search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Sterlite"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது.
    • அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.

    இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது. மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் ஹேமந்த், புறநகர் டி.எஸ்.பி. சுரேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் சரவணன், தீயணைப்புத்துறை மாவட்ட துணை அலுவலர் ராஜூ மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கழிவுகளை அகற்றும் பணிக்காக ஒரு ஒப்பந்தக்காரரை தேர்வு செய்து, கழிவுகளை அகற்றுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும், எவ்வளவு நாட்கள் தேவைப்படும், என்னென்ன எந்திரங்கள் தேவைப்படும் என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் 9 பேர் கொண்ட மேலாண்மை குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது. அகற்றப்படும் கழிவுகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த வாசலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன்மூலம் கழிவுகள் அகற்றும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவன வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கழிவுகள் அகற்றும் பணி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும்.
    • துணை கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

    நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள ஆலை நிர்வாகம் அனுமதி கேட்ட நிலையில், அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.

    இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் விசாரணையின்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை எனில் உபகரணங்கள் பாதிப்படையும் எனக் கூறப்பட்டது. அதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள துணை கலெக்டர் தலைமையிலான 9 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாவும், ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி கிடையாது எனவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
    • தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.

    புதுடெல்லி:

    சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையின் சிவில் மற்றும் கட்டுமான பாதுகாப்பு, உறுதி மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு உயர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓர் அறிக்கையை அளித்தது.

    இந்த குழு தீவிரமான கட்டுமான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தது.

    இதனையடுத்து கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஒரு கடிதம் அனுப்பினார்.

    அதில் ஆலையில் மீதியுள்ள ஜிப்சத்தை அகற்றும் நடவடிக்கையை, அதற்கு தேவையான வேலையாட்களை, லாரி முதலிய எந்திரங்களை அனுமதிக்கலாம். ஜிப்சம் முழுவதும் அகற்றப்பட்டபிறகு அதற்கான அனுமதி திரும்ப பெறப்படும். இந்த பணியை செய்ய எவ்வளவு நாள், எவ்வளவு ஆட்கள், எந்திரங்கள் தேவை என்ற விரிவான முன்மொழிவை ஆலை வழங்க வேண்டும்.

    ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவு நீர் வெளியாகும் வரையில், அதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், தினசரி கழிவு நீரை மீண்டும் கழிவுக்குழிக்குள் பம்பிங் செய்யும் நடவடிக்கையை அனுமதிக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 4-வது கழிவுக்குழியின் கரை உடைவதை தடுப்பதற்காக அதனை சீர் செய்யும் வேலையை அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆட்களை கொண்டு இதனை செய்ய வேண்டும்.

    பசுமை வட்டப் பராமரிப்பு, புதர்களையும், காய்ந்த மரங்களையும் அகற்றும் பணிகளைப் பொறுத்தவரை ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலரின் மேற்பார்வையின்கீழ் நடக்க வேண்டும்.

    மேற்கண்ட 4 நடவடிக்கைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாவட்ட கலெக்டர் அனுமதிக்கலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளரின் கடிதம் குறிப்பிடுகிறது.

    அதே நேரம், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அனுமதிக்கவில்லை என்பதையும் கோர்ட்டு குறிப்பிட்டது.

    ஆலை வளாகத்தில் சிவில், கட்டுமானப் பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆய்வு மேற்கொள்வது, கருவிகள், உதிரிபாகங்களை வெளியே கொண்டு செல்வது, பிற கச்சா பொருட்களையும், தொழிற்சாலை இயக்கத்தில் வெளியான பொருட்களையும் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்வது ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்கவில்லை.

    கூடுதல் தலைமைச்செயலாளர் கடிதத்தில் அனுமதி அளித்த செயல்பாடுகளை பொறுத்தவரை, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கோர்ட்டு அனுமதிக்கிறது.

    மாவட்ட கலெக்டர் பரிந்துரை அளிக்காத நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இது தொடர்பாக மேற்கொண்டு கூடுதல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்க வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.

