search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Komban Elephant"

    • தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது.
    • அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கேரளா சின்னக்கானல் பகுதியிலும், தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர்.

    பின்னர் அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டு விட்டனர். அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை அந்த பகுதியிலேயே சுற்றித்திரிகிறது. முத்துக்குளி வயல் பகுதியில் இயற்கை உணவு அதிகம் கிடைத்து வரும் நிலையில் அங்கேயே யானை உள்ளது. விடப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.

    யானை கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு நெல்லை, குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்களும், வனத் துறை ஊழியர்களும் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதற்கு வனத்துறையினர் யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று தெரிவித்திருந்தனர். அரிசி கொம்பன் யானை சுற்றி வரும் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் குட்டி யானை உட்பட 3 யானைகள் உள்ளது. அந்த யானையுடன் அரிசி கொம்பன் யானையை இணைக்கவும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    அரிசி கொம்பன் யானை மிகவும் ஆரோக்கியத்துடன் தனது வாழ்விடத்தில் வசதியாக உள்ளதாக மாநில வனத்துறை செயலாளர் சுப்ரியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து களக்காடு சரணாலயத்தின் துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேனியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை கடந்த ஜூன் 5-ந்தேதி களக்காடு பகுதியில் விடப்பட்டது. கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானையானது காட்டுப் பகுதியில் விடப்பட்ட பின்பு 20 நாட்களாக மூணாறு வனப்பகுதி போன்ற வாழ்விடம் களக்காட்டிலும் உள்ளதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவை எடுத்துக் கொண்டும் சுதந்திரமாக உலாவியும் வருகிறது.

    அரிசி கொம்பன் யானையை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். களக்காடு சூழலுக்கு ஏற்றவாறு யானையை பழக்கப்படுத்த வனத்துறை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிசி கொம்பன் யானையை தினந்தோறும் கண்காணித்து வரும் களப் பணியாளர்கள் யானை நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    • அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைத்து தாக்கி அரிசியை சாப்பிட்டதால் அரிக்கொம்பன் என்ற பெயர் பெற்ற யானை, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அதனை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பெரியார் வன காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன், தமிழகத்தின் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அரிசிக்கொம்பன் என்ற பெயருடன் மக்களை அச்சுறுத்தியது. பின்னர் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பனை பிடித்த வனத்துறையினர், அதனை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனச்சரகம் அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர்.

    தொடர்ந்து அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    அப்பர் கோதையாறு, குற்றியார், முத்துக்குழிவயல் என 5 கிலோ மீட்டருக்குள்ளேயே அரிசிக்கொம்பன் சுற்றி வந்தபோதும், குமரி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர்கள் அரிசிக்கொம்பனை இங்கிருந்து அகற்றி கேரள வனத்திற்கு அனுப்புமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆனால் அரிசிக்கொம்பனை கண்காணித்து வரும் 2 மாவட்ட வனத்துறையினரும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்தில் அமைதியான சூழல், உணவு, குளிர்ந்த தண்ணீர் போன்றவை கிடைப்பதால் அரிசிக்கொம்பன் அங்கிருந்து வராது. அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அவர்கள், பாலக்காடு அருகே உள்ள கணபதி கோவிலில் யாகமும் நடத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.

    • ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
    • அரிசி கொம்பன் கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூர் ஹைவேலிஸ் பகுதிகளில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிசி கொம்பன் யானை, வனத்துறையின் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் விடப்பட்டுள்ளது.

    தற்போது காட்டுப்பகுதியில் அரிசி கொம்பன் சுதந்திரமாக சுற்றி வரும் நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் காதில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல்களை வைத்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் யானை செல்லும் பாதைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரேடியோ காலர் சிக்னல் திடீரென கிடைக்காததால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. யானையின் இருப்பிடம் தற்போது எங்கு உள்ளது? என்பது தெரியாமல் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. கன்னியாகுமரி பகுதியை நோக்கி அரிசி கொம்பன் செல்வதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டது.

