என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிஷ்டப்பா குடிமணி (45) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் உயிர் வந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிஷ்டப்பா குடிமணி (45) என்ற நபர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மனைவி ஷீலா கணவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, "உங்களுக்கு பிடித்த தாபா வந்துவிட்டது. நீங்கள் இரவு உணவு சாப்பிடுகிறீர்களா?" என்று அழுதுகொண்டே கூறியவுடன் பிஷ்டப்பா குடிமணிக்கு திடீரென்று உயிர் வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளும் இரங்கல் அஞ்சலி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் உயிர் வந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
- 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.
ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பெண் போலீஸ் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு துறையில் உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன் பேரிலேயே ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை.
- தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.
திருப்பதி:
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பேரன் விஷ்ணுவின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம், கோத்தப்பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
நான் தற்போது அரசியலில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் நுழையும் நிலையில் இல்லை என்றார்.
தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் வெங்கையா நாயுடு.
முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர் தற்போது தான் அரசியலை இல்லை என பேசியது பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்த தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,980-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-02-2025- ஒரு கிராம் ரூ.107
11-02-2025- ஒரு கிராம் ரூ.107
10-02-2025- ஒரு கிராம் ரூ.107
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
- 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார்.
- பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
இப்போட்டியில் 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார். அப்போது சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமா பக்கத்தில் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் பவுமா சிறிது நேரம் அதே இடத்தில் நின்றார். உடனே அங்கு வந்த ஆகா சல்மான் இருவரையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு தள்ளி சென்றார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயலுக்கு கேப்டன் ரிஸ்வானுக்கு கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- கல்லூரி நிர்வாகிகள், பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.
- இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், கழிப்பறை குழாயில் இருந்து வரும் தண்ணீரை சமையல் செய்யும் ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
நாடு முழுவதும் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான மருத்துவ மாநாடு பிப்ரவரி 6-ந்தேதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, பங்கேற்பாளர்களுக்கு இந்த உணவு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், "பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உணவு தயாரிப்புக்கு பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினாலும், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ ஆய்வு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
- சஞ்சு சாம்சனின் காயம் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சஞ்சு சாம்சனின் காயம் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளதால் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலில் அழைப்பு வரவில்லை.
- இறக்குமதி பொருட்கள் மீது வரி அதிகரிப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கலபுரகி:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலில் அழைப்பு வரவில்லை. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்று இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன் பிறகு அவருக்கு அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இது வெற்றிகரமான சந்திப்பா என்று தெரியவில்லை. தனது அமெரிக்க பயணம் மூலம் நாடு பயனடையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மொடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களா?. அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி, இந்திய தொழிலாளர்களை மரியாதை குறைவான நிலையில் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறி இருக்க வேண்டும். இந்திய தொழிலாளர்கள் சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் குப்பை கழிவுகளை விட மோசமாக நடத்தப்பட்டனர்.
அந்த தொழிலாளர்களை பயணிகள் விமானத்தில் அனுப்புமாறு கேட்கவில்லை. அவர் இங்கிருந்து விமானத்தை அனுப்பவில்லை. இதன் மூலம் டிரம்ப், பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர் என்பது பொய் என தெரியவருகிறது. தனிப்பட்ட நட்பு என்பது நல்லது தான். நட்பு நாடுகளுடன் நல்லுறவை பேண இத்தகைய நட்பு மிக முக்கியம். பிரதமர் மோடி நம்பிக்கையுடன் பேசுகிறார். ஆனால் பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார்.
அதனால் அமெரிக்க பயணத்தின்போது இந்தியாவுக்கு நல்ல பலன் கிடைக்காது. இறக்குமதி பொருட்கள் மீது வரி அதிகரிப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது வரியை அதிகமாக விதிக்கும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்
- இந்த திருமணத்தில் எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி பிரச்சாரக்குழுச் செயலாளர் தேன்மொழி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்கள் ரூபன்சாந்தகுமார் - அனுபிரியா தம்பதியரை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த திருமணத்தை ஒரு அவாள் வந்து நடத்தி வைத்தால்.. புரியாத மொழியில் பேசுவார்கள்.. அது மந்திரம் அல்ல, என்.சி.சி. யில் சொல்லும் இந்தி கமாண்ட். அம்மாதிரி இல்லாமல் இப்போது எல்லோரும் தமிழில் வாழ்த்துகிறோம்" என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
- ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
- அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக ஆடம்பர பொருட்கள் மீது சாமானியர்களுக்கு அலாதி ஆசை உண்டு. ஆனால் அவற்றின் அதிக விலை காரணமாக அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவது இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் தங்களது புத்திசாலித்தனம் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதேசமயம் அவர்களது தனித்துவமான அந்த செயல் மற்றவர்களையும் ஈர்க்கிறது. அந்தவகையில் பாகிஸ்தானின் சாலையில் சென்ற ஒரு சொகுசு கார் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது சிவப்பு நிறமுள்ள அந்த காரின் பின்புறத்தை பார்க்கும் எவரும் அதனை விலையுயர்ந்த கார் என்றே நினைப்பார்கள். ஆனால் அதன் முன்புறமோ மோட்டார் சைக்கிள் மூலம் பொருத்தப்பட்டு அந்த கார் இயங்கியது.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- காந்தார படத்தின் மூலமாக பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
- ஜரந்தய தெய்வா கோவிலில் விஷால் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காந்தார படத்தின் மூலமாக கர்நாடகா & கேரளா மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






