என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப் பிரதேசம்"

    • ராம் பவன், துர்காவதி தம்பதி 10 வருடங்களாக இயங்கி வந்தனர்
    • சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள்,உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச நீர்ப்பாசன துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய வந்தவர் ராம் பவன். இவரது மனைவி துர்காவதி.

    சித்ரகூட் நகரை சேர்ந்த இவர்கள் கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 வருட காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல சிறுவர்களை கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி அதை படம் பிடித்து டார்க் வெப் உள்ளிட்ட சட்டவிரோத இணயதளங்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    3 வயது முதல் 16 வயது வரையிலான 33 சிறுவர்கள் இவர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    ராம் பவன், குழந்தைகளுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், பணம், பரிசுகள் கொடுத்து ஆசை காட்டி அவர்களை தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.

    சில சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள், உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் பாலியல் வீடியோக்களை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்தபோதுதான் ராம் பவன், துர்காவதி தம்பதி சிக்கியுள்ளது.

    இந்தப் பாலியல் வீடியோக்கள் மற்றும் படங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட தளங்கள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது உறுதியானது.

    2020 அக்டோபரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அடுத்த சில மாதங்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

    அவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த கடந்த 6 ஆண்டுகளாக பாண்டா போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    33 சிறுவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதரங்கள் சிபிஐ தரப்பில் சமர்பிக்கப்பட்டன.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அரிதினும் அரிதான வழக்கு என்று கூறிய நீதிமன்றம், ராம் பவன் மற்றும் துர்காதேவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தம்பதியின் வீட்டில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த ரொக்கப் பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.
    • ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் முடிந்துவிட்டது

    உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.18) கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மாலைமாற்றும் சடங்கு உள்ளிட்ட சில திருமண சடங்குகள் நிகழ்ந்துள்ளது. மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மண்டபத்திற்கு வந்துள்ளனர்.

    மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது சிறிது தூரத்தில் கட்டப்பட்டிருந்த மணமகள் வீட்டு செல்லநாயான 'சிக்ஸர்' குறைத்துள்ளது.

    சடங்குநேரத்தில் குறைத்துக் கொண்டிருந்ததால் மணமகன் வீட்டார் நாயை அடித்துள்ளனர். இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாய்மோதல் கைகலப்பாக மாற இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மணமகள் உட்பட சுமார் 8 பேர் காயமடைந்தனர். மணமகளுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மேலும் மணமகள் தரப்பைச் சேர்ந்த சிலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. மணமகன் தரப்பைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    மோதல் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேசியுள்ளனர். அப்போது கருணை இல்லாத குடும்பத்தில் தன்னால் வாழ முடியாது எனக் கூறி மணமகள் திருமணத்தை நிறுத்தக் கூறியுள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரும் சீர் வரிசைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சமரசமாகப் பிரிந்து சென்றனர்.

    இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஜோடி ஏற்கனவே காதலர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்திருந்த நிலையில், முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்ட சடங்கின் போது இந்த விபரீதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டது.
    • யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12-ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நவஜீவன் கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக உரிய அனுமதி அல்லது பதிவு இன்றி இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. தற்போது அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    யோகேஷ் மற்றும் சுப்ளம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய் என்பதால், அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு யோகேஷ் இது போன்ற சிகிச்சைகளைச் செய்து வந்துள்ளார்.

    மருத்துவமனையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். 

    • இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது
    • இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அதன்படி மார்.6ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

    லக்னோவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

    உத்தரப் பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகள் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கால அவகாசம் ஜனவரி 6 முதல் பிப்ரவரி 6 வரை வழங்கப்பட்டது.

    இதுவரை பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-இன் மூலம் 82,684 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம், பெயர்களைச் சேர்ப்பதற்காக படிவம் 6-ஐப் பயன்படுத்தி சுமார் 37.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 6A-இன் மூலம் விண்ணப்பிக்கலாம்; இதுவரை 1,076 புலம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ரின்வா தெரிவித்துள்ளார்.

     "சுமார் 1.40 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்தபோதிலும், அவை வரைபடமாக்கப்படவில்லை (not mapped). அதேசமயம், 2.22 கோடி வாக்காளர்கள் வரைபடமாக்கல் பணியை முடித்திருந்தாலும், அவற்றில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற அனைத்து வழக்குகளிலும் தற்போது நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஒட்டுமொத்தமாக, 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதுவரை 2.37 கோடி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 86.27 லட்சம் நோட்டீஸ்கள் ஏற்கனவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 30 லட்சம் வழக்குகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6-லிருந்து மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அதுவரை பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தச் சிறப்பு திருத்தப் பணியின் கீழான இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.

    வாக்காளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்." என தெரிவித்தார். 

    மேலும் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கு முன்னரும் அனைத்து ஆட்சேபனைகளும் முறையாக ஆய்வு செய்யப்படும். இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் முன்வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும், எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரின் எழுத்துக்கள் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார். 

     

    • 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.
    • மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து குதித்து செய்துகொண்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகள் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

    இவர்கள் நீண்ட காலமாகத் தங்களை ஒரு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரிய மொழி கற்பது, கொரிய உணவுகளை உண்பது மற்றும் 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.

    இவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களை புரிந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் உள்ள வீட்டில் தங்கள் அறையில் உள்ள ஜன்னல் வழியே   குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    டைரியில் கண்டெடுக்கப்பட்ட அவர்களின் தற்கொலைக் கடிதத்தில் "நாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, எங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம். இந்தியாவின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமூகக் கட்டுக்கோப்புகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

    நாங்கள் கொரியர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் ஆன்மா ஏற்கனவே கொரியாவில் தான் வசிக்கிறது; இந்த உடலையும் அங்கேயே கொண்டு சேர்க்கப் போகிறோம்.

