என் மலர்
இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்துகளை கணக்கெடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
- போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.
இதனை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கெடுக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை கேட்டு தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார் சந்திரன், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது போலீஸ் அதிகாரிகள் சார்பில் வக்கீல் பி.பாலாஜியுடன் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பந்தாடப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.
போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது' என வாதிட்டார்.
வாதங்களை பதிவுகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கிடுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் எதிர்மனுதாரர்களான மனித உரிமை ஆர்வலர் என்ட்ரி டிபேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அர்ஜூனன் உள்ளிடடோருக்கு உத்தரவிட்டது.






