி கொம்பன் யானை இதுவரை 9 பேரை கொன்று விட்டதாகவும், 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளி விட்டதாகவும் ஒருசாரார் புகார் வாசிக்கிறார்கள். ஆனால் உணவுக்காகத்தான் அது குடியிருப்புகளை தேடி வருகிறது என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இதில் உண்மை தெரிய வேண்டுமானால் அரிசி கொம்பன் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில்தான் அதிக யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் காட்டுக்குள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அப்படி ஒரு குழுவில்தான் அரிசி கொம்பன் யானை 1987-ம் ஆண்டு பிறந்தது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் அதன் பூர்வீகம். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதி மக்களுக்கு அரிசி கொம்பன் யானை பற்றி சின்ன வயதில் இருந்தே தெரியும். முதலில் அந்த யானையை சின்ன கொம்பன் என்றுதான் மூணாறு பகுதி மக்கள் செல்லமாக அழைத்தார்கள்.

    பொதுவாகவே நமது வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமிகளை நாம் அம்மு குட்டி, செல்ல குட்டி என்றெல்லாம் கொஞ்சுவது உண்டு. அதுபோல் தான் கேரளாவில் பாசமாக வளரும் யானை குட்டிகளை கொம்பன் என்று கொஞ்சுவார்கள். கொம்பன் வகை யானைகளுக்கு மக்கள் மத்தியில் தனி செல்வாக்கு உண்டு.

    ஏனெனில் கொம்பன் யானையை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் செல்வம் சேரும் என்பது ஐதீகம். கொம்பன் யானைகள் காதை ஆட்டிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டுக்கு நல்லது என்று பேசப்படுவது உண்டு. அரிசி கொம்பன் யானையையும் அந்த ரகத்தில்தான் வைத்திருந்தனர்.

    ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே. இந்த கொம்பன் யானைக்கு ஒரு கட்டத்தில் அரிசியை உணவாக கொடுத்தனர். அரிசியை சாப்பிட்ட யானைக்கு அது தேவஅமிர்தமாக இருந்தது. இதனால் மற்ற வழக்கமான உணவுகளை அந்த கொம்பன் யானை சாப்பிட மறுத்தது. இதனால் மூணாறு பகுதி மக்கள் அந்த யானையை சின்ன கொம்பன் என்று அழைத்து வந்ததற்கு பதில் அரிசி கொம்பன் என்று அழைக்க தொடங்கினார்கள். பிறகு அதுவே அந்த யானையின் பெயராக நிலைத்துப் போனது.

    2010-ம் ஆண்டுகளில் அதாவது அரிசி கொம்பனுக்கு 23 வயது இருக்கும்போது அது அரிசி மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் வனப்பகுதியில் தங்காமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவ ஆரம்பித்தது. அரிசி எங்கிருக்கும் என்று தேடிப்பிடித்து சாப்பிட்டு வந்தது.

    இதனால் மூணாறு பகுதி மக்களோடு மக்களாக அந்த யானை இரண்டற கலந்துபோனது. அந்த யானைக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பூப்பாறை என்ற இடத்தில் அரிசி கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் டீக்கடை தொடங்கி நடத்தினார்கள். அந்த அளவுக்கு அரிசி கொம்பன் செல்லப்பிள்ளையாக இருந்தது.

    முதலில் அரிசி கொம்பனின் சிறு சிறு விளையாட்டுகளை வனப்பகுதி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அரிசிக்காக அந்த யானை சற்று உக்கிரத்தை காட்டியது. அதில்தான் பிரச்சினை தொடங்கியது. சாதாரண குடிசை போட்டு வாழும் வனப்பகுதி மக்களுக்கு அது தொல்லை தருவதாக இருந்தது.

    ஆனால் ஒருபோதும் அரிசி கொம்பன் அரிசிக்காக மக்களை பந்தாடியது கிடையாது. அரிசிக்கும், நல்ல தண்ணீருக்கும் மட்டுமே அது ஆசைப்பட்டது. அதில் குறுக்கீடு வந்தபோதுதான் அந்த யானை தாறுமாறாக நடந்து கொண்டது. அதை எதிர்கொண்ட சிலர் பலியாக நேரிட்டது. இப்படியே 10 ஆண்டுகள் ஓடிப்போனது.

    கடந்த 3 ஆண்டுகளில் அரிசி கொம்பனால் அதிக பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. வனப்பகுதி மக்கள் சொல்லாத நிலையில் வனத்தையொட்டி உள்ள தனியார் நிலப்பகுதி மக்கள்தான் இந்த புகாரை அதிகம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கேரள வனத்துறை அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தது.

