search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumal Statue"

    ஓசூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே மண்சாலை அமைக்கும் பணியின் காரணமாக 13-வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சிலை, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக பல்வேறு இடையூறுகளை தாண்டி, ஓசூர் அருகே பேரண்டப்பள்ளிக்கு வந்தது.

    பேரண்டப்பள்ளி பகுதியில் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென் பெண்ணையாற்றில் சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மண்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. அணைக்கு 400 கனஅடி முதல் 508 கனஅடி வரை தண்ணீர் வந்ததால், பணிகள் நடைபெறவில்லை. தற்போது 293 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது.

    இதையடுத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாலம் அமைக்கப்பட்டு பொறியாளர்கள் ஆய்வு செய்த பின், சிலை ஆற்றை கடக்க உள்ளது. இதனிடையே, கடந்த 13-வது நாளான இன்றும் பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிலையை காண, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
    64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை பல்வேறு இடையூறுகளை தாண்டி வந்திருந்த போதிலும், சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைந்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந்தேதி பிறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரியை கடந்து வந்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது. அங்குள்ள சிறுபாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

    இப்பகுதியை கடக்கும் பட்சத்தில் சுமார் 2 கி.மீ தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு பாலங்கள் உள்ளன. இதனை தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையையொட்டி வனப்பகுதி மார்க்கத்தை சிலை பயணத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து சாலை மார்க்கமாகவே சிலை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் சாமல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிலையை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சுமார் 4 மாத காலமாகியும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாமல் ஏற்பாட்டாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஏற்கனவே வழியில் பல்வேறு இடையூறுகளை தாண்டி வந்திருந்த போதிலும், சாமல் பள்ளத்தில் 52 நாட்களாக பெருமாள் சிலை நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சிலை பயணத்திற்கு வசதியாக பேரண்டப்பள்ளி என்னும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர். மேலும் குழாய்களை பதித்து அதற்கு மேல் மண் கொட்டி தற்காலிகமாக பாலம் போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணி நிறைவடைந்ததும் இம்மாத இறுதியில் சாமல்பள்ளத்தில் இருந்து பிரமாண்ட பெருமாள் சிலை புறப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PerumalStatue
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்து அடைந்தது. அங்கிருந்து ஊத்தங் கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி வந்து கடந்த 9-ந் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்பல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது.

    அங்குள்ள சிறு பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டடதால், பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது. அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை.

    இதனால், பாலத்தின் அருகே, புதியதாக தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடந்தது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியை கடந்து விட்டால் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து, சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு பாலங்கள் உள்ளன.

    இதற்காக வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சாம்பல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது, தற்காலிக பாலம் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை முழுமை அடைந்தவுடன், பெருமாள் சிலை சிக்கல் இன்றி பெங்களூரு கொண்டு செல்ல முடியும்.

    இதனால் தான் சாம்பல் பள்ளத்தை கடப்பதற்கு கூடுதல் நாட்கள் பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சாம்பல் பள்ளம் மற்றும் மேலும் 2 இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. #PerumalStatue 
    சூளகிரியை அடுத்த சாமல்பள்ளம் முனீஸ்வரன் கோவில் அருகே கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் தற்காலிக சாலை அமைக்க சிலை அமைப்பு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #Vishnustatue
    சூளகிரி:

    கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இரந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றது.

    கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள மார்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த கார்கோ லாரி செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி சென்றது. ஆனால் லாரியின் டயர்கள் அந்த மண்ணில் புதைந்து தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    பின்னர் அந்த சாலையில் மீண்டும் ஜல்லிக்கற்கள் மற்றும் மண்ணை கொட்டி சிறிது மேடாக்கினர். அதன்பின், 4 என்ஜின்கள் பொருத்தப்பட்ட கார்கோ லாரி புறப்பட்டது. ஆனால் சாலை முடியும் இடத்தில் அதிக அளவில் மேடாக இருந்ததால் தொடர்ந்து சிலை ஏற்றப்பட்ட லாரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அந்த லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு கார்கோ என்ஜின்கள் 3 மற்றும் 5 ராட்சத டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, சிலை ஏற்றப்பட்ட லாரியுடன் இணைக்கப்பட்ட பின்னர் லாரி புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையை சென்றடைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். அங்கிருந்து புறப்பட்ட லாரி மேலுமலை கணவாய் வழியாக சாமல்பள்ளம் வரை சென்றது. அங்கு முனீஸ்வரன் கோவில் அருகே சிலை உள்ள கார்கோ லாரி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இன்று (9-ந் தேதி) காலை ஓசூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேரில் வந்து கோதண்ட ராமரை வழிபட்டனர். இன்னும் இந்த சிலை சாமல் பள்ளம் மற்றும் சின்னாறு ஆகிய பகுதிகளில் உள்ள 2 பாலங்களை கடக்க வேண்டியது உள்ளது. இந்த பாலங்கள் வழியாக சிலை உள்ள கார்கோ லாரி சென்றால் பாலங்கள் இடிந்து விழும் என்றும், எனவே மாற்றுப்பாதை அமைத்து சிலையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இன்று சிலை அமைப்பு குழுவினர் சாமல்பள்ளம் மற்றும் சின்னாறு பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள ஓடைகளில் தற்காலிக பாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். தற்காலிக பாதை அமைத்த பிறகு சிலை உள்ள லாரி பெங்களூரு நோக்கி புறப்படும் என்று சிலை அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    சாமல்பள்ளத்தில் இருந்து சிலை புறப்பட இன்னும் 4 நாட்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #Vishnustatue


    பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூருக்கு எடுத்து செல்ல தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #VishnuStatue #MadrasHC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ரத்தினம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் 350 டன் எடை கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செய்யப்பட்டது.

    இந்த சிலை சாலை வழியாக மிகப்பெரிய லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்த சிலையின் எடை அதிகம் என்பதால், சாலைகள் சேதம் அடைகின்றன.

    சாலையோரங்களில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைகின்றன. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த சிலையை கர்நாடகா மாநிலத்துக்கு எடுத்து செல்ல தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கு ஐகோர்ட்டில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிலையை கொண்டு செல்ல அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை சாலை வழியாக கொண்டு செல்வதால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் பாதிக்கப்படாத நபர் என்பதால், அவர் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #VishnuStatue #MadrasHC
    ஒரே கல்லால் ஆன 380 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையைக் கொண்டு செல்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியிலுள்ள ரவுண்டான இடிக்கப்பட்டது.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு, தெற்கு ஈஜிபுரா பகுதியில், கோதண்டராம பெருமாள் கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம பெருமாள், வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோதண்டராம பெருமாள் கோவிலில், ஒரே கல்லில், 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் உடைய விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலை மற்றும் 7 தலை பாம்புகளுடன் ஆதிசேஷன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை குன்றில் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் கல் வெட்டும் பணி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது கோதண்டராம பெருமாள் சாமி சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கல்லும், ஆதிசேஷன் சிலை செய்ய 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயர கல்லும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

    வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கர கைகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாகங்கள், பெங்களூருவில் செதுக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக ஒரு கல்லில் பெருமாளின் முகம், சங்கு சக்கரம், கைகள் அமைந்துள்ள 380 டன் எடையில், 64 அடி உயர விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலையை, பெங்களூருவுக்கு பெரிய லாரி மூலம் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 9-ந் தேதி, கொரக்கோட்டை கிராமத்திலுள்ள குன்றில் இருந்து, விஸ்வரூப கோதண்டராம பெருமாள் சிலை 240 டயர்களை உடைய ராட்சத லாரியில் ஏற்றப்பட்டது.

    இந்த லாரி செல்லும் வழியில் தடையாக உள்ள சில கடைகளை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த பெருமாள் சிலையுடன் லாரி கடந்த 16-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் அந்த லாரி சிலையுடன் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை தரைப்பாலத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பாலத்தை கடக்க கூடுதலாக லாரி தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஊத்தங்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.


