search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliment"

    • 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
    • உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

    அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.

    • வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம்.
    • இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது.

    புதுடெல்லி:

    பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் புதிய எதிர்காலத்திற்கான புதிய தொடக்கங்களை தொடங்க உள்ளோம். வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் இன்று புதிய கட்டிடத்துக்கு செல்கிறோம்.

    இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். நமதுஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. அரசியல் சாசனத்திற்கு பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் வடிவம் கொடுக்கப்பட்டது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க முடிவுகள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் எடுக்கப்பட்டு உள்ளன.

    முத்தலாக்கை எதிர்க்கும் சட்டம் இங்கிருந்து ஒற்றுமையாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முஸ்லீம் தாய்மார்கள் சகோதரிகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் திருநங்கைகளுக்கு நீதி வழங்கும் சட்டத்தையும் பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. மாற்று திறனாளிகளுக்கு ஒளி மயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை நாங்கள் ஒற்றுமையாக நிறைவேற்றி உள்ளோம்.

    பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானதாக இருந்த 370-வது சட்டப்பிரிவு இந்த பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது நமது அதிர்ஷ்டம். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு-காஷ்மிரில் அமைதி நிலவுகிறது.

    இன்று பாரதம் 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. உலகின் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாட்டை மாற்ற வேண்டும். இங்குள்ள சிலர் அப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயரும் என்று உலகம் நம்புகிறது.

    அனைத்து சட்டங்களும், பாராளுமன்றத்தில் நடக்கும் அனைத்து விவாதங்களும் நமது விருப்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிபாட்டை இன்று மீண்டும் உறுதி படுத்துகின்றோம். என்னிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது. புதிய பாராளு மன்றத்துக்கு செல்லும் போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் கவுரவம் ஒருபோதும் குறைய கூடாது. இதை பழைய பாராளுமன்ற கட்டிடமாக விட்டு விடக்கூடாது. எனவே நான் கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் ஒப்புக்கொண்டால் இது சம்விதன் சதன் (அரசியல் சாசன மாளிகை) என்று அழைக்க பரிந்துரை செய்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பழைய கட்டிடத்திற்கு சம்விதான் சதன் என பெயர் சூட்ட பிரதமர் பரிந்துரை
    • காங்கிரஸ் தலைவர் சவுத்ரி இந்திய அரசியலமைப்பை கையில் ஏந்தியபடி புதிய கட்டிடத்திற்குள் நுழைந்தார்

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் இந்த கட்டிடம் திறக்கப்பட்டாலும் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக அங்கு பணிகள் நடக்க தொடங்கி உள்ளன.

    இதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், பழைய பாராளுமன்றத்தில் இருந்து புதிய பாராளுமன்றத்துக்கு இடமாற்றம் செய்தனர். மதியம் 12.55 மணிக்கு பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட புத்தக நகலை ஏந்தியபடி முன் வரிசையில் நடந்து செல்ல எம்.பி.க்கள் அனைவரும் தொடர்ந்து சென்றனர்.

    புதிய பாராளுமன்றத்துக்குள் நுழைந்ததும் முறைப்படி அலுவல்கள் தொடங்கின. பிற்பகல் 1.15 மணிக்கு மக்களவை அமர்வு தொடங்கியது. அதுபோல பிற்பகல் 2.15 மணிக்கு மாநிலங்களவை அமர்வு தொடங்கியது.

    இதன் மூலம் புதிய பாராளுமன்றத்தில் முறைப்படி பணிகள் தொடங்கி உள்ளன. இனி அனைத்து பாராளுமன்ற கூட்டங்களும் புதிய கட்டி டத்தில்தான் நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தி தினம் வட மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதை வெற்றி தரும் தினமாக வட மாநில மக்கள் கருதுகிறார்கள். இதை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிகிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று முதல் நாள் எம்.பி.க்கள் வருகையும், பூஜையும்தான் இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் முதல் நாள் கூட்டத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்பேரில்தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதாவை இன்றே தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முதல் கட்ட பணிகள் நடந்தன. 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் மிக குறுகிய காலத்தில் இந்த பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 600 சதுரடி கொண்டது. 3 நுழைவு வாயில்களுடன் கட்டப்பட்டுள்ளது. உள் அலங்காரங்கள் நிறைய செய்யப்பட்டு இருப்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கண்கவர் வகையில் அமைந்துள்ளது.