    ஆனால் இதனை மறுத்த வனத்துறையினர், ரேடியோ காலர் சிக்னல் மீண்டும் கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது கிடைத்த தகவலின்படி அரிசி கொம்பன், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் தான் உள்ளது. அந்த பகுதியில் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் பகுதிகளில் தான் சுற்றி வருகிறது என்றனர். அப்பர் கோதையாறு, முத்துக்குழி வயல், குற்றியார் பகுதிகளில் இருக்கும் உணவை சாப்பிட்டும், தண்ணீர் அருந்தியவாறும் யானை உள்ளதாக அதனை கண்காணித்து வரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் வனத்துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினரும், திருநெல்வேலி மாவட்ட வனத்துறையை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவும் தொடர்ந்து அரிசி கொம்பன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    களக்காடு:

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நேற்று முன்தினம் பிற்பகலில் நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த யானையை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு வழியாக மேல் கோதையாறு அணை பகுதியில் கொண்டு விட்டனர். அங்கிருந்து வன ஊழியர்கள் மேற்பார்வையில் அடர்ந்த வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் யானை விடப்பட்டது. அந்த யானையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் அதன் காதில் ரேடார் கருவியை பொருத்தியிருந்தனர். அதன்மூலம் யானையின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க மருந்து செலுத்தியதில் இருந்து மீளாத அந்த யானை முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கான வாழ்விடத்தில் இருந்து வந்தது.

    இந்நிலையில் மயக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட அரிசிக்கொம்பன் இன்று அதிகாலை கோதையாற்றில் இருந்து சற்று தொலைவில் உள்ள குட்டியாறு வனப்பகுதியில் நடமாடியது. ஆனால் அதன்பின்னர் அந்த யானை மேற்கு திசையில் அதாவது குமரி மாவட்டம் பேச்சியாறு அணை வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யானையை மீண்டும் குட்டியாறு வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். தொடர்ந்து அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.
    • அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    மதுரை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி கொம்பனை கும்கியாக மாற்ற முயற்சி செய்தது.

    ஆனால் விலங்கு நல ஆர்வலர்கள், நீதிமன்றத்திற்கு சென்றதால், அரிசிக்கொம்பனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அரிசிக்கொம்பன் யானையை வளர்ப்பு யானையாக மாற்ற கேரள அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரிசிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் விடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அப்போதுதான் யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்புகளால் யானையின் வலசை பாதை ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே அது ஊருக்குள் நுழையும் நிலை உருவானது.

    சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் அரிசிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்ப்பதோடு, மீண்டும் அந்தப் பகுதியிலேயே யானையை விட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆகவே யானையை வேறு புது இடத்திற்கு மாற்ற முயற்சிப்பதோடு, மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலய பகுதியிலேயே யானை வசிக்க அனுமதிக்க வேண்டும்.

    அரிசிக்கொம்பன் யானையின் துதிக்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, "சில விஷயங்களில் அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது. தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை தற்போது பிடித்துள்ளது.

    யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. யானைகள்-காடுகள் தொடர்பான வழக்குகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தர விடுகிறோம் என்று தெரிவித்தனர்.

    • கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது.
    • 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மாதம் 27-ந்தேதி புகுந்த அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டும் முடியாததால் ஊட்டி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதயன், சுயம்பு, அரிசி ராஜா ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் கடந்த 1 வாரமாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று அதிகாலை அரிசி கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும் அதனை லாரியில் ஏற்ற கும்கிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அரிசி கொம்பன் யானை பிடிபட்டதால் 3 கும்கிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

    உதயன் என்ற கும்கி நேற்று இரவு முதுமலை வனக்காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அரிசி ராஜா மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கிகள் தெப்பக்காடு செல்கின்றன.

    இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் அதனை அனுப்ப கும்கிகள் பெரிதும் உதவியாக இருந்தன.

    இந்த 3 யானைகளுக்கும் தினமும் காலையில் சீமைப்புல் உணவாக வழங்கப்படும். அதன் பின் கேப்பை, அரிசி கலந்த மாவு, கவளமாக வழங்கப்படும். அதன் பின் கரும்பு, வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை வழங்கப்படும்.

