search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shiva lingam"

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.
    • கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹுசூராபாத் நகரில் உள்ள ராமர் கோவிலில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வந்தது.

    மேலும் சிவலிங்கத்தின் மீது உடலை சுற்றியபடி படமெடுத்து ஆடியது. இது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    கோவிலில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.

    சிவலிங்கம் மீது நாகப்பாம்பு கண்டதால், சிவன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

    அவர்களில் சிலர் பூஜை செய்து வழிபட்டனர். பாம்பின் காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    • இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.
    • இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

    இதனால் சூரிய பகவான் சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்டு மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.

    அதன்படி இன்று காலை 6.10 மணியில் இருந்து 6.20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும் பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.

    இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு பரவசம் அடைந்தனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    • லிங்கத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் கிரிவல பாதை திருநேர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை மாதம் 1-ந் தேதியன்று காலையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி நேற்று காலை லிங்கத்தின்மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. அதனை காண அதிகாலையில் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். முன்னதாக லிங்கத்திற்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழுந்ததும் அங்கிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். பின்னர் சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • 14-ந்தேதி வரை சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும்.

    காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது.

    ஆண்டு தோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் 7 நாட்கள் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

    சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு ஏழுபிறவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அதன்படி இந்தாண்டு பங்குனி மாதம் 23-ந் தேதி முதல் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படும் நிகழ்வு காலை 6 மணி முதல் 6.30 வரை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தனர். சித்திரை முதல்நாள் வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    • பல்வேறு வகையான சிவலிங்கங்கள் உள்ளன.
    • எந்த லிங்கத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்

    ஆற்றுமணல் லிங்கம் - பூமி லாபத்தைத் தரும்

    பச்சரிசி லிங்கம் - திரவிய லாபமும்,

    அன்னலிங்கம் - அன்ன விருத்தியையும் தரும்

    கோமய லிங்கம் - வியாதியைத் தீர்க்கும்

    வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி தரும்

    ருத்ராட்ச லிங்கம் - ஞான விருத்தி தரும்

    விபூதிலிங்கம் - சகலசவுபாக்கியத்தையும் தரும்

    சந்தன லிங்கம் - சகல இன்பத்தைத் தரும்

    புஷ்ப லிங்கம் - ஆயுள் விருத்தி கொடுக்கும்

    சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பங்களைத் தரும்

    மாவு லிங்கம் - உடல் வலிமை தரும்

    பழ லிங்கம் - சுகத்தைத் தரும்

    தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்

    தண்ணீர் லிங்கம் - சகல மேன்மைகளையும் தரும்.

    தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்

    களிமண் லிங்கம்- மனச்சாந்தி

    பசுஞ்சாண லிங்கம் -ஆரோக்யம்

    லிங்கத்தில் பிற தெய்வங்கள்

    சிவ லிங்கத்தில் ஆரம்ப நாள்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவ லிங்கத்தில் அமைக்கத் தொடங்கிவிட்டனர். திருவானைக்கா கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானையும் ஒரு லிங்கத்தில் முருகப்பெருமானையும் அமைந்திருக்கிறார்கள்.

    சிதம்பர ரகசியம்

    சிதம்பர ரகசியம் என்றால் ஒன்றுமில்லை என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாய லிங்கமாக இறைவன் அந்தத் தலத்தில் குடி கொண்டிருக்கிறார்.

    ஆகாயம் எப்படி உருவமற்றதோ அதே போல அந்த லிங்கமும் உருவமில்லாமல் இருக்கிறது. அதாவது ஒன்றுமில்லாதது. இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கிறார்கள்.

    ஊமத்தம் பூ பூஜை

    எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக் கடல் சிவபெருமான். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக் கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும், சித்தம் தெளியும்.

    • இந்த அதிசய நிகழ்வை இன்றும், நாளையும் பார்க்கலாம்.
    • ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    சிற்ப கலையில் சிறந்து விளங்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மேற்குநோக்கிய சிவாலயம் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரிய ஒளி லிங்கத்சூதின் மீது படுவது வழக்கம்.

    சூரியன் மறையும் நேரத்தில் ஒளியானது கோவிலுக்கு வெளியே உள்ள தெவச கம்பத்தின் மீது பட்டு ராஜ கோபுரம் வழியாக உள்ளே நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்பு வழியாக மூலஸ்தானத்தில் உள்ள சிவ லிங்கைத்தின் மீது விழும்.

