என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது.

    கதைக்களம்

    நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக இரு கிராமத்தினரும் அடிதடி, வெட்டுக்குத்து என விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இரண்டு கிராமத்தையும் ஒன்று சேர்க்க அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் முயற்சி செய்கிறார்கள்.

    ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்து போகிறார். ஆனால், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட்டுக்கு உயிர் இருப்பதாக நம்புகிறார். மேலும், அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது.

    காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி குறியாடி சொல்கிறார். அதன்பின் இரண்டு ஊர்மக்களும் காளி வெங்கட் உடலை ஊருக்கு நடுவே வைத்து தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

    இறுதியில் காளி வெங்கட் உடலுக்கு என்ன ஆனது? ஊர் மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அர்ஜுன் தாஸ், தன் வழக்கமான ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்து இருக்கிறார். கத்தி பேசாமல் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சாமி ஆடும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். நாற்காலியில் உட்கார்ந்தே சாதித்து இருக்கிறார் காளி வெங்கட். முதல் பாதியில் துணிச்சலான பேச்சாலும், இரண்டாம் பாதியில் பேசாமலும் நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிவாத்மிகா ராஜசேகர், பாசம், சென்டிமென்ட், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே., கிச்சா ரவி, பூவையார் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    பிரிவினை உள்ள கிராமத்தை ஒன்று சேர்க்கும் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். ஆன்மிகமும், அறிவியலும் கலந்து திரைக்கதை சொல்லி இருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடையை திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு, மூன்று இடங்களில் வாவ் சொல்ல வைத்திருக்கிறார். ஆனால், ஒரு சில இடங்களில் முகம் சுழிக்கும் காட்சிகளும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவினமாக அமைந்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    இசை

    டி.இமான் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது.

    தயாரிப்பு

    ஜெம்பிரி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங் - 2.5/5

    • கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம்.
    • கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

    கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் முப்பெரும் விழா அழைப்பு மடல்.

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் – பெரியாரின் இலட்சியங்களை வென்றெடுத்திட அண்ணாவால் நம் இதயத்துடிப்பான திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் - இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்.

    கொள்கை முழக்கமிடும் கருத்தரங்குகள் – பட்டிமன்றங்கள் - கவியரங்குகள்-பொதுக்கூட்டம் என மூன்று நாள் திருவிழாவாக முப்பெரும் விழாவை முன்னெடுத்து, பெரியார் – அண்ணா – பாவேந்தர் - கலைஞர் பெயர்களில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் வழக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார். அப்போதைய முப்பெரும் விழாக்களின் போது, இளைஞரணிச் செயலாளராக வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன்தான், உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நம் கழகத்தின் தலைமை நிலையமாக - உடன்பிறப்புகளின் தலைமைச் செயலகமாகத் திகழும் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவின்போதுதான்.

    சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990-ஆம் ஆண்டு செப்டம்பரில் முப்பெரும் விழாவுடன் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகியவற்றையும் இணைத்து ஐம்பெரும் விழாவாக நடத்தியதும், தேசிய முன்னணியின் தலைவர்கள் மேடையிலிருந்து பார்வையிட, சென்னை அண்ணாசாலை குலுங்கிட இளைஞரணியின் பேரணியை வழிநடத்தியதும் இன்னமும் என் மனதில் நிழலாடுகின்றன.

    முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. அரிமா நோக்கு போல 75 ஆண்டுகாலக் கழகத்தின் வரலாற்றுத் தடத்தைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து, உன்னத இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்கான பாசறை. பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.

    நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக்கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. எதைச் செய்தாலும் எல்லாரும் அதிசயிக்கும் வகையில் பிரம்மாண்டமாகவும், 'இப்படியும் செய்ய முடியுமா?' என்ற நேர்த்தியுடனும், 'இவரால்தான் இது முடியும்' என்று அனைவரின் பாராட்டையும் பெறும் வகையிலும் செயல்படக்கூடிய கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் - மேற்கு மண்டலக் கழகப் பொறுப்பாளர் அன்பு இளவல் செந்தில்பாலாஜி அவர்கள் இரவும் பகலும் ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். ஒவ்வொரு கட்டத்தின் முன்னேற்றத்தையும் என்னிடம் காண்பித்து, ஒப்புதலும் ஆலோசனைகளும் பெற்று நிறைவேற்றி வருகிறார்.

    செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்குக் கழகத்தின் பொதுச்செயலாளர் - மொழிப்போர்க்கள வீரர் - அண்ணாவிடமும் கலைஞரிடமும் பெற்ற நீண்ட அரசியல் அனுபவத்தால் எனக்குத் துணையாக இருக்கின்ற அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் - கழக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    இந்த இலட்சிய விழாவில் பெரியார் விருது கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் - கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் - இந்திய நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெண்ணியக் குரலாக இன எதிரிகளை நடுங்கவைக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அண்ணா விருது கழகத்தின் மூத்த முன்னோடி - தணிக்கைக்குழு உறுப்பினர் -பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் - அண்ணா காலத்திலிருந்து கழகப் பணியாற்றி வரும் சுப.சீதாராமன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. கலைஞர் விருது கழகத்தின் நூறு வயது தொண்டர் - அண்ணாநகர் தொகுதி இடைத்தேர்தலில் அன்றைய ஆளுங்கட்சியின் சதிகளை முறியடித்து வென்ற வீரர் - அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர் -சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பாவேந்தர் பாரதிதாசன் விருது கழக மூத்த முன்னோடி - தலைமைச் செயற்குழு உறுப்பினர் - மிசா காலத்தில் தலைவர் கலைஞருக்கு உறுதுணையாக நின்று கழகத்தைக் கட்டிக்காத்த அண்ணன் குளித்தலை சிவராமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து துயரத்தில் ஆழ்த்தினாலும், என்றும் நினைவில் வாழும் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படவிருக்கிறது. பேராசிரியர் விருது கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர், சட்டப்பேரவை முன்னாள் கொறடா - கழக செயல்மறவர் மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களில் ஒருவனான என் பெயரிலான மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் - எந்நாளும் கழகப் பணியைத் தொய்வின்றி ஆற்றும் முன்னாள் அமைச்சர் சகோதரர் பொங்கலூர் ந. பழனிசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு -என் அரசியல் பணிகளில் ஆலோசகராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவரும் - என்றும் நம் நெஞ்சில் வாழ்பவருமான அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றும்படி தலைமைக் கழகம் உங்களில் ஒருவனான என்னைப் பணித்துள்ளது.

    நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லாக் கழகப் பணிதான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத்தான். கரூரில் செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது. அதுபோலவே செப்டம்பர் 15 பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளில்,

    * ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என உறுதி ஏற்கிறோம்!

    * நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், 'பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்." என்று,

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரை, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும்.

    'ஏ..தாழ்ந்த தமிழகமே' என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்நாட்டின் நிலையை எடுத்துக்காட்டிச் சொற்பொழிவாற்றினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அதன்பின், அவரே இந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி தமிழரின் மானத்தையும் தமிழ்நாட்டின் பெருமையையும் மீட்டார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சரான நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து, இன்று நாம் காணும் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்துத் தந்தார். இடையில் ஒரு சில முறை தமிழ்நாட்டு அரசியலில் விபத்து ஏற்பட்டு, ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்தின் வளர்ச்சி படுபாதாளத்திற்குச் சென்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு இலக்குகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

    ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அ.தி.மு.க.வின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

    அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை அவரது கொள்கை வாரிசாகத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நம் ஆட்சியின் சாதனைகள் யாவும் பெரியார் – அண்ணா -கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில் தொடர்வதை உணர்ந்தேன். திராவிடத்தை உலக நாடுகள் அறிந்துகொண்டு ஆய்வு செய்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம்.

    உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா போதித்த கட்டுப்பாட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன். இலட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா.

    இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வீர்! இலட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வீர். பெரியார் – அண்ணா - கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார்.
    • கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

    கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த சிக்க ஹெஜ்ஜுவை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 54). விவசாயி. இவரது மனைவி சல்லாபுரி (48).

    இவர்களின் கிராமத்தை சேர்ந்த சிலர் வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என பேசிக்கொண்டு இருந்தனர்.

    இதனைக்கேட்ட சல்லாபுரி தனது கணவரை கொலை செய்து காட்டில் வீசி விட்டால் பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டார்.

    அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார். கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் ஹினாசுரு போலீஸ் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் தனது கணவரை காணவில்லை எனவும், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது புலி அவரை கடித்துக்கொன்று வனப்பகுதியில் இழுத்துச் சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடசாமியை தேடி வந்தனர். வயல்வெளியில் புலி வந்து சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.

    கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் வெங்கடசாமியின் உடல் கிடந்தது.

    மேலும் அவரது உடலின் தோலின் நிறம் மாறி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சல்லாபுரியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காட்டு விலங்கு தாக்கி இறந்தால் அதிக அளவு அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என நம்பி கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சல்லாபுரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
    • எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அசோக் சவுக் பகுதி பக்கம் செல்பவர்களுக்கு தலையை சொரிந்து யோசிக்கும் ஒரு காட்சி காணக்கிடைக்கும்.

    அங்கு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்தோரா- திகோரி இடையே கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மோசமான திட்டமிடலுக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த NHAI அதிகாரிகள், அந்த வீட்டின் பகுதி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அமைந்துள்ளதாகவும், மேம்பால கட்டுமானத்தில் போதே இதுபற்றி நாக்பூர் நகராட்சியிடம் தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.

