என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கரூரில் 13 வயது சிறுமி பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவின் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி 2வது தளத்தில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கால்கள் செயல்படாமல் போய் விட்டதாக அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.
- சி.வி.சண்முகத்தை கண்டித்து அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், "சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டார்.
இவரது பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சி.வி.சண்முகத்தை கண்டித்து அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவசங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
''மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்'' என நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம்.
"அம்மா... அம்மா.." என அமையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு "சின்னம்மா இல்ல...எங்க அம்மா" என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார்.
அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது.
மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து "நன்றி அப்பா" என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துகிறது போல. அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல.
அதனால்தான், அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீபக் பாஸ்வான் என்ற இளைஞர் வாந்தி எடுத்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், யூடியூப் வீடியோ பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீபக் பாஸ்வான் என்ற 24 வயது இளைஞர் வாந்தி எடுத்தபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
யூடியூபை பார்த்து மருத்துவர் சிகிச்சை அளித்ததால் அவரின் நிலை மோசமடைந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
- 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
4வது மாடியில் உள்ள ஃபால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்து கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.
3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் 3 கொள்ளையர்களை பிடிக்க மாம்பலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகரில் பிரபல ஜவுக்கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தினந்தோறும் சுமார் 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது.
- அத்துடன் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்திற்கு மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு 11 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
பிரசித் உனோ பேமிலி அறக்கட்டளையில் இருந்து துஷ்கர் குமார் என்பவர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அந்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்க அப்போதைய முதல்வர் என்.டி. ராமவா் வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டத்தை (Venkateswara Nithya Annadanam Endowment Scheme) 1985-ம் ஆண்டு தொடங்கினார்.
பின்னர் வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டம் 1994-ம் ஆணடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் அறக்கட்டளை என மாறியது. பின்னர் 2014-ம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஷ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளையாக மாறியது.
உலகில் உள்ள பக்தர்களால் வழங்கப்படும் நன்கொடைகள் நிதியாக சேர்க்கப்படுகிறது. இந்த நிதிகள் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலில் இயங்கி வரும் மிகப்பெரிய சமையல் கூடத்தில் தினந்தோறும் சுமார் 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது. அத்துடன் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேலை உணவாக வழக்கப்படுகிறது.
- தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது.
- தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஐ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.எராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முன்னதாக எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபோது வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. ஆனால் அதனை தற்போது ரூ.12.75 லட்சமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி சாதனை படைத்து உள்ளார்.
இதனால் மத்திய அரசுக்கு நேரடி வருவாயாக கிடைத்து வந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைந்து உள்ளது. இருந்த போதிலும் நடுத்தர குடும்பத்தினரின் கையில் நிதி இருப்பு விகிதம் கூடும். இதனால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலமாக பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது.
மேலும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சொத்து பிணையமின்றி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதுவும்தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருமொழிக் கொள்கையை ஏற்பதாக கூறி உள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் உள்பட தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அமலில் உள்ளது. தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டதை அமல்படுத்தக்கோரி, நான் ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளேன்.
பணம் சம்பாதிக்க மும்மொழி, மக்களை ஏமாற்ற இருமொழி என்ற நிலைப்பாடை மாநில அரசு கையாளுகிறது. மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதற்கு காரணமாக உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழி பாடம் இருக்கலாம் என்றால் அரசு பள்ளிகளில் ஏன் மும்மொழி பாடத்திட்டம் அமலில் இருக்கக்கூடாது?
இவ்வாறு அவர் கூறினார்.
- கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
- மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
கும்பமேளாவில் 30, 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சாதனையாக கூறுகிற பா.ஜ.க. அரசு எத்தனை பேர் கும்பமேளாவில் இறந்தார்கள் என்ற முழு விவரத்தை இன்று வரை வெளியிடத் தயாராக இல்லை.
இன்னும் பலர் காணாமல் போன விவரமும் தெரியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்.
குறிப்பாக கும்பமேளாவில் நீராட சென்றவர்கள் பலியானதற்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் ரெயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான இவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா?