    மாலையில் சத்துமாவு கொண்ட கவளம் வழங்கப்பட்டது. கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது. 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் ஆபரேசன் நிறைவடைந்ததால் ஏற்கனவே ஒரு கும்கி சென்று விட்ட நிலையில் மற்ற 2 கும்கிகளும் இன்று செல்ல உள்ளன என்றனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானை சேதப்படுத்திய விளைநிலங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு சொந்தமான வாழைத்தோட்டம், சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான வாழைத் தோட்டம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அரிசி கொம்பன் சேதப்படுத்தியது. கடந்த 1 வாரமாக வனத்துறை அறிவுறுத்தலின்படி வேலைக்கு செல்லாமல் இருந்த தோட்டத்தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சேதமடைந்த பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று அல்லது நாளை சேத மதிப்பீட்டை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் பிடிக்கப்பட்ட போது மீண்டும் காட்டில் விடப்பட்டது
    • 2 மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை கடந்த ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

    தேக்கடி, இரவங்கலாறு, ஹைவேவிஸ், குமுளி, லோயர்கேம்ப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் கடந்த மே மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது.

    அப்போது சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கி வலம் வந்ததைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியார் கோவில் பகுதியை அடைந்தது.

    அதன் பிறகு சண்முகா நதி அணையைச் சுற்றியே வலம் வந்த அரிசி கொம்பன் அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் முகாமிட்டது. யானையை பிடிக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் யானை சமத ளப்பகுதியில் வந்தால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என காத்திருந்தனர்.

    இதற்காக ஊட்டி தெப்பக்காடு பகுதியில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டு கம்பம் வனச்சரக அலுவலகத்தில் தயார் நிலையில் நிறுத்தப் பட்டு இருந்தன.

    ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்

    கடந்த 2 நாட்களாக சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள சின்ன ஓவு ளாபுரம், எரசக்க நாயக்கனூர் காப்புக்காடு பகுதிகளிலேயே சுற்றி வந்தது. இதனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நேற்று இரவே வனத்துறையினர் தயார் நிலைக்கு வந்தனர்.

    இதுகுறித்து உத்தமபாளை யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சின்ன ஓவுளாபுரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் முன் கூட்டியே தக வல் தெரிவிக்கப்பட்டு ஆனைமலையான்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, சின்ன ஓவுளாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டது.

    இரவு 11.30 மணியளவில் சண்முகாநதி பெருமாள் கோவிலில் இருந்து தனியார் பட்டா நிலத்துக்கு அரிசி கொம்பன் யானை நடந்து வந்த போது அதன் மீது மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இந்த மயக்க ஊசி யானையின் உடல் பாகங்களை சில மணி நேரங்கள் செயல் இழக்கச் செய்து அதனை அசைவற்ற நிலையில் வைத்திருக்கும் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

    மயக்க ஊசி செலுத்திய பிறகு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அங்கும் இங்கும் நடந்து பின்னர் கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து யாைனயை ஏற்றுவதற்கு லாரி சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அரிசி கொம்பன் யானையை லாரியில் ஏற்றினர். இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் இருப்பதால் மின் வயர்கள் தாழ்வாக செல்லும் வகையில் உள்ளது.

    மிக உயரமான லாரி யானையை ஏற்றிச் செல்லும் போது மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே யானை நகரை விட்டு வெளியேறும் வரை மின் வினியோகம் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய அரிசி கொம்பன் ஆபரேசன் அதிகாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக முடிவு பெற்றது.

    கடந்த 1 வாரமாக சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி, கம்பம், ராயப்பன்பட்டி, ஆனை மலையான்பட்டி ஆகிய பகுதி மக்களை தூங்க விடாமல் செய்த அரிசி கொம்பன் பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். யானை ஏற்றிச் செல்லப் பட்ட லாரிக்கு முன்னும் பின்னும் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனை சாலையின் இரு புறமும் ஏராளமான மக்கள் நின்று ஆர்வமுடன் பார்த்தனர்.

    தடை உத்தரவு வாபஸ்

    இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1 வாரமாக யானை நடமாட்டத்தால் கம்பம், சுருளி அருவி, காமயகவுண்டன்பட்டி, சின்ன ஓவுளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை உத்தரவு இன்று முதல் வாபஸ் பெறப்பட்டதால் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.

    • சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
    • சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை கடந்த மாதம் அந்த மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில் விடப்பட்டது. அதன்பிறகு ஹை வேவிஸ் மலைகிராமங்களில் சுற்றித்திரிந்த அந்த யானை கடந்த மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் நுழைந்து சாலையோரம் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது.

