search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாங்கனி திருவிழா: காரைக்கால் அம்மையார் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
    X

    காரைக்கால் அம்மையார் கோவில் வாசலில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.

    மாங்கனி திருவிழா: காரைக்கால் அம்மையார் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

    • 30-ந்தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
    • 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சிவபெருமானால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் காரைக்கால் அம்மையார் மட்டுமே. இத்தகைய பெருமைவாய்ந்த காரைக்கால் அம்மையார் வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு விழா வருகிற 30-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. கடந்த 8-ந் தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.

    ஜூலை 1-ந் தேதி காலை புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 2-ந்தேதி காலை சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில் தங்களது வீட்டுமாடி, வாசல்களில் இருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    மாலையில் காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கோவிலில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கில் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×