என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "srilanka economic crisis"
- பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
கொழும்பு:
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார்.
இதையடுத்து அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களது கொள்கையில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக இன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
இது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
- இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.
கொழும்பு :
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.
இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.
அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.
இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.
இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது.
- இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது
கொழும்பு :
அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. இந்தியா கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) நிதியை வாழ்வாதார நிதி போல அந்த நாட்டுக்கு வழங்கியது.
கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அன்னியச்செலாவணி கையிருப்புக்காக இந்த உதவியை அறிவித்தது.
பின்னர் எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,100 கோடி) நிதி உதவியை அறிவித்தது. இந்தக் கடன் பின்னர் 700 மில்லியன் டாலராக (சுமார் ரூ.5,740 கோடி) ஆக அதிகரிக்கப்பட்டது.
இப்படி இலங்கைக்கு இந்தியா, 'முதலில் அண்டை நாடு' என்ற கொள்கையின் பெயரால் தாராள உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பஸ்களை வழங்கியது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், " இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பஸ்களை வழங்கினார். இந்த வகையில் 500 பஸ்களை இந்தியா வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போலீசுக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
- அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு
ஆசிய நாடுகளிடையே இந்திய ரூபாயை பிரபலப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
டாலர் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதில் இருந்து மீள இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும், இலங்கை மக்கள் 10 ஆயிரம் டாலர் (ரூ.8 லட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம். இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
இதற்காக வங்கிகளில் 'இந்திய ரூபாய் நாஸ்ட்ரோ கணக்குகள்' தொடங்க இந்திய வங்கியுடன் இலங்கை வங்கிகள் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் ஆகும்.
- கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்தது.
- ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அவதிக்குள்ளான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். அதேபோல் ராஜபக்சே குடும்பத்தினர் வகித்த அரசு பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதன்பின் அதிபராக ரனில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இலங்கையின் பிரபல இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.ஜி.பி.) இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. பொருளாதார நெருக்கடியை தீர்க்காததால் அரசை கண்டித்து தலைநகர் கொழும்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது.
இப்போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்தது.
இதையடுத்து கொழும்பு நகரை நோக்கி ஏராளமானோர் நள்ளிரவு முதலே புறப்பட்டனர். இன்று காலை கொழும்பு அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
போராட்டம் காரணமாக கொழும்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்பு நகரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இலங்கை அதிபராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கைகளை எடுத்தார். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர்மட்ட பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்தார்.
சில நாட்களாக இலங்கையில் போராட்டம் ஓய்ந்து இருந்த நிலையில் மீண்டும் இன்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சி அழைப்பு விடுத்து இருப்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன.
- மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.
- இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கொழும்பு :
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தனிநபர் மற்றும் கார்பரேட்டுக்கான வருமான வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில் மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலே வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஆனால் இந்த வரி உயர்வு நடவடிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியாயப்படுத்தி உள்ளார். நாட்டின் உயர்ந்த நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கையின் முதன்மை பட்ஜெட்டில் உபரி வருவாய் தேவை என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இலங்கையின் வருவாயையும் 8.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீத ஜி.டி.பி.யாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான வரி வருவாய் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்பட பெரும்பாலான குடிமக்கள் மறைமுக வரி செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.
இலங்கையின் நேரடி வரி வருவாயை 20 சதவீதம் அதிகரிக்குமாறு சர்வதேச நிதியம் கூறியுள்ளது. இல்லையென்றால் சாதாரண மக்களும் வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்து உள்ளது.
எனவே ரூ.1,00,000-க்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு வருமான வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது குடிமக்கள் மத்தியில் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது.
ஆனால் இந்த வரி அமைப்பு இல்லாமல், 2026-ம் ஆண்டுக்குள் 14.5 முதல் 15 சதவீதம் ஜி.டி.பி. என்ற விரும்பிய இலக்கை அடைய முடியாது.