    இந்த நிலையில் சிலையை கொண்டு வருவதற்காக அந்த பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் பாம்பாறு அணை பாலம் பழுதடைந்து இருந்ததால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேலும்  ஊத்தங்கரை ரவுண்டானா இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து 7 நாட்களுக்கு பிறகு அந்த லாரி நேற்று ஊத்தங்கரை பாம்பாறு பாலத்தை கடந்து புறப்பட்டு சென்றது.

    அந்த லாரியில் இருந்த பெருமாள் சிலையை பக்தர்கள் வணங்கியவாறு வழி அனுப்பி வைத்தனர். அந்த லாரி ஊத்தங்கரை நகர் வழியாக நேற்று கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சென்றது. லாரி புலியூர் கூட்டு ரோடு வழியாக கிருஷ்ணகிரி செல்ல உள்ளது. தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே அந்த லாரியை இயக்க முடியும் என்பதால் கிருஷ்ணகிரிக்கு இன்னும் 4 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கிருஷ்ணகிரியை கடந்து ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு இந்த மாத இறுதிக்குள் விஸ்வரூப கோதண்டராம சாமி சிலையை எடுத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடை உள்ள பிரமாண்ட பெருமாள் சிலை வாகனம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை அடைந்தது.
    ஊத்தங்கரை:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா என்ற இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதையொட்டி 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் ஏற்றி கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந் தேதி புறப்பட்டது. வந்தவாசியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை நகரின் எல்லைக்கு கடந்த 5-ந் தேதி மாலை சிலை வந்து சேர்ந்தது.

    3 வால்வோ வாகனங்களின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி ரிங்ரோடு பகுதியை ராட்சத லாரி கடந்தது. வால்வோ வாகனங்களை இயக்குபவர்கள் மிக சாதுர்யமாக, கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மெல்ல மெல்ல வாகனத்தை இயக்கினர்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து, கடந்த 8-ந் தேதி செங்கம் நோக்கி பெருமாள் சிலையின் பயணம் தொடர்ந்தது. வழியில் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது.

    அப்போது பிரமாண்ட பெருமாள் சிலையை, திரளான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

    அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் சிலையை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து, ஏரிக்கரை பக்கமாக மண்டி வளாகத்தில் சிலையை வைத்துள்ளனர்.

    இங்கிருந்து ஊத்தங்கரையை கடந்து கிருஷ்ணகிரி சாலையை சென்றடைந்து விட்டால் மிக எளிதாக பெங்களூருவுக்கு சிலையை எடுத்துச்சென்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

    அறந்தாங்கி அருகே மண்ணில் புதைந்து கிடந்த பெருமாள் சிலையை சிறுவர்கள் கண்டெடுத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மைவயல் கிராமத்தில் காளிதாஸ் என்பவருக்கு சொந்தமான திடல் உள்ளது. இந்த திடலில் சாகுபடி சமயத்தில், காளிதாஸ் வயல்களுக்கு வேலை பார்க்க வரும் வேலை ஆட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்ப்பது வழக்கம்.

    சமீபகாலமாக இயந்திரம் மூலம் சாகுபடி செய்வதால், வேலை ஆள்களின் தேவை குறைந்து விட்டது. இதனால் அந்த திடல் பயன்பாடுஇல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் காளிதாஸ் ஜேசிபி இயந்திரம் மூலம் புதர்களை அகற்றி சீரமைத்தார்.

    சீரமைக்கப்பட்ட இடத்தில் நேற்று காலை சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஜேசிபி இயந்திரம் தோண்டி வைத்திருந்த மணல் குவியலில் சுமார் முக்கால் அடி உயரமுள்ள, சங்கு, சக்கரங்களை இருகைகளில் ஏந்தியபடி, பெருமாள் அமர்ந்திருக்கும் உலோகத்திலான சிலை கிடந்தது. சிறுவர்கள் இதுகுறித்து பெரியர்வர்களிடம் தெரிவித்தனர்.

    இதுதொடர்பான இடத்தின் உரிமையாளர் காளிதாஸ், அறந்தாங்கி தாசில் தாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாள் சிலையை மீட்டனர். மேலும் சிலை ஐம்பொன் சிலையாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே மண்ணில் புதையுண்டு கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×