search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangani thiruvizha"

    • அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
    • அமுது படையல் மற்றும் புஷ்பபல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    காரைக்கால் பாரதியார் வீதியில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாங்கனித்திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது.

    தொடர்ந்து திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வீதியுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்பபல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு விடையாற்றி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, பிரகாரப் புறப்பாடு நடந்தது. அதேபோல் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.
    • நாளை (14-ந்தேதி) அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கு காரணமாக, மாங்கனித்திருவிழா, கைலாசநாதர் கோவில் உள்ளேயே, பக்தர்கள் இன்றி மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 11-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. மாங்கனித்திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு, காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்சியாக, இன்று (13-ந் தேதி)காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரியே பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார்.

    அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுட்டு வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர். அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை எடுத்துச் சென்றனர். பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடி யார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைந்தது.

    அதன்பின்னர், பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • இன்று (புதன்கிழமை) மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை (வியாழக்கிழமை) அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த திருவிழா கைலாசநாதர் கோவில் உள்ளேயே, பக்தர்கள் இன்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் காரைக்கால் அம்மையார், பரமதத்த செட்டியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.

    விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள், நாஜிம், நாக.தியாகராஜன், திருமுருகன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன் மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாங்கனி விழாவை யொட்டி இன்று இரவு கைலாசநாதர் கோவிலில் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் 3-ம் நாளான இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • 13-ந்தேதி பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
    • 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று மாலை மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு இரவு காரைக்கால் அம்மையார் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முக்கிய நிகழ்ச்சியாக 12-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர்(சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ந் தேதி பிச்சாண்ட மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

    அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    விழா ஏற்பாடுகளை, காரைக்கால் கைலாசநாதர் கோவில் அறங்காவல் வாரிய த்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பி-னர் ஜெயபாரதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • 13-ந்தேதி பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
    • 14-ந்தேதி அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    13-ந்தேதி பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    விழா குறித்து, அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன் கூறியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாங்கனி திருவிழா கோவில் பிரகாரத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, மாங்கனி திருவிழாவை வழக்கம் போல், வெகு விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்விழா, 4 நாட்கள் நடக்கும். பாதுகாப்பு பணிக்காக, காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடவுள்ளனர்.

    60 சி.சி.டி.வி. கேமரா வைத்துள்ளோம். முக்கியமாக, மாங்கனி இறைப்பின் போது, அர்ச்சனை செய்ய வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் தட்டுகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்யவேண்டுகிறோம். முடியாதவர்களுக்காக, நாங்கள் மூங்கில் தட்டுகளை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவில் பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உண்டு. அவரை சிறப்பிக்கும் வகையில் ஆனி மாதம் வரும் பவுர்ணமி நாளில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித்திருவிழா 3 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு கைலாசநாத கோவிலில் இருந்து பவளக்கால் விமானத்தில் பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா வந்தார்.

    வீதிஉலாவின்போது சாலையின் இருபுறமும் உள்ள கட்டிடங்கள், வீடுகள், கடைகளின் மாடிகளில் இருந்தபடி மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த மாங்கனிகளை குழந்தைபேறு இல்லாதவர்கள் சாப்பிட்டால் அந்த ஆண்டே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


    கைகளில் மாங்கனி ஏந்தியபடி காட்சி அளித்த பிச்சாண்டவ மூர்த்தி.

    விழாவில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதா ஆனந்தன், முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கைலாசநாத கோவிலில் தொடங்கிய பிச்சாண்டவர் வீதி உலா பாரதி வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லேமர் வீதி வழியாக மாலையில் காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு பிச்சாண்டவர் வந்தார். பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-ம் திருமணம் நடந்தது. நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் பு‌ஷ்ப பல்லகில் வீதிஉலா சென்றார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார்.
    காரைக்கால் அம்மையாரின் பொருட்டு ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று ‘மாங்கனித் திருவிழா’ இங்கு வெகுசிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    காரைக்கால்... இது ஒரு ஆன்மிக வனப்பும், வியாபார வனப்பும் நிறைந்த அருள்பூமி. இங்கு ஒரு வீட்டில் முழுநேரமும் சிவநாமம் கேட்டுக் கொண்டே இருக்கும். அது புனிதவதியின் வீடு.

