search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangani thiruvizha"

    • சிவன்-பார்வதி பூஜை நிகழ்ச்சி நடந்தது
    • கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. கடந்த 1-ந் தேதி காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, 2-ந் தேதி பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

    4-ம் நாள் நிகழ்ச்சியாக 3-ந் தேதி அதிகாலை இறைவன் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் மாங்கனி திருவிழாவில் பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் காரைக்கால் அம்மையாருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் மாங்கனி திருவிழாவிற்கு வருகை தந்தனர். காலை முதல் இரவு வரை கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    மாங்கனி திருவிழா பந்தலின் கீழே திறக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் பொருட்கள் மலிவு விலைக்கு விற்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.

    நேற்று காரைக்கால் அம்மையார் கோவிலில் சிவன்-பார்வதி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் காரைக்கால் அம்மையார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    • அம்மையார், சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
    • அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார்.

    வரலாற்றுக்காலத்தில், காரைக்கால் மாவட்ட வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.

    காரைக்காலை அடுத்த நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

    ஒருசமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனைத் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச்சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

    மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய கடல்கடந்து பாண்டிய நாடு சென்றார்.

    பின்னர் பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்துவந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய்வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.

    இதனை பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக. அமர்க" என அழைத்து, ''நீ வேண்டுவன கேள்" என்றார். அதற்கு அம்மையார் "பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்டதிருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார்.

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாைவயொட்டி நேற்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இ்ன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் புறப்பாடு நடக்கிறது. இந்த பிச்சாண்டவர் திருவீதி உலாவின் போதுதான் மக்கள் தங்கள் வேண்டுதல்படி வீட்டு வாசல், மாடிப்பகுதிகளில் இருந்து மாங்கனிகளை வாரி வீசுவார்கள். மாலை 6 மணியளவில் அமுது படையல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அம்மையாருக்கு இறைவன் காட்சித்தரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    கயிலாயம்

    அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார்.

    உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறு வயது முதல் சிறந்த சிவபக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும்பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார்.

    சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், பிச்சாண்டவர் கோலத்தில் உள்ள சிவபெருமானுக்கு பறிமாறுவார்.

    எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதியுலா முடிந்து, அமுதுபடையல்'நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும்.

    பக்தர்கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.

    • காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலையில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் புனிதவதியாராக வாழ்ந்த போது சிவபெருமான் மாங்கனி வழங்கிய நிகழ்வை போற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் இரவில் குருபூர்ணிமா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன்படி திருவிளக்கு பூஜையும், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தன. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில், தெரிசை அய்யப்பன், தங்கமணி, மோகன், கார்த்திகேயன், மண்டகப்படிதாரரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மாங்கனி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.

    • மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.
    • பக்தர்கள் மீது இவ்வாறு இறைக்கும் மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 30-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ம் நாளான நேற்று காலை பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு பரமதத்த செட்டியார் காசுக்கடை மண்டபத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு இரு வர்த்தகர்கள் செட்டியாரிடம் இரு மாங்கனிகளை கொடுக்கும் நிகழ்ச்சியும், செட்டியார் அந்த இரு மாங்கனிகளையும் தம் இல்லத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் (சப்பரம்) பத்மாசனத்தில் அமர்ந்து வேதபாராயணத்துடன், வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு வீட்டு வாசல், வீட்டுமாடி மற்றும் சாலையின் இரு புறங்களிலிருந்தும் மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி, வாரி இறைத்தனர். இந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.

    பக்தர்கள் மீது இவ்வாறு இறைக்கும் மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை கைகளில் பிடித்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து பவழக்கால் சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடைந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி மற்றும் வீதி உலா நடைபெறுகிறது.

    • 63 நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார்.
    • இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

    பேய் உருவம் தாங்கிய அம்மையார், 'அற்புத திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார்.

    அப்போது அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், 'அம்மையே அமர்க!' என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

    • மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • நாளை அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சி யாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 30-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. மாங்கனித் திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.

    இந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்துச் சென்றனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்கணை பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பவழக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும்.

    இரவு, பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடை பெறும். நாளை (3-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடை பெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத்தலை வர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பி னர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். விழாவிற் கான பாதுகாப்பு களை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் தலை மையில் ஏராளமான போலீ சார் செய்து வருகின்றனர்.

    • பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
    • நாளை அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித்திருவிழா நேற்றுமுன்தினம் மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 7 மணிக்கு காரைக்கால் அம்மையாராகிய புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டப வரும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன், கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதி உலா புறப்பாடு, மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மழை வளம் செழிக்க சம்பந்தரின் மழைப்பதிகப் பாடல்களைப் பாடி விண்ணப்பம் செய்யப்படும்.
    • மாலை 4.30 மணிக்கு மேல் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் அமைந்துள்ள காரைக்காலம்மையார் கோவில் மண்டபத்தில் மாங்கனி பூஜை நடைபெற்று மாங்கனி பிரசாதம் வழங்கப்படும்.

