என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது.
- பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கணினித் தொழில் நுட்பத்தில் ஏ.ஐ எனப்படும் (ஆர்டிபிஷியல் இன்டலி ஜன்ஸ்) செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பங்காற்றி வருகிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இதனை அரசியலிலும் புகுத்தி உள்ளனர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிரசாரத்திற்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை கம்யூனிஸ்டு கட்சி பயன்படுத்தி உள்ளது. தனது முகநூல் பக்கம் மற்றும் யூ.டியூப் சேனலில் பிரசாரத்திற்காக தொகுப்பாளர் சமதாவை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் டிஜிட்டல் பிரிவு 6 மாதங்களுக்கும் மேலாக இதனை சோதனை ரீதியாக பயன்படுத்தி உள்ளது. தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது. பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், இந்த மாதிரி பேச்சு கம்யூனிஸ்டுக்கு ஒத்து வராது. கம்ப்யூட்டரை மூடியவர்கள் இன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.
பா.ஜனதா தலைவர் சின்கா கூறும்போது, ஏ.ஐ. நன்மை செய்யாது. சி.பி.எம். முன்பு தொழில்நுட்பத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தை பின்னுக்கு தள்ளியது. தற்போது தொழில் நுட்பத்தை எதிர்கொள்வது முரண்பாடானது என்றார்.
இதற்கு பதில் அளித்த கம்யூனிஸ்டு கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, கணினிகளை செயல்படுத்துவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் எதிரானது அல்ல என்றார்.
- தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
- 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
மத்திய மந்திரியும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் உள்ளது.
சேலத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கூட்டணியை உறுதி செய்து சென்றார். தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் பிரதமர் நரேந்திரமோடிக்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக போகிறார்களா?.
ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதி.மு.க எப்படி பிரதமராக போகிறார்கள். 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தேர்தலின் போது தி.மு.க டாஸ்மாக் கடைகளை குறைப்போம். கல்வி கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன், விவசாய கடன்களை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதையுமே செய்யவில்லை. வழக்கம் போல சொல்வது எதையும் செய்யாத ஆட்சியாக இந்த தி.மு.க ஆட்சியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் தயராகிவிட்டனர். பொய் பேசுவதும், கொள்ளையடிப்பதும், லஞ்சம் வாங்குவது, கட்டபஞ்சாயத்து பண்ணுவது, குடும்ப ஆட்சி இவை எல்லாம் தான் தி.மு.க.வின் சிறந்த கொள்கையாக உள்ளது.
கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் சாலை கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது.அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரெயில் வசதியையும் மேம்ப டுத்தி கொடுத்துள்ளோம்.
இனி அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் இந்த சேவைகள் தொடர்ந்து செய்யப்படும். நேர்மையாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தான். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது உள்பட பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு பா.ஜனதா பெருமை சேர்த்து வருகிறது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன திட்டத்தை வாங்கி தந்துள்ளார். ஒன்றுமில்லை. அவர் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத 2 ஜி ஊழலை செய்துள்ளார். மேலும் அவர் இந்துக்கள், பெண்கள் மற்றும் தலை வர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் 20-ந்தேதி கடிதம் கொடுத்தது.
கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இருந்தனர்.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தை கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை அதில் குறிப்பிட்டு இந்த தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதனை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 21-ந்தேதி ரத்து செய்து தகவல் தெரிவித்தது.
தொடர்ந்து கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பான கோரிக்கை மனு ரத்து உத்தரவை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இதனால் இந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் வழங்க முடியாது என்று அந்த மனுவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அதனை ஏற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இதனை அவசர வழக்காக விசாரிக்க முன் வந்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கேட்ட சின்னம் ஒதுக்காத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வந்தனர். ஏற்கனவே 16 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஜெகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டனர்.
அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த ராமசுப்பு, 'காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தது அங்கு பரபரப்பை உருவாக்கியது.
இந்நிலையில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்.
காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன் என்று கூறினார்.
- வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
- குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது.
இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வமுடன் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்ததால் திருவிழா கோலமாக காணப்பட்டது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்களில் அதிகபட்சமாக கரூரில் 62 பேர், வடசென்னையில் 54 பேர், கோவையில் 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகையில் 13 பேர், சிதம்பரத்தில் 22 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.
இதில் முறையாக பூர்த்தி செய்யாமல் இருந்த மனுக்களும் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் கையெழுத்திடாமல் இருந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களது வழக்கறிஞருடன் வந்து வேட்புமனு பரிசீலனையில் கலந்து கொண்டனர்.
யார்-யார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை வெளியிட இருக்கிறார்கள்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் நிலையில் மாற்று வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை வாபஸ் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்த பிறகு சனிக்கிழமை மாலை 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிய சின்னங்கள் என்ன என்பது அறிவிக்கப்படும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. தேர்தல் பணியில் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை அகரவரிசைப்படி அச்சடிக்கும் பணி 30-ந் தேதியில் இருந்து தொடங்கும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஏற்கனவே முதற்கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் இளம் தலைமுறை வாக்காளர்களிடையே வாக்களிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
10 லட்சத்து 90 ஆயிரத்து 547 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
சனிக்கிழமை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
- மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தருமபுரி:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து அவர் கடந்த 22-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. கல்லூரி மைதானத்தில் நாளை (29-ந் தேதி) மாலை பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி மற்றும் இந்தியா கூட்டணியின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கூட்டத்தை முடித்து கொண்டு மீண்டும் அவர் கார் மூலம் சேலம் செல்கிறார்.
முதலமைச்சர் வருகையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. தடங்கம் கிராமம் அருகே பிஎம்பி சல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் நின்று பேசுவதற்கு மேடை அமைக்கும் பணியும், பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அமரும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், கூட்டத்தை சுமார் 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் வசதியும், பொதுமக்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டப் பணிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.
அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் வருகையையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.
- வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம், புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளதால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 31-ந்தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.
வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், 6.30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
- போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
- முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
- ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார்.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் அந்த அந்த மாநிலங்களில் ராகுல் காந்தி எந்தெந்த தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றி பயண திட்டங்களை வகுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக செல்வ பெருந்தகை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த தேர்தலில் ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம் செய்தார். இந்த முறையும் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு இடம்.
கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி தொகுதிகள் சார்ந்த ஒரு இடம்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளை சார்ந்த ஒரு இடம்.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் ஒரு இடம், இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
- அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார்.
அரக்கோணம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார்.
முன்னதாக கட்சியினர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கினர். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வெள்ளி வீரவாளை அசைத்துக்காட்ட அங்கிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் அமைச்சர் காந்தி ஏற முற்பட்டார்.
இதனால் பேச்சை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர் வாகன த்தில் ஏறி நிற்கும் வரை காத்திருந்தார்.
தொடர்ந்து அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அப்பொழுது அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார். அங்கு கூடி இருந்த பெண்கள் உட்பட அனைவரும் வேண்டாம் நீங்கள் பேசுங்கள் என கூறினர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன் பேச்சை தொடர்ந்தார்.
இதனால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.
- விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
- அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி:
பாகுபலி படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ஆந்திராவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக உள்ளார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.
இந்த நிலையில் அனுஷ்கா ஆந்திர அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்கா வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து ஜனசேனா கட்சி தலைவர்களுடன் அனுஷ்கா பேசி வருவதாகவும் தனது அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா 3-வது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
அவரை தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. நகரி தொகுதியை பொறுத்த வரையில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.
நடிகை அனுஷ்கா தமிழ் படங்களிலும் பிரபலமானவர்.
நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.
- வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம்.
- விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.
கோவை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கோவை தொகுதியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
வழக்கமாக தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம். அதேபோல கோவை தொகுதியிலும் அந்த ருசிகரம் அரங்கேறி உள்ளது.
கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிடு வதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
இவர்களில் தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் பெயரில் மட்டும் ராஜ்குமார் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதேபோல சிங்கை ராமச்சந்திரன் பெயரை குழப்பும் வகையில் ராமச்சந்திரன் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பெயரிலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி என்ற கட்சி பெயரில் அவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியலில் எத்தனை ராஜ்குமார், எத்தனை ராமச்சந்திரன் போட்டியிடப் போகிறார்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.
போட்டி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.






