என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- தவெக நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்படங்களை பதாகைகளாக கொண்டு வந்திருந்தனர்.
வேலூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.
வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்படங்களை பதாகைகளாக கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக தலையில் குல்லா மற்றும் கையில் வேலுடன் இருக்கும் விஜய் படம் ஒன்றை தொண்டர் ஒருவர் கையில் வைத்திருந்தது இணையத்தில் வைரலானது. அதே போல் விஜய், ஜோசப், முகமது என்று 3மத அடையாளங்களுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் வைத்திருந்ததும் இணையத்தில் வைரலானது.
- ஒரு சின்ன பையன் ஒரு எண்ட்ரி கொடுக்கறான்.
- என்ன பண்றது தலையை குனிஞ்சு நிக்குறாங்க.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் மத்தியில் விஜய் ' எங்கள் ஓட்டு... எங்கள் உரிமை...' 'எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்...' 'எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது' என்ற உறுதிமொழியை ஏற்று ஒரு குட்டி கதையுடன் ஆரம்பிக்கலாமா என்று பேசத்தொடங்கினார்.
அந்த கதையில், ஒரு பெரிய ஊரு. ஒரு நாலு ரோடு ஜங்ஷனில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஏரியாவில் அதன் நடுவில் ஜல்லிக்கட்டு காளை நின்னுக்கிட்டு இருக்கு. அதன் பக்கத்திலே யாராலயும் போக முடியல. அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஊர்ல இருக்குற ஒரு சில பேருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். ஆனா அவங்க யாரும் இல்லை. அந்த காளையை அடங்கினவங்களோட இருந்த ஒரு சில பேர் எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்க பாக்காத காளையா, நாங்க பாக்காத மாடா... என்று சொல்லி காளையை அடக்கப்போறாங்க. ஒருத்தராலையும் அடக்க முடியல. எல்லாரையும் அடிச்சி வீசிட்டுச்சு. அந்த நேரத்தில் கூட்டத்தைய விலக்கிவிட்டு ஒரு சின்ன பையன் ஒரு எண்ட்ரி கொடுக்கறான்.
அப்போ அங்கிருந்தவர்கள், எங்களாலையே முடியல, எங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்கு, நாங்களே அடிப்பட்டு இருக்கிறோம். நீ போய் என்னத்த கிழிக்கப்போற, அந்தப்பையன், இந்தப்பையன் என ஏளனமாப் பேசுறது ஒரு பக்கம்.
மற்றொரு பக்கம் பரிதாப்பட்டு பேசுறாங்க. அந்த சின்ன பையன் எதையும் காதில் போட்டுக்காமல் இரண்டு கைகளும் பாக்கெட்டில் போட்டு உள்ளே போறான். ஒரு அடி எடுத்து வைக்கிறான் அந்த காளை சீறிக்கிட்டு இருக்கு, மற்றொரு அடி எடுத்து வைக்கிறான் அந்த காளை சீறிக்கிட்டு முன்னாடி வருது. அந்நேரம் அங்கு கூடியிருந்த மக்கள் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க.. இன்னொரு அடி எடுத்து வைக்கும் போது காளை முட்ட வரும்போது பாக்கெட்டுக்குள் மறைச்சு வைச்சிருந்த இரண்டு புல்லுக்கட்டை எடுத்து காளைக்கிட்ட காட்டுறான். காளை சட்டென மாறி அந்த புல்லை சாப்பிட ஆரம்பித்துச்சிடுச்சு.
அப்போ அந்த சின்ன பையன் காளையை தடவ காளை சின்னக்குழந்தை மாதிரி அந்த சின்ன பையனுடன் நடந்து வருது. அருகில் இருந்த வயல்வெளியில் அந்த காளையை மேய விட்டுட்டு வரான். மக்கள் எல்லோரும் அந்த பையன ஆச்சரியமாக பார்க்குறாங்க. அந்த அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிங்க தலையை தொங்கப்போட்டு நிக்குறாங்க. ஏன்னா அவங்க பேசின பேச்சு அப்படி. வாய் இருக்கது என்பதற்காக நக்கலுமாக, நயாண்டியுமாக நசநசன்னு ஒரே பேச்சு. என்ன பண்றது தலையை குனிஞ்சு நிக்குறாங்க.
