என் மலர்
நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"
- ஊட்டியில் 700 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி.
- பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைகிறதா? மாவட்டங்களில் நடந்து வரும் திட்டப்பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரம் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார். ஏப்ரல் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அவர் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார்.
அப்போது ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.
இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டும், ஏற்படுத்தப்பட்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை யினரும் இணைந்து நிலச்சரிவு, மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இக்கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.
இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் என்றால் அது ஊட்டி என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பம்சம் என்னவென்றால் பழங்குடியினருக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கென தனி வார்டு ஒன்று, ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மருத்து வமனையை பொறுத்தவரை எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் அமைக்கப்பட்டு தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ந்தேதி அன்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.60 கோடி செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
- தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.
- தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை.
சென்னை:
தமிழக அரசை கண்டித்து தமிழக பா.ஜ.க.வினர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பனையூரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு நின்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
* யாருக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் வீட்டுக்கு வெளியே நின்று பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
* தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார்.
* தமிழகத்திற்கு கேரளாவுடன் முல்லை பெரியாறு, பேபி அணை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.
* 4 முறை கேரளாவுக்கு சென்றபோதிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட மாநில பிரச்சனை குறித்து பேசவில்லை.
* அணை கட்டியே தீருவேன் என டி.கே.சிவக்குமார் பேசியதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என கூறும் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரியிடம் கேட்கட்டும்.
* தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம்.
* தொகுதி மறுசீரமைப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப்போவதில்லை என்றார்.
- கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பேச உள்ளனர்.
- அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அனைவரும் பேச உள்ளனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
முன்னதாக, ஆலோசனை கூட்டத்திற்கு வந்துள்ள தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
- கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று உள்ளது. மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
- 2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.
- 5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.
சென்னை:
காவிரிக் கரையில் அமைந்த திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக்களஞ்சியமாக அமைந்திடும் என்றும் முதலமைச்சர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நூலகத்தின் தரைத் தளத்தில் வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில்-அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி.
2-ம் தளத்தில்-கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்.
3-ம் தளத்தில் தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம்-படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.
4-ம் தளத்தில்-ரோ பாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி.
5-ம் தளத்தில்-அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி.
6-ம் தளத்தில் நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்.
7-ம் தளத்தில்-காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், பொதுப்பணித்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், பொது நூலக இயக்குநர் முனைவர் பொ.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் எம்.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
- மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.
மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழ்நாட்டின் 58 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான எல்லை நிர்ணயம் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, நமது எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களின் தலைவர்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி, நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்தினர். தமிழ்நாட்டின் முன்முயற்சியாகத் தொடங்கியது இப்போது ஒரு தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கும் தருணம். இது ஒரு சந்திப்பை விட அதிகம் - இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
- நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
- கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
- பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' செல்லும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கியது.
- TrekTamilnadu மலையேற்ற முகாம் திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Trek TamilNadu இணையதளம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "TrekTamilNadu என்பது சாகசத்தை விட மேலானது. 3 மாதங்களில், 4,792 மலையேற்றப் பயணிகள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ. 63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதில், ரூ. 49.51 லட்சம் பயணிகளை அழைத்து சென்ற பழங்குடி இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. சுற்றுலா பழங்குடி மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.
காட்டுத்தீ சீசன் முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும். மலையேறுபவர்களை இயற்கை எழிலுடன் வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்த்தில், "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.
மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.
- DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.
இதன்பின்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேவந்த் ரெட்டி, "தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன், இது தொடர்பாக எனது கட்சி தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெறும் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் நடவடிக்கை, DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION. இதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் வடஇந்தியாவை விட அதிக வரி கொடுக்கிறோம். நாங்கள் அதிக தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம்.
பாஜக வளர தென்னிந்தியா அனுமதிக்காததால் தென்னிந்தியாவை பாஜக அரசு பழிவாங்குகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஏன் கர்நாடகா கூட பாஜகவை தோற்கடித்துள்ளனர். அவர்களுக்கு ஆந்திராவில் கூட இல்லை. இதற்கு பெயர் தான் பழிவாங்கும் அரசியல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.