    • முத்தலாக் போன்ற முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
    • இந்தியா 3-வது இடத்திற்கு உயரும் என உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள்

    1952-ல் இருந்து 41 நாட்டின் தலைவர்கள் இங்கு நம்முடைய எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றியுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    முத்தலாக் போன்ற முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னதாக செய்யப்பட்ட பல தவறுகள் திருத்தப்பட்டுள்ளன.

    தீவிரவாதம், பிரிவினை ஆகியவற்றிற்கு எதிராக போரிட, பாராளுமன்றத்தில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது நம்முடைய சிறந்த அதிர்ஷ்டம்

    இன்று, பாரத் 5-வது மிப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 3-க்கு கொண்டு வருவதே லட்சியம். இங்குள்ள சிலர் அப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால், இந்தியா 3-வது இடத்திற்கு உயரும் என உலகம் உறுதியாக இருக்கிறது.

    ஆயிரம் ஆண்டுகளாக பார்க்காத வகையில் இந்தியா தற்போது திகழ்கிறது. இந்த நேரத்தில் நாம் வசித்து வருவது அதிர்ஷ்டம்.

    இந்தியாவின் லட்சியத்தை உயர்த்தும் எண்ணத்தோடு அனைத்து சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

    நாம் மேற்கொள்ளும் அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இந்திய அபிலாஷைகளுக்கு முன்னுரிமையாக இருக்கும்.

    இந்தியா பெரிய லட்சியங்களை நோக்கி நகர வேண்டும். சிறு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.

    இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்

    • மத்திய மந்திரிசபை மகளிர் இடஒதுக்கீடு மாசோதாவிற்கு ஒப்புதல்
    • இந்த மசோதா எம்.பி.களுக்கான அக்னி பரீட்சை என மந்திரி சபை கூட்டத்தில் மோடி பேசியதாக தகவல்

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் 3 பொது தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருந்தது.

    2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி அந்த இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அது சட்டமாக முடியாமல் போனது.

    அதன் பிறகும் பல தடவை மக்களவையில் அந்த மசோதாவை நிறை வேற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால் சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற இயலவில்லை.

    இந்த நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி சாதனை படைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நேற்று இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று காலை அதிகாரப்பூர்வமாக பிரியாவிடை அளிக்கப்பட்டது.

    பழைய பாராளுமன்றம் முன்பு அமர்ந்து எம்.பி.க்கள் கூட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மைய மண்டபத்தில் எம்.பி.க்கள் கூடினார்கள்.

    அங்கிருந்து பிரதமர் மோடி தலைமையில் எம்.பி.க்கள் புதிய பாராளுமன்றத்துக்கு அணிவகுத்து சென்றனர். அமைச்சர்கள் புடைசூழ பிரதமர் மோடி முதலில் சென்றார். அவர்கள் புதிய பாராளுமன்றத்தில் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.

    இன்று பிற்பகல் புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுகின்றன. அந்த கூட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    பாராளுமன்றத்தில் மொத்தம் 543 எம்.பி.க்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும்.

    அதுபோல நாடு முழுவதும் 4,126 எம்.எல்.ஏ. தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால் 1,362 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு 13 எம்.பி. தொகுதிகளும், 77 சட்டசபை தொகுதிகளும் கிடைக்கும்.

    இதன் மூலம் பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்கள் அதிகளவு நுழைய வாய்ப்பு ஏற்படும்.

