search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite Struggle"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. பல வழக்குகளும் போடப்பட்டன. அதன் விவரம் குறித்து விரிவாக பார்க்கலாம். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. பல வழக்குகளும் போடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * 1992- குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை. மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது, பணிகள் நிறுத்தப்பட்டன.

    * 1.8.1994- தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.

    * 14.10.1996- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது.

    * 23.11.1998- ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டிருந்தது.

    * 23.3.2013- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல்நல குறைவுகள் ஏற்பட்டன.

    * 29.3.2013- இந்த தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் ஜெயலலிதா உத்தரவு.

    * 2.4.2013- உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவிட்டது.

    * 31.5.2013- தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    * 12.2.2018- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

    * 09.4.2018- தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.

    * 22.5.2018- குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கி 100-வது நாளில் தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.



    * 23.5.2018- தூத்துக்குடி பொது மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகே போலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் உயிரிழப்பு. இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.

    * 28.5.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

    * 22.6.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.

    * 15.12.2018- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

    * 2.1.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.

    * 18.2.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. #ThoothukudiSterlite

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், ச.ம.க. தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் போராடுகிற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல் துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர்.

    கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

    அமைதியாக போராடுகிற மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

    ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    ஜனநாயக ரீதியில் போராடும் மக்களிடம் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி தடியடி, புகைக்குண்டு என அப்பகுதியை கலவரபூமியாக மாற்றியிருப்பது கண்ட னத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக்கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போராட்டக்களத்தில் ஏற்பட்ட துப்பாக்கிசூடு சம்பவத்தால் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் உயிரிழந்த அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் மக்களை அழிக்கும் எமன். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று அனைத்தும் பாழாகியுள்ளது. தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் எழுச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும். அடித்து ஒடுக்க முற்பட்டால் நிலைமை விபரீதமாகும்.

    மக்கள் புரட்சியாக போராட்டம் மாறுவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெல்லட்டும். மக்கள் வாழும் நகரமாக தூத்துக்குடி நிலைக்கட்டும்.
    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடியில் உள்ள 65 வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பிரைண்ட் நகர், திரேஸ்புரம், அண்ணாநகர் தெர்மல் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திரமரப்பட்டி, புதுக்கோட்டை, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    சிறிய பெட்டி கடைகள், பால் பூத்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. பெரிய ஓட்டல்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதி, பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. புதியம்புத்தூர் பகுதியிலும் பிரதான வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்திலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.

    தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தபட்டுள்ளன. 
    ×