search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake document"

    திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்து 768 ரூபாய் கடன் இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். தான் கடன் எதுவும் வாங்கவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதே போல் திருப்பூர் அருள் புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் சிவபிரகாசம் என்பவரும் இதே வங்கியில் இருந்து ரூ. 6 கோடியே 12 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வங்கியில் இருந்து தகவல் வந்தது.

    அவரும் வங்கியில் கடன் எதுவும் வாங்க வில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் ஹாரூண் ரஷித் என்பவர் இதே வங்கியில் ரூ. 5 கோடி கடன் கேட்டு உள்ளார்.அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் வழங்கி உள்ளது. ஆனால் ரூ. 5 கோடி கடனுக்கு ஹாரூண் ரஷித் ரூ. 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்றதாக வங்கியில் இருந்து தகவல் வந்துள்ளது.

    வங்கியால் ஏமாற்றப்பட்ட ராமசாமி, சிவபிரகாசம், ஹாருண் ரஷித் ஆகியோர் இந்த மோசடி தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரனிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது இந்த மோசடியில் ஈடுபட்டது திருப்பூர் சிவசக்தி நகர் செந்தில் குமார் (35), அவரது மனைவி பிரியா (31) என்பது தெரிய வந்தது.

    இவர்களுக்கு உடந்தையாக கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணாவும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவர்கள் 3 பேரும் போலி ஆவணம் தயாரித்து பனியன் அதிபர்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி உள்ளது தெரிய வந்தது.

    இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் சோமாயாஜி, உதவி பொது மேலாளர் அனந்த் நாயக், சீனியர் மேலாளர் சங்கர், துணை பொது மேலாளர் பத்மா ரெட்டி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மோசடி பணத்தில் 5 சதவீதம் வரை கமி‌ஷன் பெற்று இருப்பதும் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக வங்கி மேலாளர் சோமாயாஜியை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில் குமார், அவரது மனைவி பிரியா, இவர்களுக்கு உதவிய ராஜேஷ் கண்ணா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அவர்களில் தற்போது செந்தில் குமார், பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராஜேஷ் கண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடைய வங்கி அதிகாரிகள் ஆனந்த் நாயக், சங்கர், பத்மா ரெட்டி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சோமாயாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. #tamilnews
    சென்னை ஆதம்பாக்கத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி டீக்கடைக்காரர் பெயரில் வங்கியில் பல லட்சம் மோசடி நடைபெற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடியை சேர்ந்தவர் முருகேசன். தற்போது இவர் சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவில் தங்கியுள்ளார். அங்கு 35 வருடங்களாக டீக் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று வியாபாரத்தை விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். அதையடுத்து அவர் வேறு வங்கியில் கடன்பெற்று இருக்கிறாரா? என வங்கி மேலாளர் பரிசோதித்து பார்த்தார்.

    அப்போது ஒரு தனியார் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் இவரது பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் இவரது பெயரில் 3 போலிகம்பெனிகள் உருவாக்கி ரூ.3 லட்சத்துக்கு கடன்பெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    முருகேசன் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையும், டிரைவிங் லைசன்சும் தயாரித்துள்ளனர். வேறு செல் போன் நம்பரும் பெற்றுள்ளனர். அதை வைத்து தான் கிரெடிட் கார்டு பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் முருகேசன் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    ஜாமீன் பெறுவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் வக்கீல், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கோவை:

    கோவை காந்திபுரம் சத்தி ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போதை பொருளை வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல், கோவை சாய்பாபா காலனி முகமது சிகாப், குனியமுத்தூர் ஜூல்பிகர் அலி, உக்கடம் முகமது அனாஸ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் இருந்து இந்த போதை பொருட்களை வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கூறி முகமது சிகாப் வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதற்காக மருத்துவ சான்று, திருமண பத்திரிகை ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீசாருக்கு நீதிபதி தஞ்சய் பாபா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் இல்லை என்பதும், அவர் திருமண பத்திரிகை போலியாக அச்சடித்து மனு தாக்கல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணம் தயாரித்து கோர்ட்டை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்ட வக்கீல் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர்கள் மீது கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழக்கு பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி. சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.
    திருமுல்லைவாயல் அருகே போலி ஆவணம் தயாரித்து கோவில் நிலத்தை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆவடி:

    பெரம்பூர் மேலப்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரா (வயது 23). இவருடைய அண்ணன் ஜெவர்சந்த் (28). இருவரும் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் புதிதாக இடம் வாங்கி வீடு கட்ட தீர்மானித்தனர். இதையடுத்து இடம் பார்க்க திருமுல்லைவாயல் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது காஞ்சீபுரம், சண்முகா நகரை சேர்ந்த ஜாகீர் உசைன் (54), திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு நவசக்திநகரை சேர்ந்த கவுதம்பிரபு (30), அவருடைய மனைவி ஸ்டெல்லாமேரி (28) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நிலம் என்று கூறி திருமுல்லைவாயல் அருகே உள்ள ஒரு இடத்தை 28 லட்சம் ரூபாய்க்கு மகேந்திராவுக்கும், அவரது அண்ணன் ஜெவர்சந்த்துக்கும் விற்பனை செய்தனர்.

    இதனையடுத்து அந்த இடத்தில் வீடு கட்டும் பணியை இருவரும் தொடங்கினர். உடனே அப்பகுதி மக்கள் அங்கு வந்து இது எட்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம், நீங்கள் எப்படி இங்கு வீடு கட்ட முடியும்? என்று கூறி வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து மகேந்திரா ஆவடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சர்வே எண்ணை ஆய்வு செய்ததில் இவர்கள் வாங்கிய இடம் எட்டியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பதும், போலி ஆவணம் தயாரித்து கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஜாகீர் உசைன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து விற்றதும் தெரிந்தது.

    இதுகுறித்து மகேந்திரா திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசைன், கவுதம்பிரபு மற்றும் ஸ்டெல்லாமேரி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    கோவை மாவட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து நீர்வள பொதுப் பணித்துறையில் சேர்ந்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்ட பொதுப்பணித் துறையில் நீர்வள ஆதாரப் பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றுபவர் கிருஷ்ண குமார்(வயது 40).

    இவரது தந்தை பொதுப் பணித்துறையில் பணியாற்றியவர் ஆவார். அவர் பணியின் போது மரணம் அடைந்ததால் கருணை அடிப்படையில் கிருஷ்ணகுமாருக்கு வேலை கிடைத்தது.

    கிருஷ்ணகுமார் கடந்த 2007-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக ஈரோட்டில் பணியில் சேர்க்கப்பட்டார். அப்போது இவர் கல்வி சான்றிதழாக 10-ம் வகுப்பு சான்றிதழை சமர்ப்பித்தார். தொடர்ந்து பணியாற்றிய கிருஷ்ண குமார் 2014-ம் ஆண்டு கோவை நீர்வள ஆதாரப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே கிருஷ்ண குமார் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ்களை பொதுப் பணித்துறை உயரதிகாரிகள் கல்வித்துறை அலுவலகத்துக்கு அனுப்பி சரி பார்த்தனர். அப்போது சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணகுமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், அசல் சான்றிதழை சமர்ப்பிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பின்னரும் கிருஷ்ண குமார் அசல் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. மேலும் அவர் பணிக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிருஷ்ணகுமார் மீது நீர்வள ஆதாரப்பிரிவு முதன்மை என்ஜினீயர் எத்திராஜ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் கிருஷ்ணகுமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
    ×