    அதனை பிடிக்க தமிழக வனத்துறையினர் கண்காணிப்பு சோதனைச்சாவடி அமைத்து மயக்கஊசி செலுத்த முயன்று வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சண்முகாநதி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அந்த யானை உலாவி வருகிறது.

    இதனால் காமய கவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அரிசிக்கொம்பன் யானை அங்குள்ள வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி உண்டு வருகிறது. தினந்தோறும் சாரல் மழை பெய்து வருவதால் அது வசிப்பதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் அணைப்பகுதியில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் சென்று விடுகிறது.

    சுருளி அருவி பகுதிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்பவர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். மேலும் தோட்டப்பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் அதன் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 4 டாக்டர்கள் 2 குழுவாக பிரிந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். ராயப்பன்பட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சண்முகநாதன் கோவில் பகுதிக்கு அரிசி கொம்பன் யானை சென்றது. அங்கு சில நாட்களுக்கு முன்பு சமையலறை சுவற்றை சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று கோவில் கேட்டையும் சேதப்படுத்தி அங்கிருந்த அரிசியை சாப்பிட்டு சென்றது.

    இதனால் கோவில் வளாகத்தில் தங்கி இருந்த சரஸ்வதியம்மாளை வனத்துறையினர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றினர். தற்போது அவரது மகன் அங்கு பூஜை செய்து வருகிறார். சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மூணாறு சின்னக்கானல் பகுதியில் அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த குழுவில் இருந்த கேரள டாக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அரிசி கொம்பன் யானையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    சண்முகா நதி அணை பகுதியில் முகாமிட்டுள்ள யானை மேகமலை நோக்கி செல்கிறது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சுருளிப்பட்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கம்பம் பிளாண்டேசன் ரேஞ்சர் கலையரசன் வெளியாட்களை அப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மண்டல வன அலுவலர் பத்மாவதி, ரேஞ்சர் கலையரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் அனைத்து வனத்துறையினரையும் கண்காணித்து வருகின்றனர். இதனால் செய்தியாளர்களுக்கு முறையான தகவல்கள் கிடைப்பதில்லை. அரிசி கொம்பன் யானை ஒரே இடத்தில் சுற்றித் திரிவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் துதிக்கையில் அடிபட்டு யானை சோர்ந்து காணப்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    தடை உத்தரவு எப்போது நீங்கும்? இயல்பு நிலை திரும்புமா? என அவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே வனத்துறையினர் அரிசி கொம்பன் யானை குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும்.
    • கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    மன அழுத்தம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. யானைகளுக்கும் உண்டு. அரிசி கொம்பன் யானை தொடர்பான சர்ச்சைகள் இதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

    அரிசி கொம்பன் என்ற பெயரை கேட்டதும் அதன் உருவத்தை பார்த்ததும் அந்த யானை படுபயங்கரமான யானையாக இருக்குமோ என்ற எண்ணம்தான் 99 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசி கொம்பன் யானை ரொம்ப ரொம்ப சாதுவானது. அன்பாக பழகக்கூடியது என்றெல்லாம் கண்ணீர் மல்க சொல்கிறார்கள்.

    பொதுவாக யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆண் யானையான அரிசி கொம்பனுக்கு தற்போது 36 வயதுதான் ஆகிறது. இன்னும் 50 சதவீத வாழ்க்கையை அந்த யானை வாழ வேண்டி உள்ளது. ஆனால் அந்த யானையை சுற்றி ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும், பரபரப்புகளும் அந்த யானையை நிம்மதியாக வாழ வைக்குமா? என்ற ஏக்கம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.

    அரிசி கொம்பன் யானை இதுவரை 9 பேரை கொன்று விட்டதாகவும், 100-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளி விட்டதாகவும் ஒருசாரார் புகார் வாசிக்கிறார்கள். ஆனால் உணவுக்காகத்தான் அது குடியிருப்புகளை தேடி வருகிறது என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இதில் உண்மை தெரிய வேண்டுமானால் அரிசி கொம்பன் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில்தான் அதிக யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் காட்டுக்குள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அப்படி ஒரு குழுவில்தான் அரிசி கொம்பன் யானை 1987-ம் ஆண்டு பிறந்தது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் அதன் பூர்வீகம். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதி மக்களுக்கு அரிசி கொம்பன் யானை பற்றி சின்ன வயதில் இருந்தே தெரியும். முதலில் அந்த யானையை சின்ன கொம்பன் என்றுதான் மூணாறு பகுதி மக்கள் செல்லமாக அழைத்தார்கள்.

