search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
    X

    தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள்.

    இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

    • கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏராளமான இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 23 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் அகதிகளாக ராமேசுவரத்திற்கு வந்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு உணவு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இந்த விலை உயர்வு காரணமாக இலங்கையில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக ஏராளமான தமிழர்கள், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். அவர்கள் இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏராளமான இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்தனர். இந்த நிலையில் மேலும் 7 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர். 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட அந்த 7 பேரும் தனுஷ்கோடி அருகே 1-ம் மணல் திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

    இதனை அந்த வழியாக ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்தனர். அதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்று மணல் திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த 7 பேரையும் மீட்டனர்.

    அங்கிருந்து அவர்களை படகு மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்பு 7 பேரும் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு 4 குழந்தைகளை தவிர மற்ற 3 பேரிடமும் தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை திரிகோண மலையை சேர்ந்த தஷ்னுவாக் (வயது 40), அவரது மனைவி ரஜினி (30), மகன் யோஷ்வா (12), மகள்கள் ஏஞ்சல் (11), அனிஷ்கா (5), மதினா (40), அவரது மகன் சந்தானம் (12) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு வந்ததாகவும், நேற்று இரவு இலங்கையில் இருந்த படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்த அவர்களிடம் 'கியூ' போலீசாரும் விசாரணை நடத்தினர். அவர்கள் 7 பேரையும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இலங்கையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 23 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் அகதிகளாக ராமேசுவரத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் 7 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இவர்களையும் சேர்த்து இலங்கையில் இருந்த இதுவரை 90 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×