அங்க ஒரு பெரியவர் வரார். அவர் சின்னப்பையன் கிட்ட வந்து எப்படிப்பா அந்த காளைய அடக்குன? அதற்கு அந்த பையன், ஐயா எனக்கு அந்த காளைய பார்த்தா கோபமாக இருந்த மாதிரி தெரியல. பசியோட இருந்த மாதிரி இருந்தது. அதனால தான் அந்த புல்லுக்கட்டை காட்டியதும் அதற்கு தேவையானதை கிடைத்த மகிழ்ச்சியில் என்னோடு வந்தது என்றார்.
இதைக்கேட்டு அந்த பெரியவர் சொன்னார், இந்த சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் இருக்குறவங்க, அனுபவம் இல்லாதவங்க என்பது விஷயமே கிடையாது. யாராக இருந்தாலும் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி என்ன செய்து அந்த பிரச்சனையை தீர்க்குறான் அது தான் விஷயம் என்றார்.
- த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன்.
- செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
அ.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வகியாக இருந்து சமீபத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். காலக்கட்டத்தில் இருந்தே அ.தி.மு.க. கட்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இடையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ெசங்கோட்டையன்.
த.வெ.க. கட்சியில் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி மாறிய போதிலும், தனது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைப்பதை செங்கோட்டையன் மாற்றாமல் இருந்தார். மேலும், முக்கிய தினங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ் பாடுவதையும் செங்கோட்டையன் நிறுத்தாமல் இருந்தார். இந்த நிலையில், த.வெ.க. நிர்வாகியான செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
முதல் முறையாக தனது சட்டைப்பையில் விஜய் படத்தை செங்கோட்டையன் வைத்திருக்கிறார். அதில் ஒருபக்கம் எம்.ஜி.ஆர். படமும், மறுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.
- கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
- உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கலை கல்லூரி சிறப்பாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இன்றைய நாள் பெருமை கொள்ளத்தக்க நாள்.
கல்லூரியை கட்ட சொன்னால் ஒரு பல்கலைக்கழகத்தையே கட்டியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.
கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
கொளத்தூர் தொகுதிக்கு வந்து உங்களுக்காக உழைப்பதுதான் உற்சாகம். உங்களை வந்து பார்த்தால் பூஸ்ட் ஆகிவிடுவேன்.
கொளத்தூர் தொகுதி அனைத்து நல்லதிட்டங்களுக்குமான மாடலாக திகழ்கிறது.
கல்விதான் கடவுள். அதுதான உங்களுக்கு நிறைய கொடுக்கும். அதனால், நன்றாக படியுங்கள்.
உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.
மாணவ, மாணவியர் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
- கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம்.
சென்னை:
தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். மேல்சபை எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.
தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
- சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.
நெல்லை:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தை மலை மீது ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னது போல வாமா மின்னல் என வந்த வேகத்தில் போய்விடும்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர் இதுவரை கைது செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது. பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதாவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டி.டி.வி தினகரன் சொல்லி வந்ததாக கேட்கிறீர்கள். பா.ஜ.க., அ.தி.மு.க 2 கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.
எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். பலமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. தி.மு.க.விற்கு எதிராக பலமான போட்டி இல்லை என முதலமைச்சர் சொல்லி வருகிறார். அதனை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.
- குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.
- நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை (24-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர், காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடுஷோ' மூலம் பொதுமக்களை சந்திக்கிறார்.
அதன் பிறகு பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1 கோடியே 46 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு புத்தளம் அருகே உள்ள கல்லடி விளை வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பிறகு மாலை 6.30 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா வருகிறார். அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அவரது வருகையை அடுத்து முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வந்து செல்ல வசதியாக தனி பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நலத்திட்ட உதவிகள் வாங்க வரும் பயனாளிகள் வாகனங்களை நிறுத்த வசதியாக பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை அடுத்து நாகர்கோவில் நகரில் 2 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர். கண்கார்டியா பள்ளி மைதானம் மற்றும் கல்லடி விளை, கன்னியாகுமரி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- திராவிட மாடல் ஆட்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:-
என் பேச்சில் தெளிவாக சொல்லி உள்ளேன். மதசார் பின்மை, சோசலிசம் பாசிசத்தை எதிர்க்கணும் இதுதான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் என்ற எங்கள் கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களது திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.
கேள்வி:-பா.ஜ.க. அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்களா? அவர்களது கூட்டணி கட்சி கூட திராவிட மாடல்தான் பண்ணுவதாக கூறுகிறார் களே?
பதில்:- நிச்சயமாக இல்லை. அதை உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்தி கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- பலமுனை போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள்? நீங்கள் பலமுனை போட்டியாக பார்க்கிறீர்களா? அப்படி வந்தாலும் அது உங்களுக்கு சாதகமா? எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:-நிச்சயமாக பல முனை போட்டி இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை அது.
