என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    மாங்காடு: எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோவில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலந்தீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், அடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி அம்மன் நகர், கொழுமணிவாக்கம் சார்லஸ் நகர், ஸ்ரீராம் நகர், கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, தென் காலனி, நியூ காமாட்சி நகர்.

    • கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.
    • தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் ரெயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    தொழிலாளர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் ரெயில்களுக்காகக் காத்திருக்கிறார்கள். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளால் ரெயிலில் ஏறமுடியவில்லை. கடும் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுவிடக் கூட முடியாமல் தவிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடுமையான வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பொதுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் நமது மாணவர்களுக்கு இப்படியொரு சித்ரவதை கடுமையான உளநெருக்கடியை உண்டாக்குகிறது.

    தென்னக ரெயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது.
    • மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

    தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது. அதுவும் அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறிய மேலும் விவரங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.

    தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக்கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.

    இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

    2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய 'லாநினோ' ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் ஆண்டு உலகளாவிய எல் நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.

    அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கான்பூர்-மதுரை சிறப்பு ரெயில் இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும்.
    • 4 பொதுப்பெட்டிகள் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.

    மதுரையில் இருந்து கான்பூர் மற்றும் ஜபல்பூர் ஆகிய பகுதிகளுக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, வடமாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் நடந்து வந்த தண்டவாள பராமரிப்பு பணிக்காக இந்த ரெயில்கள் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மதுரை-கான்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கான்பூர்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.01927) இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் மதுரைக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரை-கான்பூர் சிறப்பு ரெயில் (வ.எண்.01928) வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் மதுரையில் இருந்து இயக்கப்படும்.

    இதில் கான்பூர்-மதுரை ரெயில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக் கிழமைகளில் காலை 7.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் மதுரை-கான்பூர் ரெயில் வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இந்த ரெயில்கள் இரு மார்க்கங்களிலும், பொக்ராயன், ஓரை, ஜான்சி, லலித்பூர், பினா, போபால், இட்டார்சி, நாக்பூர், சந்திராபூர், பல்ஹர்சா, சிர் பூர், ராமகுண்டம், வாரங்கல், கம்மம், விஜயவாடா, தெனாலி, ஓங்கோல். நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டு, 4-மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3-மூன்றடுக்கு எகனாமி குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7-இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும்.

    • இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
    • படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.

    ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.

    இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.

    இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது படகின் உறுதித்தன்மை, என்ஜின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

    • சிறுநீரகம் செயலிழந்துவிட்டது, டயாலிசிஸ் செய்யமுடியாது எனக்கூறுகிறார்கள்.
    • என்னை நினைத்து வெட்கி தலைக்குனியவும் செய்கிறேன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அய்யா வயதுமுதிர்வு காரணமாக உடல்நலம் குன்றி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அவரை நேரில் சென்று பார்த்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 

    "அய்யா நல்லக்கண்ணு பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். வாழ்நாள் முழுவதும் ஒரு போராளியாக, எளியவர்கள் பக்கம் நின்றவர். 'தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்ற குறளுக்கு ஏற்ப வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒரு உன்னத மனிதராக வாழ்ந்து இப்போது மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.

    சுதந்திரத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்தியாவில் 7 முதல் 8 ஆண்டுகள் சிறைக்கைதியாக வாடினார். சிறையில் பல துன்பங்களை அடைந்தும் கொள்கையை விடாமல் இன்றும் வாழ்பவர். இப்படி ஒரு மனிதன் வாழ்ந்த தமிழ்நாட்டில் நானும் இருக்கின்றேன் என்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாகவும், அதேநேரத்தில் என்னை நினைத்து வெட்கி தலைக்குனியவும் செய்கிறேன். எளிமையான போராளி.

    அவரின் இந்த நிலை மிகவும் வேதனையை தருகிறது. சிறுநீரகம் செயலிழந்துவிட்டது, டயாலிசிஸ் செய்யமுடியாது எனக்கூறுகிறார்கள். அவரது முகமெல்லாம் கருத்துவிட்டது. ஒரு மாபெரும் தமிழர், போராளி. அவரது அர்ப்பணிப்பு ஈடுசெய்யமுடியாது.  அவர் இந்த பூமியில் வாழ இறைவன் வழிவகை செய்யவேண்டும்." என கண்களில் கண்ணீர் நிற்க வேதனையுடன் பேசினார். 

    • ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
    • அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.  புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சியின் கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். 

    அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார். 

    சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

    • இந்த அறிவிப்பு களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
    • திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்

    2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.24) வெளியிட்டார்.

    அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது "உதவித்தொகை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில் இந்த பெரும்தொகை அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன்,

    'இது ஒரு தேர்தல் வித்தை. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று அவர்கள் (அதிமுக) நம்புகிறார்கள், அதனால்தான் இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருக்கிறார்கள். திமுக ஏற்கனவே மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்து, அவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இப்போது அதிமுகவும் தங்கள் வெற்றிக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார். 

    • நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.
    • கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் போட்டியிட 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் பட்டியலில் அடங்கும். பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.  

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.  ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை
    • விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.

    சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா,

    "பாஜகவை எதிர்த்து பேசவில்லை என திருமாவளவன், சண்முகம் போன்றோர் கூறுகிறார்கள். ஜனநாயகன் படத்திற்கான சான்றிதழ் ஒன்றிய அரசிடம் உள்ளது. எந்த அழுத்தத்திற்கும் பயப்படமாட்டேன் என நம் தலைவர் கூறினார். தைரியமாக இன்று இந்தியாவில் பேசும் இரண்டே தலைவர் ஒன்று ராகுல் காந்தி, மற்றொருவர் எங்கள் தலைவர்.

    அந்தநேரத்தில் மற்றொரு படம் (பராசக்தி) ரிலீஸ் ஆனது. அது வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. அந்தளவு மக்கள் தூக்கிப்போட்டு விட்டார்கள். ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்பதால் ஒருவர்கூட தியேட்டர் போகவில்லை. முதலமைச்சரின் படம் ரிலீஸ் ஆகிறது.

    ஆனால் எங்கள் தலைவர் இன்றுவரை நஷ்டத்தை தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். திமுக படத்திற்கு சான்றிதழ் வழங்கும்போது, விஜய் படத்திற்கு ஏன் பாஜக சான்றிதழ் வழங்கவில்லை என அனைவரும் கேட்கவேண்டும்.

    இதுபோன்ற பொய்யான பிரச்சாரத்தை அரசியல் தலைவர்கள் நிப்பாட்ட வேண்டும். கரூர் சம்பவத்திற்காக மட்டும் விஜய் கண்கலங்கவில்லை. நேற்று 5 ஆயிரம் பேருக்குத்தான் காவல்துறை அனுமதி அளித்தது. சாலையில் 2 லட்சம் பேர் நின்றார்கள். அவர்களை பார்க்கமுடியவில்லை என்ற வலியில் கண்கலங்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு திமுக பார்த்து பயந்த ஒரே இயக்கம் தவெக. நம் தலைவர் விஜய். அதனால்தான் இவ்வளவு நெருக்கடி." எனப் பேசினார். 


    • திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது.
    • வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார்.

    சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 

    "வில்லிவாக்கத்தில் மருத்துவமனை, கல்லூரி, அரசுப்பள்ளி இல்லை. மழைநாட்களில் சாக்கடைநீர் வருகிறது. 5 வருடமாக எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லை. எம்.எல்.ஏவும் இல்லை. நாளை அவர் காணவில்லை என போஸ்டர் ஒட்டுவார்கள்போல. வில்லிவாக்கத்தில் தி.மு.க. என்ற கட்சியும் இல்லை. திமுகதான் இல்லை, அதிமுக எங்கு எனக்கேட்டேன். அது பேக்கேஜ் செய்யப்பட்டு டெல்லிக்கு சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது எனக்கூறுகிறார்கள்.

    இங்கு திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை, தற்போது களத்தில் தவெகதான் உள்ளது. இந்தத் தொகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தலுக்காக நம் தலைவர் கட்சியை உருவாக்கவில்லை. 20 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த மாற்றமும் வரவில்லை. வறுமையின் உச்சத்தில் இருக்கும் தொகுதியைத்தான் எங்கள் தலைவர் தேர்ந்தெடுப்பார். அந்த தொகுதியை மாற்றுவார். ஏழைக்கு ஒரு மருத்துவமனை, முதலமைச்சருக்கு ஒரு மருத்துவமனை என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மருத்துவமனை என்ற நிலையை உருவாக்குவார். இதற்காகத்தான் கட்சித் தொடங்கியுள்ளார்.

    இன்று ரெட் ஜெயண்ட் ரஜினி, கமலை வைத்து ஒரு படம் எடுத்துள்ளது. எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? எல்லாம் கொள்ளைப்பணம். நீங்கள் அரசை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். எங்கள் தலைவர் தொழிலைவிட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இதுதான் வித்தியாசம்.

    இன்று புரட்சித்தலைவி பிறந்தநாள். அவர் லேடியா? மோடியா? என்று பாஜகவை எதிர்த்து நின்றார். அந்தக் கொள்கையை கடைசிவரை பிடித்து ஜெயித்தார். எல்லோரும் ஏன் நம் தலைவர் அதிமுகவை திட்டவில்லை எனக் கேட்கிறார்கள். ஒட்டுமொத்த அதிமுகவும் தவெக வந்து வெகுநாட்கள் ஆகிறது.

    அங்கு இருப்பது 10 பேர்தான். அவர்களும் டெல்லி சென்றுவிட்டார்கள். உண்மையான அ.தி.மு.க. இங்கு உள்ளது. செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், வி.எஸ்.பாபு, தனபால் மகன் ஆகியோர் இங்கு உள்ளனர். திமுகவின் தீயசக்தியை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான தலைவர், நம் தலைவர் என அதிமுக உணர்ந்ததனால்தான் இங்கு மாறியுள்ளனர். அப்போது புரட்சித்தலைவி அம்மாவையும், அவர் தொண்டர்களையும் நாங்கள் ஏன் எதிர்க்கவேண்டும்?" எனப் பேசினார்.

    • மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
    • ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இலங்கை சிறையில் இருக்கும் 116 தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

    ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை, தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது.

    இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    ×