    இதற்கிடையே மந்திரி சபை கூட்டத்தில், இந்த மசோதா பாராளுமன்ற எம்.பி.களுக்கான அக்னி பரீட்சை என பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    • மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்
    • காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்தது

    பிரதமர் மோடி தலைமையில், நேற்று மாலை மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற இருக்கிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சிக்கான பாராளுமன்ற தலைவர் சோனியா காந்தி வந்தார்.

    அப்போது, அவரிடம் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோனியா காந்தி "மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது'' என்றார்.

    ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், "மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததாக வந்துள்ள செய்தியை வரவேற்கிறேன். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

    ப. சிதம்பரம் "மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டால், அது காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியின் வெற்றியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பழைய கட்டிடத்தில் நேற்றோடு பாராளுமன்ற அலுவல் பணிகள் முடிவடைந்தன
    • புதிய கட்டிடத்தில் இன்றுமுதல் பாராளுமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது

    டெல்லியில் செயல்பட்டு வந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக விடை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த பாராளுமன்றம் கட்டப்பட்டது. 97 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த கட்டிடத்தில் போதிய அறைகள் இல்லாமல் நெருக்கடிகள் ஏற்பட்டதால் புதிய பாராளுமன்றம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பழைய பாராளுமன்றம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடந்த பிறகு பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு விடை கொடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடங்கின.

    நேற்று பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கியதும் பாராளுமன்றத்தில் 75 ஆண்டு கால பயணம் பற்றி தலைவர்களை பழைய சம்பவங்கள் நினைவு கூர்ந்து பேசினார்கள். இன்று காலை 9.15 மணிக்கு எம்.பி.க்கள் அனைவரும் பழைய பாராளுமன்ற கட்டிடம் முன்பு கூடினார்கள்.

    9.30 மணிக்கு பழைய பாராளுமன்ற கட்டிடம் முன்பு எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். 10.15 மணி வரை அனைத்து கட்சி எம்.பி.க்களும் அங்கு ஓரணியாக நின்று பாராளுமன்ற கட்டிடத்தின் சிறப்புகளை நினைவு கூறினர்.

    இதையடுத்து 11 மணிக்கு பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடந்தது. இதற்காக 10.50 மணிக்கே மைய மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி எம்.பி.க்கள் மத்தியில் சென்று கைகூப்பி வணக்கம் தெரிவித்து நன்றி கூறினார்.

    எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று பிரதமர் மோடிக்கு பதில் வணக்கம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, காஷ்மீர் தலைவர் பரூக் அப்துல்லா ஆகிய இருவரையும் கையை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்து பேசினார்.

    சில எம்.பி.க்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்து சிரித்து பேசினார். பின்னர் பா.ஜ.க. மூத்த மந்திரிகளிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டு இருந்தார். சரியாக 11 மணிக்கு மைய மண்டபத்தில் கூட்டம் தொடங்கியது. இதையொட்டி மைய மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மேடையில் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சபாநாயகர் ஓம்பிர்லா அமர்ந்து இருந்தனர். பழைய பாராளுமன்ற கட்டிடத்தை நினைவு கூர்ந்து எம்.பி.க்கள் பேசினார்கள். மேனகா காந்தி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, பியூஸ்கோயல், கார்கே ஆகியோர் பேசி முடித்ததும் பிரதமர் மோடி பேசினார்.

    அத்துடன் பழைய பாராளுமன்றத்துக்கு இறுதி விடை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு எம்.பி.க்கள் அனைவரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு புறப்பட்டு சென்றனர். நெகிழ்ச்சியுடன் அவர்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இருந்து பிரிந்து சென்றனர்.

    • 1996-ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது
    • 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறியது

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மற்றும் உறுப்பினர்கள் 75 ஆண்டு கால பாராளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் குறித்து உரையாற்றினர். இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அவைகள் நகர்த்தப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து தற்போது பேசவில்லை கடந்த 1999-ம் ஆண்டில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சில தலைவர்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தோல்வியும் சந்தித்துள்ளது.

    இதுவரை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும்... பாராளுமன்றமும்....

