search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold seized"

    • விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
    • பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மீனம்பாக்கம்

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அவரது காலில் அணிந்திருந்த ஷூ சாக்ஸை கழற்றியபோது, தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி அதை கறுப்பு நிற பாலித்தீன் பையில் மறைத்து கால் பாதத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் மேல் சாக்சை அணிந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவ தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

    கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 192 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் இலங்கையின் கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு வெவ்வேறு விமானங்களில் பயணம் செய்த 2 பெண் பயணிகளிடம் இருந்து 837 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம் 3 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1029 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தல் தொடர்பாக 3 பெண் பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர்.
    • 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகமாக இருக்கும். வெளிநாட்டுக்கு கடத்தப்படும் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் அதிகரித்து விட்டன. நாளுக்கு நாள் புது புது விதமாக நவீன முறையில் கடத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த கடத்தல் தங்கம் அதிகமாக துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. மேலும் மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் தங்கம் கடத்தப்பட்டு வந்தன.

    பெண்கள் தலை முடி கூந்தலுக்குள் தங்கத்தை மறைத்து வைத்தும், தங்க ஸ்பேனர்கள், டூல்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வருவது, தங்கத்தை பவுடராக்கி குங்குமம் பொடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வருவது என நூதன முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

    அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடியே 97 லட்சம் அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவூதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ரூ.14 கோடி மதிப்புள்ள 27.66 கிலோ ஹெராயின், மெத்தகுலோன், கொகைன் போன்ற போதை பவுடர்களையும் பறிமுதல் செய்தனர். இதில் உகாண்டா, தான்சான்யா, வெனிசுலா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்த பெண்கள் உள்பட 12 பேர் சார்ஜா, எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நாடுகளில் இருந்து கடத்தி வந்துள்ளனர்.

    தாய்லாந்தில் இருந்து டாமரின் குரங்குகள், மலைப்பாம்பு குட்டிகள், நரிக்குட்டிகள், விஷ தேள்கள், விஷ பாம்புகள், ஆமைகள் உட்பட 134 அரிய வகை வன விலங்குகள் கடத்தி வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து அரிய வகை உயிரினங்களும் எந்த நாட்டில் இருந்து வந்ததோ அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

    மேலும் கொழும்பில் இருந்து ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 5,274 காரட் வைர கற்கள், நவரத்தினங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ஒரு புத்தர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஆக மொத்தம் 2022-ம் ஆண்டில் ரூ.124 கோடியே 88 லட்சம் மதிப்பிலான தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டுள்ளன. 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 கடத்தல் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளிநாடுகளில் இருந்து மின்னணு சாதன பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவது பெரிய அளவில் குறைந்து விட்டது. அதேபோல் சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு அடிக்கடி கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள், கடல் குதிரைகள், மயில் இறகுகள் போன்றவைகள் கடத்தலும் பெருமளவு குறைந்து விட்டன.

    2021-ம் ஆண்டில் ரூ.70 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ தங்கம் பறிமுதல் ஆனது. 2022-ம் ஆண்டில் அது ரூ.94 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள 205 கிலோவாக அதிகரித்து உள்ளது.

    இதேபோல் 2021-ம் ஆண்டில் ரூ.11 கோடி மதிப்பிலான ஹெராயின், மெத்தோ குயிலோன், பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் பிடிபட்டன. 2022-ம் ஆண்டில் அது ரூ.14 கோடியாக அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு பிடிப்பட்ட வெளிநாட்டு பணம் 2021-ம் ஆண்டில் ரூ.9 கோடியாக இருந்தது. 2022-ம் ஆண்டில் அது ரூ.10 கோடியே 98 லட்சமாக அதிகரித்தது.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா மட்டுமின்றி மத்திய வருவாய் புலனாய்வு துறை, மத்திய போதை தடுப்பு பிரிவு துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் திடீர் சோதனைகள் நடத்தி கடத்தல் தங்கம், போதைப் பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவைகளை பெரிய அளவில் பறிமுதல் செய்து உள்ளனர்.

    • துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது.

    தங்க கடத்தலை கண்காணிக்க அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தவிர விமான நிலையம் முழுவதும் மாறுவேடத்திலும் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணித்தபோது அந்த நபர் தனது உள்ளாடையில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அதில் 172 பவுன் இருந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தை அந்த பயணி, விமான நிலையத்தில் பணியில் இருந்து விமான நிறுவன ஊழியர்கள் இருவரிடம் கொடுத்தார்.

