search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling gold"

    • துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது.

    தங்க கடத்தலை கண்காணிக்க அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தவிர விமான நிலையம் முழுவதும் மாறுவேடத்திலும் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து கேரளாவின் நெடும்பாச்சேரிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணித்தபோது அந்த நபர் தனது உள்ளாடையில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    அதில் 172 பவுன் இருந்தது தெரியவந்தது. இந்த தங்கத்தை அந்த பயணி, விமான நிலையத்தில் பணியில் இருந்து விமான நிறுவன ஊழியர்கள் இருவரிடம் கொடுத்தார்.

    அவர் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு சென்று அங்கு காத்திருந்த இன்னொரு நபரிடம் சேர்த்தார். இவை அனைத்தையும் ரகசியமாக கண்காணித்த அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த பயணி கோழிக்கோட்டை சேர்ந்த முகமது பாசில் மற்றும் அவருக்கு உதவி செய்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    கைதான விமான நிறுவன ஊழியர்கள் இருவரும் இதற்கு முன்பும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்போன் பேட்டரிக்குள் இருந்த தங்க தகடுகள் பறிமுதல்.
    • 2 நாட்களில் மொத்தம் ஒரு கிலோ 936 கிராம் தங்கம் பறிமுதல்.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 38 லேப் டாப்கள் இருந்தன. மேலும் ஒருவரிடம் இருந்த செல்போன் பேட்டரியை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்த போது அதில் தங்க தகடுகள் இருந்தன. பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.59 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்த ரூ.16 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள 380 கிராம் தங்க துண்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    மேலும் விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில் கிடந்த அட்டைபெட்டியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள 356 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.93 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 936 கிராம் தங்கம் மற்றும் 38 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த முகமது கனி (வயது 38) என்பவர் தலைமையில் பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (41), எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த மைதீன் (51), திருச்சியை சேர்ந்த முகமது ரபீக் (37) ஆகிய ஆண்கள் ஒரு குழுவாகவும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கற்பகம் (45) என்பவர் தலைமையில் திருச்சியை சேர்ந்த ஷமீம் பேகம் (45), நாகூரம்மா (40), கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (41), மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (55) ஆகிய பெண்கள் ஒரு குழுவாகவும் வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இவர்கள் 9 பேர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அனைவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 5 பெண்கள் உள்பட 9 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 9 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பில் இருந்து வந்த 10 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 365 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை அவர்கள் யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பேனாக்களில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வந்தது. இதற்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலரை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக தங்கம் கடத்தல் சம்பவம் குறைந்திருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு ஸ்கூட் என்ற தனியார் விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை போட்டனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த நாராயணன் என்ற பயணியிடம் சோதனை செய்தனர். அவரது நடவடிக்கையில் தொடர்ந்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சல்லடை போட்டு சோதித்தனர். அவர் தனது கைப்பையில் வைத்திருந்த பேனாக்களை நவீன கருவிகள் மூலம் ஸ்கேன் செய்தபோது அதில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அவர் கொண்டு வந்த பேனாக்களில் இருந்து 599 கிராம் எடை கொண்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நாராயணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #TrichyAirport
    மேற்கு வங்காள மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இருவேறு எல்லைப்பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் எடை ஒன்றரை கிலோவுக்கும் அதிகமானதாக உள்ளது. #WestBengal
    கொல்கத்தா:

    வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் வழியாக தங்கம், போதை மருந்துகள் போன்றவை கடத்தப்படுவது அடிக்கடி நடந்துவருகிறது. இதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமுதியா எல்லைப்பகுதியில் இருந்து 384.325 கிராம் கடத்தல் தங்கத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 12 லட்சத்து 33 ஆயிரத்து 684 என கணக்கிடப்பட்டுள்ளது.