இந்த வரி முறையை அரசு திரும்ப பெற்றால், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்காது. சர்வதேச நிதியத்தின் ஒப்புதல் இல்லாமல், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நிதி ரீதியாக உதவி வரும் நாடுகளிடம் இருந்தும் உதவி கிடைக்காது. எனவே இந்த வரி உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலோ அல்லது மேலும் மோசமடைந்தாலோ நாட்டின் வணிகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நாட்டின் வர்த்தகத்துறையினரின் வருவாய், இலாபம் மற்றும் பணப்புழக்கத்தை வெகுவாக பாதித்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாக பிரபல புத்தமத துறவி வரககோடா குணவர்தனே தேரா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டுக்கான தங்கள் கடமையையும் அவர்கள் புறக்கணித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேசிய சொத்துகளை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் வரும் அனைத்து அரசுகளும் அதற்கு மாறாக சொந்த நலன்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.
- இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது.
- 2022-ம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி போட்டி டிசம்பர் மாதம் நடக்கிறது.
கொழும்பு :
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாட உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை கரம் கொடுத்து தாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்கி இருக்கிறது.
இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா பாராட்டு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கட்சி தலைவர் அனுரா திசநாயகே, 6 மாதங்களில் இந்தியா வழங்கிய 3.8 பில்லியன் டாலர் உதவியையும், 4 ஆண்டுகளில் சர்வதேச நிதியம் வழங்கப்போகும் 2.9 பில்லியன் டாலர் உதவியையும் ஒப்பிட்டு பேசினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இலங்கை மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நேரத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் உதவி அளித்தது. இல்லையென்றால் இலங்கை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்' என்று தெரிவித்தார்.
நாட்டின் நிலைமை தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாக கூறிய திசநாயகே, அரசுக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடைபெறக்கூடும் எனவும் எச்சரித்தார்.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி போட்டி இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிசம்பர் 8 முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டியை நடத்துவதற்கு இலங்கையுடன் சுமார் 15 நாடுகள் போட்டி போட்டன. கடைசியில் அந்த வாய்ப்பை இலங்கை தட்டிப்பறித்து உள்ளது.
இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்படும் என நாட்டின் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கொரோனா மற்றும் பொருளாதார சிக்கல்களால் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து துவண்டு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இலங்கையில் சட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள பாகியான் சட்டக்குழுமம் என்ற சீன நிறுவனத்தை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்துள்ளது.
இதன் மூலம் அந்த குழுமம் இலங்கையில் எத்தகைய சட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாததுடன், சட்ட அதிகாரிகளை சந்திக்கவும் முடியாது என இலங்கை அட்டார்னி அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
- 2019-ம் ஆண்டில் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தனர்.
கொழும்பு :
இலங்கையை புரட்டிப்போட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து இருக்கிறது. வேலை இழப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களிடம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்தவகையில் நாட்டில் சுமார் 1 கோடி பேர், அதாவது 96 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் வெறும் சுமார் 30 லட்சம் பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்த நிலையில், தற்போது அது சுமார் 1 கோடியை எட்டியிருப்பது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதைப்போல நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர், அதாவது 2.1 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் இந்த அவல நிலை ஏற்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தா அதுகோரலா கவலை தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே நாட்டில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கையை சேர்ந்த டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருவது தெரியவந்து இருக்கிறது.
அந்தவகையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 500 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள். இன்னும் 800 பேர் வரை இடம்பெயர காத்திருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்து இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நிலை தொடரும் என சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்கே எச்சரித்து இருக்கிறார்.
60 வயதில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு அளிக்கும் அரசின் முடிவு நிலைமையை மோசமாக்கும் என்று கூறியுள்ள அவர், இந்த நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் பொது சுகாதார அமைப்பு சுமார் 300 நிபுணர்கள் உள்பட சுமார் 800 மருத்துவர்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
சில அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
- டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
- இலங்கையில் இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம்.
கொழும்பு :
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை.