    அதற்கு கேரள யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரிசி கொம்பனை தொந்தரவு செய்யக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதையடுத்து அரிசி கொம்பனை பிடித்து பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடும்படி கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி 5 மயக்க ஊசிகள் போட்டு அரிசி கொம்பனை பிடித்தனர்.

    மூணாறு வனப்பகுதியில் இருந்து அதை லாரியில் ஏற்றி தேக்கடி பகுதிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் அரிசி கொம்பனை பிரிகிறோமே என்று மூணாறு பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதம் இறுதியில் தேக்கடியில் இருந்து அந்த யானை வேறு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது.

    கடந்த மாதம் தமிழக பகுதியான மேகமலைக்குள் அது ஊடுருவியது. அந்த வனப்பகுதியில் சுமார் 20, 25 நாட்கள் உலாவி கொண்டே இருந்தது. யாரையும் அது துன்புறுத்தவில்லை. ஒரே ஒரு தடவை மட்டும் ரேஷன் கடையை உடைத்து அரிசி இருக்கிறதா? என்று தேடியது. அரிசி கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் தேக்கடிக்கே சென்று விட்டது.

    என்றாலும் அரிசி மீது உள்ள ஆசையால் கடந்த 27-ந்தேதி மேகமலையில் இருந்து கம்பம் பகுதிக்குள் வந்து விட்டது. இதனால் கம்பம் நகரமே அல்லோகலப்பட்டது. ஆனால் அப்போதும் கூட அது மக்களை தாக்கவில்லை. அரிசியை தேடித்தான் அலைந்தது. நல்ல தண்ணீர் கிடைக்குமா? என்று தவித்தது.

    அந்த யானையை சற்று அருகில் இருந்து பார்த்த கம்பம் பகுதி மக்கள் பரிதாபப்படுகிறார்கள். அரிசி கொம்பனுக்கு உடல் முழுக்க ரத்த காயம் இருக்கிறது. அந்த யானையால் நடக்க கூட முடியவில்லை என்று கவலையோடு சொல்கிறார்கள். அரிசி கொம்பன் யானையை உரிய வகையில் பக்குவப்படுத்தினால் அது நல்ல பாசமாக இருக்கும் என்பதுதான் வன விலங்கு ஆர்வலர்களின் கருத்து ஆகும்.

    பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும். கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    • அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அரிசி கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி வந்த அரிசி கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

    அதன் பின்பு அங்கேயே சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அதிரடியாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அங்கிருந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் சண்முகா நதி அணைப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடந்த 5 நாட்களாக அதே பகுதியில் உள்ள அரிசி கொம்பன் யானைக்கு பார்வை குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

    அதற்கு தேவையான உணவை வனத்துறையினர் வைத்து விட்டு வந்து விடுகின்றனர். குறிப்பாக அரிசி, பலாப்பழங்கள் ஆகியவற்றை வைப்பதால் அதனை உண்டு வருகிறது. மேலும் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அதற்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    சாந்தமாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் சத்தம் போட்டவாறே நகர்ந்து வருகிறது. இதனால் அதன் செய்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டுள்ளனர்.

    அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட தெப்பாக்காடு மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 22 பேரும் கடந்த 3 நாட்களாக ஓவுலாபுரம் வனப்பகுதியில் தங்கியுள்ளனர்.

    அங்குள்ள பெருமாள் கோவிலை அரிசி கொம்பன் சுற்றி வருகிறது. கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அதனை கண்காணித்து வருகின்றனர்.

    ஏற்கனவே அரிசி கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்திய கேரள டாக்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. பொதுவாக மரங்கள் மற்றும் பாறைகளின் மேல் நின்று மயக்க ஊசி செலுத்த வேண்டும். ஆனால் அரிசி கொம்பனை அவ்வாறு செய்ய முடியாது. ஏதாவது வாகனங்களின் மீது அமர்ந்து 10 அல்லது 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசியை செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அது எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு.

    அப்போது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்தினால் அது மிரண்டு ஓடும். ஆனால் அரிசி கொம்பன் பட்டாசு கொளுத்திய திசையை நோக்கி ஓடி வரும் என்பதால் அது போன்ற செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அதிக நாட்கள் சுற்றி வந்த அரிசி கொம்பன் தற்போது உடல் நலம் குன்றி காணப்படுவதாக அறிந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் பார்ப்பதற்கு மற்ற யானைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான தோற்றத்தில் இருக்கும். அதற்கு தேவையான இரை கிடைத்து விட்டால் யாரையும் தொந்தரவு செய்யாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அதனை நோக்கி நகர்ந்து வருகிறது.

