search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mandaikadu bhagavathi amman"

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • புதன்கிழமை அத்தாழ பூஜை நடைபெறும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5.15 மணிக்கு சுமங்கலி பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்கின்றனர்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு, மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடக்கிறது.

    நாளை மறுநாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
    • இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

    மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அம்மன், புற்று ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அம்மனுக்கு நாள் தோறும் பூஜையும் வழிபாடுகளும் நடந்து வருவதால் இந்த புற்றும் நாள்தோறும் வளர்ந்து வந்தது. இதனால் அம்மனின் புற்று சிறிய மலைபோல பிரமிக்க வைக்கும் வகையில் பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறது. இது தேவியின் தெய்வீக ரூபத்தை மேலும் அதிகரித்து காட்சி தருவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.

    அம்மனை தரிசிக்க வருவோருக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் வேண்டிய வரத்தை அருளுவார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தாய் போல கருனை மழை பொழிவார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனால் தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.

    அம்மனை தரிசிக்க பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், ஏன் வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனின் ஆசியை பெற்றுச் செல்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. புற்று வடிவில் அம்மன் உள்ளதால் அதன் முன்பு வெள்ளியால் செய்யப்பட்ட பிரபையில் அம்மனின் உருவமும் அதன் முன்பு பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட பகவதி அம்மனின் உருவ சிலையும் இடம் பெற்று உள்ளது.

    இந்த பஞ்சலோக அம்மன் சிலை உற்சவர் சிலை ஆகும். இதனால் வெள்ளி பல்லக்கில் இந்த அம்மன் சிலையை வைத்து பவனியாக கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் திருவிழா காலத்தில் 3-ம் திருவிழாவில் இருந்து தினசரியும் இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி நடக்கிறது.

    இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. சில பக்தர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு காசுகளை கடலில் வீசி வழிபடுகிறார்கள். சில பக்தர்கள் நேர்ச்சை பொருட்களையும் கடலில் போட்டு வேண்டுதல் நடத்துகிறார்கள். இதனால் கடற்கரையில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    • அம்மனுக்கு சந்தனகாப்பு நடந்தது.
    • அலங்கார சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மணவாளக்குறிச்சி தேவி நன்னெறி மன்றம் சார்பில் யானை மீது சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி கோவிலில் காலை 8 மணிக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு நாதஸ்வர மேளம், 1.30 மணிக்கு தருவை நடேசர் கோவிலில் இருந்து சந்தனம் எடுத்து வருதல், 2.30 மணிக்கு சந்தனம் குடங்களில் நிரப்புதல், மாலை 4.30 மணிக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து செண்டை மற்றும் நாதஸ்வர மேளத்துடன் யானை மீது சந்தனகுடம் ஊர்வலம் புறப்படுதல் போன்றவை நடந்தது.

    ஊர்வலம் மணவாளக்குறிச்சி பாலம், மணவாளக்குறிச்சி சந்திப்பு, பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.45 மணிக்கு அலங்கார சிறப்பு தீபாராதனை போன்றவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவி நன்னெறி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.
    • இந்த கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.

    கன்னி்யாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். காமாட்சி, மீனாட்சி, இசக்கி, முத்து,மாரி என அம்மன் தெய்வத்தின் உருவங்கள் தமிழகத்தில் ஏராளம். ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.

    அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள பகவதி அம்மனின் சிறப்பே புற்று தான். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதற்கு முன்பாக வெள்ளியில் பகவதி அம்மன் சிலையும், அதற்கும் முன்பாக வெண்கலத்தில் நின்ற நிலையிலும் பகவதி அம்மன் அருள் மழை பொழிகிறாள். இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.

    பெண்களின் சபரிமலை :

    கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.

    சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,10-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

    மண்டைக்காடு ஆன கதை :

    முந்தைய காலகட்டத்தில் இந்த இடம், காடாக இருந்திருக்கிறது. கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர்.

    அதுவே காலப்போக்கில் மருவி மண்டைக்காடு ஆனதாகச் சொல்லப்படுகிறது. ராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் சக்கரத்தை கையில் ஏந்தி ஆதி சங்கரரின் சீடர் ஒருவர் இங்கே வந்தார். ஸ்ரீசக்கரத்தை தரையில் வைத்து விட்டு பூஜையில் ஆழ்ந்துவிட, அவரை சுற்றிலும் சில நேரங்களில் புற்றுக்கள் வளர்ந்துவிட்டன.

    ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அவரை எழுப்பிவிட்டனர். ஸ்ரீசக்கரமோ மண்ணை விட்டு வரவில்லை. அவரும் அங்கேயே இருந்து ஜீவ சமாதி ஆகிவிட்டார். இந்த விஷயம் மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிய வந்ததும் அப்பகுதியில் கோவில் கட்டினார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உருவான வரலாறு இது தான்.

    பிரார்த்தனைகளும் பிரசாதமும் :

    கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    அரிசிமாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

    மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

    தலவிருட்சம் :

    வேப்ப மரம் கோவிலின் தல விருட்சமாக உள்ளது. செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் அதிகம் பேர் மண்டைக்காடு அம்மன் கோவிலில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதிலும் தமிழ்மாதக் கடைசி செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

    இதே போல் பவுர்ணமி நாளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலின் அற்புதங்கள் ஆயிரம் சொன்னாலும் மனதில் நினைத்து வேண்டி உருகி, வணங்கி எந்த அம்மனாகப் பார்த்தாலும், அந்த அம்மனாகத் தெரிவது ஆச்சரியம் கலந்த உண்மை.