இதற்கிடையே, 99 ஆயிரம் டன் கச்சா எண்ணையை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல், இலங்கையை நோக்கி வந்தது. கடந்த 20-ந் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வந்தது. கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்த கச்சா எண்ணெயை பெற வேண்டுமானால், 70 லட்சம் டாலர் (ரூ.57 கோடி) செலுத்த வேண்டும். ஆனால் அவ்வளவு டாலர் இல்லாததால், இலங்கையால் வாங்க முடியவில்லை. அதனால் 3 வாரங்களாக அக்கப்பல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.
அந்த கப்பலுக்கு தாமத கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் டாலர் அளிககப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான 'ரிலீப்வெப்' தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விட்டதால், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியவில்லை.
3 ஆயிரத்து 500 படுக்கைகள் கொண்ட இலங்கை தேசிய ஆஸ்பத்திரியில், 60 அத்தியாவசிய மருந்துகள் மட்டுமே உள்ளன. மயக்க மருந்து வினியோகம் குறைவாக உள்ளது. அதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட முக்கியமான பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கும் மருந்துகள் கிடைக்கவில்லை. பேண்டேஜுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. அவர்களை நகர ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புவதால், அங்கு கூட்ட நெரிசல் நிலவுகிறது.
டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மருத்துவர்கள், நல்ல வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது. மனித பேரழிவை நோக்கி செல்லும் இலங்கையில், இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கை சுற்றுலா தொழிலை வளர்ச்சி அடைய செய்ய உதவுவதாக இந்திய பயண முகவர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது. அதன் தலைவர் ஜோதி மாயாள் கூறியதாவது:-
இலங்கை, பார்க்க வேண்டிய நாடு. சில மாதங்களாக எண்ணற்ற சவால்களை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது அவசியம் என்று கருதுகிறோம்.
செலவழிக்கும் பணத்துக்கு மதிப்பு உடையது. இந்தியாவின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடு. எனவே, இலங்கையின் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி செல்ல உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
- பழங்காலத்தில் இருந்தே சீனா நமக்கு ஆதரவாக இருக்கிறது.
கொழும்பு :
இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடனையும் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க சம்மதம் தெரிவித்து சர்வதேச நிதியம் பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், இந்த கடனை இறுதி செய்வதற்கு முன்பு, ஏற்கனவே கடன் வாங்கிய நாடுகளுடன் கடனை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்றும், அந்த நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்தது.
இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இலங்கை கடன் பெற்றுள்ளது. இதில் இந்த ஆண்டில் அதிக அளவாக இந்தியா 4 பில்லியன் டாலர் அளவுக்கு இலங்கைக்கு உதவி உள்ளது.
ஒட்டுமொத்த அளவில் சீனா (52 சதவீதம்), ஜப்பான் (19 சதவீதம்) நாடுகளுக்கு அடுத்ததாக (12 சதவீதம்) 3-வது இடத்தில் உள்ளது. இந்த கடனை மறுசீரமைப்பு செய்வது குறித்த பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வர திட்டமிட்டு உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமது நிலைமையை விவரிப்பதற்கு டெல்லி வர விரும்புவதாக ஜப்பானில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது நான் தெரிவித்தேன்.
பிரதமர் மோடி எப்போதும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நமது நெருக்கடியில் இந்தியாவின் உதவியை நான் எப்போதும் பாராட்டுகிறேன். நமது மறுகட்டமைப்பு முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி விட்டது. 16-ந் தேதி தொடங்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
பழங்காலத்தில் இருந்தே சீனா நமக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சிக்கலான நேரத்திலும் ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.
சமீபத்தில், ஜப்பான் சென்று திரும்பினேன். ஜப்பானும் இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் குறித்து நேற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த விவாதம் நேற்று நடக்கவில்லை. ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவில் ஒருதரப்பினர், அந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனே நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது, '22-வது அரசியல் சட்ட திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அறிய இன்னும் ஆலோசனை நடத்த வேண்டி இருக்கிறது. அப்போதுதான், இது அர்த்தமுள்ள நடவடிக்கையாக அமையும். எனவே, இப்போது விவாதம் நடக்காது' என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவும் இதே கருத்தை கூறினார்.
- அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது.
- ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொழும்பு :
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கை சூழலை எவ்வாறு பாதித்து இருக்கிறது? என ஐ.நா. அங்கு ஆய்வு நடத்தியது.
குறிப்பாக ஐ.நா.வின் உலக உணவு திட்டமும், இலங்கையின் தேசிய திட்டமிடல் துறையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத்துக்கு அதிகமான குடும்பங்கள், மலிவான உணவுகள், விருப்பமில்லாத உணவுகள் அல்லது குறைவான உணவுகளையே தினந்தோறும் உண்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது. சத்தான உணவுகளை குறைவாகவே மக்கள் உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
இலங்கையில் கடந்த 2 பருவங்களில் விளைச்சல் குறைந்ததால் விலைவாசி அதிகரித்து இருப்பதும், இறக்குமதி அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்து இருப்பதும் இதற்கு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை கடும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் நிலையில், வருகிற நாட்களில் நாட்டின் 50 சதவீத தேவையை பூர்த்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
350 கோடி டன் கியாஸ் நிரப்பிய கப்பல் ஒன்று வந்து சேர்ந்து உள்ளது. ஆஸ்பத்திரிகள், மயானங்கள் மற்றும் ஓட்டல்கள் போன்ற மொத்தமாக வாங்குவோருக்கு மட்டுமே இதை வினியோகிப்போம். பின்னர் நான்கு மாதங்களுக்கு தேவையான கியாஸ் தொகுப்பை பெறுவோம். அவற்றை பாதுகாக்க 14 நாட்கள் ஆகும். அதுபோல இன்னும் சில தொகுப்புகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.
தற்போது 7 நாட்களுக்கு தேவையான எரிபொருள் நம்மிடம் இருப்பு உள்ளது. எனினும், வரும் வாரங்களில் 4 ஆயிரம் கோடி டன் எரிபொருளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவுடன் கையெழுத்திட உள்ள ஒப்பந்தத்துக்கு பின்னர் எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாட்டின் தேவையில் 50 சதவீதத்தை எப்படியும் வழங்க முடியும். அன்னிய செலாவணி நெருக்கடி மட்டுமின்றி இலங்கை ரூபாயின் பற்றாக்குறையும் உள்ளது.
நான் ஏற்கனவே சர்வதேச நிதிய நிர்வாக இயக்குனரிடம் பேசியுள்ளேன். அவர் உதவியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் இலங்கைக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு நமது நிலைமையை உலகம் முழுவதும் கவனித்து வருவதுடன், உதவுவதற்கும் தயாராகி வருகிறது என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
பொருளாதார நெருக்கடியால் தத்தளித்து வரும் இலங்கையில் விவசாயமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்காக வேதி உரங்களின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு அரசு தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் நெல், தேயிலை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் 50 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியும், விளைச்சல் இழப்பும் நீடித்தால் ஆகஸ்டு மாதத்தில் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் என வேளாண் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விளைச்சலை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக மே-ஆகஸ்டு கால கட்டத்தில் நடைபெறும் யாலா பருவ சாகுபடிக்கு பெரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக இந்தியாவிடம் இருந்து உரம் கேட்டு இருக்கிறது. இந்தியா வழங்கி வரும் கடன் எல்லைக்கு உட்பட்டு இந்த உர கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இலங்கையின் இந்த கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்த்து உள்ளது. இலங்கை விவசாயிகளின் பயிரை பாதுகாத்து, நாடு உணவு பற்றாக்குறையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், நேற்று உறுதி செய்துள்ளார்.
நீர்ப்பாசன அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய அவர், இலங்கையின் அடுத்த சாகுபடி பருவத்துக்கு இந்தியா உரம் வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்தியா வழங்கும் இந்த உரம் கொழும்பை அடைந்தவுடன், 20 நாட்களுக்குள் நாடு முழுவதும் வினியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உரம் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியா வழங்கப்படும் என இந்தியா கடந்த மாதம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் உரம் ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதும், இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உரம் வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக இலங்கை தூதரகம் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்