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரீகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனை வரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜனவரியில் இந்தியா 2.68 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
- கடந்த டிசம்பர் மாதம் 4.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம், பொருளாதாரத்தில் உலகளாவிய நிலையற்றத்தன்மை ஆகியவற்றால் ஜனவரி மாதத்தில் 37.32 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய வணிக அமைச்சகத்தின் தரவுகள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில் 2024 ஜனவரியை விட 2025 ஜனவரி மாதத்தில் 10.28 சதவீதம் அதிகரித்து 59.42 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 222.99 பில்லியன் பற்றாக்குறையாகும். பற்றாக்குறை என்பது இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.
2024-2025 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரை 10 மாதத்தில் ஏற்றுமதி 1.39 சதவீதம் அதிகரித்து 358.91 பில்லியன் டாலராக உள்ளது. அதேவேளையில் இறக்குமதி 7.43 சதவீதம் அதிகரித்து 601.9 பில்லியன் டாலராக உள்ளது. இந்த 10 மாத காலத்தில் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக பற்றாக்குறை 242.99 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16.55 பில்லியன் டாலராக இருந்தது. டிசம்பர் மாதம் 21.94 ஆக அதிகரித்திருந்தது.
இதற்கிடையே வணிக செயலாளர் சுனில் பார்த்வால் கூறுகையில் "உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்னமையில் இருந்தபோதிலும் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவை துறைகளில் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2023-2024 நிதியாண்டில் 778 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. 2024-2025 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்க 800 பில்லியன் டாலரை் என்ற மைல்கல்லை தொடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத்தில் இந்தியா 2.68 பில்லியன் டாலர் அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் இது 1.9 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 4.7 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16.56 பில்லியன் டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்கு செய்திருந்தது. இந்த வருடம ஜனவரி மாதம் 13.43 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15.27 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருந்தது.
- வயதில் மூத்தவர்களை “அப்பா” என அழைப்பது, தமிழ்நாட்டில் காலங்காலமாக இருக்கும் வழக்கத்தில் ஒன்றுதான்.
- மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, இதுபோன்ற மோசமான பேச்சை சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகத்தின் அநாகரீக பேச்சிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுல்ல எக்ஸ் பதிவில், "வயதில் மூத்தவர்களை "அப்பா" என அழைப்பது, தமிழ்நாட்டில் காலங்காலமாக இருக்கும் வழக்கத்தில் ஒன்றுதான். ஆனால், குழந்தை செல்வங்கள் "அப்பா" என்று அழைத்ததை, வன்மத்துடன் கொச்சைப்படுத்தி பேசியது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. பொதுவெளியில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவருக்கு எதிராக அவதூறாக பேசுவது என்பது அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.
கடந்த 2024, செப்டம்பர் அன்று, இதேபோன்று மதியிழந்து முதல்வர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, இதுபோன்ற மோசமான பேச்சை சி.வி.சண்முகம் பேசியுள்ளார். அவரது பேச்சை நாங்களும் பார்த்தோம். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?. குறிப்பாக எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என்று பிரமாணப் பத்திரமாக எழுதித்தர வேண்டும்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றமாகும்' என்றார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் முகத்தில் அறைந்தால் போன்று கூறியபின்பும் இதுபோன்று பேசுவது சுயவிளம்பரம் அடைவதற்குதானே தவிர வேறென்றும் இருக்கமுடியாது.
ஒன்றிய அரசும், ஆளுநரும் கொடுக்கும் இடைஞ்சலுக்கு மத்தியிலும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு நாள்தோறும் சிந்தித்து பல்வேறு செயல்திட்டங்களை தீட்டி, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று, முதல்வர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவரைப் பற்றி நிதானம் இல்லாமல் அவதூறாக பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.
- தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.
- படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது ஏஞ்சல் என்கிற படம் ஒன்றில் நடித்தார்.
ஏஞ்சல் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கினார். இப்படத்தை ஓ.எஸ்.டி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் தயாரித்தார்.
இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 80 சதவீதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பாளருக்கு இருந்த பொருளாதார சிக்கலால் படம் நின்று போனது.
ஏஞ்சல் படப்பிடிப்பு 20 சதவீதம் நிலுவையில் இருக்கும் போது, 'மாமன்னன்' படம்தான் தனக்கு கடைசி படம் என்றும் நடிப்பில் இருந்து விலகுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார். அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு சென்று விட்டார். இதனால் ஏஞ்சல் படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சென்னை ஐகோர்ட்டில் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காததால் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி தயாரிப்பாளர் ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை மார்ச் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
- ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர். அதனுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், மதராஸி படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.