    பொதுவாகவே நமது வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமிகளை நாம் அம்மு குட்டி, செல்ல குட்டி என்றெல்லாம் கொஞ்சுவது உண்டு. அதுபோல் தான் கேரளாவில் பாசமாக வளரும் யானை குட்டிகளை கொம்பன் என்று கொஞ்சுவார்கள். கொம்பன் வகை யானைகளுக்கு மக்கள் மத்தியில் தனி செல்வாக்கு உண்டு.

    ஏனெனில் கொம்பன் யானையை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் செல்வம் சேரும் என்பது ஐதீகம். கொம்பன் யானைகள் காதை ஆட்டிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டுக்கு நல்லது என்று பேசப்படுவது உண்டு. அரிசி கொம்பன் யானையையும் அந்த ரகத்தில்தான் வைத்திருந்தனர்.

    ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே. இந்த கொம்பன் யானைக்கு ஒரு கட்டத்தில் அரிசியை உணவாக கொடுத்தனர். அரிசியை சாப்பிட்ட யானைக்கு அது தேவஅமிர்தமாக இருந்தது. இதனால் மற்ற வழக்கமான உணவுகளை அந்த கொம்பன் யானை சாப்பிட மறுத்தது. இதனால் மூணாறு பகுதி மக்கள் அந்த யானையை சின்ன கொம்பன் என்று அழைத்து வந்ததற்கு பதில் அரிசி கொம்பன் என்று அழைக்க தொடங்கினார்கள். பிறகு அதுவே அந்த யானையின் பெயராக நிலைத்துப் போனது.

    2010-ம் ஆண்டுகளில் அதாவது அரிசி கொம்பனுக்கு 23 வயது இருக்கும்போது அது அரிசி மட்டுமே சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் வனப்பகுதியில் தங்காமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலாவ ஆரம்பித்தது. அரிசி எங்கிருக்கும் என்று தேடிப்பிடித்து சாப்பிட்டு வந்தது.

    இதனால் மூணாறு பகுதி மக்களோடு மக்களாக அந்த யானை இரண்டற கலந்துபோனது. அந்த யானைக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பூப்பாறை என்ற இடத்தில் அரிசி கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் டீக்கடை தொடங்கி நடத்தினார்கள். அந்த அளவுக்கு அரிசி கொம்பன் செல்லப்பிள்ளையாக இருந்தது.

    முதலில் அரிசி கொம்பனின் சிறு சிறு விளையாட்டுகளை வனப்பகுதி மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அரிசிக்காக அந்த யானை சற்று உக்கிரத்தை காட்டியது. அதில்தான் பிரச்சினை தொடங்கியது. சாதாரண குடிசை போட்டு வாழும் வனப்பகுதி மக்களுக்கு அது தொல்லை தருவதாக இருந்தது.

    ஆனால் ஒருபோதும் அரிசி கொம்பன் அரிசிக்காக மக்களை பந்தாடியது கிடையாது. அரிசிக்கும், நல்ல தண்ணீருக்கும் மட்டுமே அது ஆசைப்பட்டது. அதில் குறுக்கீடு வந்தபோதுதான் அந்த யானை தாறுமாறாக நடந்து கொண்டது. அதை எதிர்கொண்ட சிலர் பலியாக நேரிட்டது. இப்படியே 10 ஆண்டுகள் ஓடிப்போனது.

    கடந்த 3 ஆண்டுகளில் அரிசி கொம்பனால் அதிக பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. வனப்பகுதி மக்கள் சொல்லாத நிலையில் வனத்தையொட்டி உள்ள தனியார் நிலப்பகுதி மக்கள்தான் இந்த புகாரை அதிகம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கேரள வனத்துறை அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தது.