    * 1996-ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, எனினும் மக்களவையில் தோல்வி அடைந்தது

    * 1998-ல் வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் நிறைவேறவில்லை

    * 2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது

    * 2009-ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010-ம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது

    * 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளவில்லை

    * 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கோலாகலமாக விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • நாளை முதல் பாராளுமன்ற அலுவல்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும்.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட கலை பாணியில் உருவானதாகும்.

    1927-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி இந்த கட்டிடத்தை வைசிராயாக இருந்த இர்வின்பிரபு திறந்து வைத்தார். இன்னும் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடம் நூற்றாண்டு விழாவை காணபோகிறது.

    கடந்த 97 ஆண்டு கால வரலாற்றில் இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அந்த வகையில் இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மையமாக இந்த பாராளுமன்ற கட்டிடம் திகழ்கிறது. பழமை காரணமாக இந்த கட்டிடத்துக்கு விடை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பேரில் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    3 மாதங்களுக்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. என்றாலும் பாராளுமன்ற கூட்டத் தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (திங்கட்கிழமை) விடை கொடுக்கப்பட்டது.

    இதன் மூலம் புகழ் பெற்ற இந்திய பாராளுமன்ற வட்ட வடிவ கட்டிடம் இன்று மாலை முதல் ஓய்வுக்கு செல்கிறது. அதற்கு விடை கொடுக்கும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் 75 ஆண்டு கால வரலாற்று பயணம் என்ற தலைப்பில் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பேசினார்கள்.

    இதன் மூலம் பழைய பாராளுமன்ற கட்டிடம் இன்று தனது கடமையை வெற்றிகரமாக முடித்துள்ளது. நாளை முதல் பாராளுமன்ற அலுவல்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும்.

    இதற்காக நாளை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் ஒன்றாக கூடுவார்கள். அங்கிருந்து அவர்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்வார்கள்.

    இதையொட்டி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கோலாகலமாக விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • விடுதலைக்குப் பிறகு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றமாக செயல்பட்டு வருகிறது
    • ஒவ்வொரு இந்தியரின் வியர்வையாலும் பணத்தாலும் இந்த கட்டிடம் கட்டப்படுள்ளது

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இந்த கூட்டத் தொடரில் எவை பற்றி விவாதிக்கப்படும் என்று முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் கொண்டு வரும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்பட லாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    மேலும் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு இந்த கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பரபரப்பாக பேசப் பட்டது. பிரதமர் மோடி அதிரடியாக சில திட்டங்களை இந்த சிறப்பு கூட்டத் தொடரில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தின் நோக்கம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன் பேரில் 4 முக்கிய மசோதாக்கள் எடுத்துக் கொள்ள இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் பாராளுமன்ற 75 ஆண்டு கால பயணம் பற்றியும் விவாதிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கியது. காலை 10.30 மணி முதல் எம்.பி.க்கள், தலைவர்கள் பாராளுமன்றத்துக்கு வர தொடங்கினார்கள். 10.40 மணிக்கு பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடின. இன்று வழக்கமான கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதற்கு பதில் பாராளுமன்ற 75 ஆண்டு கால வரலாறு பற்றிய விவாதம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் மீது தலைவர்கள் பேசினார்கள்.

    முதலில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சில கோரிக்கைகளை தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பாராளுமன்ற மக்களவையில் அமளி நிலவியது.

    உறுப்பினர்கள் அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். என்றாலும் சுமார் 10 நிமிடங்கள் கூச்சல்-குழப்பம் நிலவியது. அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார்.

    அவர் பேச்சு விவரம் வருமாறு:-

    இந்த வரலாற்று கட்டிடத்தில் இருந்து நாம் விடைபெறுகிறோம். நாம் புதிய கட்டிடத்துக்கு செல்லும் முன் இந்த பாராளுமன்ற கட்டிடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ளவேண்டிய நேரம் இது.