    உடன்குடி:

    காரைக்கா லம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு வருகிற 3-ந்தேதி (திங்கட் கிழமை) மாங்கனி திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை குலசேகரன்பட்டி னம் அறம் வளர்த்த அம்மன் கோவிலில் நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினர் ஆசிரியர் வள்ளிநாயகம் தலைமையில் காரைக்கால் அம்மையார் பதிகங்களையும் மற்றும் காரைக்காலல் அம்மையார் பெரியபுராணம் பாடல்களையும் திருமுறை விண்ணப்பம் செய்வார்கள்.

    மேலும் மழை வளம் செழிக்க சம்பந்தரின் மழைப்பதிகப் பாடல்களைப் பாடி விண்ணப்பம் செய்யப் படும். மாலை 4.30 மணிக்கு மேல் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் அமைந்துள்ள காரைக்கா லம்மையார் கோவில் மண்டபத்தில் மாங்கனி பூஜை நடைபெற்று மாங்கனி பிரசாதம் வழங்கப்படும். மதியம் மாகேஸ்வர பூஜை உண்டு. பக்தர்கள் அனைவரும் திருமுறை விண்ணப்பத்திலும், மாங்கனி பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது

    • நாளை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 3-ந்தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து காரைக்கால் ஆற்றங்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, பரமதத்த செட்டியார் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிச்செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஸ்ரீ புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபம் வரும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் வீதியுலாவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், வீட்டுமாடி, வாசல்களில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், 3-ந்தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • 30-ந்தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    • 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சிவபெருமானால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் காரைக்கால் அம்மையார் மட்டுமே. இத்தகைய பெருமைவாய்ந்த காரைக்கால் அம்மையார் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 30-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. கடந்த 8-ந் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.

    ஜூலை 1-ந் தேதி காலை புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 2-ந்தேதி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில் தங்களது வீட்டுமாடி, வாசல்களில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மாலையில் காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கோவிலில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கில் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • 31-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    மேலூர் அருகே மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலமான திருவாதவூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி மூலவரான திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    கோவில் கொடிமரத்திற்கு, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் விழாவிற்கான நந்தி உருவம் பதித்த திருக்கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து, வருகிற 28-ந் தேதி அன்று பஞ்சமூர்த்திகளுடன், திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் மேலூருக்கு எழுந்தருளும் மாங்கனி திருவிழா நடைபெறும். இது குறித்த கதை வருமாறு:-

    மேலூரில் தற்போது சிவன் கோவில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்துள்ளது. அங்கு வயதான சிவாச்சாரியார் ஒருவர் தங்கியிருந்து அருளாசி புரிந்து வந்துள்ளார். அவர் தினமும் 8 மைல் தூரம் நடந்து சென்று திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மேலூருக்கு வந்து உணவு உட்கொள்வது வழக்கம். அப்போது மேலூரில் பணிபுரிந்த தாசில்தார் ஒருவர் அந்த சிவாச்சாரியாரின் தீவிர பக்தராக இருந்துள்ளார். மதுரையில் புதுமண்டபம் பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை பிரதிஷ்டை செய்து வழிபட தான் விரும்புவதாக சிவாச்சாரியார் அவரது பக்தரான மேலூர் தாசில்தாரிடம் கூறியுள்ளார்.

    அதனை தொடர்ந்து அப்போதைய மதுரை ஆங்கிலேய கலெக்டரிடம் அனுமதி வாங்கி மேலூரில் சிவாச்சாரியார் விருப்பம் படி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. வயது முதிர்ச்்சியடைந்த அந்த சிவாச்சாரியாரால் திருவாதவூருக்கு நடக்கமுடியாத நிலை ஏற்பட்டு உணவு அருந்தாமல் உடல் நிலை பாதிப்படைந்து சிவனை வழிபட முடியவில்லையே என மன வருத்தமடைந்தார். இந்த நிலையில் ஒரு நாள் சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய சிவன் பக்தரின் பக்தியை கண்டு தானே ஆண்டுக்கு ஒரு முறை நேரில் வந்து அருள்புரிவதாக கூறியுள்ளார். அன்று முதல் திருவாதவூர் கோவிலில் இருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் பல நூற்றாண்டுகளாக விழா நடைபெற்று வருகிறது.

    28-ந் தேதி அன்று திருவாதவூர் கோவிலில் அதிகாலை திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் பல்லக்கில் எழுந்தருளி மேலூருக்கு புறப்படுகிறார். வழி நெடுகிழும் பல்வேறு கிராமங்களில் மண்டகப்படிகளில் ஏராளமான பக்தர்கள் திருமறைநாதர்-வேதநாயகி அம்மனை வரவேற்று தரிசிப்பார்கள். அதனை தொடர்ந்து மேலூர் நகரின் நுழைவு வாயிலில் தாசில்தார் மண்டகப்படியில் திருமறை நாதர்-வேதநாயகி அம்மன் எழுந்தருவார். அப்போது சிவனடியாருக்கு சிவலிங்கம் பெற்று தந்த தாசில்தாருக்கு முதல் மரியாதை செய்யும் பாரம்பரிய நிகழ்ச்சியாக இப்போதைய தாசில்தாருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்படும். மேலூருக்கு சாமி வரும் போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மாங்கனிகளை பக்தர்கள் கூட்டத்தில் வீசி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    விழாவின் தொடர்ச்சியாக 31-ந் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×