    அதற்கு கேரள யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரிசி கொம்பனை தொந்தரவு செய்யக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதையடுத்து அரிசி கொம்பனை பிடித்து பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடும்படி கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி 5 மயக்க ஊசிகள் போட்டு அரிசி கொம்பனை பிடித்தனர்.

    மூணாறு வனப்பகுதியில் இருந்து அதை லாரியில் ஏற்றி தேக்கடி பகுதிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் அரிசி கொம்பனை பிரிகிறோமே என்று மூணாறு பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதம் இறுதியில் தேக்கடியில் இருந்து அந்த யானை வேறு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது.

    கடந்த மாதம் தமிழக பகுதியான மேகமலைக்குள் அது ஊடுருவியது. அந்த வனப்பகுதியில் சுமார் 20, 25 நாட்கள் உலாவி கொண்டே இருந்தது. யாரையும் அது துன்புறுத்தவில்லை. ஒரே ஒரு தடவை மட்டும் ரேஷன் கடையை உடைத்து அரிசி இருக்கிறதா? என்று தேடியது. அரிசி கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் தேக்கடிக்கே சென்று விட்டது.

    என்றாலும் அரிசி மீது உள்ள ஆசையால் கடந்த 27-ந்தேதி மேகமலையில் இருந்து கம்பம் பகுதிக்குள் வந்து விட்டது. இதனால் கம்பம் நகரமே அல்லோகலப்பட்டது. ஆனால் அப்போதும் கூட அது மக்களை தாக்கவில்லை. அரிசியை தேடித்தான் அலைந்தது. நல்ல தண்ணீர் கிடைக்குமா? என்று தவித்தது.

    அந்த யானையை சற்று அருகில் இருந்து பார்த்த கம்பம் பகுதி மக்கள் பரிதாபப்படுகிறார்கள். அரிசி கொம்பனுக்கு உடல் முழுக்க ரத்த காயம் இருக்கிறது. அந்த யானையால் நடக்க கூட முடியவில்லை என்று கவலையோடு சொல்கிறார்கள். அரிசி கொம்பன் யானையை உரிய வகையில் பக்குவப்படுத்தினால் அது நல்ல பாசமாக இருக்கும் என்பதுதான் வன விலங்கு ஆர்வலர்களின் கருத்து ஆகும்.

    பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும். கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.

    • அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அரிசி கொம்பனை கண்காணித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி வந்த அரிசி கொம்பன் காட்டு யானை கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது.

    அதன் பின்பு அங்கேயே சுற்றித்திரிந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அதிரடியாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    அங்கிருந்து சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் சண்முகா நதி அணைப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடந்த 5 நாட்களாக அதே பகுதியில் உள்ள அரிசி கொம்பன் யானைக்கு பார்வை குறைபாடு மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.

    அதற்கு தேவையான உணவை வனத்துறையினர் வைத்து விட்டு வந்து விடுகின்றனர். குறிப்பாக அரிசி, பலாப்பழங்கள் ஆகியவற்றை வைப்பதால் அதனை உண்டு வருகிறது. மேலும் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அதற்கு இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    சாந்தமாக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் சத்தம் போட்டவாறே நகர்ந்து வருகிறது. இதனால் அதன் செய்கையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி தலைமையில் நூற்றுக்கும் அதிகமான வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து முகாமிட்டுள்ளனர்.

    அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்ட 3 கும்கிகளும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட தெப்பாக்காடு மற்றும் குரங்கணி பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் 22 பேரும் கடந்த 3 நாட்களாக ஓவுலாபுரம் வனப்பகுதியில் தங்கியுள்ளனர்.

    அங்குள்ள பெருமாள் கோவிலை அரிசி கொம்பன் சுற்றி வருகிறது. கம்பம், சின்னமனூர், சரகங்களைச் சேர்ந்த வனத்துறையினர் மட்டும் அதனை கண்காணித்து வருகின்றனர்.

    ஏற்கனவே அரிசி கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்திய கேரள டாக்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. பொதுவாக மரங்கள் மற்றும் பாறைகளின் மேல் நின்று மயக்க ஊசி செலுத்த வேண்டும். ஆனால் அரிசி கொம்பனை அவ்வாறு செய்ய முடியாது. ஏதாவது வாகனங்களின் மீது அமர்ந்து 10 அல்லது 15 அடி தூரத்தில் இருந்து மயக்க ஊசியை செலுத்த வேண்டும். அந்த சமயத்தில் அது எதிர்தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு.