    இந்த அதிசய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. வான சாஸ்திரம் எவ்வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத அந்த காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் மாசி மாதம் 3 நாட்கள் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் வகையில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

    இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து. கோவில் பிரகாரங்களை கடந்து நந்தியின் கொம்புகள் வழியாக ஊடுறுவி சென்று சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

    இந்த நிகழ்வின்போது தரிசனம் செய்தால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியினை காண வருகை தருகின்றனர். 2-வது நாளான இன்றும், நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    முதல் நாளில் லிங்கத்தின் வலது பகுதியில் விழுந்த சூரிய ஒளி, 2-ம் நாளான இன்று இடது பகுதியிலும், 3-ம் நாளில் லிங்கத்தின் மைய பகுதியிலும் விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனால் ஏராளமான பக்தர்கள் தாரமங்கலம் சிவன் கோவிலை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

    • இந்தியாவில் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன
    • திருவாதிரை ஜோதிர் லிங்கத்தை வணங்குவதற்கு சிறந்த நாளாகும்.

    ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களும் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருகிறது.

    இந்தியாவில் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் திருவாதிரை நாள் ஜோதிர் லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர் லிங்கத்திற்குக்கும் பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும் உயர்ந்த ஆன்மிக நிலையை அடைந்தவர்கள் பூமியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர் லிங்கத்தை காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு ஒளியாக விளங்கும் பரம்பொருளை தியானிப்பது அல்லது பூஜை செய்து வணங்குவது என்பது மனிதர் களுக்கு கடினமாக இருந்தது. ஆகவே அந்த ஒளியை எளிதாக வழிபட லிங்க உருவத்தை கண்டு அதை பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும் பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொண்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

    ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்ரமாதித்த மன்னரால் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. சிவனை ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய்தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு நம் மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே ராஜயோக தியானம் எனப்படுகிறது.

    மனித ஆத்மாக்கள் அனைவருக் கும் மேலான அவர் நிகரானவர் (மனித உருவ மற்றவர்) ஜோதி சொரூபமாய் விளங்குபவர் இந்த உலக சிருஷ்டியின் கர்த்தர் அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும். புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும்.

    அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும் இருண்ட துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரால் மறந்து போய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளிய முறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு வழிபாடு மற்றும் தியானம் செய்ய வேண்டும்.

    • மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் மீது விழுகிறது.
    • இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்தது.

    தமிழகத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில் உள்ளது.

    இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் வங்க கடலோரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

    இக்கோவிவில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் சுயம்புலிங்க சுவாமி மீது விழுந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையிலேயே கோவிலில் நடை திறக்கப்பட்டு தனுர் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

    அப்போது காலை 6.40 மணியளவில் சூரிய ஒளி கதிர்கள் கோவிலின் முதன்மை வாயில் வழியாக மூலவர் சுயம்புலிங்கசுவாமி மீது விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வு சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்தது. இந்த காட்சியை காண ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன், 'சிவாய நம' கோஷங்கள் எழுப்பியவாறு சுவாமியை வணங்கினர்.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சூரிய பகவானே நேரில் வந்து உவரி சுயம்புலிங்கத்தை வணங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கருதுகின்றனர். மேலும் பல்வேறு கோவில்களில் சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும்.

    ஆனால் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மட்டும் தான் ஒரு மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய ஒளிக்ததிர்கள் படரும் நிகழ்வு நடைபெறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

    • சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும் போது ஏறக்குறைய 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும் எனவும், அகழ்வாய்வு நடத்தும் போது தொன்மையான சிலைகள் சிற்பங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிவலிங்கம் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் நடராஜ் கூறுகையில், கடந்த 22 வருடங்களாக நான் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இது சிவலிங்கம் என்று எனக்கு தெரியாது. இது பாண்டியன் நட்ட கல் என்று தான் பலர் கூறி வந்தனர். 8 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து பார்த்த சிவனடியார் ஒருவர், இது சிவலிங்கம் என கூறினார். இதையடுத்து சிவனடியார்கள் இங்கு வந்து சிவலிங்கத்தை தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். 8-அடி உயரமுள்ள இந்த சிவலிங்கத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராள மான சிவனடி யார்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தின் நடுவே இருந்த சிவலிங்கத்தை, பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக தோட்டத்திற்கு வெளியே வைப்பதற்காக சிவலிங்கம் இருந்த பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜோதி மற்றும் போலீசார், தொல்லியல் துறை ஒப்புதல் இல்லாமல் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் சிவனடியார்களுக்கும், வருவாய்த்துறை, போலீசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொல்லியல் துறையினரை வரவழைத்து அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவலிங்கத்தை எடுத்து மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

    • இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • செப்டம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சூரியக்கதிர்கள் ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும்.