    இதேபோல், கோஜடாங்கா எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 39 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை ஆயிரத்து 300 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #WestBengal
    மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சாகீப் அகமது (வயது 36) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் அவரது சூட்கேசில் மின்சார வயர் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த வயரை சோதனை செய்தபோது, அதில் செம்பு கம்பிகளுக்கு பதிலாக தங்க கம்பிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 155 கிராம் தங்க கம்பிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அதே போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த காளிதாஸ் (39) என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து சாகீப் அகமது, காளிதாஸ் இருவரும் யாருக்கு இந்த தங்கத்தை மலேசியா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
    துபாயில் இருந்து வந்த பயணிக்காக ரூ. 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய விமானப் பணியாளருடன் அதை பெற காத்திருந்தவரையும் டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். #Airlinestafferheld #IGI #goldbiscuitssmuggling
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் தங்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி அதிகமாக உள்ளதால் கள்ளத்தனமாக பல்வேறு வழிகளின் மூலம் தங்கம் கடத்தி வருபவர்களின் என்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், துபாயில் இருந்து இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை இன்று சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, சந்தேகப்படும் வகையில் மூன்றாவது வாசல் வழியாக வெளியேற முயன்ற ஒருவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கழிப்பறையில் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். தனியார் விமான நிறுவன பணியாளரான அந்நபர் ஒரு கிலோ எடையுள்ள 9 தங்க பிஸ்கட்களை மறைத்து கடத்தி வந்தது இந்த சோதனையில் தெரியவந்தது.

    இதையடுத்து, பயணிகள் உதவியாளராக பணியாற்றும் முஹம்மது ஜாவெத் என்னும் அந்நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் துபாயில் இருந்து இன்று வந்த விமானத்தில் ஒரு பயணி அந்த தங்க பிஸ்கட்களை தந்து டெல்லி விமான நிலையத்தில் காத்திருக்கும் நபரிடம் ஒப்படைக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

    அவர் அளித்த தகவலின்படி, துபாய் விமானத்தில் வந்த நபரை பிடிக்க முடியவில்லை. எனினும், கடத்தல் தங்கத்தை பெற்றுசெல்ல மூன்றாவது முனையம் வாசலில் காத்திருந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இன்று பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் 31 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #Airlinestafferheld #IGI  #goldbiscuitssmuggling  #tamilnews
    கோவை விமான நிலையத்தில் எந்திரத்துக்குள் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு சூட்கேசில் இருந்த சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ)‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகளை சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும்.

    இதனை கடத்தி வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். 
    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த சீனிவாசன் (வயது 32) என்பவர் வந்தார். அவரை சோதனை செய்தபோது, உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 359 கிராம் தங்கம் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து (36) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்க கம்பிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த யூனுஸ் (40) என்பவர் வந்தார். இவரது உடைமைகளை சோதனை செய்தபோது விளையாட்டு பொருட்களில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 3 பேரிடம் இருந்தும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
    துபாயில் இருந்து வந்த விமானத்தில், இடுப்பை சுற்றி 13 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது கர்நாடக மாநிலம் சிக்கமகளூரைச் சேர்ந்த பத்மா வெங்கடராமையா (வயது 52) என்ற பெண், விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    அந்த பெண்ணின் இடுப்பு பகுதி சற்று பெரிதாக காணப்பட்டதால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று, பெண் சுங்க அதிகாரிகளை கொண்டு சோதனை செய்தனர். அப்போது அவர், தனது இடுப்பை சுற்றி 25 தங்க சங்கிலிகள், 4 தங்க வளையங்களை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் அவர், யாருக்காக இந்த தங்க நகைகளை துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கைதான பத்மா வெங்கடராமையாவிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 ¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மலேசிய பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செம்பட்டு:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, கொழும்பு, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் ஒரு சிலர் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் போன்றவற்றை கடத்தி வருகின்றனர். இதனால், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கின்றனர்.

    அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலர் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்ததாக மலேசிய பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.

    இந்நிலையில், மலேசியாவிலிருந்து நேற்று காலை திருச்சி வந்த தனியார் விமானம் ஒன்றில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த தேவசுபத்ரா என்ற பெண் தனது உள்ளாடையில் மறைத்து 268 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.8¼ லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான நிலையத்தில் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    செம்பட்டு:

    திருச்சி விமானநிலையத்துக்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சவுதிஅரேபியா உள்பட பல நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமானநிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை வான்நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்ததில், அவர்கள் ஸ்டேப்லரில் மறைத்து 300 கிராம் எடை கொண்ட தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 பேரிடமும் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×