    அப்போது வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்தினால் அது மிரண்டு ஓடும். ஆனால் அரிசி கொம்பன் பட்டாசு கொளுத்திய திசையை நோக்கி ஓடி வரும் என்பதால் அது போன்ற செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அதிக நாட்கள் சுற்றி வந்த அரிசி கொம்பன் தற்போது உடல் நலம் குன்றி காணப்படுவதாக அறிந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் பார்ப்பதற்கு மற்ற யானைகளைக் காட்டிலும் பிரம்மிப்பான தோற்றத்தில் இருக்கும். அதற்கு தேவையான இரை கிடைத்து விட்டால் யாரையும் தொந்தரவு செய்யாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அதனை நோக்கி நகர்ந்து வருகிறது.

    பெரும்பாலும் அரிசி கொம்பன் கூரை வேயப்பட்ட வீடுகளையே குறி வைத்து சேதப்படுத்தும். ஏனெனில் அங்குதான் அரிசி இருக்கும் என்பதை அது நன்றாக உணர்ந்துள்ளது. கடந்த மாதம் ஹைவேவிஸ் தொழிலாளர்கள் குடியிருப்பில் 10 நாட்கள் சுற்றி வந்த போதும் யாரையும் எதுவும் செய்யவில்லை.

    ரேசன் கடை ஜன்னலை மட்டும் உணவுக்காக சேதப்படுத்தியது. தற்போது அதன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் உரிய சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும் என்றனர். அரிசி கொம்பன் யானைக்கு மூணாறு பகுதியில் ரசிகர் மன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்குள்ள ஜீப் டிரைவர்கள் சார்பில் அரிசி கொம்பன் தேனீர் கடை தொடங்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
    • மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து 11 பேரை பழி வாங்கிய அரிசி கொம்பன் கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    அதன் பிறகு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் கடந்த 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    சாலையில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

    இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    சண்முகநாதன் கோவிலில் புகுந்த அரிசி கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப்படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. கடந்த 5 நாட்களாக கம்பம் சுற்று வட்டார பகுதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ள அரிசி கொம்பன் யானை சோர்வுடனும், தும்பிக்கையில் காயத்துடனும் சுற்றி வருகிறது.

    அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும். அதிலும் கடந்த முறை நடந்த ஆபரேசனின்போது 6 மயக்க ஊசி செலுத்தியும் அரிசி கொம்பன் பிடிபடவில்லை. எனவே மருந்தின் அளவை அதிகரித்து மயக்க ஊசி செலுத்தும் முனைப்பில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் யாரும் செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 5 நாட்களாக வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

    தற்போது இருக்கும் இடம் மேகமலை அடிவார பகுதியாகும். இங்கிருந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலேயே தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை உள்ளிட்ட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சமிக்ஞை மொழிகளை பேசி தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடி இன மக்கள். இவர்கள் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் யானைகளிடம் சங்கேத மொழிகளால் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள்.

    அக்குழுவைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசி கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். எனவே அரிசி கொம்பன் யானை இன்று வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
    • மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும்.

    கம்பம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது.

    அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியும் வழங்கினர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கம்பம் 28-வது மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 1 மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கூறுகையில், ஏழ்மையான எங்கள் குடும்பத்தில் ஒரே ஆதரவாக எனது கணவர் மட்டுமே இருந்தார். ஒரு மகனையும், ஒரு மகளையும் திருமணம் செய்து வைத்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். இனி எங்கள் குடும்பத்துக்கு யார் ஆதரவு என்பது தெரியவில்லை. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.

    இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிசி கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல்லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'ட்ரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனையடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயிரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது விரும்பும் உணவு கிடைக்காததால் மிகவும் சோர்வோடு காணப்படுகிறது. மேலும் 3 நாட்களில் ஒருமுறை மட்டுமே சாணமிட்டுள்ளது. எனவே காலி வயிற்றுடன் நடமாடுவதால் மலை ஏற முடியாமல் சுற்றி வருகிறது என்று தெரிவித்தனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க அங்குள்ள கூத்தநாச்சி கோவிலில் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    ×