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாலையில் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும். பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று மாலையில் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாள் மீது விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம்.

    • தூத்துக்குடியில் உள்ளது ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் கோவில்.
    • சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது.

    மகா சிவராத்திரி நாளில் சிவனடியார்கள் வணங்கும் நவகைலாய சிவாலயங்களைப் போல் நவலிங்கபுரம் என்று அழைக்கப்படும் சிவாலயங்களில் முதலாவது சிவாலயம் என்றும், முப்பீட தலங்களில் முக்கியமான சிவாலயம் என்ற பெருமையும் இந்தக் கோவிலுக்கு உண்டு.

    ஆண்டு தோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய சூரியன் வடதிசை நோக்கிப் பயணிக்கும் உத்தராயண காலத்தில் மார்ச் 21,22, 23 தேதிகளிலும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் தட்சிணாயன காலத்தில் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் இந்தக் கோவில் மூலவர் திருமூலநாதர் மீதும் ஆவுடை அம்பாள் மீதும் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதற்கு ஏற்றபடி இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று காலை சூரிய உதய நேரத்தில் சிவனடியார்களும் ஊர்ப்பொதுமக்களும் இந்த அதிசய நிகழ்வைக்கண்டு திருமூலநாதரைத் தரிசிக்கத் திரளாகக் கூடினர்.

    சரியாக 6.03 மணிக்குக் கிழக்கில் உதயமான சூரியக்கதிர்கள் மெல்ல மெல்லகோவிலுக்குள் நுழைந்து மூலவர் மீது பட்டு ஒளி வீசியது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தரிசித்த சிவனடியார்களும் பொதுமக்களும் எம்பெருமானின் திருக்கைலாயக்காட்சியாக நினைத்து அரகர மகாதேவா, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ கோஷமுழக்கமிட்டனர்.

    பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளைக் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

    • சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது பட்டுச்செல்லும் நிகழ்வு 10 நாட்கள் நடைபெறும்.
    • பக்தர்கள் நமசிவாய கோஷம் முழங்க சூரிய பகவானோடு முக்தீஸ்வரரை வழிபட்டனர்.

    கோவில்களின் கருவறையிலுள்ள மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் படுவதை சூரிய பூஜை கோவில்கள் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு சூரிய பூஜை கோவில்கள் இருந்தன. தற்போது ஒரு சில கோவில்களே உள்ளன. அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் சூரிய பூஜை கோவிலாகும்.

    இங்குள்ள கருவறைக்கு நேர்எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக சூரிய ஒளி கதிர்கள் ஊடுருவி முக்தீஸ்வரப் பெருமானை தழுவி செல்லும். இந்த அதிசய அரிய நிகழ்வு வருடத்திற்கு 2 மாதங்கள் நடைபெறுகிறது. முதலாவதாக மார்ச் மாதத்தில் 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் 6.35 மணி முதல் 6.45 மணி வரை ஒரு முறையும் 7 மணி முதல் 7.10 மணி வரை ஒரு முறையும் ஒரு நாளைக்கு 2 முறை என 23-ந் தேதி வரை சூரிய ஒளி பூஜை நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 19-ந் தேதி முதல் 30 -ந் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை ஒரு முறையும் 6.40 மணி முதல் 6.50 மணி வரை 2-வது முறையும் சூரிய பூஜை நடைபெறும். இந்த சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது விழும் நிகழ்வு இந்த ஆண்டு நேற்று காலை முதல் தொடங்கியது. காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை சூரிய ஒளி மேகமாக இருந்ததால் வர வில்லை. இதனைத் தொடர்ந்து 6.40 மணி முதல் 6.50 வரை சூரிய ஒளி துவாரங்கள் வழியே நந்தி பெருமானை கடந்து மூலஸ்தானத்திற்கு சென்ற படர்ந்தது. தொடர்ந்து சூரிய பூஜை நடந்தது.

    சிறப்பு அபிஷேகம்

    தொடர்ந்து மூன்று துவாரங்களில் இருந்தும் வரிசையாக ஒவ்வொரு ஒளி கதிர்களாக மூலவர் மீது பட்டுச்செல்லும் நிகழ்வு 10 நாட்கள் நடைபெறும். நேற்று சூரிய பூஜை நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் நமசிவாய நமசிவாய என கோஷங்கள் முழங்க சூரிய பகவானோடு முக்தீஸ்வரரை வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    ×