search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chutney"

    • சாப்பிடும் உணவின் சுவையை அதிகப்படுத்தும் தன்மை சட்னிக்கு உண்டு.
    • சிற்றுண்டி உணவு வகைகளில் சட்னி தவிர்க்கமுடியாதது.

    சட்னி வகைகளில் பெரும்பாலானவை சுவையோடு ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுபவை.

    புதினா சட்னி: கோடை காலத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. இதில் வைட்டமின்கள் பி, சி, டி ஆகியவை நிறைந்திருக்கின்றன. வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தையும் எளிமையாக்கும். பசி உணர்வை தூண்ட செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். குமட்டலை போக்கும். உடல் வீக்கத்தை குறைக்க உதவும்.

    நெல்லிக்காய் சட்னி: நெல்லிக்காய் கசப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதனை சட்னியாக தயாரித்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

    கொத்தமல்லி சட்னி: எளிதாக தயார் செய்துவிடலாம் என்பதோடு சுவையும் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் சி, கே மற்றும் புரதங்களும் அதிகம் இருக்கின்றன. செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். நீரிழிவு நோயாளிகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை தூண்ட உதவும். வாய்ப்புண் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் கொத்தமல்லி சட்னி சாப்பிடலாம்.

    தக்காளி சட்னி: தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்பு குறைவான அளவிலேயே உள்ளது. தக்காளி சட்னி இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும் தன்மை கொண்டது.

    வெங்காயம்-பூண்டு சட்னி: வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த சட்னியை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இரத்தத்தில் கொழுப்பை ஒழுங்குபடுத்தும். பக்கவாதம் வராமல் தடுக்கும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இது சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவைக்கும்.

    கருவேப்பிலை சட்னி: கறிவேப்பிலை இல்லாமல் எந்த சமையலும் முழுமை பெறாது. இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. உணவுக்கு நறுமணத்தையும், நல்ல சுவையையும் ஏற்படுத்தி கொடுக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆன்டி ஆக்சிடென்டுகள், வயிற்றுப்போக்கு, இரத்தசோகை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இரைப்பை குடல் பிரச்சினையை தீர்க்கவும் உதவும். கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

    • வாயு தொல்லை இருப்பவர்கள் இந்த துவையல் சாப்பிடலாம்.
    • இந்த துவையலை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய நெல்லிக்காய் - 4,

    மாங்காய் இஞ்சி - 50 கிராம்,

    கொத்துமல்லித் தழை - கைப்பிடி,

    பச்சை மிளகாய் - 2,

    புளி - சிறு அளவு,

    துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும்.

    நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

    சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

    குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்' தயார்.

    • கத்திரிக்காயை வைத்து பல சமையல் வகைகள் செய்யலாம்.
    • இன்று கத்திரிக்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கத்திரிக்காய் - 200 கிராம்

    தக்காளி - 3

    பெ. வெங்காயம் - 1

    ப. மிளகாய் - 1

    காய்ந்த மிளகாய் - 4

    கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - தே.அளவு

    கறிவேப்பில்லை - தே.அளவு

    உப்பு - தே.அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கத்திரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

    • தினமும் கொத்தமல்லி சாப்பிட்டால் கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அது குணமாகும்.
    • இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தேங்காய் – கொத்தமல்லி சட்னி.

    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி – ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்யவும்),

    பச்சை மிளகாய் – 4,

    தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,

    பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,

    எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,

    உப்பு – தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    மிக்சியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் அரைத்து எடுக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்த வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான சட்னி ரெடி.

    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2
    தக்காளி - 1 சிறியது
    வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    உப்பு - ருசிக்கேற்ப  

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்

    செய்முறை :


    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

    வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.

    மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.

    மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாங்காய்  - 1,
    காய்ந்த மிளகாய் - 8,
    பச்சை மிளகாய் - 2,
    உ.பருப்பு - 1 கைப்பிடி,
    க.பருப்பு - 2 ஸ்பூன்,
    பெருங்காயம்   சிறு துண்டு,

    தாளிக்க

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.



    செய்முறை

    மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.

    சுவையான மாங்காய் துவையல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுண்டைக்காயில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சுண்டைக்காயை வைத்து சூப்பரான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை சுண்டைக்காய் - 1 கைப்பிடி
    பச்சை மிளகாய் - 4
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1 (சிறியது)
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    பெருங்காயம் - சிறிதளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உளுந்து - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    பச்சை சுண்டைக்காய்களை கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை கழுவிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சைமிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.

    அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டு அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதியில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இந்த பழத்தில் இன்று துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    அவகோடாவில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

    தேவையான பொருட்கள்

    அவகோடா பழக்கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - 1 கப்
    உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 8
    பூண்டு - 5 பல்
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும் அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சத்தான சுவையான அவகோடா துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இன்று கொள்ளுவில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1/4 கப்
    கடலைப் பருப்பு - 1 டேபிள்
    ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    புளி - சிறு நெல்லிக்காய் அளவு
    வரமிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 3/4 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    அதே வாணலியில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ளபொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண கோளாறு, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி இந்த இஞ்சி பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
    இஞ்சி - பெரிய துண்டு
    புளி - சிறு அளவு
    வரமிளகாய் -1
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை  :

    இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.

    நன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    சூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.

    இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு
    மிளகாய் வத்தல் - 5
    தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
    புளி - பாக்கு அளவு
    பூண்டு பற்கள் - 6
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.

    பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.

    அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.

    ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.

    சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.

    இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×