    பெரும்பாலும் அரிசி கொம்பன் கூரை வேயப்பட்ட வீடுகளையே குறி வைத்து சேதப்படுத்தும். ஏனெனில் அங்குதான் அரிசி இருக்கும் என்பதை அது நன்றாக உணர்ந்துள்ளது. கடந்த மாதம் ஹைவேவிஸ் தொழிலாளர்கள் குடியிருப்பில் 10 நாட்கள் சுற்றி வந்த போதும் யாரையும் எதுவும் செய்யவில்லை.

    ரேசன் கடை ஜன்னலை மட்டும் உணவுக்காக சேதப்படுத்தியது. தற்போது அதன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்றனர். அரிசி கொம்பன் யானைக்கு மூணாறு பகுதியில் ரசிகர் மன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள ஜீப் டிரைவர்கள் சார்பில் அரிசி கொம்பன் தேனீர் கடை தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
    • மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து 11 பேரை பழி வாங்கிய அரிசி கொம்பன் கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    அதன் பிறகு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் கடந்த 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    சாலையில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

    இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    சண்முகநாதன் கோவிலில் புகுந்த அரிசி கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப்படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. கடந்த 5 நாட்களாக கம்பம் சுற்று வட்டார பகுதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ள அரிசி கொம்பன் யானை சோர்வுடனும், தும்பிக்கையில் காயத்துடனும் சுற்றி வருகிறது.

    அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும். அதிலும் கடந்த முறை நடந்த ஆபரேசனின்போது 6 மயக்க ஊசி செலுத்தியும் அரிசி கொம்பன் பிடிபடவில்லை. எனவே மருந்தின் அளவை அதிகரித்து மயக்க ஊசி செலுத்தும் முனைப்பில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் யாரும் செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

    தற்போது இருக்கும் இடம் மேகமலை அடிவார பகுதியாகும். இங்கிருந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலேயே தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை உள்ளிட்ட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சமிக்ஞை மொழிகளை பேசி தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடி இன மக்கள். இவர்கள் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் யானைகளிடம் சங்கேத மொழிகளால் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள்.

    அக்குழுவைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசி கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். எனவே அரிசி கொம்பன் யானை இன்று வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
    • மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும்.

    கம்பம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது.

    அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியும் வழங்கினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கம்பம் 28-வது மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 1 மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கூறுகையில், ஏழ்மையான எங்கள் குடும்பத்தில் ஒரே ஆதரவாக எனது கணவர் மட்டுமே இருந்தார். ஒரு மகனையும், ஒரு மகளையும் திருமணம் செய்து வைத்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். இனி எங்கள் குடும்பத்துக்கு யார் ஆதரவு என்பது தெரியவில்லை. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.

    இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிசி கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல்லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'ட்ரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனையடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயிரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது விரும்பும் உணவு கிடைக்காததால் மிகவும் சோர்வோடு காணப்படுகிறது. மேலும் 3 நாட்களில் ஒருமுறை மட்டுமே சாணமிட்டுள்ளது. எனவே காலி வயிற்றுடன் நடமாடுவதால் மலை ஏற முடியாமல் சுற்றி வருகிறது என்று தெரிவித்தனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க அங்குள்ள கூத்தநாச்சி கோவிலில் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    • பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி விட்டனர்.

    அங்கிருந்து படிப்படியாக முன்னேறிய அரிசி கொம்பன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்தது. ஏகலூத்து ரோடு ஆசாரி மார் வீதிகளில் வலம் வந்த அரிசி கொம்பன் சுருளிப்பட்டி மின் நிலையம் அருகே உள்ள புளியந்தோப்பில் தஞ்சமடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நந்தகோபாலசாமி நகரை ஒட்டியுள்ள வாழைத்தோப்புக்குள் புகுந்தது.

    அங்கு அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் திடீரென அங்கிருந்து கிளம்பிய யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டி மற்றும் கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்குள் புகுந்தது.

    இன்று காலை வரை அதே இடத்தில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டுள்ளது. யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னலை வைத்து வனத்துறையினர் அதன் இருப்பிடத்தை அறிந்து வந்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் சிக்னல் கிடைக்காததால் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இவை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கும்கிகள் முன்பு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அதன் முன்பு செல்பி எடுக்க தொடங்கியதால் அதன் இருப்பிடத்தை மாற்றினர்.

    தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதியில் 3 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டாக்டர் பிரகாஷ் தலைமையில் டாக்டர்கள் செல்வம், சந்திரசேகரன், கலைவாணன் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளனர்.

    மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் யானை தற்போது யானை கஜம் பகுதியில் உள்ளது. மயக்க ஊசி செலுத்திய உடன் யானைக்கு கிறுகிறுப்பு ஏற்பட்டு சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து அதன் பிறகுதான் கீழே விழும். எனவே சமதளத்தில் யானை இருந்தால் தான் மயக்க ஊசி செலுத்த முடியும். மலைப்பாங்கான பகுதியில் மயக்க ஊசி செலுத்தும்போது திடீரென பள்ளத்தில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.

    அதற்காகத்தான் மயக்க ஊசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு டோசும் 5 முதல் 7 மில்லி அளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.

    மயக்க ஊசியின் அளவு குறித்து ஏற்கனவே இதனை பிடித்த கேரள வனத்துறையினரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளது என்றனர்.

    கம்பம், சுருளிப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரமும் அரிசி கொம்பன் யானை மீண்டும் வந்து விடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் இன்று 3-வது நாளாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் திராட்சை தோட்டங்கள், ஏலத் தோட்டங்கள், தினசரி கூலி வேலைகளுக்கு செல்லும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே யானை நடமாட்டம் உள்ள பகுதியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் தெரிவிக்கையில், 35 வயது மதிக்கத்தக்க அரிசி கொம்பன் ஆண் யானை 12 அடி உயரம் கொண்டது. இதன் பிரம்மாண்ட தோற்றம் மற்றும் சத்தம் காரணமாக அருகில் பொதுமக்கள் செல்ல இயலாது. தற்போது அதனை பிடிக்க சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடித்த உடன் பரம்பிக்குளம் பகுதியில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக யானை நகருக்குள் சுற்றி வந்ததால் 3 கிலோ எடை குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சவாலான பணி என்ற போதிலும் இதனை சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    அரிசி கொம்பன் யானை கம்பம் நகருக்குள் வந்த முதல் நாளே அதனை ட்ரோன் மூலம் படம் பிடிக்க யூடியூப்பர் முயன்றதால் அதன் திசை மாறியது. மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் யானை முகாமிட்டு இருந்தபோது சின்னமனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (23) என்பவர் ட்ரோன் மூலம் படம் பிடித்தார். இதனால் மிரண்டு போன அரிசி கொம்பன் வெவ்வேறு இடங்களுக்கு ஓடத்தொடங்கியது. இதனையடுத்து ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரிசி கொம்பன் யானை இருப்பிடம் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெவ்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது.
    • மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார்.

    அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடியது. அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அரிசி கொம்பன் யானை அவரை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்ற காட்சி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

    • சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
    • விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர்.

    உத்தமபாளையம்:

    இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 11க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியதால் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பனை வனத்துறையினர் பிடித்து குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக் கொம்பன் மாவடி, வட்ட தொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளிரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ்.சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.

    நேற்று காலை கம்பம் நகருக்குள் வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரிய வரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் ஆக்ரோசத்துடன் சென்றது. யானை தாக்கி பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார். உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைபாசில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சுருளிப்பட்டி சாலையில் சென்றது. அங்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்தில் முகாமிட்டு பின்னர் சுருளி அருவி பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கண்காணித்த போது அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது.

    அரிசி கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்திட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொரு கும்கி யானையும் வர உள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

    யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர். இருந்தபோதும் சுருளி அருவி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது.
    • பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை ஊராட்சிகளில் 8 பேரை பழிவாங்கிய அரிசி கொம்பன் யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இந்த ஆண் காட்டுயானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பெரியாறு புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விட்டனர்.

    தற்போது இந்த யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. மணலாறு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்தி அங்கிருந்த ரேசன் கடையையும் உடைத்து சூறையாடியது. மேலும் நள்ளிரவில் வரும் அரசு பஸ்சையும் மறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே நடமாடும் இந்த அரிசி கொம்பன் யானை இரை தேடுவதற்காக மட்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. அதன்மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும்போது உயிர்பலி ஏற்படுகிறது.