கேள்வி:- பிரதமர் மோடி 3 முறை இந்த மாதம் வரப்போகிறார். பா.ஜ.க. ரொம்ப தீவிரமாக இருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்கு? இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- நான் அடிக்கடி சொல்வதுதான் பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரசாரம்.
கேள்வி:- மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தி ருக்கிறீர்கள். இது மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. இதை உங்களது கடமை என்று நினைக்கிறீர்களா? அல்லது தேர்தலுக்கான விளையாட்டா?
பதில்:-தொடக்கத்திலேயே இதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். இதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:- இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் சொல்கிறார்களே? அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா?
பதில்:- தலைவர் கலைஞர் ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறார். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்.
கேள்வி:- சட்டசபை தேர்தல் வெற்றி எப்படி அமையும்?
பதில்:- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜன நாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல். என்.டி.ஏ.-தமிழ்நாடு இடையேயான தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது.
- தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய இபிஎஸ், ''இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும். நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.
திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார். பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி. அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.
இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.
நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும். இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி" என்று தெரிவித்தார்.
- இந்த ஆண்டு ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக்கையும் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்தில் வைத்து நாளை வெட்டுகிறார்.
- நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கட்சி அலுவலகத்திற்கு வருகை தருகிறார்.
அப்போது அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மறைந்த அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளின் போது எத்தனையாவது பிறந்தநாள் என்பதை குறிக்கும் வகையில் கேக் தயாரிக்கப்பட்டு தலைமை கழகத்தில் வைத்து வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக்கையும் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்தில் வைத்து நாளை வெட்டுகிறார். இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் இலவசமாக பேருந்து பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவடையாத நிலையில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகி இருப்பதாகவும் அது தொடர்பான விவரங்களையே எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- இத்தலம் சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.
- இக்கோவிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புலீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 சக்தி தலங்களில் 50-வது தலமாக விளங்குகிறது.
உலகிலேயே 'புலீஸ்வரி அம்மன்' என்ற பெயரில் அமைந்துள்ள ஒரே தலம் இதுதான் என்பது விரிவான ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்தலம் சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.
இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் ஆவணங்களின்படி, இக்கோவில் 150 ஆண்டு கால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது. கொள்ளிடம் ஆன்மிக பற்றாளர் பிரபு என்பவரின் முயற்சியால், இக்கோவிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.
இவற்றை சரிபார்த்த ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இக்கோவில் தனித்துவமான, உலகளாவிய பெயரிடல் மற்றும் பண்டைய இலக்கிய மரபு என்ற பிரிவின்கீழ் இதற்கான உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கி சிறப்பித்து உள்ளது. இதனை அறிந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட 4 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர்.
எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகுிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட 4 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,92,194 உள்ளதாக தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,76,299 வாக்காளர்களும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் உள்ளனர்.
இதேபோல், ஸ்ரீபெரும்புதூர்- 3,75,921, உத்திரமேரூர்- 2,43,922, ஆலந்தூர்- 2,9,052 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை- 27,55,830.
ஆண்கள்-13,84,548
பெண்ள்- 13,70,962
3ம் பாலினத்தவர்- 320 பேர் உள்ளனர்.
* தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வாக்காளர்கள் எண்ணிக்கை- 13,6,624.
ஆண்கள்- 6,71,742
பெண்ள்- 7,0,689
3ம் பாலினத்தவர்-193 வாக்காளர்ள் உள்ளனர்.
* விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417.
ஆண்கள்- 7,28,539
பெண்கள்- 7,68,62
3ம் பாலினம்- 246 வாக்காளர்கள் உள்ளனர்.
*செங்கல்பட்டு மாவட்டம்:
வாக்காளர்கள் எண்ணிக்கை- 22,60,03
ஆண்கள்- 11,04,511
பெண்கள்- 11,55,144
3ம் பாலினம்- 381 வாக்காளர்கள் உள்ளனர்.
*சிவகங்கை மாவட்டம்:
வாக்காளர்கள் எண்ணிக்கை- 11,10,599
ஆண்கள்-5,44,035
பெண்கள்- 5,66,526
3ம் பாலினம்- ௩௮
* கன்னியாகுமரி
வாக்காளர்கள் எண்ணிக்கை- 15,10,550
ஆண்கள்- 7,51,016
பெண்கள்- 7,59,390
3ம் பாலினம்- 144