    எங்களை கொரியாவிற்கு அனுப்ப நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் போன்களைப் பறித்து எங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது" என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் சில ஆன்லைன் கொரிய குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும், அங்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விதமான கருத்துகள் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    நிஜ வாழ்க்கையின் கவலைகளில் இருந்து தப்பிக்க இணைய உலகையே உண்மையான வாழ்க்கையாகக் கருதும் இந்த போக்கு ஒரு தீவிரமான ஆன்லைன் அடிமைத்தனம் (Online Escapism) என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

    • கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பெண் ரூ.20 லட்சம் இழப்பீடு கோரினார்.
    • இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது

    உத்தரப் பிரதேசத்தில் 2 மணி நேரம் தாமதமாக வந்த ரயிலால் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை தவறவிட்ட பெண்ணுக்கு, ரூ.9.10 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை ரயில்வேத்துறை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 12% வட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்ரிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மே.7ஆம் தேதியன்று லக்னோவில் நடந்த தனது கல்லூரி சேர்க்கைக்கான பிஎஸ்சி பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வைத் தவறவிட்டார். சம்ரிதிக்கு லக்னோவில் உள்ள ஜெய் நாராயண் பி.ஜி கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இதற்காக பஸ்தி ரயில் நிலையம் வந்த சம்ரிதி, 11 மணிக்கு லக்னோ சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். தேர்வு 12.30 மணிக்கு. இந்நிலையில் இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் ரயில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்துள்ளது.

    இதனால் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்லமுடியவில்லை. தேர்வு எழுத முடியாமல் போனதால் அந்த வருடம் சம்திரியால் கல்லூரியில் சேரமுடியாமல் போயுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 11, 2018 அன்று மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த சம்ரிதி ரூ.20 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.

    தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது நுகர்வோர் நீதிமன்றம். ரயில்வே சேவையில் குறைபாடு இருந்ததையும், தாமதத்திற்கான முறையான காரணத்தை ரயில்வே விளக்கத் தவறியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.  

    இதுதொடர்பாக பேசிய சம்ரிதியின் வழக்கறிஞர் பிரபாகர் மிஸ்ரா,

    இரயில் தாமதம் காரணமாக அவரால் சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்தை அடைய முடியவில்லை, இதனால் அவரது முழு கல்வி ஆண்டும் வீணானது. இந்த நீண்ட சட்டப் போராட்டம் மிகவும் சோர்வளிப்பதாக இருந்தாலும் அவசியமான ஒன்றாக இருந்தது என்றார்.

    மேலும் "இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, நீதிமன்றம் ஒரு கணிசமான அபராதத்தை விதித்துள்ளது," என்று அவர் கூறினார்.

    • இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
    • தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கும்பலின் அச்சறுத்தலால் பயந்துபோன ஒரு இளம் காதல் ஜோடி மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஷாஜஹான்பூரில் நேற்று ஒரு pizza கடை உணவகத்தின் இரண்டாவது மாடியில் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஜோடியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

    அவர்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்தில், இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.

    கீழே விழுந்ததில் அந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  

    • பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
    • சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.

    ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.

    சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.

    எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.

    எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.

    சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரும் அதே ஊரை சேர்ந்த காஜல் (22) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடந்த 3 நாட்களாக இருவரையும் காணவில்லை என்று அர்மானின் தந்தை புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலையை ஒப்புக்கொண்டனர்.

    அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாகவும், உடல்களை நதிக்கரையில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும்அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

    அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து போலீசார் புதன்கிழமை மாலை, உடல்களைத் தோண்டி எடுத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    காஜலின் 3 சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
    • அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 27 வயது சாப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    யுவராஜ் மேத்தா என்ற அந்த இளைஞர், இரவு வேலை முடிந்து கார் மூலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாகப் சாலையில் எதுவும் தெரியாததால், கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய ஆழமான குழியில் விழுந்தது. 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை சுமார் 5 மணி நேரம் போராடி காரையும், யுவராஜையும் மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.

    முன்னதாக அவ்வழியே வந்த டெலிவரி ஊழியரும் அவருக்கு உதவ முயன்றுள்ளார்.  கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் தனது தந்தைக்கு அலைபேசியில் அழைத்துள்ளார்.

    "அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள். எனக்குச் சாக விருப்பமில்லை" என்று கதறியுள்ளார். இதை அவரது தந்தை ஊடகங்களுக்கு வேதனையுடன் தெரிவித்தார்.

    அந்தச் சாலையில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று யுவராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   

    • ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை
    • கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் வீட்டில், முன் அனுமதி இன்றி தொழுகை நடத்தியதாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பரேலி மாவட்டத்தின் முகமதுகஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு காலி வீடு மதரஸாவாகப் பயன்படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதற்கு அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

    தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அனுமதியின்றி புதிய மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும் என்று தெரிவித்து, அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.

    ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்குப் ஜாமீன் வழங்கப்பட்டது. 

    • 2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.
    • இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரெயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கௌரவிக்கப்பட்டது

    லக்னோவின் சார்பாக் ரெயில் நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஆய்வாளர் சந்தனா சின்ஹா, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளார்.

    2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.

    நடைமேடைகளில் தனியாக இருக்கும் குழந்தைகள், கடத்தல்காரர்களுடன் இருப்பவர்களைக் கண்டறியும் விசேஷப் பயிற்சியை தனது குழுவினருக்கு இவர் வழங்கியுள்ளார்.

    இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.

    பீகார் முதல் பஞ்சாப் மற்றும் அரியானா வரையிலான கடத்தல் பாதைகளைக் கண்காணித்து, குழந்தைத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட பல குழந்தைகளை இவர் மீட்டுள்ளார். 

    ×