என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
- பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.
* கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
* மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.
* தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.
* பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
* தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது. அக்டோபர் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து பீகார் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்கும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதுபோல காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதாதளம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலில் களம் இறங்க உள்ளது.
பீகாரில் ஆட்சியை கைப்பற்ற இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ள நிலையில் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு 75 லட்சம் பெண்களும் தாங்கள் விரும்பும் சுயதொழிலை தொடங்கிக் கொள்ளலாம். குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பணத்தை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சுய தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்கள் அந்த 10 ஆயிரம் ரூபாயை தங்களது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகார் மாநில பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சந்தை வழிகாட்டும் உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
இந்த தொழிலில் திறம்பட செயல்படும் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்தக்கட்டமாக தொழிலை மேம்படுத்த ரூ.2 லட்சம் வரை மானிய உதவி வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
75 லட்சம் பெண்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் இந்த திட்டத்துக்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பீகார் மாநில பெண்களிடம் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து சமுதாய பெண்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த நிதி உதவி செய்யப்படும். இந்த நிதி உதவியை பெறும் பெண்கள் மகளிர் சுயஉதவி குழுவுடன் இணைந்து செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
- விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
- நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
- இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'டிரெயின்', 'ஏஸ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும் பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசர் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
- பகைமை வதந்திகளை தொடர்ந்து ராகுல் டிராவிட் பதவியை துறந்தார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.
2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.
ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.
இதனால் 2026 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககராவையே தலைமை பயிற்சியாளராக்க ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவெடுத்துள்ளது.
தற்போது குமார் சங்ககரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தில் கிரிக்கெட் இயக்குநராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.
- மந்தைவெளியில் எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ் சினிமாவின் "ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை வசித்து வந்தார்.
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற வேண்டும் என்று நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதேபோன்று சென்னை மந்தைவெளி 2-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.
- சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது.
- வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்வதுண்டு. இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் இன்று காலை ஐகோர்ட்டு பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது ஐகோர்ட்டு மின்னஞ்சலில் ஒரு மெயில் வந்திருந்தது. அதில் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஐகோர்ட்டு அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஐகோர்ட்டில் வந்திருந்த நீதிபதிகள், பொதுமக்கள், வக்கீல்கள், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் புரளி என தெரியவந்தது. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு புரளியால் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.
இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
- தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
கரூர்:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து இடத்தை தேர்வு செய்து அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கரூர் வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்தார். அதில் விஜய் பிரசாரம் செய்ய லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் காவல்துறையினர் பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை கூறினால் மட்டுமே அதற்கேற்றவாறு இடம் ஒதுக்கப்பட்டு அனுமதி வழங்க இயலும் எனக் கூறினர். அதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினர் கேட்ட விபரங்களை நிர்வாகிகள் மூலம் அளிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படவில்லை. தமிழக வெற்றிக்கழகத்தினர் கொடுத்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவ்வாறு வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்படும பட்சத்தில் நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் பரமத்திவேலூர் திருக்காம்புலியூர் வழியாக கரூர் வந்து, பிற்பகல் 3 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல்லில் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் இதுவரை இறுதி செய்யப்படாமல் உள்ளது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியத்துக்குள் விஜய் பேசும் இடம் உறுதி ஆகும் என காவல்துறை மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- இருநாட்டு தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
- வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது.
உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பதை ஒரு கவுரவமாக கருதுகின்றனர். இதற்காக அவர்கள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர். அதுவும் இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விருதை பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.
தான் 2-வது முறையாக பதவி ஏற்றபிறகு இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்ளிட்ட 7 போரை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெளிப்படையாக கூறி வருகிறார். எப்படியும் இந்த பரிசு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக அவருக்கு நோபல் பரிசு கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நோபல் பரிசு கமிட்டி குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசினை ஏதாவது ஒரு மனிதாபிமானம் சார்ந்து செயல்பட கூடிய அமைப்புக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பே இல்லை என வரலாற்று நிபுணர் ஆஸ்லே ஸ்லீன் தெரிவித்து இருக்கிறார்.
டிரம்பின் நடவடிக்கைகள் நோபல் பரிசு அளவுகோலுக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர் நோபல் பரிசு வெல்ல மாட்டார். அவரது கருத்து எதிர்வினையை ஏற்படுத்தும், பரிசு வழங்கும் குழு சுதந்திரமாக செயல்படுகிறது என நோபல் பரிசு கமிட்டிக் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் டிரம்பின் நோபல் பரிசு கனவு தகர்ந்து விடும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2004-2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.
- வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாட்டின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று தனது 93வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1931 செப்டம்பர் 26 பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த மன்மோகன் சிங் 1982-85 காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றினார். பின் காங்கிரஸ் அரசில் 1991-96 காலகட்டத்தில் இந்தியாவின் நிதியமைச்சாராக பணியாற்றினார்.
இந்த காலத்தில் அவரின் தலைமையில் நாட்டில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. இதன் பின் 2004-2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, உள்ளிட்ட முக்கிய மற்றும் பொருளாதார சீர்திருந்தங்கள் அவரின் ஆட்சிக் காலத்தின் சிறப்புகளாக வரையறுக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போதைய பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பை நாம் நினைவு கூறுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அவரது துணிச்சலான முடிவுகள், வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.
அவரது எளிமை, பணிவு மற்றும் நேர்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
- மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
- அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். இவர் அ.தி.மு.க.வின் தீவிரப் பேச்சாளர் ஆவார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்படவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரு தரப்பினராகப் பிரிந்தனர். அப்போது மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அவர் சமீப காலமாக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மருது அழகுராஜூக்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவராக தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.
- தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
- மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தனது சென்னை பயணம் குறித்து வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர்.
* யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என கூறிய பின்னரும் வதந்தி பரப்புகின்றனர்.
* மனைவி மருத்துவமனையில் இருப்பதால்தான் சென்னைக்கு சென்றேன்.
* வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
* அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காக பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






