search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் அம்மையாரை அம்மையே என்று அழைத்த சிவபெருமான்
    X

    காரைக்கால் அம்மையாரை 'அம்மையே' என்று அழைத்த சிவபெருமான்

    • அம்மையார், சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
    • அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார்.

    வரலாற்றுக்காலத்தில், காரைக்கால் மாவட்ட வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.

    காரைக்காலை அடுத்த நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

    ஒருசமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனைத் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச்சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

    மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய கடல்கடந்து பாண்டிய நாடு சென்றார்.

    பின்னர் பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்துவந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய்வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.

    இதனை பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக. அமர்க" என அழைத்து, ''நீ வேண்டுவன கேள்" என்றார். அதற்கு அம்மையார் "பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்டதிருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார்.

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாைவயொட்டி நேற்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இ்ன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் புறப்பாடு நடக்கிறது. இந்த பிச்சாண்டவர் திருவீதி உலாவின் போதுதான் மக்கள் தங்கள் வேண்டுதல்படி வீட்டு வாசல், மாடிப்பகுதிகளில் இருந்து மாங்கனிகளை வாரி வீசுவார்கள். மாலை 6 மணியளவில் அமுது படையல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அம்மையாருக்கு இறைவன் காட்சித்தரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    கயிலாயம்

    அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார்.

    Next Story
    ×