    அவர் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு சென்று அங்கு காத்திருந்த இன்னொரு நபரிடம் சேர்த்தார். இவை அனைத்தையும் ரகசியமாக கண்காணித்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த பயணி கோழிக்கோட்டை சேர்ந்த முகமது பாசில் மற்றும் அவருக்கு உதவி செய்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    கைதான விமான நிறுவன ஊழியர்கள் இருவரும் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விமானத்தில் வந்த பயணிகளை சுங்க துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தங்கம் கடத்தி வந்த 3 பயணிகளை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் உடலுக்குள் காப்ஸ்யூல் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    3 பேரிடம் இருந்தும் மொத்தம் 1015.80 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.28 கோடியாகும். இதனை கடத்தி வந்த 3 பயணிகளையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பசை வடிவிலான தங்கத்தை அபுதாபி பயணி ஒருவர் உடலில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
    • தங்கம் கடத்தல் குறித்து பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில அந்த பயணி தனது உடலில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1.15 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயணி உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட பசை வடிவ தங்கம் பறிமுதல்.
    • செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும் 9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும்.

    இதே போல் அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

    இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த பயணியிடம் சோதனை.
    • மொத்தம் 823 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த சையத் இப்ராகிம் முகமது ரஃபி என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 707 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர் சட்டைப்பையில் மறைத்து எடுத்து வந்த 116 கிராம் தங்கச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது, மொத்தம் ரூ. 36.32 லட்சம் மதிப்புள்ள 823 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விமான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவ தங்கம்.
    • ஐக்கிய அரபு அமீரக பயணியிடம் ரூ.55.96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

    சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கடந்த 07.09.2022 அன்று வந்த இன்டிகோ விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம், பசை வடிவில் மறைத்து வைத்திருந்த 740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.33.15 லட்சம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதேபோல், 09.09.2022 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய அஷ்பேக் ஹாசனை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம், மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தங்கச்சங்கிலி ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1,249 கிலோ எடைக்கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.55.96 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இரண்டு சோதனைகள் மூலம் மொத்தம் ரூ.89.11 லட்சம் மதிப்பிலான, 1.989 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை இணைஆணையர் எம்.மேத்யூ ஜோலி குறிப்பிட்டுள்ளார்.

    • மொத்தம் ரூ.2.83 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல்.
    • விமான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட தங்கக் கட்டி பறிமுதல்.

    சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர். உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 26.08.2022 அன்று டாக்காவிலிருந்து வந்த விமானத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது அந்த விமானத்தின் கழிவறை ஒன்றில் ரூ.45.15 லட்சம் மதிப்புள்ள 995 கிராம் எடையுள்ள 1 தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  


    இதேபோல் 25.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 29.92 லட்சம் மதிப்புள்ள 642 கிராம் தங்கமும், 24.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.78.46 லட்சம் மதிப்புள்ள 1.736 கிலோ கிராம் தங்கமும் பிடிபட்டது.

    23.08.2022 அன்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.55.59 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கிராம் தங்கமும் 22.08.2022 அன்று நடத்தப்பட்ட இருவேறு சோதனைகளில் ரூ.73.79 லட்சம் மதிப்புள்ள 1.622 கிலோ கிராம் தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 


    22.08.2022 முதல் 26.08.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகள் இருக்கைக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
    • கடந்த 4 நாட்களில் மொத்தம் 2.52 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய் பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

    சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத்தகவலின் படி, நேற்று முன்தினம் (21.08.2022) இலங்கையைச் சேர்ந்த 4 ஆண் பயணிகளிடம் சோதனை நடத்திய போது ரூ.59. 35 லட்சம் மதிப்புள்ள 1.310 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை இவர்கள் பசை வடிவில் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மற்றொரு சோதனையின் போது ரூ.12.86 லட்சம் மதிப்புள்ள 784 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் பயணிகள் இருக்கைக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதே போல் கடந்த 20 ந் தேதி அன்று ரூ.17.89 லட்சம் மதிப்புள்ள 395 கிராம் தங்கமும், 19ந் தேதியன்று சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சல்களுக்கான அஞ்சலகத்தில் இரண்டு பார்சல்களில் 31 தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    ஒரு பார்சல் சீனாவில் இருந்தும், மற்றொரு பார்சல் பிரிட்டனில் இருந்தும் வந்திருந்தன. உரிமை கோரப்படாத இந்த பார்சல்களில் ரூ.22.49 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் 24 காரட் சுத்த தங்கக்கட்டிகள் இருந்தன. இவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த 18ந் தேதியன்று ரூ.24.72 லட்சம் மதிப்புள்ள 540 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியும், சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள 2.52 கிலோ கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×