    இருப்பினும் நாக்பூர் நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டின் உரிமையாளருடன் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அந்த நபர் தனது வீட்டின் பால்கனி வழியாக மேம்பாலம் செல்ல எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி மேம்பாலம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

    • அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை வன்னியர்கள் இழந்திருக்கின்றனர்.
    • 15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    38 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கிய ஒரு வார தொடர்சாலை மறியல் போராட்டத்தில் 21 பாட்டாளிகளும் மார்பில் துப்பாக்கிக் குண்டுகளையும், உடல் முழுவதும் காவல்துறை தடியடிகளையும் வாங்கிக் கொண்டு தங்களின் இன்னுயிரை சமூகநீதிக்காக தியாகம் செய்தனர். அவர்களின் ஈகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 38-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.

    தி.மு.க. அரசுக்கு உண்மையாகவே சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஓரிரு மாதங்களிலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தி.மு.க. அரசு தவறியதால் கடந்த 4 ஆண்டுகளில் 3600 எம்.பி.பி.எஸ் இடங்களையும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் வன்னிய மாணவர்கள் இழந்திருக்கின்றனர்.

    அதேபோல், நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6000-க்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80,000-க்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் 1000-க்கும் கூடுதலான இடங்களும் பறிபோயிருக்கின்றன.

    மேலும் அரசுத்துறைகளில் 5000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளையும் வன்னியர்கள் இழந்திருக்கின்றனர். வன்னியர்களுக்கு எதிரான இவ்வளவு பெரிய சமூகநீதி துரோகத்தை செய்தது திராவிட மாடல் அரசு தான். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி தான்.

    15 சதவீத இட ஒதுக்கீடு தான் உண்மையான சமூகநீதியாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக சிறைகளை நிரப்புவது உள்ளிட்ட எத்தகைய அறப்போராட்டங்களையும், தியாகங்களையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். சமூகநீதிப் பயணத்தில் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் 21 ஈகியர்களின் நினைவு நாளில், நமக்கான சமூகநீதிப் போராட்டப் பயணத்தை அவர்களின் வாழ்த்துகளுடன் தொடருவோம்.

    அத்துடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ந் தேதியில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.
    • இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் 60 பந்தில் 8 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 141 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அதிரடி சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் பில் சால்ட் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில உள்ளனர்.

    கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. ஒரு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களை பார்த்தால் அவர்களது காதலின் முடிவு என்ன மாதிரி இருக்கும் என கவினுக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளனர்.

    இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து களமாடி வருகிறார்கள்.

    இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கிவிட்டார்.

    அதன்படி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருச்சியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருச்சி மரக்கடை பகுதிக்கு செல்லும் வழியெங்கும் தொண்டர்கள் நெரிசல் சூழ்ந்துள்ள நிலையில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    பிரசார வாகனம் செல்ல முடியாத வகையில் கூட்ட நெரிசல் சூழ்ந்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    விஜய் வரும் வழியெங்கும் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். வழியெங்கும் சூழ்ந்துள்ள தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி த.வெ.க. தலைவர் விஜய் உற்சாகத்துடன் வந்தார்.

    திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பேசுவதற்கு 10.30 முதல் 11 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

    படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்தது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிரது.

    • இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வெளியான F16 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    கொண்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கேலக்ஸி ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள், 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி F17 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    எக்சைனோஸ் 1330 பிராசஸர்

    மாலி-G68 MP2 GPU

    4 ஜிபி / 6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7.0

    50MP பிரைமரி கேமரா, F1.8, AF OIS

    5MP F2.2 அல்ட்ரா-வைடு லென்ஸ்

    2MP F2.2 மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ்

    13MP F2.0 செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர்

    யுஎஸ்பி டைப்-சி ஆடியோ

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP54)

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.3, GPS + GLONASS

    5000mAh பேட்டரி

    25W வேகமான சார்ஜிங்

    விலை விவரங்கள்

    சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மெமரி மாடலின் விலை ரூ.14,499 ஆகும். 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

    • இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர்.
    • இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    ஜூலை 11, 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். இது '7/11 குண்டுவெடிப்பு' என பரவலாக அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    கடந்த ஜூலை மாதம் அந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் 2015 தீர்ப்பில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்துக்கும் நிவாரணமாக அமைந்தது.

    இந்நிலையில் விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் 2006 முதல் போலீஸ் காவலில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும், சமூகத்தில் தன் பெயர் மீதாக தவறாக கற்பிக்கப்பட்ட களங்கத்துக்கும் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்தில் அவர் மனு செய்துள்ளார். மேலும் தனது மறுவாழ்வுக்கும் வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    2006 இல் மும்பை பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்ட அப்துல் 9 வருடங்கள் சிறையில் இருந்தார். கடந்த 2015 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த 9 வருட சிறைவாசம், தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையை பாதித்ததாகவும், போலீஸ் கஸ்டடியில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளால் தனக்கு கடுமையான உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    ×