    சித்ரா பவுர்ணமியையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்வதால் இது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் கால்களை நனைத்து விட்டு கோவில் வளாகத்தில் உள்ள பொங்கலிடும் மண்டபத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

    நிகழ்ச்சியையொட்டி காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, மதியம் உச்சபூஜை, அன்னதானம், மாலையில் சாயரட்சை, தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடைவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. அதன்பின் 19-ந் தேதி எட்டாம் கொடை விழா நடந்தது.

    இந்தநிலையில் மீனபரணி கொடைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனிவருதல், மதியம் 12.30 மணிக்கு உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் போன்றவை நடந்தது. நள்ளிரவில் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடந்தது.

    ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும், இந்த பூஜை மாசி திருவிழாவின் 6-ம் நாள், மீனபரணி கொடைவிழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும். வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மீனபரணி கொடை விழாவையொட்டி பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலை சுற்றியும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாட்டை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 12-ந் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    தொடர்ந்து 19-ந் தேதி எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதையடுத்து மீனபரணிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 11 மணிக்கு 150 குடங்களில் சந்தன பவனி, நண்பகல் 12.15 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 1 மணியளவில் வலியபடுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. வலியபடுக்கையின்போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், உணவு பதார்த்தங்கள் ஆகியவற்றை பெருமளவில் அம்மன் முன் படையலிட்டு வழிபாடு நடைபெறும்.

    இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-ம் நாளன்றும், அம்மன் பிறந்த நட்சத்திரம் என கருதப்படும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டிற்கு 3 முறை மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப் படுகிறது. மீனபரணி கொடையை முன்னிட்டு கேரளா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடைவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெற்றது.

    இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். 
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சமய மாநாடு, வில்லிசை, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    6-ம்நாள் விழாவில் இரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும், 9-ம் நாள் விழாவில் இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவையும் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று முக்கிய பூஜையான ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்தனர். இதனால், கடற்கரை செல்லும் சாலை, மணலிவிளை, லெட்சுமிபுரம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

    ஒடுக்கு பூஜையையொட்டி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் பவனி எடுத்து வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்தர பூஜை, குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்குபூஜை தொடங்கியது. பூஜையையொட்டி மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தா கோவிலில் இருந்து பூசாரிகள் 21 வகையான உணவு பதார்த்தங்களை 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு பதார்த்தங்கள் படைக்கப்பட்டன. இதற்கிடையே குருதி கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜை இன்று நள்ளிரவு நடக்கிறது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சமய மாநாடு, யானை மீது களப பவனி, அன்னதானம், பஜனை, வில்லிசை, அம்மன் பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாள் இரவு வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலையில் பைங்குளத்தில் இருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலமும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும், காலை 10 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் ஊர்வலமும் நடந்தது. மதியம் உச்சகால பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் போன்றவை நடந்தன.

    திருவிழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் பவனி வருதல் நடக்கிறது.

    தொடர்ந்து அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், குத்தியோட்டம் போன்றவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இந்த பூஜையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிழாவையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரைக்கு சென்று அங்கு கால் நனைத்துவிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பொங்கலிடும் மண்டபம், மணலிவிளை சாலை, லட்சுமிபுரம் செல்லும் சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசி கொடைவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சமயமாநாடு, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் வீதி உலா வருதல், வில்லிசை ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பவனி மற்றும் ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மண்பானைகளில் வெள்ளை துணியால் மூடி, வாய்ப்பூட்டு கட்டிய பூசாரிகளால் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். பின்னர், நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும். அதைதொடர்ந்து குருதி கொட்டும் நிகழ்ச்சி, ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    முன்னதாக அதிகாலையில் சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் எடுத்து வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல், அடியந்தர பூஜை, குத்தியோட்டம், பிற்பகல் 2 மணிக்கு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ வெட்டி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. பெண்களின் சபரிமலை என்றும் இந்த கோவில் அழைக்கப்படும். இத்தகைய சிறப்புமிக்க பகவதி அம்மன் கோவிலில் கடந்த 3-ந் தேதி மாசி திருவிழா தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, நவீன வில்லிசை, சமய மாநாடு, யானை மீது களப பவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு வலிய படுக்கை நடந்தது. நேற்று 7-வது திருநாளையொட்டி கோவிலுக்கு வந்த பெண் பக்தர்கள், கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கடலில் பாதத்தை நனைத்து அம்மனை தரிசனம் செய்தனர். கால் பாதத்தை நனைக்கும் போது ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    9-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் கண்டன் சாஸ்தா ஆலயத்தில் இருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்படுகிறது. பின்னர் காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9.30 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் மற்றும் களபம் பவனி வருதலும் தொ டர்ந்து சமய மாநாடும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல் நடக்கிறது. மாநாட்டுக்கு ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்குகிறார். 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து தீ வெட்டி ஊர்வலம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருக்கோவிலின் இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்குகிறார். தீவெட்டி கமிட்டி தலைவர் ராஜகுமார், உதவி தலைவர் சந்தனகுமார், செயலாளர் செல்லம், உதவி செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜய ரங்கன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முதல் விளக்கை மதுரை கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜவேல் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தீவெட்டி ஊர்வலம் கோவிலை சுற்றி வலம் வருகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
    ×