    விடுதலைக்கு பிறகு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பாராளுமன்றமாக செயல்பட்டு வருகிறது. பொன்மயமான வரலாற்று பயணத்தில் இந்த கட்டிடம் செயல்பட்டதை நினைவு கூர்வோம். ஒவ்வொரு இந்தியர்களின் வியர்வையாலும், பணத்தாலும் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    தொழில்நுட்பம், அறிவியலோடு இணைந்த புதிய பாதை தொடங்கி இருக்கிறது. சந்திரயான்-3 வெற்றி நாட்டின் மீது புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிபெற செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியாவின் புகழ் இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்படுகிறது. பாரதத்தின் கூட்டாட்சி மனோபாவத்துக்கு கிடைத்த வெற்றி இது. 140 கோடி இந்தியர்களின் உறுதியின் வலிமையை சந்திரயான்-3 வெற்றி பறைசாற்றுகிறது. ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    ஜி20 மாநாடு அனைவராலும் கொண்டாடப் படவேண்டிய ஒரு விசயம். ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு விடை அளித்துள்ளது.

    ஜி20 மாநாட்டு வெற்றி தனிநபருக்கானது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது. புதிய பாராளுமன்றத்திற்கு மாறும் இந்த தருணத்தில் இளைய தலைமுறையினர் உத்வேகம் பெறவேண்டும். உலக நாடுகள் நம் பாரத நாட்டை நண்பனாக பார்க்கின்றன.

    இந்த அவையில் நகைச்சுவை, காரசாரமான விவாதங்கள், சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழையும் இந்த தருணத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்வோம். பாரதத்தின் வளர்ச்சிக்கு இந்த கட்டிடம் அடித்தளம். முதல்முறையாக பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தபோது படியில் தலையை வைத்து வணங்கினேன்.

    ஒரு ஏழை இந்த பாராளுமன்ற கட்டிடத்தில் நுழைய முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையை பாராளுமன்றம் பிரதிபலிக்கிறது.

    பாராளுமன்றத்தில் பெண்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.பி.க்களாக செயல்பட்டுள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தினரை போல அன்பை பரிமாறிக் கொள்ளவேண்டும். கடும் நோய் பாதிப்பு, சர்க்கரை பாதிப்பு இருந்தபோதும் உறுப்பினர்கள் பலர் அவைக்கு வந்துள்ளனர்.

    கொரோனா காலத்தில் அவைக்கு வரும்போது முக கவசம், சமூக இடைவெளி கடைபிடித்தோம். கொரோனா காலத்திலும் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை முடக்க நாம் அனுமதிக்கவில்லை. மைய மண்டபத்தை உறுப்பினர்கள் கோவிலை போல கருதி வந்ததை நாம் பார்த்துள்ளோம்.

    இந்த அவையின் தாக்கத்தால் நமது வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளோம். ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த அவை கட்டிக்காத்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக பாராளுமன்றம் மீது அசைக்கமுடியாத அளவுக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நம்பிக்கை தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு இந்த பாராளுமன்றம் சாட்சியாக திகழ்ந்துள்ளது. நேரு, மன்மோகன் சிங் மற்றும் வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    சர்தார் படேல் போன்ற நாயகர்களை நினைவு கூற வேண்டிய நேரமிது. ராஜேந்திர பிரசாத் தொடங்கி ராம்நாத் கோவிந்த் வரை பலர் அவைக்கு வழிகாட்டியுள்ளனர். நேரு முதல் மன்மோகன்சிங் வரை நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்ட உழைத்துள்ளனர். சாதாரண மக்களின் குரலை இந்த அவையில் அவர்கள் எதிரொலிக்க செய்தனர்.

    நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா ஆகிய மூவரும் பிரதமராக இருக்கும் போதே உயிரிழந்தது சோகமான தருணம். துணை குடியரசு தலைவர்கள், சபாநாயகர்கள் என பல்வேறு தரப்பினர் அவைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

    இந்த ஜனநாயக இல்லத்தில் தீவிரவாத தாக்குதலும் நடந்தது. இது பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, நமது ஆன்மா மீதான தாக்குதல். இதை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளுடன் போரிடும் போது சபையைக் காப்பாற்ற உடலில் குண்டுகளை தாங்கியவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். பாராளுமன்ற தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.

