search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Chadurthi"

    • பார்வதிதேவி, தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து விநாயகரை தோற்றுவித்தார்.
    • அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

    பார்வதிதேவி தான் நீராட செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்.

    அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன்.

    அதை கண்ட தேவி வெகுண்டாள்.

    நிலையை உணர்ந்த சிவன் யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.

    நீயே யாவருக்கும் தலைவன் என்றார்.

    ஸர்வ விக்னஹரம் தேவம்

    ஸர்வ விக்ன விவர்ஜிதம்

    ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்

    வந்தே அஹம் கணநாயகம்.

    என்று போற்றுகிறது.

    அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

    • மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்க வேண்டும்.
    • கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம்.

    விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வணங்கியபின்,

    நம் வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும்.

    அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும்.

    பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால்,

    தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும்.

    அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பையில் காசு வைக்கவேண்டும்.

    பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும்.

    பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக

    பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும்.

    பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.

    இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும்.

    நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார் முன் வைக்க வேண்டும்.

    கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும்.

    பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம்.

    வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர்,

    கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம்.

    சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.

    எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.

    முதலில்,

    "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்

    யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே'

    என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.

    அதன்பின்,

    "ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத

    சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா'

    என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம்.

    குழந்தைகளையும் சொல்ல செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும்.

    அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்க வேண்டும்.

    அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.

    • விநாயகர் விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும்.
    • முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும்.

    நாம் வாழ்க்கையில் சிறப்புடன் விளங்கவும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்,

    சில பல விரதங்களை மேற்கொள்கிறோம்.

    அவற்றுள் ஒன்று விநாயகர் விரதம்.

    விநாயகர் விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும்.

    தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்பு பூஜை செய்ய வேண்டும்.

    பூஜைக்கு உரிய பொருட்கள்-நல்லெண்ணெய், பசும்பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம், பூ முதலியவை.

    முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும்.

    இதை பூஜை ஆரம்பிக்கும் அன்று செய்யக்கூடாது.

    இந்த ஒரே பிள்ளையாரை தான் நாற்பத்து ஐந்து தினங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

    எனவே பத்திரமாகக் கையாள வேண்டும்.

    குளித்து முடித்து சுத்தமான உடை உடுத்தி விளக்கேற்றி வைத்து, பிள்ளையாரை ஒரு சிறு மேடையில் வைக்க வேண்டும்.

    பிறகு அபிஷேகத்தை தொடங்கலாம்.

    முதலில் நல்லெண்ணெய் அபிஷேகம் முறைப்படி செய்தல் வேண்டும்.

    பிறகு பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழச்சாறு அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம்

    எல்லாம் செய்து முடித்து பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் முதலியவற்றால் பொட்டு இட்டு பூ சூட்டவும்.

    தேங்காயை உடைத்து வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்யவும்.

    எளிமையான முறையில் அமைய வேண்டும் என்று நினைத்தால் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை

    நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தலாம்.

    பிறகு தீபாராதனை செய்யவும்.

    விநாயகர் கவசம், விநாயகர் துதிப்பாடல்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்தல் வேண்டும்.

    பாராயணத்தை முடித்த பின் மறுபடியும் கற்பூர ஆரத்தி செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட,

    உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார்.

    இது மட்டுமல்ல, விநாயகருக்குள் சகல சக்திகளும் அடக்கம்.

    ஆதலால் அவர் சகல சவுபாக்கியங்களையும் தருவதுடன் முக்தியும் அருளுவார்.

    • பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்:

    வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:

    செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:

    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

    இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

    அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

    மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

    மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்:

    பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்:

    திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    • நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
    • காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம் முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்

    நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
    • அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகர் என்றால் "மேலான தலைவர்" என அர்த்தப்படும்.

    "விக்னேஸ்வரர்" என்றால் "இடையூறுகளை நீக்குபவர்" என்றும், "ஐங்கரன்" என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    "கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.

    இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார்.

    அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

    எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர்.

    காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்ககளுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும்.

    அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    ×