    ஒரு நாள் ‘அம்மா’ என்ற குரல் வாசலில் கேட்க திரும்பிப் பார்த்தாள் புனிதவதி. வீட்டு வாசலில் சிவனடியார் ஒருவர், பசியால் வாடி வதங்கி நின்றிருந்தார். ‘அடுப்பில் இப்போதுதான் உலை வைத்திருக்கிறேன். சற்றுபொறுங்கள்’ என்று கூறினாள். ஆனால் அவ்வளவு பொறுமை சிவனடியாருக்கு இல்லை. அந்த அளவுக்கு பசி.

    ‘இல்லை தாயே! பசியில் உயிர் போகிறது. ஏதேனும் இருப்பதைக் கொடு தாயே’ என்றார் சிவனடியார்.

    சற்றே யோசித்தவளுக்கு மதிய உணவிற்காக தன் கணவன் பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகள் நினைவுக்கு வந்தது. உடனே அதில் ஒரு மாங்கனியை எடுத்து வந்து சிவனடியாருக்கு கொடுத்து மகிழ்ந்தாள். சிவனடியார் அதை உண்டு மகிழ்ந்தார்.

    ‘பசியும்.. தான் வந்த பணியும் முடிந்ததில், புனிதவதியை வாழ்த்தி விட்டு, அந்தச் சிவனடியார் மறைந்தார். ஆம்! சிவனடியார் வேடத்தில் வந்தவர் சிவபெருமான்.

    வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்த பரமதத்தன், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட்டான். சமைத்து வைத்த அறுசுவை உணவுகளை, அன்புக் கணவனுக்கு பரிமாறினாள் புனிதவதி.

    ‘புனிதா! நான் கொடுத்தனுப்பிய மாங்கனியைக் கொண்டு வா’ என்றான் பரமதத்தன்.

    சிவனடியாரிடம் கொடுத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை எடுத்து வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள். அதை உண்டவன், மாங்கனியின் சுவையில் மயங்கிப்போனான். அதன் விளைவு.. மற்றொரு மாங்கனியையும் கொண்டுவரும்படி தன் மனைவியிடம் கூறினான். பதறித்தான் போனாள் புனிதவதி.

    ‘மற்றொரு கனியை சிவனடியாருக்கு கொடுத்து விட்டேன்’ என்று கூறினால், எங்கே கணவன் கோபித்துக் கொள்வானோ என நினைத்த புனிதவதி, பூஜை அறையை நோக்கிச் சென்றாள். ஈசனை நோக்கி ‘ஓம் நமசிவய’ என்று துதித்தாள். தான் இக்கட்டில் மாட்டிக் கொண்டதை கூறிச் சிவபெருமானை வேண்டினாள்.

    இறைவனைத் துதிப்பதற்காக புனிதவதி ஒன்றிணைத்த கைகளில் ஒரு மாங்கனி வந்துஉதித்தது. ‘தன் பிரச்சினை தீர்ந்து விட்டது’ என்று எண்ணிய புனிதவதி, அந்த மாங்கனியை கணவனிடம் கொண்டுபோய் கொடுத்தாள். ஆனால் அந்த மாங்கனியால் தான் புதிய பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.

    மனைவி கொடுத்த இரண்டாவது மாம்பழத்தை ஆவலுடன் சாப்பிட்டான் பரமதத்தன். முந்தைய மாம்பழத்தை விட, இதன் சுவை பன்மடங்கு அதிகமாக இருந்தது. ‘ஒரே மரத்தில் உள்ள இரண்டு மாம்பழங்களின் சுவையில் இவ்வளவு பெரிய மாற்றம் இருக்குமா?’ என்று சந்தேகித்த பரமதத்தன், புனிதவதியிடம் இதுபற்றி கேட்டான். கணவனிடம் பொய் உரைக்க பயந்த புனிதவதி, நடந்தவற்றை அப்படியே பதற்றத்துடன் கூறி முடித்தாள். அதைக்கேட்டதும், புனிதவதியிடம் இருந்த பயமும், பதற்றமும் பரமதத்தனைத் தொற்றிக்கொண்டது.