    தீவிரவாத தாக்குதலையும் தாண்டி இந்த கட்டிடம் நிலைத்து நிற்கிறது. பல தடைகளை கடந்து நாம் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பின், நாட்டின் வெற்றி குறித்து பலர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் இந்த பாராளுமன்றம் அதை தவறு என நிரூபித்தது. தோட்ட ஊழியர்கள் உள்பட பாராளுமன்ற பணியாளர்களின் பங்கு, உழைப்பு பாராட்டதக்கது.

    இந்த அவையின் நடவடிக்கைகளை நொடிக்கு நொடி மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி. பத்திரிகையாளர்களின் எழுதுகோல் அவையின் பல நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்து சென்றன. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஒரு விதத்தில், இங்குள்ள சுவர்களின் வலிமையை அவர்களது பேனா பிரதிபலித்துள்ளது. இந்த அவையில் இருந்து நான் வெளியேறுவதற்கு எப்படி உணர்ச்சிவசப்படுகிறேனோ, அதேபோன்று அந்த பத்திரிகையாளர்களுக்கும் இது ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.

    நேரு அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றியவர் அம்பேத்கர். பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் லால்பகதூர் சாஸ்திரி. இதே அவையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவும் இதே கட்டிடத்தில்தான் எடுக்கப்பட்டது. வங்கதேச போர் வெற்றிக்கு வித்திட்ட இந்திராகாந்தி அந்த பிரகடனத்தை இந்த அவையில் வாசித்தார்.

    பொருளாதார சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க பாடுபட்டது நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி. ஓட்டளிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது இந்த அவை. முன்னேறிய வகுப்பினரில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டது இந்த அவை. ஒரே நாடு ஒரே வரி என்பதை ஏற்றுக்கொண்டது இந்த அவை. வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது இந்த அவையில்தான்.

    வேற்றுமையில் ஒற்றுமையை காண்பிக்கும் விதமாக பல்வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் இங்கு உள்ளனர். அரசியலே வேண்டாம் என இருந்த நரசிம்மராவ் பிரதமராக இந்த அவையை அலங்கரித்தார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடினார்கள். அணுசக்தி சோதனை இந்தியாவின் வலிமையின் அடையாளமாக மாறியது.

    லோஹியா, சந்திரசேகர், அத்வானி உள்ளிட்ட பலர் நமது இந்த சபையை வளப்படுத்துவதிலும், விவாதங்களை வளப்ப டுத்துவதிலும், நாட்டின் சாமானியர்களுக்கு வலுவூட்டுவதிலும் உழைத்தவர்கள்.

    வரலாறு, வருங்காலத்தையும் ஒன்றிணைத்து பார்க்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ளும்போது இதில் அரசியல் கலக்காமல் இருக்க வேண்டும். அருமையான நினைவுகளோடு இந்த அவையில் உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடு புதிய பாராளுமன்றத்துக்கு புதிய நம்பிக்கையுடன் செல்வோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதையடுத்து காங்கிரஸ் சார்பில் கார்கே, அதிர்ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு பேசினார்கள். இன்று மாலை வரை இந்த விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

    மக்களவை போல மாநிலங்களவையிலும் இந்த சிறப்பு விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கு பா.ஜ.க. மத்திய மந்திரி பியூஸ்கோயல் உரையை தொடங்கி வைத்தார்.

    • பழைய கட்டிடத்தில் நடைபெறும் கடைசி நாள் கூட்டம் இதுவாகும்
    • ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முழக்கும்

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்கள் நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கியது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் பேசினார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் நீண்ட விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மக்களவை தொடங்கியதும், சில உறுப்பினர் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அவர்களை இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய சபாநாயகர் ஒம் பிர்லா பேசி வருகிறார்.

    • மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.
    • மக்கள் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும்

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று காலை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ×