search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri lanka economic crisis"

    • அண்டை நாட்டில் ஸ்திரதன்மை இல்லாமல் இருப்பது ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயம்.
    • இலங்கையுடன் மீனவர் பிரச்சினை உள்பட நீண்டகால பிரச்சினைகள் உள்ளன.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏராளமான கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தைக் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து டெல்லியில் இன்று இலங்கை நிலைமை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்திய மந்திரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.

    நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம்.  மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.  இதையடுத்து மாநில வாரியாக, வருவாய் ஒப்பீடு, வளர்ச்சி விகிதம், கடன்கள், சொத்துக்களை அடமானம் வைத்தல் போன்றவை குறித்த மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3 மாதங்களாக இதே நிலை நீடிப்பதால் இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 5-வது மணல் திட்டில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலங்கை தமிழர்கள் தவித்து நின்றிருந்தனர். அவர்களை பார்த்த தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர்கள் உடனே மண்டபம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஹோவர்கிராப்ட் மூலம் கடலோர காவல்படை போலீசார் 7 இலங்கை தமிழர்களையும் மீட்டு மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேரி அகஸ்டா (44), இவரது மகன்கள் நிசர்கான் ஆகாஷ் (16), கெவின் (12) மற்றும் திரிகோணமலையைச் சேர்ந்த மகேசன் (39), இவரது மனைவி தேவி (38), மகன்கள் தினேஷ் (10), ஹமூசன் (6) என தெரியவந்தது. இவர்கள் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    • இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
    • சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இதனால் பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கொழும்புவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை விமானங்கள் சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்கின்றன.

    சென்னையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்ப வரும் இலங்கை விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.

    கடந்த 15 நாட்களில் பாரத் பெட்ரோலியத்தில் மட்டும் சென்னை,கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்பி சென்றுள்ளன.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல் கின்றன. அதேபோல் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலும் எரிபொருள் நிரப்பி கொண்டு செல்கிறது.

    நம்மை பொறுத்தவரை சென்னை விமான நிலையத்திற்கு இது பொருளாதார லாபம்தான். ஏனென்றால் மற்ற நாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும்போது அதற்கான வாடகை தொகையை தர வேண்டும். அதுமட்டுமின்றி விமான எரிபொருள் நிரப்பி செல்வதும் வருமானம்தான் என்றார்.

    • பொருளாதார வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் நடுவீதியில் வந்து போராடி வருகிறார்கள்.
    • இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    ராமேசுவரம்:

    இலங்கையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் நடுவீதியில் வந்து போராடி வருகிறார்கள். இதனால் உள்நாட்டு குழப்பம் உச்சத்தில் உள்ளது.

    இந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் ரூ. 4 லட்சம் கொடுத்து ஒரு படகில் ராமேசுவரம் நோக்கி வந்தனர்.

    அந்த படகு தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 1-ம் மணல் தீடையில் இவர்கள் 6 பேரையும் இறக்கிவிட்டு சென்று விட்டது. நள்ளிரவில் மணல் தீடையில் தவித்த அவர்களை அந்த வழியாக சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பார்த்தனர்.

    அவர்களை மீட்கும்படி இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான விரைவு படகு மூலம் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டு கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    விசாரணைக்கு பிறகு மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பாலசுகந்தன் மற்றும் லிங்கேஸ்வரனை போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    • அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
    • அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் உள்ளே இருந்தபடி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை, பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பம் சரியாக கையாளவில்லை எனக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். ஆனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன.

    இதன் உச்சகட்டமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி நடந்த இந்த போராட்டத்தின்போது போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை தகர்த்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் நேற்று இரவே ராணுவ தலைமையகத்திற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் லக்கேஜ்கள், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பலில் ஏற்றப்படுவதாக கூறி ஒரு வீடியோ வெளியானது.

    அதிபர் மாளிகையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்களை வீடியோ எடுத்து போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். இதேபோல் அங்குள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளிப்பது மற்றும் சமையல் அறைக்கு சென்று சாப்பிடுவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் உள்ளே இருந்தபடி அதிபர் பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இன்று அதிபர் மாளிகையில் தங்கப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவரும், போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

    கொழும்பு நோக்கி பொதுமக்கள் தொடர்ந்து படையெடுத்தவண்ணம் உள்ளனர். இதனால் தலைநகரை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே அதிபர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கோத்தபய ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அதிபரின் வீட்டின் அருகே நாளை மற்றும் நாளை மறுதினம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    • போராட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியதுடன், அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய கொழும்புவில் உள்ள அதிபரின் வீட்டின் அருகே நாளை மற்றும் நாளை மறுதினம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இந்நிலையில், கொழும்பு துறைமுகம் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் , அதிபர் வீடு உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், போராட்டக்காரர்களை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிவிட்டது. அத்துடன், போராட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது.

    தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள்வதில் அதிபர் ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவருமே திறமையாக செயல்படாததால் இருவரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளது.
    • ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதந்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    இலங்கை:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் விலையேற்றமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது.