    ‘நீ கூறுவது உண்மையானால், ஈசனிடம் இருந்து இன்னொரு மாம்பழத்தை பெற்று எனக்குத் தருக’ என்றான் பரமதத்தன். புனிதவதியும் ஈசனை வேண்டினாள். இன்னொரு மாம்பழம் அவள் கையில் வந்தது. மறுநொடியே புனிதவதியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் பரமதத்தன். பதறிப்போனாள் புனிதவதி.

    ‘தாயே! நீ சாதாரணப் பெண் அல்ல; தெய்வ மங்கை’ என்று போற்றித் துதித்தான். தெய்வத்துடன் இல்லறம் நடத்துவது தகாது என்று கருதியவன் வீட்டை விட்டு வெளியேறினான். பாண்டிய நாட்டுக்குச் சென்றவன், அங்கு திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் என்னும் தலத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ‘புனிதவதி’ என்று பெயரிட்டான்.

    வருடங்கள் பல ஓடியும், வழிமேல் விழி வைத்து தன் கணவனுக்காக காத்திருந்தாள் புனிதவதி. வெகு காலம் கழித்துதான் பரமதத்தனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது அவளுக்கு தெரியவந்தது. வாழ்வை வெறுத்து வாடினாள். தன்அழகிய உருவை விடுத்து, ஈசனிடம் வேண்டி பேய் உருவை (எலும்பு வடிவம்) கேட்டுப் பெற்றாள். பின்னர் கயிலைமலையானை தரிசனம் செய்யப் புறப்பட்டாள் புனிதவதி. சிவன் இருக்கும் கயிலையில் காலால் நடப்பது குற்றம் என்றெண்ணி, தன் தலையால் நடந்து சென்றாள்.

    ஈசனுடன் வீற்றிருந்த பார்வதிதேவி இதைக்கண்டு, ‘சுவாமி! பேய் உருவில் தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?’ என்று வினவினார்.

    அதற்குச் சிவபெருமான், ‘இவள் நம்மைப் பேணும் அம்மை!’ என்றார். தம்மை நாடி வந்த புனிதவதியைப் பார்த்து, ‘அம்மையே! நலமாக வந்தனையோ?. நம்மிடம் வேண்டுவது யாது?’ என்று கேட்டார்.

    அகிலத்துக்கும் அம்மையப்பனாக விளங்கும் சிவபெருமானே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், புனிதவதியின் பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும் புனிதவதி, ‘காரைக்கால் அம்மையார்’ என்று பெயர் பெற்றார்.

    ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்ட ஈசனிடம், ‘ஐயனே! உம்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். எப்போதும் உமது திருவடியில் வீற்றிருந்து, உமது நாமம் பாடும் வரம் வேண்டும்’ என்று வேண்டினார் காரைக்கால் அம்மையார்.

    அவ்வாறே வரம் அளித்தார் ஈசன். ‘அம்மையே! நீ பூலோகத்தில் ஆலவனம் உள்ள திருவாலங்காடு சென்று, அங்கு எமது திருவடியின் கீழ் இருந்து என்றும் பாடும் வரம் தந்தோம்’ என்று அருளினார். காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு புறப்பட்டார். திருவாலங்காடு முன்பாக உள்ள பழையனூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்து செல்ல அவருக்கு வழி தெரியவில்லை. ஒரே காடாக இருந்தது.

    ஆகவே பழையனூரில் வீற்றிருந்த சிவபெருமானிடம் காரைக்கால் அம்மையார் வேண்டினார். ‘ஈசனே! ஒரே காடாக உள்ளது. எந்த திசையில் சென்று நான் திருவாலங்காட்டை அடைவது?’ என்று கேட்டார்.

    அப்போது ஆலய கருவறையில் இருந்து ‘இங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்’ என்று அசரீரி ஒலித்தது. அவ்வாறே சென்றார் காரைக்கால் அம்மையார். அவருக்கு வழி தெரிவதற்காக வழிநெடுகிலும் சிவலிங்கமாக காட்சிக் கொடுத்தார் சிவபெருமான். ஆகையால் தலையால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார் காரைக்கால் அம்மையார். அங்கு அம்மைக்கு, ஈசன் திருநடனம் காட்டினார். அதனை கண்டுக் களித்த காரைக்கால் அம்மையார், ‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ என்னும் இரண்டு பதிகங்களைப் பாடினார். இது பன்னிரு திருமுறையில் பதினொன்றாவது திருமுறையாக உள்ளது. ஆனால் இது தேவாரத்திற்கு முன்னதாக பாடப்பெற்றது.