    இந்த அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சீர்தூக்கிப் பார்த்து தமது கருத்தை மே மாதம் 4-ந் தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த தொழிற்சாலையில் ரிபைனரி, காப்பர் ராட் பிளான்ட், 160 எம்.டபிள்யூ.கேப்டிவ் பவர் பிளாண்ட், சல்பரிக் ஆசிட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் நச்சு புகைகளால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தொடர்ந்து ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    100-வது நாளான மே 22-ந் தேதி போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

    அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதே ஆண்டு மே 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

    இந்நிலையில் மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதனிடையே பராமரிப்பு பணிக்காக சில மாதங்கள் திறக்க அனுமதி கோரி புதிதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா 2-ம் அலையில் ஏராளமானவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்ததால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் 3 மாதம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்றது. பின்னர் காலஅவகாசம் முடிந்ததால் மீண்டும் ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

    மக்களின் எதிர்ப்பு, அரசின் உத்தரவால் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆலையை திறக்க மனு தாக்கல் செய்த போதும் அதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம் ஆயில், கேஸ், ஜின்க், லீட், சில்வர், காப்பர், இரும்புத்தாது, ஸ்டீல், அலுமினியம் மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

    வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடியில் உள்ள நவீன ஸ்மெல்டர், ரிபைனிங் காம்ப்ளக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி வேதாந்தா, ஆக்சிஸ் கேபிடல் உடன் இணைந்து ஸமெல்டர் காம்ப்ளக்ஸ் (முதன்மை மற்றும் 2-ம் நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயன்ட் டிரீட்மென்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் பிளான்ட், ஆர்.ஓ. யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேஷன் யூனிட், வசதிகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் ஆகிய 10 வகையான யூனிட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆர்வமுள்ள பொருளாதார திறன் கொண்ட தரப்பினர் அடுத்த மாதம் 4-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
    • ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. பல வழக்குகளும் போடப்பட்டன. அதன் விவரம் குறித்து விரிவாக பார்க்கலாம். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. பல வழக்குகளும் போடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * 1992- குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க இடம் தரப்படவில்லை. மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தபோது, பணிகள் நிறுத்தப்பட்டன.

    * 1.8.1994- தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது.

    * 14.10.1996- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது.

    * 23.11.1998- ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆலை சிறிது காலம் மூடப்பட்டிருந்தது.

    * 23.3.2013- ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவினால் தூத்துக்குடி நகர மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்ற பல உடல்நல குறைவுகள் ஏற்பட்டன.

    * 29.3.2013- இந்த தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் ஜெயலலிதா உத்தரவு.

    * 2.4.2013- உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவிட்டது.

    * 31.5.2013- தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை ரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    * 12.2.2018- ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

    * 09.4.2018- தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.

    * 22.5.2018- குமரெட்டியாபுரம் போராட்டம் தொடங்கி 100-வது நாளில் தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. போலீசார் துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.



    * 23.5.2018- தூத்துக்குடி பொது மருத்துவமனை முன்பு இறந்தவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம். ஆஸ்பத்திரி அருகே போலீஸ் வேன் தீவைப்பு. தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் துப்பாக்கிசூடு. மேலும் ஒருவர் உயிரிழப்பு. இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு. ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிப்பு.

    * 28.5.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

    * 22.6.2018- ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு.

    * 15.12.2018- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

    * 2.1.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு.

    * 18.2.2019- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. #ThoothukudiSterlite

    தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #ThoothukudiSterlite #CentralGovernment #ChennaiHighCourt
    சென்னை:

    தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற அறிக்கையை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளது சட்ட விரோதம் என்று கூறப்பட்டிருந்தது.

    மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசு அடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தான் காரணம் என உறுதி செய்யப்பட்டதாலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.



    இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கையை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாதது தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

    மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் அவர் வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #ThoothukudiSterlite #CentralGovernment #ChennaiHighCourt
    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #thirumurugangandhi #thoothukudisterlite

    வேலூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

    பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சினை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் புண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, திருமுருகன் காந்தி உடல்நிலையை மருத்துவ குழுவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #thirumurugangandhi #thoothukudisterlite

    சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் 45 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். #sterliteplant
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி பொது மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை காலவரம்பின்றி மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

    இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 உறுப்பினர்களை கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் நேரில் பார்வையிட்டும் ஆய்வு நடத்தியும் மக்கள் கருத்தை கேட்டும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    மூவர் குழுவினர் சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்று ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிட்டனர். பின்னர் நேற்று முன் தினம் தூத்துக்குடியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

    அதன் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பினார்கள். நேற்று அவர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்றனர்.

    சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் 45 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுத்திருப்பவர்களில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், காண்டிராக்டர்கள், விவசாயிகள், கிராம மக்களும் அடங்குவர். இவர்கள் தங்கள் விருப்பம் உண்மைதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக மனுவுடன் தங்களது ஆதார் எண்ணையும் இணைத்துள்ளனர்.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வு குழுவினரும் ஆலைக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள் வந்திருப்பதை உறுதி செய்தனர்.

    இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாய ஆய்வு கமிட்டியின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. #sterliteplant
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு சென்னையில் 24-ந் தேதி விசாரணை நடத்துகிறது. #ThoothukudiSterlite #SterliteCase
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

    இந்தக்குழு சென்னை சேப்பாக்கம் எழிலகம் கலசமகாலில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு விசாரணை நடத்துகிறது. இந்த அறிவிப்பை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தொடர்பாகவோ அல்லது ஆதரவு தொடர்பாகவோ மனு அளிக்க விரும்புபவர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ThoothukudiSterlite #SterliteCase
    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் வந்தது.

    இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குழுவின் வருகைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து பெங்களூருவில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குனருக்கு தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீங்கள் எழுதிய கடிதம் கடந்த 17-ந் தேதி எங்களுக்கு கிடைத்தது. அதில், 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னை மற்றும் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தை (ஸ்டெர்லைட்) பார்வையிடுவதற்கு கமிட்டி வருவதாக பயண திட்டத்தை குறிப்பிட்டு இருந்தீர்கள்.

    இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்விலும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.



    அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் 10.9.18 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யவேண்டும் என்று அந்த கோர்ட்டில் 14-ந் தேதியன்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    அதோடு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கை எதிர்த்தும், தமிழக அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகார எல்லை குறித்தும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், கமிட்டி பார்வையிடும் நிகழ்வை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    எனவே, கமிட்டியின் திட்டமிடப்பட்டுள்ள பயணத்தை ரத்து செய்ய வேண்டும். அதோடு கமிட்டியின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்று தீர்ப்பாயத்தின் தலைமை நடுவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதிபதிகள் எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு வக்கீல்கள் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா, பா.வினோத் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வக்கீல் ரோகிணி மூசா ஆஜராகி, ‘ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளபடி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக வளாகத்தில் நிர்வாக பணிகள், பராமரிப்பு பணிகளுக்கான அனுமதி மற்றும் தாமிர மூலப்பொருட்களை அகற்றுவதற்கான அனுமதி ஆகியவற்றை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் எங்கள் நிர்வாகத்துக்கு நாளுக்கு நாள் பெருமளவில் பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது. பணிகள் பெருமளவில் தடைபட்டுள்ளன. எனவே மேற்கண்ட பணிகளுக்கான அனுமதியை உடனடியாக வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கின் முகாந்திரம் குறித்த சீராய்வு மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாளுக்கு ஒன்றாக புதிது புதிதாக கோரிக்கைகள் முன்வைப்பதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தங்கள் கோரிக்கைகளை தீர்ப்பாயம் நியமனம் செய்துள்ள நீதிபதி தருண் அகர்வால் குழுவின் முன்பு எழுத்து வடிவில் தாக்கல் செய்ய அனுமதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கு தமிழக அரசு வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் தரப்பிலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சிறப்பு குழுவில் மனு தாக்கல் செய்யலாம் என்று எழுத்து வடிவில் உத்தரவு தருமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது என்றும், ஏற்கனவே தீர்ப்பாயம் ஆகஸ்டு 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் குழுவின் முன்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், அதற்காக தமிழக அரசுக்கு தனியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

    இதற்கு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தீர்ப்பாயம் இப்படி நடந்து கொள்வது எந்த வகையிலும் சரியல்ல என்றும் தன்னுடைய எதிர்ப்பை உத்தரவில் பதிவு செய்யுமாறும் கூறினார். மேலும், தான் இதுவரை பார்த்ததில் எந்த தீர்ப்பாயமும் இப்படி நடந்து கொண்டது இல்லை என்றும் அவர் மிகக் கடுமையான குரலில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

    இதற்கு நீதிபதி ஏ.கே.கோயல், உங்கள் வாதங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னால் அப்படி எதுவும் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்க இயலாது எனவும் கூறி விசாரணையை முடித்து வைப்பதாக கூறினார்.  #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt  #NGT

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt #TamilNaduReviewPetition
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

    பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.


    தீர்ப்பாயம் அமைத்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.

    இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NGTSterliteCommittee #SupremeCourt #TamilNaduReviewPetition
    ×