    இலங்கையில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்வதால் வாழ்க்கையை நடத்த முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். இதனால் இலங்கை தமிழர்கள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள்.

    இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் இருந்து இளைஞர்கள் அதிகளவில் வெறியேறி வருவதாக தெரிய வந்துள்ளது. இலங்கையை விட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இளைஞர்கள், இளம்பெண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வேலைக்காக ஒரு சிலர் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலையில் தற்போது தினமும் நூற்றுக்கணக்கானோர் வெளியேறுகிறார்கள். பரபரப்பாக இயங்கும் ஒரு இடமாக கட்டுநாயக்க விமான நிலையம் மாறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் பாராளுன்றத்தில் தயாசிறி ஜெயசேகர பேசும்போது:-

    பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளது. ஜூன் மாத பணவீக்கம் மட்டும் 54 சதவீதமாக உள்ளது. பண வீக்கத்தில் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை தற்போது 2-வது இடத்தில் உள்ளது.

    ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதந்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    தற்போது தனிநபர்கள் 20, 50 மற்றும் 100 ரூபாய் நாணயத்தாள்கள் மூலம் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

    எதிர்காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட மதிப்பும் இல்லாமல் போகலாம்.

    பண வீக்கம் 54 சதவீதமாக இருக்கும்போது வங்கி வட்டி விகிதம் 20 முதல் 54 சதவீதம் வரை இருக்கும்போது ஒரு நாடு எப்படி செயல்பட முடியும் என்றார்.

    • பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள்.
    • இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, கடன் உதவி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் உணவு மற்றும் எரிபொருட்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய், பெட்ரோல், டீசல், உரம் போன்றவற்றை இறக்குமதி செய்யமுடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.

    பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கிபோய் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது இலங்கை பாராளுமன்றமும் முடங்கி போய் உள்ளது.

    தேவை இல்லாமல் பெட்ரோல் செலவாவதை தடுக்க பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பங்குகளில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள். ஆனாலும் எரிபொருள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இன்றும் நாளையும் பங்குகளுக்கு குறிப்பிட்ட அளவு பெட்ரோல் வினியோகம் செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்து உள்ளது.

    இந்த சூழ்நிலையில் டீசல் வாங்குவதற்காக இலங்கையில் உள்ள ஒரு பங்கில் 5 நாட்களாக காத்திருந்த 63 வயது லாரி டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.

    பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தலைமையிலான 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இலங்கை சென்றனர்.

    அவர்கள் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபச்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி னார்கள்.

    இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, கடன் உதவி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர். அப்போது இந்திய அதிகாரிகள் இந்தியாவின் நட்பு நாடாக திகழும் இலங்கை பொருளாதார பாதிப்பில் இருந்து மீளுவதற்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்றும் உறுதி அளித்தனர்.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏராளமான இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 23 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் அகதிகளாக ராமேசுவரத்திற்கு வந்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு உணவு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இந்த விலை உயர்வு காரணமாக இலங்கையில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக ஏராளமான தமிழர்கள், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். அவர்கள் இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏராளமான இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். இந்த நிலையில் மேலும் 7 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர். 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட அந்த 7 பேரும் தனுஷ்கோடி அருகே 1-ம் மணல் திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

    இதனை அந்த வழியாக ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்தனர். அதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்று மணல் திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த 7 பேரையும் மீட்டனர்.

    அங்கிருந்து அவர்களை படகு மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்பு 7 பேரும் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 4 குழந்தைகளை தவிர மற்ற 3 பேரிடமும் தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை திரிகோண மலையை சேர்ந்த தஷ்னுவாக் (வயது 40), அவரது மனைவி ரஜினி (30), மகன் யோஷ்வா (12), மகள்கள் ஏஞ்சல் (11), அனிஷ்கா (5), மதினா (40), அவரது மகன் சந்தானம் (12) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு வந்ததாகவும், நேற்று இரவு இலங்கையில் இருந்த படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்த அவர்களிடம் 'கியூ' போலீசாரும் விசாரணை நடத்தினர். அவர்கள் 7 பேரையும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இலங்கையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 23 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் அகதிகளாக ராமேசுவரத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் 7 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இவர்களையும் சேர்த்து இலங்கையில் இருந்த இதுவரை 90 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நெல் சாகுபடி பருவத்திற்காக இந்தியாவிடம் இலங்கை கடன் உதவி கோரியிருந்தது.
    • உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் நெருக்கடி ஏற்படும் என்று இலங்கை பிரதமர் எச்சரித்திருந்தார்.

    கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    அரசுக்கு எதிராக இலங்கையில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    நெல் பருவ சாகுபடிக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படுவதால், உடனடி உர இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம், இலங்கை கடன் உதவி கோரியுள்ளதாக இந்திய தூதரகம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உர இறக்குமதிக்காக இந்தியா 55 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இலங்கைக்கு கடன் வழங்கி உள்ளதாகவும், இது இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

    முன்னதாக இலங்கை நிதியமைச்சக செயலாளர் சிறிவர்தன, எக்ஸிம் வங்கியுடன் இருந்து கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோர் பங்கேற்றனர்

    ×