    தொடர்ந்து ஈசனடியில் அம்மை ஐக்கியமானார். காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோவில் உள்ளது. இத்தலத்தில் ஈசனின் திருநாமம் கைலாசநாதர். அம்பிகையின் திருநாமம் சவுந்தராம்பாள் என்பதாகும். காரைக்கால் அம்மையாரின் பொருட்டு ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று ஈசன் அம்மைக்கு அளித்ததும், அம்மையார் ஈசனுக்குப் படைத்ததுமான மாங்கனியின் பெயராலேயே ‘மாங்கனித் திருவிழா’ இங்கு வெகுசிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 4-ம் நாள் அதிகாலை 4 மணிக்கு, காரைக்கால் நகரத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்படும். அப்போது கயிலாசநாதர் ஆலயத்தின் வாசலில் ஈசனை உருவகித்து, தீபச் சுடர் ஒன்றை ஏற்றுவார்கள். அப்போது காரைக்கால் அம்மையார் கோவிலிலும் காரைக்கால் அம்மையாரை உருவகித்து தீபச் சுடர் ஒன்று ஏற்றப்படும். அந்த தீபச்சுடரை எடுத்துவந்து கயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஈசனின் தீபச்சுடரில் சேர்ப்பார்கள். ஆம்!காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் திருவடியில் சேர்வதைக் குறிப்பதாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் வழியாக 39 கிலோமீட்டர் தூரத்தில் காரைக்கால் அமைந்துள்ளது.
    பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வரலாற்றில் காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக் காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

    சிவனடியார் வேடத்தில்...

    ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார்.

    அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

    மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தன் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு அதனை படைத்தார்.

    முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.

    பின்னர் பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.

    திருப்பதிகம்

    தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் 4 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அம்மையார்

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக் கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

    பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

    மாங்கனியின் மகிமை

    முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சாமிக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதிஉலாவை தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். முக்கியமாக இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அமுது படையலில் தயிர் சாதம்

    உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பறிமாறுவார். எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர் கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர். 
    மாங்கனித் திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, தீர்த்தகரைக்கு அம்மையாரும், குதிரை வாகனத்தில் பரமதத்த செட்டியாரும் வந்தனர்.

    விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி, விக்ராந்த் ராஜா, அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.தொடர்ந்து, இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாரும் முத்துச் சிவிகையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள்.

    திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, காலை 7 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா நடக்கிறது. வீதிஉலாவின்போது மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

    பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைத்தல், இரவு 9 மணிக்கு சித்திவிநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-வது திருமணம், நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார். 
    கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
    காரைக்காலைப் போன்றே கன்னியாகுமரியில் உள்ள மிகவும் பழமையான பார்வதி அம்மன் சமேத குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

    இங்கு குகநாதீஸ்வரர் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வர, பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி வலம்வர அதுசமயம் பக்தர்கள் மாங்கனி படைத்தும், இறைத்தும் வழிபட்டு ஈசனின் இன்னருள் பெறுகிறார்கள். 
    காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழா இந்த ஆண்டு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
    காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பரமதத்த செட்டியார் மேளதாளம் முழங்க இரவு 8 மணியளவில் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பரமதத்தர் செட்டியாருக்கும், புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, இரவு புனிதவதியாரும் - பரமதத்த செட்டியாரும் தம்பதிகளாக முத்துச்சிவிகையில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அப்போது, பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

    அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மையார் புஷ்ப சிவிகையில் எழுந்தருளி, சித்திவிநாயகர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி காலை அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்காலில் கடைகளில் விற்பனைக்காக மாங்கனிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 
    காரைக்கால் அம்மையார் கோவிலில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது.
    இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமை மிக்கவர் காரைக்கால் அம்மையார். இவர் காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில்கொண்டு அருள்பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீ பரமதத்தர் செட்டியாருக்கும், ஸ்ரீ புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறகிறது.

    27-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 
    ×