    ஆரம்பத்தில் அரிசி கொம்பன் யானை மீது கோபம் ஏற்பட்ட மக்களுக்கு தற்போது அனுதாப அலை வீசி வருகிறது. இதனிடையே அரிசி கொம்பனின் கதையை திரைப்படமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் அரிசி கொம்பனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

    அவர்கள் அரிசி கொம்பன் பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கி உள்ளனர். வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே சொந்தம். அங்கு குடியிருப்புகள் அதிகரிப்பால் வனவிலங்குகள் உள்ளே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் காப்போம் என்ற அடிப்படையில் பிரசாரமும் செய்து வருகின்றனர்.

    மேலும் பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர். இங்கு வரும் பொதுமக்களுக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    • அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 10 பேரை பலி வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 5 முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.

    தற்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் இந்த யானை நுழைந்திருப்பது வனத்துறையினர் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.

    இதனால் தேனி மாவட்ட வனத்துறையினர் மேகமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமலை, இரவங்கலாறு, மணலாறு, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஏராளமாேனார் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேகமலை, சிலுவை கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் இந்த யானையின் நடமாட்டம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேர பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தேனி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மேகமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மேகமலை அடிவார பகுதியான சின்னமனூர் அருகே உள்ள தென்பழனி வனத்துறை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சின்னமனூர் அருகே வந்த அரசு பஸ்சை அரிசி கொம்பன் யானை வழி மறித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சின் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பயணிகளிடம் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அதே இடத்தில் சுற்றி சுற்றி வந்து பின்னர் நகரத் தொடங்கியது. அதன் பின்னர் முகப்பு விளக்குகளை எரியவிடாமல் பஸ்சை மெதுவாக டிரைவர் நகர்த்தி எடுத்துச் சென்றார். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனவே உடனடியாக இந்த யானையை மலைப்பகுதியை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு வனத்துறையினர் மற்றும் தமிழக அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் வீட்டை பூட்டிச் சென்றாலும் அரிசி கொம்பன் உடைத்து சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமலும், அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    இதன் காரணமாக சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • தேக்கடியில் இருந்து மேகமலை வரை 120 பேர் கொண்ட புலிகள் காப்பக குழுவினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை 8க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் புகுந்து அரிசியை தின்று அட்டகாசம் செய்தது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியதால் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி போராடி யானையை பிடித்து பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர். யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். பெரியாறில் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை மறு நாள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.

    இது குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். தேக்கடியில் இருந்து மேகமலை வரை 120 பேர் கொண்ட புலிகள் காப்பக குழுவினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளி ஜோசப் என்பவர் வீட்டு ஜன்னல் வழியாக அரிசி மற்றும் கோதுமையை எடுத்து தின்றுள்ளது. மேலும் தற்போது பொம்முராஜபுரம் செல்லும் பகுதியில் யானை முகாமிட்டுள்ளது.

    எனவே இரவங்கலாறு, மணலாறு பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர். சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு வரை சுற்றுலா வாகனங்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேகமலை பகுதியில் உலாவி வரும் யானையால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் அவசர ஆலோசனை நடத்தினர். யானையை கேரள வனப்பகுதிக்கள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டு காலர்ஐடி பொருத்தி பின்னர் தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்ப ட்டது.
    • தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்காணல், சாந்தம்பாறை மற்றும் அதனைசுற்றியுள்ள கிரா மங்களில் அரிசிகொம்பன் என்ற யானை கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. இதுவரை 10 பேரை அந்த யானை மிதித்து கொன்றுள்ளதுடன் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறையால் மயக்கஊசி செலுத்தி அரிசி கொம்பன் பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்ப ட்டது.

    அதன் கழுத்தில் அலைவரிசை கொண்ட காலர்ஐடி பொருத்தப்பட்டு அதன்இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளது. மற்ற காட்டு யானைகளுடன் சேராமல் தனியாக செல்லும் இந்த யானை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் சென்று வருகிறது.

    குடியிருப்பில் இருந்த நாய்கள் குரைத்துகொண்டே இருந்ததையடுத்து தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்த போது ஆக்ரோசமாக சுற்றிய அரிசிகொம்பனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கருப்பசாமி என்ற தொழிலாளியின் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த உணவு பொருள் மற்றும் அரிசியை சேதப்படுத்திவிட்டு பின்வாசல் வழியாக வெளியே சென்றது. அதிக சத்தத்துடன் ஆக்ரோசமாக சுற்றி வருவதால் அதன் அருகில் செல்லவும் தொழி லாளர்கள் அச்சமடை ந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் நடமாட்டம் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.

    இரவு நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். அடிக்கடி தனது இருப்பி டத்தை மாற்றிக்கொண்டே மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் குடி யிருப்புகளில் அரிசி கொம்பன் நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ×